December 31, 2010

2010 ல் எதிர்பார்த்ததும் நிகழ்ந்ததும்

2010 ல் எதிர்பார்க்கும் பத்து விடயங்கள் என்ற தலையங்கத்தில் ஜனவரி ஆறாம் தியதி பதிவிட்டிருந்தேன்.அதனை திரும்பிப் பார்க்கும் ஒரு பதிவு இது, அனைவருக்கும் என் கனிவான ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்.

1. ரஹ்மான் - கிராமி விருது

2009 ற்கான கிராமி விருதிற்காக ரஹ்மான் இரு பிரிவுகளில் ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்கான இசைக்காகவும், ஜெய்கோ பாடலுக்ககவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இரு பிரிவுகளிலும் அவருக்கு விருது கிடைத்தது. இவை போதாதென்று 2010 ல் நோபல் பரிசளிப்பு விழாவில் ரஹ்மானின் இசைநிகழ்ச்சி அரங்கேறியது, மீண்டும் 2010 ற்கான கோல்டன் க்ளோப் விருதிற்காக (டேனி போயலின் 127 Hours திரைப்படத்திற்காக) பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறார்.

 

2. உலகக்கோப்பை ஹாக்கி

டெல்லியில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி போட்டிகளில் வழக்கம் போலவே இந்திய அணியினர் சொதப்பினர். ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றனர், ஆஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றது.

3. உலகக்கோப்பை கால்பந்து

 
முதன் முறையாக ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் Vuvuzela ன் இரைச்சல் சத்தத்தின் இடையிலும் சிறப்பாகவே நடந்து முடிந்தன. 2008 முதல் தோல்வியையே சந்திக்காத நெதர்லாந்தும், ஆடிய முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்த ஸ்பெயின் அணியும் இறுதிப் போட்டியில் ஆடியது எவரும் எதிர்பார்க்காதது. ஆக்டோபஸ் 'பால்' கணித்தபடியே ஸ்பெயின் வெற்றி பெற்றது. (மரித்தும் போனது ஆக்டோபஸ்)

 

4. இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த இலங்கை தேர்தல் மாற்றம் எதையும் தரவில்லை. முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவின் சிறைபிடிப்பைத் தவிர.

5. எந்திரன்

ரோபோட் - எந்திரன் எதிர்பார்த்ததற்கும் அதிகமான வசூலைக் கொட்டி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. 20 ரூபாய் டிக்கெட்டுகள் இருநூறு ரூபாய்க்கு விலை போனதென்றால் வசூலாகாமல் இருக்குமா என்ன?! இத்தனை வயதில் சூப்பர் ஸ்டாருக்கு உலக அழகியுடன் நடனம் தேவையா என்பது கேள்வி எழுப்பப்பட வேண்டிய ஒன்று.

இரண்டாவது பாதி காட்சிகள் சில கார்ட்டூனை நினைவுபடுத்தியது மறுக்கமுடியாத ஒன்று. உலகம் முழுவதையும் ஷங்கர் திரும்பிப் பார்க்க வைத்தார் என்பதற்காக பாராட்டப்பட வேண்டிய சினிமா. மறைந்த "சுஜாதா" அவர்களின் பங்களிப்பையும் மறந்து விடமுடியாது.


6. வேட்டைக்காரன் - விஜய்

மீண்டும் ஒரு மசாலா படத்தை அளித்த திருப்தி ‘சுறா’வினால் இளையதளபதிக்கு உண்டாயிருக்கக்கூடும். ஆனால் பணத்தை போட்ட தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் இல்லை. ஆனால் இளையதளபதி ஒன்றோடு நிறுத்திக்கொண்டது ஏனோ?

7. இந்தியா - உலக அரங்கில்

 

உலக அரங்கில் இந்தியாவின் ஊழல் கொடிகட்டி பறந்ததைத்தவிர வேறு ஒன்றும் விஷேசமாக இந்தியா செய்ததாகத் தெரியவில்லை. ஐ.பி.எல், காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஸ்பெக்ட்ரம் என தொடரும் ஊழல்கள் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய செய்தன. G-20 மாநாடு உள்ளிட்ட பன்னாட்டு மாநாடுகளில் இந்தியாவின் பங்கு குறைவு தான்.

8. டைகர் உட்ஸ்

 

இருபது வார இடைவெளிக்கு பின்னர் ஏப்ரல் 2010 ல் மீண்டும் களத்தில் இறங்கிய கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் குறிப்பிடும்படியான வெற்றிகளை இதுவரை பெறவில்லை. உலகத்தில் மிக அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக ஜூலையில் அறிவிக்கப்பட்டாலும் கோல்பில் தனது முதலிடத்தை அக்டோபரில் இங்கிலாந்தின் Lee Westwood இடம் பறிகொடுத்தார்.

 

9. ஃபெடரர் Vs நடால்

 

ஃபெடரருக்கும் நடாலுக்கும் இடையே இதுவரை மொத்தமாக நடைபெற்றுள்ள 22 ஆட்டங்களில் நடால் 14-8 என முன்னிலை பெறுகிறார். காயங்கள் காரணமாக 2009 ன் இறுதி கட்டத்தில் தரவரிசையில் தனது முதலிடத்தை ஃபெடரரிடம் இழந்த நடால், ஜூன் 2010 ல் பெற்ற பிரெஞ்ச் ஓபன் வெற்றியுடன் மீண்டும் முதலிடம் பெற்றார். நடாலின் ஒன்பது வருட காத்திருப்பு இந்த வருடம் யு.எஸ் ஓபனில் நனவானது. முதன்முறையாக நடால் யு.எஸ்.ஓபன் சாம்பியன் ஆனார். முதன்முறையாக நடால் மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்றதும் இந்த வருடம் தான்.


