March 04, 2009

பொருளாதாரத்தை சீர்குலைக்க நடத்தப்பட்ட தாக்குதல்

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீதான தாக்குதலை அவர்கள் மீதான தாக்குதலாக மட்டுமே கருத முடியாது.ஏற்கெனவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தெற்காசிய பகுதியை மேலும் பொருளாதார சீர்கேட்டிற்குள்ளாக்கும் மற்றுமொரு முயற்சியாகவே இது தோன்றுகிறது.

இந்தியாவின் பொருளாதார மையமான மும்பையில் 2008,நவம்பர் மாதம் நடந்த தாக்குதலுக்கும் தற்போது லாகூரில் நடந்த தாக்குதலுக்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லையெனவே படுகிறது.

இரு தாக்குதலையும் தொடுத்தவர்கள் மிக சாதாரண வழிபோக்கர்களைப் போலவே செயல்பட்டு தங்கள் இலக்கை அடைந்திருக்கின்றனர்.

இரு நாட்டு பாதுகாப்பு கவசங்களையும் மிக எளிதாக கடந்து தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். தாக்குதலுக்கு பின்னர் சர்வ சாதாரணமாக மும்பை விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து சென்றது போல லாகூரிலும் தப்பித்து சென்றிருக்கின்றனர் தீவிரவாதிகள்.

தற்போது வெளியாகியுள்ள ஜியோ தொலைக்காட்சியின் வீடியோக்களில் லாகூரில் இரு சக்கர வாகனங்களில் தீவிரவாதிகள் தப்பி செல்லும் போது அவர்களை எதிர்க்க ஒரு போலீசையும் கூட காணவில்லை.பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரத்தில் பாதுகாப்பு அத்தனை பலமாக இருந்திருக்கிறது!!!

தாக்குதல் நடந்த அன்று பேருந்திற்கு வழக்கமாக அளிக்கப்படும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என ஆட்டக்காரர்கள் சென்ற பேருந்தின் பின்னால் சென்ற வேனில் பயணித்த ஆட்ட நடுவர் கிரிஸ் ப்ரோடும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடரும் தீவிரவாத தாக்குதல்களால் ஏற்கெனவே பிற நாடுகள் விளையாட்டிற்காக பாகிஸ்தானிற்கு செல்ல மறுத்து வருகையில் தற்போதைய லாகூர் தாக்குதல் மற்றும் மும்பை தாக்குதலினால் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசியாவின் பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் சர்வதேச ஆட்டக்காரர்களும் கூட செல்லத் தயங்கலாம்.

இதனால் விளையாட்டின் மூலம் கிடைக்கும் வருவாயும், சுற்றுலா பயணிகள்,விளையாட்டுகளை கண்டுகளிக்க வரும் வெளிநாட்டு பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயும் வெகுவாக பாதிக்கப்படும்.

IPL போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் மட்டும் சுமார் 4000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுமென தெரிகிறது.அப்படியென்றால் 2010ல் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகள்,2011 ன் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் மேலும் பிற விளையாட்டுகள் ரத்து செய்யப்படுமானால் நிச்சயமாகவே பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு அதிக பாதிப்பு ஏற்படலாம்.

அதோடு சர்வதேச அரங்கில் தெற்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு முறைகளும் கேள்விகளுக்குள்ளாகும், இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையில் காணப்படும் எஞ்சிய சகோதரத்துவமும் குறையலாம்.

இவைகள் தான் தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இருந்திருக்க வேண்டும்,இதில் அவர்கள் வெற்றியும் கண்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெறப் போகின்ற தேர்தலிலும் அதன் பின்னர் ஆட்சி அமைப்பதற்காக நடக்கவிருக்கும் முயற்சிகளினிடையிலும் என்னென்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

3 comments:

ahaanandham said...

பாகிஸ்தான்,,தன்னை,,ஒரு,,தீவிரவாத, நாடு,என்பதை,மறுபடியும்,,தெற்காசிய,நாடுகளுக்கு புரிய வைத்திருக்கிறது,,,,,,,,,,சாமி அடங்க மாட்டுரானுகளே ,,,,,

தமிழ் மதுரம் said...

தற்போது வெளியாகியுள்ள ஜியோ தொலைக்காட்சியின் வீடியோக்களில் லாகூரில் இரு சக்கர வாகனங்களில் தீவிரவாதிகள் தப்பி செல்லும் போது அவர்களை எதிர்க்க ஒரு போலீசையும் கூட காணவில்லை.பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரத்தில் பாதுகாப்பு அத்தனை பலமாக இருந்திருக்கிறது!!! //

சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்....

RJ Dyena said...

எனது வலைப்பூவுக்கு வருகை தந்து அதை வனப்பாக்கியமைக்கு நன்றிகள் !

உங்கள் தேடல், அதன் தரம், பகிரும் தமிழ்வளம் - சிறப்பு

பிரியமான வாழ்த்துக்களோடு
டயானா

Post a Comment

Related Posts with Thumbnails