April 30, 2009

வம்பு பேசிய வாக்காளர்கள் எங்கே போனார்கள்?


இந்தியாவின் பதினைந்தாவது பாராளுமன்றத்திற்கான மூன்றாவது கட்ட வாக்கெடுப்பு இன்று(30.04) மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.

மூன்றாவது கட்ட வாக்கெடுப்பில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் வெறும் 50 மட்டுமே. குறிப்பாக மும்பை தொகுதியில் பதிவான வாக்குகள் 45% மட்டுமே. 2004 ல் பதிவான வாக்குகளை விட இரு சதவீதம் இது குறைவாகும்.

வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள்,பாலிவுட் திரைத்துறையினர் பலராலும் பல விதமான கோரிக்கைகளும்,வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்ட பின்னரும் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் அரசியல்வாதிகள் மேலும்,ஆட்சியாளர்கள் மேலும் வெகு கோபம் கொண்டு அமைதி ஊர்வலங்கள், போராட்டங்கள், இணைய பிரச்சாரங்கள் பலவும் செய்தவர்கள் வாக்கெடுப்பு சமயத்தில் எங்கு சென்றார்களோ தெரியவில்லை.இத்தனைக்கும் இன்று மும்பையில் விடுமுறையாகும்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னரே jaagore.com என்ற இணைய தளத்தின் மூலம் infosys, wipro ஆகியவற்றின் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இளைஞர்கள் மத்தியில் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மும்பை மக்கள் நாட்டின் மேல் தட்டு மக்கள்,விவரமானவர்கள் என ஊடகங்கள் செய்து வந்த பொய் பிரச்சாரங்களையும்,பிரமையையும் இன்று பதிவான வாக்கு சதவீதம் பொய்க்க வைத்துள்ளது. அவர்களும் நாட்டின் பிற பகுதிகளின் மக்களுக்கு சமமே என்பதும் நிரூபணமாகியிருக்கிறது.

மும்பை 40 சதவீதத்திற்கும் மேல் சேரிப்பகுதியாக இருப்பதும் குறைவான வாக்குப்பதிவிற்கு ஒருவேளை காரணமாகியிருக்கலாம்.

இளைஞர்கள் பலரும் இணையத்தில் உலவுகிறார்கள்,சூடான அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.ஆனால் வாக்கெடுப்பு என்று வரும் போது அவர்களால் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்கான சமயம் ஒதுக்க முடியாதது ஏனோ?

பார்ட்டி,டிஸ்கொதே ஆகியவற்றிற்கு முக்கியத்துவமும் போதிய நேரமும் அளிக்கும் மும்பை வாசிகள் வாக்கெடுப்பிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.தேர்தலை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை போலும்.

ஒருவேளை ஆன்லைனிலோ,ஆர்குட்டிலோ,ஃபேஸ்புக்கிலோ வாக்கெடுப்பு வைத்திருந்தால் வாக்களித்திருப்பார்களோ?

இவ்வாறு வாக்களிக்காமல் இருந்து விட்டு ... பின்னர் அரசியல்வாதிகள் நல்லதே செய்யவில்லை,பாதுகாப்பு சரியில்லை என்றெல்லாம் வாய் கிழிய வசைபாடுபவர்களும் இதே பொதுமக்கள் தான்.

யாரைக்குற்றம் சொல்வதோ? பொதுமக்களையா? இல்லை வாக்களிக்காமல் இருப்பதற்கும் சட்டமியற்றி வைத்திருக்கும் இந்திய அரசாங்கத்தையா?

இந்திய திருநாட்டில் இதெல்லாம் சகஜம் தானோ!!

4 comments:

SUBBU said...

//ஒருவேளை ஆன்லைனிலோ,ஆர்குட்டிலோ,ஃபேஸ்புக்கிலோ வாக்கெடுப்பு வைத்திருந்தால் வாக்களித்திருப்பார்களோ?
//

100%

கிரி said...

//இவ்வாறு வாக்களிக்காமல் இருந்து விட்டு ... பின்னர் அரசியல்வாதிகள் நல்லதே செய்யவில்லை,பாதுகாப்பு சரியில்லை என்றெல்லாம் வாய் கிழிய வசைபாடுபவர்களும் இதே பொதுமக்கள் தான்.//

சின்ன திருத்தம்

இதில் படித்தவர்கள் தான் இதை போல பேசி விட்டு ஒட்டு போடுவதில்லை..மற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் கடமையை செய்து விடுகிறார்கள்.

வலையுலகத்தில் அரசியல் பற்றி வாய் கிழிய பேசும் பலர் விவாதிக்கும் பெரும்பாலோனோர் ஓட்டே போடுவதில்லை :-(

எட்வின் said...

நன்றி திரு. சுப்பு
-----------------
கிரி said...

//இதில் படித்தவர்கள் தான் இதை போல பேசி விட்டு ஒட்டு போடுவதில்லை..மற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் கடமையை செய்து விடுகிறார்கள்.//

ஒத்து கொள்கிறேன்...

"டாட்டா"வே நேற்று ஒட்டு போடவில்லையாம்.

எட்வின் said...

கிரி said...

//வலையுலகத்தில் அரசியல் பற்றி வாய் கிழிய பேசும் பலர் விவாதிக்கும் பெரும்பாலோனோர் ஓட்டே போடுவதில்லை :-(//

எங்களை போன்றவர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையே இல்லையாம்... !!! :(

வெளிநாட்டில் இருப்பவருக்கு ஓட்டளிக்கும் சட்டம் ஏதும் இல்லையென்றே கருதுகிறேன்.

Post a Comment

Related Posts with Thumbnails