February 03, 2009

சாம்பியனைத் தேற்றிய சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவை நேரடியாக காண நேர்ந்தவர்களுக்கு வாழ்வில் மறக்கவியலாத ஒரு உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வாக இருந்திருக்க வேண்டுமென்பதில் எந்த சந்தேகமுமில்லை. 3 முறை ஆஸ்திரேலியாவிலும், 5முறை விம்பிள்டனிலும், மீண்டுமொரு 5 முறை அமெரிக்காவிலுமாக 13 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஒரு சாம்பியன் தேம்பி தேம்பி அழுவார் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்கள் பெறுகையில் அழுதிருக்கிறார்; என்றாலும் அவை சந்தோஷக்கண்ணீர் என கணக்கில் கொள்ளலாம்.

இம்முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் கடுமையாக போராடியும் வெற்றியீட்ட இயலவில்லையே என தேம்பி தேம்பி மைதானத்தின் ரசிகர்களுக்கு முன்பாக மட்டுமல்லாமல் தொலைக்காட்சி வழியாக நேரலையில் நோக்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு முன்பாகவும் அழுதே விட்டார்.

அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸிற்கு பிறகு இதுவரை அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமை ஃபெடரருக்கு உண்டு. சாம்ப்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம்களை வென்றிருக்கிறார். அதனை நினைத்தும் கூட அழுதிருக்கலாம்.

இரு அமெரிக்க டென்னிஸ் நட்சத்திர வீரர்களான பீட் சாம்ப்ராஸ் மற்றும் ஆந்த்ரே அகாசிக்கு பின்னர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்பெயினின் ரஃபேல் நடாலுக்கும் இடையே தான் முதலிடத்தைப் பெற கடினமான போட்டிகள் நடந்து வருகின்றன. களிமண் ஆடுகளத்தின் ராஜா என வர்ணிக்கப்படும் நடாலும்; புல்தரை ஆடுகளத்தின் ராஜா என வர்ணிக்கப்படும் ஃபெடரரும் தங்களுக்கே உரித்தான பாணியில் ஆடி டென்னிஸ் தரவரிசையில் முதலிடங்களைப் பெற்றிருக்கின்றனர்.

என்றாலும் இதுவரை இருவருக்கும் ஒரு குறை இருந்து வந்தது. நடாலிற்கு கிராண்ட்ஸ்லாமில் கடினதரையுடைய ஆடுகள(ஆஸ்திரேலிய/அமெரிக்க ஓபன்) வெற்றியும் ஃபெடரருக்கு கிராண்ட்ஸ்லாமில் களிமண் தரையுடைய ஆடுகள (ஃப்ரெஞ்ச் ஓபன்) வெற்றியும் நிறைவேறாத குறையாகவே இருந்து வந்திருக்கிறது. இம்முறை நடால் ஆஸ்திரேலிய ஓபன் வெற்றி மூலம் அதற்கு முடிவு கட்டிவிட்டார்(என்றாலும் அமெரிக்க ஓபனில் இதுவரை வெற்றி ஈட்டவில்லை). ஃபெடரர் 2006,2007,2008 என தொடர்ச்சியாக ஃப்ரெஞ்ச் ஓபனில் நடாலிடம் தோல்வியடைந்து களிமண் தரையில் ஒருமுறை கூட வெற்றி பெற இயலாமல் இருக்கிறார்.

14 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பீட் சாம்ப்ராஸிற்கும் ஃப்ரெஞ்ச் ஓபன் வெற்றி கொடுத்து வைக்கவில்லை என்பது மற்றொரு சுவாரஸ்ய தகவல்.

இதுவரை இவர்களிருவருக்குமிடையே நடைபெற்றுள்ள 19 போட்டிகளில் 13-6 என நடால் முன்னிலை வகிக்கிறார். பிப்ரவரி 2004 முதல் ஜூலை 2008 வரை தொடர்ந்து முதலிடத்திலிருந்தார் ஃபெடரர். ஆகஸ்ட் 2008 ல் முதலிடத்தை ஃபெடரரிடமிருந்து கைப்பற்றினார் நடால்.

ஒருவருக்கொருவர் சளைக்காமல் 4 மணிநேரம் 48 நிமிடங்கள் இவர்கள் ஆடிய 2008 ன் விம்பிள்டன் இறுதிப் போட்டி வரலாற்றில் இடம் பிடித்தது. இதுவே விம்பிள்டன் வரலாற்றில் அதிக நேரம் எடுத்துக்கொண்ட ஆட்டம்.

ரோஜரும்,ரஃபேலும் இரு வேறு தேசத்தைச் சார்ந்த போதிலும் கடும் சவாலுடன் ஆட்டக்களத்தில் ஆடினாலும் ஒருவருக்கொருவர் கனிவான வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வதில் எந்த தயக்கமும் காட்டாதவர்கள். அப்படித்தான் இருதினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பறிகொடுத்துத் தேம்பி அழுது கொண்டிருந்த ரோஜர் ஃபெடரரை ரஃபேல் நடால் அவர் தோள் மேல் கையிட்டு தேற்றினார். அதோடு நீ தான் உலகின் சிறந்த டென்னிஸ் ஆட்டக்காரன் எனவும் கூறினார் நடால். நடாலின் அச்செயல் அதனை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரைத் தழும்பச் செய்தது. இன்னும் அதிகமாக ஃபெடரரின் கண்ணிலுமிருந்து. அதினிமித்தம் நடால், விளையாட்டுலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக மாறினார் என்றால் அது மிகையல்ல.

அவர்கள் இன்னும் பல போட்டிகளை ரசிகர்களுக்கு விருந்தாக்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரியும், கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ்-சானியா இணையும் வெற்றி பெற்றிருப்பது இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமே. அவர்களுக்கு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails