April 23, 2009

ஏப்ரல்,மே மாதங்களின் சுடும் வெயிலில் தான் தேர்தல் வேண்டுமா?

பொதுவாகவே பாரதத்தில் ஏப்ரல் மே மாதங்களிலேயே தேர்தல் நடைபெற்று வந்திருக்கின்றன. பதினைந்தாவது பாராளுமன்றத்தை தெரிந்தெடுக்கும் இந்த முறையும் அனல் வீசும் ஏப்ரல் மே மாதங்களில் தான் ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த இன்று(23.04.2009)ஒரிசாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இரு தேர்தல் அலுவலர்கள் மரணமடைந்ததாக ஊடகங்கள் வழி செய்தியைக் கேள்விப் பட நேரிடுகிறது.

மேலும் ஒரிசா,பீகார் போன்ற பிற்படுத்தப்பட்ட மாநிலங்களில் பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீரோ,வெயிலில் இருந்து மறைவதற்கு ஒரு மறைவோ தேர்தல் பணியாளர்களால் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை.

இவை போன்ற மாநிலங்களில் கேள்வி கேட்பதற்கு எவருமிருக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் இதற்கு காரணமா என்றும் தெரியவில்லை.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 16.04.2009 அன்று வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை.இனி நடக்கவிருக்கின்ற அடுத்த மூன்று கட்ட வாக்குப்பதிவுகளின் போதும் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

இந்தியாவின் ஒரிசா, பீகார் உள்ளிட்ட கிழக்குமாநிலங்களில் மட்டும் ஏப்ரல் 19 வரை 23உயிர்கள் வெயிலின் கொடுமைக்கு பலியாகி இருக்கின்றனர்.அதிகபட்சமாக44 டிகிரி பதிவாகியிருக்கிறது அங்கு.

குறிப்பாக தமிழ்நாட்டில் மே 13 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. அக்னி நட்சத்திரம் என சொல்லப்படும் உச்ச கட்ட வெயில் அந்த இடைவெளியில் வர வாய்ப்புள்ளது.எனவே தமிழர்கள் சுதாரிப்பாக இருத்தல் நல்லது.

ஏப்ரல்,மே மாதங்களில் பொதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை காலம்.வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளிலேயே அமைக்கப்படுகின்றன.மேலும் வாக்குப்பதிவு நடந்த பின்னர் (முன்பு)வாக்குச்சீட்டுகள்,(தற்பொழுது)வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு பள்ளிகள் தேவையாதலால் ஏப்ரல்,மே மாதங்களை தேர்தல் ஆணையம் தெரிந்தெடுத்திருக்கலாம்.

ஆனால் 5 வருடத்திற்கு முன்னர் இருந்த தட்பவெப்பநிலை இப்போது நிலவுகிறதா என்றால்... நிச்சயமாக இல்லை. மும்பை பிப்ரவரி மாதமே 40 டிகிரிக்கும் மேலான வெப்பத்தை அனுபவித்து விட்டது இம்முறை.சென்னையும்,இந்தியாவின் பிற மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.டில்லியில் புழுதியுடன் அனல் காற்றி வீசி வந்திருக்கிறது மார்ச் மாதத்திலும்,இந்த மாதத்திலுமாக.

நேற்று (22.04.2009)தான் சர்வதேச பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.பல அமைப்புகள் பொதுமக்களுக்கு பூமி வெப்பமாகுதலையும்,தண்ணீர் வீணாகுதலையும் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் இயற்கைக்கு நவீன உலகம் செய்த துரோகத்தை இயற்கை ஒரு போதும் மன்னிக்க தயாராக இல்லை என்றே தெரிகிறது.வருடத்திற்கு வருடம் தட்பவெப்பநிலையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

சரி காலநிலையை நம்மால் மாற்ற முடியாது,தேர்தல் நாளை மாற்றலாம் அல்லவா.தவிர்க்க முடியாத காரணத்தால் தேர்தல் நாள்களையும் மாற்றி வைக்க முடியவில்லை என்றால் வாக்குச்சாவடிகளுக்கு உரிய வசதிகளையாவது செய்து கொடுக்கலாமே தேர்தல் ஆணையம்.

வேட்பாளர்கள்,கட்சித்தலைவர்கள் ஹாயாக ஏ.சி.காரில் கூலிங் க்ளாஸ் சகிதம் வந்து விட்டு போய் விடுவார்கள். இதைக் குறித்து எல்லாம் அவர்கள் ஏன் கவலைபடுகிறார்கள்.எத்தனை வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன என நோக்குகின்றனரோ?

4 comments:

Ramesh said...

December is the best, if election is conducted within 15 days.

India is such a huge country, needs extra para military support and mobilizing around different phases (need a week for that), is the only way to help all states getting covered.

Hence school vacation in mind, all these political parties are doing it since 1991 (or roundabouts!)

எட்வின் said...

Ramesh said...

//Hence school vacation in mind, all these political parties are doing it since 1991 (or roundabouts!)//

ஆமாம் அது மட்டும் தான் காரணம் என நானும் கருதுகிறேன்

Anonymous said...

ஏப்ரல்,மே மாதங்களின் சுடும் வெயிலில் ஒட்டு போட்டாலாவது மக்களுக்கு சூடு சொரன்னை வருமான்னு தான் !!!!

எட்வின் said...

அய்யா அனானி...

சிரித்தேன் :)

சூடு சுரணை வருவதற்கு உடம்பில் தெம்பும் வேணுமில்ல.

ஏப்ரல் ஆனா என்ன மே ஆனா என்ன திருமங்கலம் மாதிரி இன்னொரு தேர்தல் வராதுன்னு எதிர்பார்க்கிறவர்களும் இருக்கத் தான் செய்றாங்க.

Post a Comment

Related Posts with Thumbnails