March 24, 2009

ஓ(ன்) ஓட்டு யாருக்குலே


ட்ர்ர்ர்ர்ர்ரிங்க்...ட்ர்ர்ர்ர்ர்ரிங்க் என தொலைபேசி வெகுநேரம் சிணுங்கிக் கொண்டிருக்கவே 'எம்மா ராணி அந்த போன எடுமா' என்றவாறே வீட்டினுள் நுழைந்தார் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்த வாத்தியார் அய்யா தமிழ்துரை.

பெல் வேற லாங் பெல்லா இருக்கே ட்ரங்க் காலா தான் இருக்கனும் என மனதில் நினைத்துக் கொண்டே தேர்தல் சிறப்புப் பத்திரிக்கையை புரட்டினார்.

'என்னங்க, உங்களுக்கு தான்' என சொல்லி முடிக்கும் முன்னரே சமையலறையை நோக்கி நகர்ந்தார் துரையின் மனைவி.

என்னலே எப்பிடி இருக்க?இப்ப தான் தூத்துக்குடி ஆளுவள ஞாபகம் வருதோ... ஊர்ல எல்லாரும் சவுக்கியமாடே?

உங்க தயவுல எதோ இருக்கோம் அண்ணே என்று எதிர் முனையிலிருந்து மணியனின் குரல் வந்தது.

துரையே மேலும் தொடர்ந்தார்...'எலக்சன் இந்த தடவ எப்பிடிலே அங்க? 'பிரச்சாரத்துக்கு வண்டிய கட்டி கூப்பாடு போட ஆரம்பிச்சிருப்பானுவளே திருநவேலி பயலுவ' என்று சொன்னவாறே நாற்காலியை தன் பக்கம் இழுத்து அதில் அமர்ந்தார்.

ஆமாண்ணே அது பத்தி எதும் உங்க கிட்ட கேக்கலாமுன்னு தான் போன் போட்டேன்.

முந்தி மாறி இல்லணே... இப்போல்லாம் பெரிய பெரிய காருல வாராணுவ, ட்ரக்கரு ஜீப்புல இந்த பயலுவ பிரச்சாரம் பண்ண காலமெல்லாம் போச்சு. எல்லாம் நல்லா வசதியாத்தாண்ணே இருக்காவ.

நம்ம தே இப்பிடியே வயக்காட்டில இன்னும் காலத்த தள்ளிக்கிட்டு இருக்கோம்,வயக்காட்டுக்கு ஒரு டிரர்க்டர் கேட்டு லோன் போட்டதயே இன்னும் காங்கல.

சரிதாம்லே என துண்டினால் நெத்தியை ஒற்றினார் துரை, என்னத்தல சொல்ல...ரோடெல்லாம் கேவலமா கிடக்கு, நம்ம பயன்னு பாத்து ஓட்டு போட்ட அந்த எம்.எல்.ஏ பய கூட இந்த பக்கம் திரும்பிப் பாக்கலயேடே. அப்புறம் இந்த எம்.பி பயலுவள நம்பி என்னத்த அறுக்கச் சொல்லுத.

இவனுகள எல்லாம் நம்பினா சுடுகாட்டுக்குத் தாம்லே போவனும். எலக்சன் வந்தா மட்டும் "ஓட்டுப் போடுங்கனு" வெக்கமில்லாம ஊரு பக்கம் வறானுவ .

எலக்சன் முடிஞ்சா இங்க யாம்ல வராணுவ இவனுவ, நேரா சிட்டில ஒரு வீடு,மெட்றாஸ்ல ஒண்ணு, டெல்லில ஒண்ணுனு அங்கயே கதியா கிடக்கானுவ.

வருசத்தில ரெண்டு தடவ பாக்கதே பெரிய விஷயம்,இவனுக கிட்ட போய் என்னத்த சொல்லதுக்கு நம்ம.

இல்லணே இந்த தடவயும் பெரிய கட்சிக்கே ஓட்டு போட்டு பாப்போம்;டெல்லி ஆட்சியயும் பாக்க வேண்டியிருக்குல்ல என்றார் மணியன்.

டெல்லிய எல்லாம் பாத்தா நம்ம ஊர எவன்டே சரி பண்ணுறது?ஏலே நீ என்ன வேணா சொல்லுலே என் ஓட்டு நம்ம தொகுதிக்கு நல்லது செய்யாத பழயவனுக்கு இல்ல, உருப்படியா எதும் செய்வேன்னு சின்ன கட்சி ஒண்ணுல இருந்து எம்.ஏ படிச்ச ஒரு பையன் நிக்கானாம்; இந்த தடவ அவனுக்கு தாம்ல என் ஓட்டு என்று தீர்க்கமாக சொன்னார் தமிழ்துரை.

மற்றொரு முனையில் தமிழ்துரை ஓட்டளிப்பதாக சொல்லிக் கொண்டிருந்த வேட்பாளரின் தொலைபேசி உரையாடல்... "என்னய்யா பி.ஏ, பெரிய கட்சி காரனுவ எவ்ளோ சக்கரம் தருவாங்களாம் அவங்க கூட்டணிக்கு போனா; நம்ம கேட்டது இல்லனா அடுத்த கூட்டணிக்காரங்க கிட்ட பேசிப்பாருலே" என சொல்லிவிட்டு போனை துண்டித்தார் !!

5 comments:

நசரேயன் said...

நல்லா இருக்கு நாட்டு நடப்பு

Anonymous said...

we should stand together against these....

tamilnadunews said...

நல்லா இருக்கு நாட்டு நடப்பு

tamilraja said...

kodumaiyai sariyaga solli irukkireergal

எட்வின் said...

யூத்ஃபுல் விகடனின் link http://youthful.vikatan.com/youth/edwinstory26032009.asp

Post a Comment

Related Posts with Thumbnails