March 14, 2009

பிரதமர் பதவியை குறிவைக்கும் பிரபலங்கள்

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான கூட்டு சதிகளும் கூட்டு இல்லாத சதிகளும் இப்போதே அரங்கேற தொடங்கி விட்டன.

கடந்த 14 ஆவது பாராளுமன்ற தேர்தல் போலல்லாது காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும்,பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக முன்னணிக்கும் சவாலாக ஒரளவு பலம் நிறைந்த! மூன்றாவது அணியும் உருவெடுத்துள்ளது.

கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கின்றனவோ இல்லையோ அதற்கு முன்னர் பிரதமராக யார் வேண்டுமென்பதில் குறியாக இருக்கின்றன.

பிரதமர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே முன்னிறுத்தப்பட்டிருந்தாலும் சோனியா/ராகுல் காந்தியின் பெயர்களும் அடிபடாமல் இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அத்வானியின் பெயர் முன்மொழியப்பட்டாலும் குஜராத் முதல்வர் மோடிக்கும் பா.ஜ.க வில் ஓரளவு ஆதரவு உள்ளது.

மூன்றாவது அணியில் தற்போது அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் பிரதமர் நாற்காலியை குறி வைத்தே மூன்றாவது அணியில் இணைந்திருப்பதாகத் தெரிகிறது.

பகுஜன் சமாஜின் மாயாவதி,தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு,அ.இ.அ.தி.மு.க வின் அம்மா,முன்னாள் பிரதமரான மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேவேகவுடா என அனைவரும் பிரதமர் பதவியைப் பெற இப்போதே வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டனர்.

மூன்றாவது அணியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்த இரு பெண் பெரும்புள்ளிகளான மாயாவும்,ஜெயாவும், எங்களிடம் நீங்கள் தான் கையேந்தி நிற்க வேண்டும் என்ற செய்தியையும்;பிரதமர் பதவிக்கு நாங்களும் போட்டியாளர்கள் தான் என்ற தங்கள் குறிக்கோளையும் மறைமுகமாக அறிவித்தாகி விட்டது.

மூன்றாவது அணியின் கட்சிகளுக்கு, நாளை (15.03.09) இரவு விருந்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் மாயா என்ன மாயையை ஏற்படுத்த போகிறாரோ?

ஜெயாவின் விருந்தையும் விரைவில் எதிர்பார்க்கலாமோ!

இதனிடையில் பிரதமர் நாற்காலிக்கு குறி வைத்திருக்கும் மற்றொரு பிரபலம், ஏற்கெனவே பல நாற்காலிகளைக் கண்ட தேசியவாத காங்கிரசின் நாற்காலி நாயகன் சரத்பவார்.

"மகாராஷ்டிராவில் இருந்து பிரதமர் ஒருவர் வருவதை மகாராஷ்டிரா மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என கூறியிருப்பதிலிருந்து இவரும் மறைமுகமாக தனது நாற்காலி மோகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

ஆனாலும் தற்சமயம் உள்ள மூன்று அணிகளிலும் இவர் இதுவரை தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.

கிரிக்கெட் வாரிய தலைவராகவும்,மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும் உள்ள இவரையும் நாற்காலி மோகம் விட்டு வைக்கவில்லை. 2010 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலை பொருத்த மட்டில் ஒற்றை நாற்காலிக்கு போட்டி போடுபவர்களில் எவர் பிரதமராக வருவார் என கணிப்பது மிகக்கடினமே.

இப்படியாக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கின்றனவோ இல்லையோ பிரதமர் பதவிக்கான தங்கள் பிரதிநிதியை நேரடியாகவோ/மறைமுகமாகவோ அறிவித்திருப்பதிலிருந்து தங்கள் பதவி மோகத்தை மீண்டும் பிரகடனப்படுத்தியுள்ளன.

1 comment:

ஜீவா said...

அன்பு எட்வின் தங்களின் வலைப்பதிவை படித்துவருகிறேன், மிகவும் அற்புதம், உங்களைபோல் அரசியலை பற்றி எழுத எனக்கு தெரியாது. வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
ஜீவா

Post a Comment

Related Posts with Thumbnails