10. இந்தியா - பிரிவினை

முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் குண்டு வெடிப்புகளும், மதக்கலவரங்களும் குறைந்திருந்தது கொஞ்சம் ஆறுதலான விஷயம். ஆனாலும் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண இன்னும் பல வருடங்கள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அனைவருக்கும் புதிய ஆங்கில வருடம் பொன்னானதாக அமைய வாழ்த்துக்கள்.

December 30, 2010

2010 ன் சிறந்த கிரிக்கெட் நிகழ்வுகள்

2010 ன் கிரிக்கெட் ஆட்டங்களை சற்று திரும்பிப் பார்த்ததில் பிடிபட்ட சில நிகழ்வுகள் புகைப்படங்களும் நக்கலுமாய் இங்கே. 

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததும், தொடர்ந்து அதனை தக்க வைத்துக் கொண்டிருப்பதும் இந்திய கிரிக்கெட்டிற்கு புகழ் சேர்த்தது எனலாம்.

ஸ்திரேலிய அணியின் பின்னடைவு, ரிக்கி பான்டிங்கின் சரிவு, பாகிஸ்தானின் ஊழல் மற்றும் Spot Fixing, இங்கிலாந்தின் T20 மற்றும் ஆஷஸ் வெற்றி. பங்களாதேஷின் Asian Games தங்கப்பதக்கம்; நியூசிலாந்தை 4-0 என தோற்கடித்தது, ஐ.பி.எல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் என 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' அணி பெற்ற இரட்டை வெற்றி, இலங்கை ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி;

ஒருநாள் போட்டிகளில் சச்சின் பெற்ற சாதனை ஓட்டங்களான 200. டெஸ்ட் சாதனையான ஐம்பதாவது சதம். டெஸ்டில் 200 கேட்ச்கள் எடுத்த ராகுல் டிராவிட்டின் சாதனை,   மோடி மற்றும் அமைச்சர் சசி தரூரின் ஐ.பி.எல் ஊழல் என பல நிகழ்வுகளை சொல்லிப் போகலாம்.
  ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி   
 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' Champions League T20 Champions 

  ஆஸ்திரேலியாவை சாய்த்த இங்கிலாந்து 
 INDIA Number ONE TEST TEAM
 சகீர் கான், லக்ஸ்மன் கலக்கிய டர்பன் வெற்றி 
 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்
  பாகிஸ்தான் Spot Fixing
  ரிக்கி பான்டிங்கின் சரிவு

ரிக்கி பான்டிங் தனது மகள் 'எம்மி'யுடன் 

 சச்சின் - 200
 சச்சின் - 50 சதங்கள் 
 ஊழலில் சிக்கிய மோடியும் சசி தரூரும்
 ர்பனில் ஸ்ரீசாந்தை ஸ்மித் உசுப்பி விட்டதால் வீசப்பட்ட ஆக்ரோஷமான Bouncer
T20 WORLD CHAMPIONS
ASIAN GAMES GOLD MEDALLISTS

புகைப்படங்கள் நன்றி: cricinfo

December 27, 2010

மாற்றம் 'ஏ 'மாற்றம்.


ஏன் இவைகள்?
என்னையும் அறியாமல்
என் நினைவையும் அறியாமல்
என் முடிவுகள் சரிதானா!!

என் வார்த்தைகள் சரிதானா!
என்னை நானே புரிந்து கொள்ள இயலவில்லை.

காயப்படுகிறேனா - இல்லை
காயப்படுத்துகிறேனா - தெரியவில்லை
காரணங்கள் புரியவில்லை

ஏன் இந்த மாற்றம் - சரிதானா

உள்ளதை நான் சொல்கிறேனென்றால்
உலகம் இல்லாததைச் சொல்கிறதா? 

என்னை உலகம் சீரழிக்கிறதா - இல்லை
என்னை நானே சீரழிக்கிறேனா

அழிகிறேனா - இல்லை
அழிக்கப்படுகிறேனா

ஏமாற்றங்கள்... 
மாற்றத்தான் செய்கின்றன
மனித வாழ்க்கையின் போக்கினை

எதிர்பார்ப்புகள் இருக்கும் வரை
ஏமாற்றங்களுக்கு குறைவில்லை

ஏதாயினும், 
இருக்கின்றதை வைத்து நிறைவடைவதே
எனக்கும் எவர்க்கும் அழகு! 

December 19, 2010

வானவில் இல்லா வானம்


   வானூர்தி பயணம்;
   வாயைப் பிளக்க வைக்கும்
   வானுயர்ந்த கோபுரத்தில் வாசம்;
   வா... என்றழைத்தால்
   வாசல் தேடி வரும் சேவைகள்;
   வாராவாரம் ஆரவாரம் - இருந்தும்
   வாடுகையில் - மனம் - வாடுகையில்
   வாழ்க்கையை வர்ணமாக்கும்
   வாசமிகு பந்தங்கள் - எனும்
   வானவில் இன்றி தொடர்கிறது - என்
   வானம் எனும் வாழ்க்கை

December 15, 2010

ஆப்பிரிக்காவில் சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவதே இந்தியாவின் உச்சக்கட்ட பரீட்சையாக இருக்கும் என உலகம் முழுவதும் கிரிக்கெட் ஊடகங்களும், விமர்சகர்களும் கிரிக்கெட் என்னும் பலூனை ஊதி பெரிதாக்கி விட்டிருக்கிறார்கள்.

கூட 'டென் கிரிக்கெட்' சானல் தெ.ஆ வீரர்களைக் கொண்டு தென்னாப்பிரிக்கா காத்திருக்கிறது என விளம்பரப் படத்தையும் எடுத்து ஒரு மாதத்திற்கு முன்னரே தயாராக இருக்கிறார்கள்.

இவற்றிற்கு எல்லாம் காரணம் இதுவரை இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றிகள் ஏதும் பெறாதது தான். கடைசியாக 2006-07 ல் சுற்றுப்பயணம் செய்திருந்த போது 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கோட்டை விட்டிருந்தது. 

அந்த தொடரில் ஜோகனஸ்பெர்க்கில் பெற்ற வெற்றி மட்டுமே இந்தியா இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களில் பெற்றுள்ள ஒரே ஒரு வெற்றி.உலகின் முதல் தர அணியாக இருக்கும் இந்திய அணிக்கு நடைபெறவிருக்கும் மூன்று டெஸ்ட் ஆட்டங்களுமே சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பசும்புல் நிறைந்த தென்னாப்பிரிக்கா மைதானங்கள் பவுன்சர்களுக்கு சாதகமாக இருக்கும். பவுன்சர்கள் என்றாலே பதுங்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக டெல்லி துவக்க ஆட்டக்காரர்களான சேவாக்கிற்கும், காம்பீருக்கும் ஆரம்ப சில ஓவர்கள் கடினமாகத் தானிருக்கும். ஆரம்ப இணை முதல் பத்து ஓவர்களைத் தாக்குப் பிடித்து நின்று விட்டால் பின்னர் வருகின்றவர்களுக்கு ஓரளவு சாதகமாகி விடும்.

டெஸ்ட் ஆட்டங்களில் 50 ற்கும் மேல் சராசரி வைத்திருக்கும் சச்சின்,திராவிட்,சேவாக்கின் சராசரி (தென்னாப்பிரிக்காவில்) முறையே 40, 34, 26 மட்டும் தான் என்கிறது cricinfo. லக்ஸ்மன் இதுவரை தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்ததில்லை

ரைனாவிற்கும், காம்பீருக்கும் தென்னாப்பிரிக்காவில் இது தான் முதல் வாய்ப்பு. தோனி இது போன்ற மைதானங்களில் எந்த அளவிற்கு பிரகாசிப்பார் என சொல்ல முடியாது. அவரது cross bat shots அவருக்கு நிச்சயம் துணையளிக்காது.

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சகீர் கான், இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த் இவர்களில் எவரேனும் ஆரம்பத்தில் விக்கெட் எடுக்க தவறும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு பின்னடைவு தான். இல்லையென்றால் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன், ஓஜா இருவரையும் நம்ப வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே சகீர் காயமடைந்திருப்பதும் இந்தியாவிற்கு பின்னடைவே. மட்டை வீச்சில் வலுவாக இருக்கும் இந்தியா நிச்சயம் 7 மட்டைவீச்சாளர்களைக் கொண்டு களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அந்த பட்சத்தில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் மறுக்கப்படும்.

தென்னாப்பிரிக்கா அவர்கள் மண்ணில் இறுதியாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக ஆடிய இரண்டு தொடர்களிலும் வெற்றி பெறாதது அவர்களுக்கு பின்னடைவு தான். எனினும் சொந்த மண்ணில் ஆடுவது அவர்களுக்கு கை கொடுக்கக் கூடும். அணித்தலைவர் ஸ்மித், ஆல்ரவுண்டர் காலிஸ், திராவிட்டைப் போன்றே மூன்றாவது களமிறங்கும் ஆம்லா, பவுச்சர் என தென்னாப்பிரிக்காவும் மட்டைவீச்சில் வலுவாக இருக்கிறது.

இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் பயிற்சாளராக இருப்பது ஒரு வரப்பிரசாதம். தென்னாப்பிரிக்கா மைதானங்களைக் குறித்து நன்கு அவர் அறிந்திருக்கக்கூடும் என்பதும், தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர்களின் மனநிலையை அறிந்தவர் என்பதும் இந்தியாவிற்கு சாதகம்.

எப்படியானாலும் நாளை துவங்கவிருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடருக்கு இணையாக கவனிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  

December 14, 2010

ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் கோல்டன் க்ளோபில்


ஸ்லம்டாக் மில்லினியருக்காக ஏற்கெனவே சென்ற வருடம் கோல்டன் க்ளோப் விருதை பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் 2010 வருடத்திற்கான கோல்டன் க்ளோப் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்லம்டாக் மில்லினியரை இயக்கிய டேனி போயலுடன் இணைந்து பணியாற்றிய 127 Hours என்ற திரைப்படத்திற்காகத் தான் இந்த பரிந்துரை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விருதுகள் ஜனவரி 16 அன்று அறிவிக்கப்படவுள்ளன.


ஏற்கெனவே இந்த வருடம் நோபல் விருது வழங்கும் விழாவில் இசையமைத்து மேலும் புகழ் தேடிய ரஹ்மானின் புகழ் உலகின் எல்லா திசைகளிலும் இன்னும் எட்ட வாழ்த்துவோம்.

December 11, 2010

இசைக்கருவிகள் ஏதுமின்றி ஐ.ஃபோனிலும் ஐ. பேடிலும் இசை


உலகம், கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புதுமை என்று கொண்டாடிய காலம் மாறி இன்று அந்த புதுமையிலும் புதுமை செய்திருக்கிறார்கள்.

இசைக்கருவிகள் ஏதுமின்றி விட்ஜெட்கள் எனப்படும் அமைப்புகளால் ஐ.ஃபோன் மற்றும் ஐ. பேட் களில் இசையை மீட்டி அதிசயக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின், ஜியார்ஜியாவை சார்ந்த North Point Community Church குழுவினர்.

இதற்கென்றே இவர்கள் i band என்ற இசைக்குழுவினையும் வைத்திருக்கிறார்கள். மொபைல் ஃபோன் கண்டுபிடித்ததையே எப்படி கண்டுபிடித்தார்கள் என நினைக்கையில் தலைசுற்றும் போது i phone, i pad களில் widget வைப்பதற்கு எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் தலை மேலும் சுற்றுகிறது. அதிசயிக்க வைக்கிறார்கள்.

மூன்று கிறிஸ்துமஸ் பாடல்களை இசைக்கருவிகளே இல்லாமல் மீட்டி வாயை பிளக்க வைத்து விட்டார்கள். நீங்களும் பாத்து வியக்க வேண்டிய நேரமிது.


யூடியூபில் பார்க்க இந்த சுட்டியில் க்ளிக்குங்க. யூடியூபில் வெளியான மூன்றே தினங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்ஸ் இதற்கு.

இன்று மட்டும் சுமார் 25 முறை பார்த்திருப்பேன் இந்த இசை மீட்டலை. www.northpointmusic.org/christmas இது அவர்களது இணைய தளம்

இது GodTube ன் காணொளி

November 26, 2010

ஆசிய-அரசியல் விளையாட்டுகளும் விடை தெரியாத சில கேள்விகளும்

Asian Games அப்படின்னுட்டு கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து என Sports எல்லாம் வைக்கலாமா? இல்லைன்னனா Asian Games and Sports அப்படின்னு வைச்சிருக்கலாமோ? "All sports are Games but not all Games are sports" அப்படின்னு யாஹூல பதில் சொல்றாங்க. அதனால தான் கேம்ஸ்ன்னு வச்சிட்டாங்களோ!?

நியூசிலாந்து கூட விளையாடுறதால Asian Games க்கு கிரிக்கெட் அணியை அனுப்ப மாட்டோம்னு சொல்லிட்டு இந்தியா கம்முன்னு இருந்திட்டாங்க. ஆனா பாகிஸ்தான் அணி துபாய்ல தென்னாப்பிரிக்கா கூடவும், இலங்கை அணி இலங்கையில மேற்கு இந்தியத் தீவு அணி கூடவும் டெஸ்ட் ஆட்டம் ஆடிக்கிட்டு Asian Games க்கும் (இரண்டாம் தர) அணியை அனுப்பியிருக்காங்க. இதெல்லாம் என்ன கொடுமங்க. 

அரசியல்ல இதெல்லாம் சஜமப்பா என்பது மாதிரி இதையெல்லாம் அனுமதிக்கலாமா இல்ல அனுமதிக்கக்கூடாதா!!


பங்களாதேஷ் ஆசிய கிரிக்கெட் சாம்பியனாம்ல

ஒவ்வொரு தடவையும் யாராவது ஊழல் செய்யும் போது வாங்குற சம்பளத்தயும் வாங்கிப்புட்டு பாராளுமன்றத்தில சும்மா கூப்பாடு போட்டுட்டு வராங்க இந்த அரசியல்வியாதிகளான M.P(ee)க்கள். மக்கள் பிரச்சினைய சரியான ரீதியில் பேசவோ, வாக்குவாதம் செய்யவோ இங்க யாருக்கும் நேரமில்ல போல இருக்கு.  இப்போ ராசாவ குத்தம் சொல்றவங்க எல்லாம் ரொம்ப யோக்கியமான்னு கேக்க தோணுது.

இன்னைக்கு வரைக்கும் ஊழல் செஞ்ச எந்த அரசியல்வியாதியாவது முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை அனுபவிச்சிருக்காங்களா! ராசாவா இருந்தாலும் அது ராணியா இருந்தாலும் முறையா விசாரிச்சு தண்டனை குடுக்கிறதுக்கு இன்னும் ஐம்பது வருசமானாலும் ஆகும் போல. 
5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற African - Bahraini "Mimi Belete Gebregeiorges" உடன் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் ப்ரீஜா மற்றும் வெண்கலம் வென்ற கவிதா

Asian Games ல இன்னொரு வில்லங்கம் என்னன்னா சில நாடுகள்ல இருந்து (குறிப்பாக அரபு தேசங்களில் இருந்து) கலந்து கொண்டவர்கள பாத்தா ஆப்பிரிக்க தேசங்களான கென்யா, எத்தியோப்பியா மற்றும் நைஜீரியாவைச் சார்ந்தவர்கள் மாதிரி தெரியுது. பொழக்க வந்தவங்களுக்கு குடியுரிமையைக் கொடுத்து நல்லா லவுட்டுறாங்க மெடலுகள. நல்லா இருக்குதடா உங்க பொழப்பு.  People Daily என்ற இந்த இணையதளத்தில் இன்னும் விவரமாக இத பத்தி படிக்கலாம்.

லவுட்ட பாக்கிறான் என்பது Loot என்ற ஆங்கில வாக்கியத்தின் வழி வந்த ஆங்கிலத் தமிழா? இல்ல அதுவே தமிழ் தானா!

November 24, 2010

ஆசிய விளையாட்டும் இந்திய கிரிக்கெட்டும்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே இந்தியர்கள் பிரகாசிக்கிறார்கள். குறிப்பாக டென்னிஸ் ஆட்டங்களைப் பார்க்கையில் இந்தியாவின் வருங்கால டென்னிஸ், திறமையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடம் இருப்பதை காணமுடிகிறது.

25 வயதே ஆன சோம்தேவ் தேவ வர்மனும், 22 வயதே ஆன சனம் சிங்கும் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆடிய ஆட்டம் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணையின் ஆட்டத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல. விர்ஜினியா பல்கலைக்கழகத்திற்காக இருவரும் இணைந்து ஆடியதும் அவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆகிப் போனது.

இரட்டையர் போட்டியில் சனம் சிங்குடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்ற சோம்தேவ் ஒற்றையர் ஆட்டத்திலும் தங்கம் வென்றிருக்கிறார். கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அஸ்ஸாமில் பிறந்து சென்னையிலும் அமெரிக்காவிலும் வளர்ந்தவர் சோம்தேவ்.


