March 09, 2009

கூட்டணி கூத்துகள்

15 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்பொழுது எந்த மாநிலத்தை நோக்கினும் கூட்டணி கூடும் முயற்சியில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.


இரு பெரும் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க வும் போட்டி போட்டுக் கொண்டு மாநில கட்சிகளை வளைத்துப் போடும் படலங்களில் பம்பரமாக இயங்கி வருகின்றன.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னமே கட்சிகள் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம், இல்லை இல்லை இது பழைய கூட்டணி, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இன்ன இன்ன தொகுதிகளில் தான் இடம் தருவோம், இன்ன இன்ன மாநிலங்களில் இத்தனை தொகுதிகள் தான் தருவோம் என தம்பட்டம் அடிக்க தொடங்கி இருந்தன.

கட்சிகளின் கொள்கைகளை (இன்றைய அரசியல் சூழ்நிலையில் அப்படின்னா என்னாங்க என கேட்கிற சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்வார்கள்)மூட்டை கட்டி வைத்து விட்டு நாணயமின்றி,வெட்கமின்றி வெறும் பதவி ஆசைக்காக மட்டும் கூட்டணி தர்மம் என்ற பெயரில் மகா கேவலமாக நடந்து கொள்வதை காண சகிக்கவில்லை.

கொள்கைகளை வியாபாரம் செய்து வெறும் பதவிகளுக்காக மட்டுமே அரசியல் செய்து, விடியலை காண்பிக்க வேண்டிய நாட்டிற்கு இருளை காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொஞ்சமும் கூச்சமில்லாமல் தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களிடம், தங்களை சிறை தள்ளியவர்களிடம் கூட கூட்டணி எப்படித் தான் வைத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

இந்தியாவில் எந்த கட்சியும் இது போன்ற கபட கூட்டணிகளுக்கு விலக்கில்லை,கட்சிகளினிடையே நடந்து வரும் கூட்டணிப் பேச்சுக்கள் கட்சிகளின் மேல் அதிருப்தியையே ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தை நோக்கினால் தங்களை மதசார்பற்றவர்கள் என தங்களை எப்போதும் அறிவித்து கொண்டிருக்கிற தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகள் பா.ஜ.க வுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டனர் கடந்த தேர்தல்களில்.

பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் போது மதவாதத்தை குறித்து தி.மு.க வோ, அ.தி.மு.க வோ கவலைப் படுவதில்லை.

பா.ஜ.க வுக்கு எதிரணி என்றால் போதும், உடனே ஆரம்பித்து விடுவார்கள் பா.ஜ.க வினரை குற்றம் குறைகள் சொல்ல.என்ன அரசியல்/கூட்டணி தர்மமோ இது!

காங்கிரஸ் மட்டும் சளைத்தவர்களா என்ன கூட்டணி அரசியலுக்கு. மத்தியில் ஆட்சியில் அமர மாநிலங்களில் எதையும் விட்டுக்கொடுப்பார்கள் அவர்கள்.

திராவிட கட்சிகள் ஒன்று மாறி ஒன்று ஏமாற்றவே, தமிழகத்தில் தற்போது சரியான பாடம் படித்துள்ளனர் பா.ஜ.க வினர்.எனினும் அகில இந்திய அளவில் அவர்களை முன்பு ஏமாற்றிய சிவசேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன.

தோழர்களை குறித்து சொல்லவே வேண்டாம்.

இப்படியாக கட்சிகள் அனைத்தும் பதவிகளுக்காக,நாற்காலிகளுக்காக தங்கள் கொள்கைகளை ம(து)றந்து கூட்டணி மாறி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்

தேர்தல் ஆணையமும்,சட்டமும் இது போன்ற கூ(கெ)ட்டணிகளை வைத்து 5 வருட கேலிக் கூத்துகளுக்கு காரணமாகின்றன.இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதோ என்னமோ(கூட்டணிகளே இருக்கக் கூடாது என கருதுபவன் நான்.அது போன்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர் தனது 5 வருட காலத்தில் பிறிதொரு கட்சிக்கு மாறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது)

அப்படியே கூட்டணிகளால் ஆட்சி அமைந்து விட்டாலும், ஒரு முடிவெடுக்க அல்லது புதிய திட்டங்களை நிறைவேற்ற அவர்களுக்குள்ளாக கருத்து வேறுபாடு வேறு.

இந்த வேறுபாடுகள் மறைந்து திட்டங்கள் அமல்படுத்தும் முன்னர் 5 வருடமும் முடிந்து விடும், பின்னர் திட்டங்கள் மக்களை சென்று சேர்வது என்றோ?

அவர்கள் அடிக்கும் கூத்தை மக்கள் வேடிக்கை பார்க்கிறதோடு சரி, மீண்டும் தேர்தல் வந்துவிட்டால் அதிகம் பணமளிப்பவருக்கு ஓட்டளித்து விட்டு அவரவர் வேலையை கவனிக்க சென்று விடுவர்.

இது போன்ற கூட்டணி கூத்துக்களுக்கு முடிவு தான் என்றோ?

1 comment:

Anonymous said...

sagipu thannmai irukum varai indha vekkakedugalai paarthukondu than iruka vendum...

Post a Comment

Related Posts with Thumbnails