September 27, 2009

மட்டைவீச்சில் சொதப்பும் இந்திய பந்துவீச்சாளர்கள்

நேற்று நடந்து முடிந்த இந்தியா-பாக் கிரிக்கெட் ஆட்டம் காலங்காலமாக இந்திய அணியின் மட்டைவீச்சில் இருந்து வரும் பலவீனத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

வழக்கமாக இந்திய அணித்தலைவர் அவரது சார்பில் பந்துவீச்சைக் குறை கூறியிருக்கிறார். என்றாலும் 303 என்ற இலக்கு, உலகிலேயே மட்டை வீச்சில் சிறந்து விளங்கும் இந்தியாவிற்கு !! அத்தனை கடினம் அல்லவே.ஷேவாக்கும், யுவ்ராஜும் இல்லாதது பின்னடைவு என்றாலும் காம்பீர், டிராவிட், ரைனா மூவரும் ரன் விகிதம் 6 க்கு குறையாமல் பார்த்துக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இம்மூன்று மட்டை வீச்சாளர்களை பாராட்டுதல் ஒருபுறமிருந்தாலும் இவர்களுக்கு பின் வந்த மட்டை வீச்சாளர்களை குறை சொல்லாமலும் இருக்க முடியாது. இறுதி 4 ஆட்டக்காரர்கள் இணைந்து 50 ஓட்டங்கள் எடுக்கவியலாதவர்களை தேர்வு செய்ததற்காக தேர்வுக்குழுவை குறை கூறினாலும் தகும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பந்து வீச்சாளர்களின் மட்டை வீச்சு எப்படியிருந்ததோ இன்றளவும் அது அப்படியே தொடர்கிறது. இன்று பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் வெங்கடேஷ் பிரசாத் காலம் முதல் இன்றைய இஷாந்த் ஷர்மா வரை இந்திய அணியில் இதுவரை இடம் பிடித்த பந்து வீச்சாளர்கள் எவரும் சொல்லும்படியான மட்டை வீச்சை வெளிப்படுத்தாதது எவர் குற்றமோ!

ஆறு விக்கெட்டுகள் சரிந்து விட்டது என்றால் போதும்; அதன் பின்னர் வரும் இந்திய மட்டை வீச்சாளர்களிடம் பெரிதாக எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வார்கள்; இன்று வரை அதனை மெய்ப்பிக்கும் வரையில் அவர்கள் (பந்து வீச்சாளர்கள்) ஆடி வருவதே அதற்கு காரணம்

பிற அணிகள், குறிப்பாக தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இது வரை இருந்து வரும் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் மட்டை வீச்சிலும் சிறந்து விளங்கியது தான் அவர்கள் தொடர்ந்து இத்தனை காலமாக முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காரணங்களில் ஒன்று.

இந்திய அணி சிறந்த அணியாக உருவாக வேண்டுமென்றால் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் மட்டுமல்லாது மட்டைவீச்சிலும் கவனம் செலுத்துதல் அவசியம். அது முடியாத பட்சத்தில் பந்துவீச்சு, மட்டைவீச்சு என இரண்டு பிரிவுகளிலும் திறமை காட்டுபவர்களை தேர்வுக்குழுவினர் கண்டெத்த வேண்டும்.

நேற்றைய தோல்விக்கு காம்பீர் மற்றும் டிராவிட்டின் தேவையற்ற ரன் அவுட்களும்; பொறுப்பற்ற முறையில் ஆடிய அணித்தலைவர் தோனியும் ஒரு விதத்தில் காரணங்களே.

(டிராவிட் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் அன்றும் இன்றும் அப்படியே தான் இருக்கிறார். பாவம் நேற்று அவரை காம்பீர் ஓட விட்டு பின்னி பெடலெடுத்து விட்டார்)

1 comment:

manjoorraja said...

ஆமாம் காலங்காலமாக இந்திய அணிக்கு இருக்கும் சாபம் இது. கடைசி 3 விக்கெட்டுகளும் போகும் வேகம் மிகவும் கொடுமை.

என்றுதான் இதற்கு மாற்றம் வருமோ தெரியவில்லை.

நேற்று யூசுப் பத்தான் சொதப்பியது மிகவும் கொடுமை. ரெய்னா அவுட்டானவுடன் ஆட்டமே முடிந்துவிட்டது என்பது அதைவிட கொடுமை.

Post a Comment

Related Posts with Thumbnails