இது வரை மொத்தம் 39 பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. பில்லியர்ட்ஸில் தங்கம் வென்ற பங்கஜ் அத்வானி, 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற கேரளத்தைச் சார்ந்த ப்ரீஜா, துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சோதி ரஞ்சன், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் டென்னிஸில் வெள்ளியும் வெண்கலமும் வென்ற சானியா மிர்சா ஆகியோர் பதக்கம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கிரிக்கெட்

இறுதியாக நியூசிலாந்தை தோற்கடித்து தொடரை வென்றிருக்கிறது இந்தியா. தர வரிசையில் முதலாவது இருக்கும் இந்திய அணியின் பந்து வீச்சு இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களையும் கூட வென்றிருக்கலாம்
அடுத்த சுற்றுப்பயணமாக டிசம்பரில் தென்னாபிரிக்கா செல்லவிருக்கும் இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள் பலருக்கு நியூசிலாந்திற்கு எதிரான ஒருதினப் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு அத்தனை முக்கியத்துவம் இந்தியா தருகிறார்கள் என்றால் தென்னாப்பிரிக்கா "டென் கிரிக்கெட்" சானலுடன் இணைந்து We are waiting என்று பிரத்தியேகமாக குறும்படம் ஒன்றையும் படமாக்கியிருக்கிறார்கள். (யூடியூபின் காணொளியை  கீழே இணைத்துள்ளேன்)

கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்ற அளவிற்கு இருக்கிறது இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா அவர்களது சொந்த மண்ணில் விளையாடவிருக்கும் டெஸ்ட் ஆட்டங்களுக்கான முன்னோட்டம்.



நன்றி: விக்கி

November 15, 2010

அது ஒரு அழகிய பண்டிகைக் காலம்


"அன்னைக்கு துணிய வெட்டி சட்டையா தச்சிப் போட்டோம்" ஆனா இன்னைக்கு 'ரெடிமேட்' என்ற பெயரில் ஏற்கெனவே "தச்ச சட்டய வெட்டிப் போடுறோம்"

அந்த காலத்தில... டேய் டேய் நிறுத்துடா, எதாச்சும்னா உடனே நாங்கல்லாம் அந்த காலத்திலன்னு ஆரம்பிச்சிருவீங்களேன்னு சொல்றீங்களா! 

என்ன இருந்தாலும் அந்த அழகிய காலங்கள் மாதிரி வருமா. அதுவும் திருவிழா, பண்டிகைக் காலங்கள்னா சொல்லவே வேண்டாம். எப்போடா பள்ளிக்கூடத்துக்கு லீவு கிடைக்கும்னு எதிர்பாத்திட்டு இருக்கிறது. அதிலயும் நம்ம நண்பர்கள் சில பேர் வழக்கமான விடுமுறைக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடியே ஸ்கூலுக்கு கல்தா குடுத்துருவானுக. 

ஓட்டம், சாட்டம், கிரிக்கெட், வாலிபால் போட்டிகள் நடத்திறோம்னு 'களவணி' படத்தில வர அதே பாணில வசூல் பண்றது. அப்புறம் என்ன... கிரவுண்ட சுத்தி கொடி, கம்பம் கட்டுறதுக்கு ஒரு குரூப், தீபாவளியை முன்னிட்டு, பொங்கலை முன்னிட்டு இளைஞர்கள் நடத்தும் விளையாட்டு போட்டிகள்னு கலர் கலரா போஸ்டர் ஒட்டுற வேலய பாக்கிறதுக்கு ஒரு குரூப்னு விடிய விடிய ஊர சுத்திட்டு அடாவடி பண்ணிக்கிட்டு இருப்பானுக. 

நம்ம பசங்க தான் ராப்பாடிகள் ஆச்சே, ராத்திரி பத்து மணிக்கு மேல தான் வேலயே ஆரம்பிக்கிறது. அப்ப தான சுதந்திரமா இளநியயோ இல்ல மாங்காவையோ 'லவுட்ட' முடியும். 

இது இப்படின்னா, போட்டிகள் நடத்தும் போது எந்த ஊரு மொதல்ல ஆடணும் அப்படின்றதில இருந்து கிரிக்கெட் அம்பயரிங்கலயும் சரி, மற்ற போட்டிகளுக்கு தீர்ப்பு சொல்றதுல வரைக்கும் பிரச்சினைய கிளப்புறதுக்குன்னே வரிஞ்சி கட்டிட்டு நிக்கும் ஒரு கும்பல். அன்னைக்கு வருத்தமா இருந்த அதுல கூட சுவாரஸ்யம் இருந்ததா லேட்டா இன்னைக்கு புரியுது. 

இன்னும் சுவாரஸ்யம் நம்ம வீட்டிலயே பலகாரம் சுடுறது தான். பண்டிகை வர ஒரு வாரத்துக்கு முன்னாடியே அதற்கான ஏற்பாடுகள் மும்மூரமா போய்கிட்டு இருக்கும். அரிசிய ஊறவச்சி, உரல்ல நம்மளே இடிச்சி சுடுற பலகாரத்தில இருக்கு சுவையும் அந்த சுவாரஸ்யமும் (அது மிருதுவா இல்லன்னா கூட!! ) தனி தான். 

