May 13, 2009

ஆட்சியை பிடிக்கும் அணி என்ற புதிய அணி உருவாக்கம்?

கார்ட்டூன் நன்றி sulekha.com
---------------

இந்தியா முழுதும் ஒரு வழியாக ஐந்து கட்ட தேர்தலும் நடந்து முடிந்தாகி விட்டது.முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எந்த கூட்டணி ஆட்சியமைக்கும்,எவர் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு சற்றே அதிகமாகத் தான் உள்ளது.

1991 ற்கு பிறகு எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்ற கேள்வி மாறி எந்த கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற நிலைமை உருவெடுத்துள்ளது எவரும் மறுக்கமுடியாத ஒன்று.இந்தியா முழுதும் தனக்கு ஆதரவைக் கொண்டிருந்த காங்கிரஸ் தனது ஆட்சி முறைகளினாலும் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லாமையாலும் தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்தது.

குறிப்பாக தமிழகத்தில், காங்கிரசின் அழிவிற்கு காங்கிரசாரே காரணம் என்றாலும் மிகையல்ல.உட்கட்சி விவகாரங்களினாலும்,பதவி மோகத்தினாலும் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த ஓரளவு மரியாதையையும் குறைத்துக் கொண்டனர்.அவர்களின் கோஷ்டி பூசல்கள் இன்று வரை தீர்ந்த பாடில்லை.பிற மாநிலங்களும் (சில கட்சிகளும்) இதற்கு விதிவிலக்கல்ல. பதவி மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலைமையினால் மாநில கட்சிகள் தேசிய அரசியலில் மெதுவாக காலூன்ற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.மெல்ல காலூன்றிய மாநில கட்சிகள் தேசிய ஆட்சியில் பதவிகளைப் பிடிக்கவும் செய்து தற்போது டெல்லியில் தங்களுக்கென ஒரு அடையாளத்தையும் உறுதியான இடத்தையும் பிடித்துள்ளன.

15 ஆவது மக்களவையைத் தெரிந்தெடுக்கும் தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்காக தங்கள் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பிற கட்சிகளின் வாலைப்பிடித்துக் கெஞ்சத் தொடங்கியிருந்தன.இழுபறியின் இறுதியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி;பாரதீய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி;கம்யூனிஸ்டுகள்,பகுஜன் சமாஜ்,அ.தி.மு.க,தெலுங்கு தேசம் உட்பட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி என மூன்று கூட்டணிகள் உருவாகின.

ஒவ்வொரு கட்ட தேர்தலும் முடிந்து வர வர இந்த மூன்று கூட்டணிகளினுள் உள்ள கட்சிகள் எந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை கணித்து அந்த கூட்டணிக்கு தாவுவதற்கு தங்களைத் தயாராக்கிக் கொண்டிருந்தன.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்த லாலு,பாஸ்வான் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆப்பு வைத்தனர்.பா.ஜ.க வுடன் இருந்த சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணிக்கு தாவினார்,அது போன்று ஒரிசா முதல்வர் பிஜூ பட்நாயக் பா.ஜ.க வுடனான உறவை முடித்துக் கொண்டார்.மூன்றாவது அணியிலிருந்த ஆந்திராவின் டி.ஆர்.எஸ் கட்சி அதிலிருந்து விலகியது.தற்பொழுது அம்மாவும்,சரத்பவாரும்,சந்திரபாபு நாயுடுவும் எந்த கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு சாடுவதற்கு மதில் மேல் பூனையாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

இறுதியில் மூன்றாவது அணி உருவாக காரணமான,தங்கள் கொள்கைகளை எளிதில் விட்டுக்கொடுக்காத இடது மற்றும் வலதுசாரி தோழர்கள் தோற்கடிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாகவே தோன்றுகிறது. தோழர்கள் ஏமாற்றப்பட போகிறார்கள் என்பது கர்நாடகாவின் குமாரசாமி-சோனியாகாந்தியின் நேற்றைய சந்திப்பிலேயே துளிர் விட்ட நிலையில் எவருக்கும் ஆதரவு என்ற ஜெ'ன் இன்றைய நிலையும்,சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க வின் வெங்கையா நாயுடு சந்திப்பும் அதனை உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது.

எனவே அடுத்து வரும் சில நாட்களில் இந்த மூன்று அணிகளும் மாறி "ஆட்சியைப் பிடிக்கும் அணி" என்ற ஒரு அணி தான் உருவாகும் வாய்ப்புள்ளது.அவர்கள் அதற்கு என்ன விதமான பெயரினை வைத்தாலும் அது ஆட்சியை பிடிக்கும் அணியாகவே இருக்கும்.அதற்கு என்ன விலையும்,என்ன பதவியும் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்... தங்கள் கொள்கைகளையும் காற்றில் பறக்க விட்டு பதவி மோகம் பிடித்துத் திரியும் சில அரசியல் ஆதாய ஆசாமிக் கூட்டங்கள்.

இந்த கொடுமைகளை எல்லாம் நாம் கண்டு சகிக்க வேண்டியிருக்கிறது... என்ன செய்வது இந்தியனாகி விட்டோமே!

7 comments:

தேவன் மாயம் said...

எனவே அடுத்து வரும் சில நாட்களில் இந்த மூன்று அணிகளும் மாறி "ஆட்சியைப் பிடிக்கும் அணி" என்ற ஒரு அணி தான் உருவாகும் வாய்ப்புள்ளது.///

நல்ல அலசல்!

கலையரசன் said...

பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

KRICONS said...

வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது

எட்வின் said...

நன்றி தேவான்மயம்
---------------------------
நன்றி கலையரசன் அவர்களே.நிச்சயம் பார்க்கிறேன்.கருத்து சொல்லும் அளவிற்கு தல இல்ல :)
---------------------------
நன்றி பெயரிலா நண்பரே.

என்.டி.டி.வி தி.மு.க அணிக்கு 19 இடங்களும் அ.தி.மு.க அணிக்கு 12 இடங்களும் மற்றவைக்கு 8 இடங்களும் கிடைக்கும் என கணித்திருக்கிறது.16 ஆம் தேதி என்ன நடக்குமென்று பொருத்திருந்து பார்ப்போம்.சந்தர்ப்பவாத அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த தேர்தல் இடமளிக்காமல் இருந்தால் அதுவே பெரிய விஷயம்.
-----------------------------------
தகவலுக்கு நன்றி kricons

Sukumar said...

நல்ல பொலிடிகல் அனலிஸ்ட் சார் நீங்க..... வாழ்த்துக்கள்...

"உழவன்" "Uzhavan" said...

சரியாத்தான் சொல்லிருக்கீங்க..

Post a Comment

Related Posts with Thumbnails