இது எல்லாத்துக்கும் மேல ஆனந்தம் புதுசா ட்ரஸ் போடுறது தான். "அன்னைக்கு துணிய எடுத்து வெட்டி சட்டையா தச்சிப் போட்டாங்க" ஆனா இன்னைக்கு 'ரெடிமேட்' என்ற பெயரில் ஏற்கெனவே "தச்ச சட்டய வெட்டிப் போடுறோம்". என்ன வேடிக்கை பாருங்க ! அப்போ, ஒரு மாசத்துக்கும் முன்னாலயே துணிய எடுத்து டெய்லர் கிட்ட ஃப்ளீட் வைங்க; புது ஸ்டைலா வைச்சி கரெக்டா தைங்கன்னு நம்ம சொன்னா சில பெருசுங்க சொல்றதோ 'அவன் வளர்ர பையன் சட்டைய கொஞ்சம் பெருசாவே தைங்க' அப்படின்னு.

சட்டை தச்சி வாங்கினா தான் தெரியும் அது தாத்தா சட்டை மாதிரி தொள தொளன்னு இருக்கிறது. அப்ப வருமே கோபம்... ஆனாலும், "புதுசு வருசத்துக்கு ஒரு தடவ தான வரும்"னு சமாதானம் சொல்லிக்கிட்டு போடுறத தவிர வேற என்ன பண்றது அப்போ.   

சொந்தகாரங்க வருகை,  நண்பர்களுடன் பட்டாசு வெடிக்கிறது, கும்பலா கச்சேரிக்கு போறது அப்படின்னு இன்னும் பல சொல்லிபோகலாம்.

பண்டிகைக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே களை கட்டின காலம் போயி, பண்டிகைக்கு முந்தின நாள் கூட அடுத்த நாள் பண்டிகைன்னு சரியா தெரியாம இருக்கிற காலத்தில தான் இப்ப இருக்கோம். பணம் சம்பாதிக்கிற அவசரத்தில சுவாரஸ்யங்களையும், கொண்டாட்டங்களையும் இழந்து நிற்கிறோம் இன்னைக்கு. மீண்டும் அந்த நாட்கள் எப்ப வருமோ?!

November 12, 2010

கமல்ஹாசன் - Four Friends மலையாள திரைப்படம் ஒரு பார்வை

தமிழ் திரையுலகைப் போலல்லாது இந்தியிலும், மலையாளத்திலும் பல பிறமொழிப்படங்கள் மீண்டும் எடுக்கப்படுகின்றன அல்லது காப்பியடிக்கப்படுகின்றன. அந்த வகையில் Four Friends, 'The Bucket List' (2007) என்ற ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான்.  


ஏற்கெனவே உண்மைத்தமிழன் அவர்கள் இந்த திரைப்படத்தைக் குறித்து விமர்சனம் செய்து விட்டார். அந்த பதிவ இந்த சுட்டில பாருங்க. அவர் எழுதியிருக்கிறபடி தமிழில் இந்த மாதிரியான திரைப்படங்கள் எடுக்க நிச்சயமாக நினைத்துக்கூட பார்க்க முடியாது தான்.

வெவ்வேறு வகை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தனக்கென்று யாருமில்லாத தொழிலதிபரான ஜெயராம், சித்தியின் கொடுமையால் அவதியுறும் மருத்துவ கல்லூரி மாணவியான மீரா ஜாஸ்மின், கமலின் தீவிர ரசிகரான ஜெய்சூர்யா, பணக்கார வீட்டுப் பிள்ளையும் கல்லூரி மாணவருமான குஞ்சாக்கோ போபன் ஆகிய நால்வரும் சிகிச்சை அளிக்கப்படும் மையத்தில் ஏற்படும் பழக்கத்தினால் நண்பர்களாகி விடுகின்றனர்.

இணைந்த நண்பர்கள் நால்வரும் தங்களது இறுதி நாட்களை மகிழ்ச்சியாக செலவழிக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் விருப்பங்களை நிறைவு செய்வதாக ஜெயராம் வாக்கு கொடுக்கிறார்.

அதன்படி குஞ்சாக்கோ போபனின் காதலியை சந்திக்க மலேசியா சென்று விட்டு, கமலின் தீவிர ரசிகரான ஜெய்சூர்யாவிற்காக கமல்ஹாசனையும் சந்திக்கும் முயற்சியில் கிளம்புகிறார்கள். அதற்கு தொழிலதிபராக இருக்கும் ஜெய்ராமின் வசதி ப்ளஸ் ஆகி விடுகிறது.

விமானநிலையத்தில் தற்செயலாக கமல்ஹாசனை சந்திக்கிறார்கள், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பலரைக் குறிப்பிட்டு எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம் என அறிவுரையும், நம்பிக்கையும் அளிக்கிறார். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கவுதமியையும் குறிப்பிடுகிறார். கமல், நடிகர் கமலாகவே திரைப்படத்தில் வந்து போகிறார்.  

போபன் மலேசியாவில் உடல்நிலை மோசமடைந்து மரணமும் அடைந்து விடுகிறார். போபனின் தந்தை லால், போபனின் இறுதி நாட்களில் அவர்களுடன் இருக்கவிடாமல் செய்து விட்டதாக எண்ணி, குடும்பம் இருந்தால் தானே குடும்பத்தின் அருமை தெரியும் என ஜெயராமை ஆத்திரப்படவே ஜெய்சூர்யாவையும், மீராவையும் தன்னை விட்டு போய் விடும் படி கூறுகிறார் ஜெயராம். இறுதியில் மூவருக்கும் என்னவாயிற்று என்பது தான் முடிவு. 

2008 ல் வெளிவந்த இந்தி திரைப்படமான 'தஸ்விதனியா'விலும் ஏறக்குறைய இதே போன்றதொரு கதைக்களம் அமைத்திருந்ததாக ஞாபகம்.

தேவையில்லாமல் சண்டைக்காட்சியைப் புகுத்தியிருப்பதும், கதாபாத்திரங்கள் பலவற்றை அழுகாச்சியாக காண்பித்திருப்பதும் தவிர படம் பாராட்டப்பட வேண்டியது தான். இசையும் (ஜெயச்சந்திரன்) ஒளிப்பதிவும் (அனில் நாயர்) குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவை. ஆலப்புழையின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிகிச்சை மையம் காண்பதற்கு கொள்ளை அழகு, மஞ்சள் வெயில் சாயும் வேளையில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் இன்னும் அழகாக இருக்கிறது ஆலப்புழை. மலேசியாவும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது.       

உண்மைத்தமிழன் அவர்களின் கருத்துப்படி திரைப்படத்தில் சீரியல் வாசம் வீசுவதும் சும்மா அல்ல, மலையாளத்தில் கூறுவதானால் (வெறுதே அல்லா). இயக்குனர் 'சஜி சுரேந்திரன்' பல சீரியல்களை இயக்கியவர் என்பதால் தானாக இருக்கும். என்றாலும் இவர் இதன் முன்னர் இயக்கிய 'இவர் விவாஹிதராயால்' மற்றும் 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' ஆகிய இரு திரைப்படங்களுமே நன்கு ஓடியவை தான். 

இருபத்தியொரு வருடங்களுக்குப் பின்னர் மலையாள திரையுலகில் பத்மஸ்ரீ. கமல்ஹாசன் நடித்திருப்பதாகக் குறிப்பிட்டு இந்த திரைப்படத்தை வெளியிட்டிருந்தாலும் கமல்ஹாசன் பத்து நிமிடங்களே வந்து போகிறார்.

திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் 1975 ல் வந்த 'ஷோலே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'Yeh Dosti' என்ற பாடல். பாடலை மீண்டும் இந்தியிலேயே ரீ-மிக்ஸியிருக்கிறார்கள்.  

மொத்தத்தில் "Four Friends - A bad copy of a good film" என்கிறார்கள் சிலர். அது ஓரளவு உண்மையும் கூட. 

October 22, 2010

உலகம் சிரிக்கும் இந்திய விளையாட்டு


அரசியலும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொல்வார்கள் இன்று விளையாட்டும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொன்னாலும் தகும். 2020 ல் இந்தியா பணக்கார/வல்லரசு நாடாகிறதோ இல்லையோ 20-20 கிரிக்கெட் போட்டியால் பலர் பல கோடியை ஏய்த்து பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்.

மற்ற விளையாட்டுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் தான் அதிக ஊழல் நடைபெறுவதாக தெரிகிறது. அதற்கு காரணம் கிரிக்கெட்டில் புழங்கும் அதிக பணமும், விளம்பர நிறுவனங்கள் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதும் தான் என படுகிறது. 

விளையாட்டில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் ஊழலின் கை ஓங்கி இருப்பதற்கு "பேராசை" என்ற பெரிய வில்லனும் ஒருவகையில் காரணமாவதையும் மறுக்க முடியாது. அசாரூதீன், ஜடேஜா, ஹான்ஸி குரோனியே என கிரிக்கெட்டில் முதிர்ந்த வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு தோல்விக்கு காரணமானார்கள் என்றால் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஆசிப், அமீர், பட் இளம் வீரர்களும் துணிந்து விட்டார்கள்.

ஐ.பி.எல் போட்டிகளை ஒருங்கிணைத்ததில் லலித் மோடி ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் என்றால் அண்மையில் டெல்லியில் நடந்து முடிந்த காமென்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்ததில் 'சுரேஷ் கல்மாடி' ஊழல் செய்ததாக தெரிய வந்திருக்கிறது. இதன் முன்னர் தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் ஊழல் செய்ததாக கே.பி.எஸ் கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். 

இப்படியாக இன்று விளையாட்டும் பணமும் பிரிக்கமுடியாததாகி விட்டது. விளையாட்டு பிரபலங்கள் இத்தனை குற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் செய்த ஊழலுக்கு தக்கதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டனவா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பதில். குறைந்த பட்சம், பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர் அவ்வளவு தான்.

"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்ற கவுண்டமணியின் நகைச்சுவை போல் விளையாட்டில இதெல்லாம் சகஜமப்பா என்ற நிலைமை வந்து விட்டது என்பதாகவே படுகிறது.

'SPOTS' இல்லாத "SPORTS" எங்க இருக்கு என பலரும் இப்போதே கேள்வியும் எழுப்பத்தொடங்கி விட்டார்கள் 

October 20, 2010

20.10.2010

Just for the record to REMEMBER today 20.10.2010. Bear with me for writing in English on my Tamil Blog. Love and Wishes from Chennai. (From my Mobile Browser)

October 19, 2010

கருப்பர்களை கேவலமாக பார்க்கும் சமூகம்

(விடுமுறையில் இருப்பதால் வலைப்பக்கம் வந்தே இரு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. முன்னர் எழுதி வைத்த இந்த பதிவை கூட இணைக்க சமயம் வாய்க்கவில்லை)
------

நீங்கள் எத்தனை சிறப்பு உடையவராயிருந்தாலும்; பல ஆயிரம் திறமைகள் உங்களுக்குள் ஒளிந்திருந்தாலும்;எத்தனை சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும், உங்கள் தோலின் நிறம் கவர்ச்சியாக இல்லாமல் கருமையாக இருக்குமெனில் உங்களுக்கு அளிக்கப்படும் மதிப்பும் மரியாதையும் சிவப்போ வெள்ளையோ உடைய நிறத்தவருக்கு அளிக்கப்படும் மரியாதையில் பகுதி கூட அளிக்கப்படுமா என்பது சந்தேகம் தான்.

கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கருப்பு நிறம் உடையவர்கள் வெகு சிலரே. ஹாலிவுட்டில் கருப்பராக இருந்த மைக்கேல் ஜாக்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொண்டதும் உலகம் அறிந்ததே.

அமெரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் காலங்காலமாக நிலவி வந்த நிறவெறியையும் அதற்காக மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் போராடியதும் மறக்கவியலுமா! அங்கு வெளிப்படையாக கருப்பர்கள் தாக்கப்படுதலும், ஒதுக்கப்படுதலும் நிலவியது என்றால் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் மறைமுகமாக கருப்பர்கள் இன்னமும் தரந்தாழ்ந்தே நடத்தப்படுகிறார்கள்.

அண்மையில் நண்பர் ஒருவர் கூட இதனைக்குறித்து வேதனைப்பட்டிருந்தார். அவரும் சற்று கருப்பு தான். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் பணிபுரிகிறார் அவர். அவருக்கு அளிக்கப்படும் அனைத்து பணிகளையும் எவ்வித சிரமும் இல்லாமல் மிக நேர்த்தியாக செய்து முடிக்கிறவர் அவர். பத்து வருடங்களாக அதே பணியில் இருக்கின்றவருக்கு பணி உயர்வு இது வரை கிடைக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த வேற்று நாட்டை சேர்ந்த வெள்ளைத் தோலை உடைய பலரும் பணி உயர்வு பெற்று விட்டார்கள். அவரோ இன்னமும் காத்திருக்கிறார்.

இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் இவரிடம் இருந்து தொழிலை கற்றவர்கள் தான். பதவி உயர்வு அடைந்த பின்னர் நண்பரை கண்டு கொள்வதே இல்லை என்று கூட கூறி வேதனைப் பட்டார்.

பல இடங்களில் இந்த நிலைமை தான் இன்னும் தொடர்கிறது. எனினும் கருப்பர்கள் எந்த விதத்திலும் பிறர்க்கு குறைந்தவர்கள் அல்லர். அந்த விதத்தில் சாதனை படைத்த சிலரை கருப்புச் சாதனையாளர்கள் என்ற இந்த பதிவில் தொகுத்திருந்தேன்.
கருப்பர்களை கேவலமாக பார்ப்பது இன்னும் தொடரத்தான் செய்யும் போல.

September 28, 2010

We Are Family - திரைப்படம் ஒரு பார்வை

தமிழில் இது போன்ற திரைப்படங்கள் வருவது மிகக்குறைவே. அப்படியே வந்தாலும் வசூலில் பெரிய சாதனை ஏதும் செய்யப் போவதில்லை என்பது வேறு விஷயம். பணம் இருந்தால் தான் பந்தங்கள் கூட பக்கத்தில் என்றாகி விட்ட இந்த காலத்தில் திரைப்பட உலகை அதிகம் குறை கூறுவதில் நியாயமில்லை தான்.

நகைச்சுவை, அடிதடி, குத்தாட்டம், பஞ்ச் வசனங்கள் ஏதும் இன்றி எடுக்கப்பட்டதற்காகவே இந்த திரைப்படத்தைப் பாராட்டலாம்.

கணவன், மனைவி மூன்று குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் மனைவியின் Perfectionism என்ற குணாதிசயத்தால் விவாகரத்து பெற்று தனியே போய் விடுகிறார் கணவன்/ திரைப்படத்தின் கதாநாயகன் அர்ஜூன் ராம்பால்.

Perfectionism என்பதற்கு ... அனைத்து விஷயங்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இந்த மாதிரி தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறையோடு இருத்தல் என பொருள் கொள்ளலாம். குழந்தைகளோ, கணவரோ அதற்கு எதிர்மாறாக செய்தால் கதாநாயகியான கஜோல் கோபித்துக் கொள்கிறார். அது திருமண விவாகரத்தில் போய் சேர்க்கிறது.

கதநாயகன் அர்ஜூன் தனியாக இருந்தாலும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் அதிகம் அக்கறை காட்டுகிறார். இந்த குடும்பத்திற்குள் 'கரீனா கபூர்' கதாநாயகனின் நண்பி வடிவத்தில் நுழைகிறார். அவரை அர்ஜூன் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.

குழந்தைகள் - கரீனா முதல் சந்திப்பு சுமூகமாக அமையாமல் போய்விடுகிறது. மூன்றாவது குழந்தை அஞ்சலியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கதாநாயகனின் நண்பி/கரீனா பிறந்த நாள் கேக்கை கையிலிருந்து தவற விடுவதால் வெறுப்பையும் சூனியக்காரி (Witch) என்ற பெயரையும் சம்பாதிக்கிறார் கரீனா.

கரீனாவால் தான், அம்மாவைப் பிரிந்து அப்பா இருப்பதாக மூத்த மகள் 'ஆல்யா' தவறாக நினைத்துக் கொண்டு மற்ற இரு குழந்தைகளிடமும் இதையே சொல்லி வைக்கிறார்.

பின்னர் ஒருவழியாக குழந்தைகளிடம் நெருங்கி விடுகிறார் கரீனா. இதனிடையில் கஜோலுக்கு (Cervical Cancer) புற்றுநோய் இறுதி நிலையில் இருப்பதாகவும் அதிக நாட்கள் உயிரோடு இருக்க முடியாது என்பதும் தெரியவருகிறது. இதனை அறிந்த அர்ஜூன் மீண்டும் கஜோலுடன் இணைந்து வாழ முடிவு செய்கிறார்.

தனது கணவனையும், குழந்தைகளையும் நேசிக்கும் கரீனாவை அது வரை எதிர்த்து வந்த கஜோல், தனது குடும்பத்திற்குள் ஒருவராக ஏற்றுக்கொள்ள பார்க்கிறார். வீட்டிற்குள்ளும் அழைத்து வந்துவிடுகிறார். அதன் பின்னர் குடும்பத்திற்குள் என்ன நிகழ்ந்தது என்பது தான் படத்தின் முடிவு.

தான் இருக்கும் போதே தனது கணவனை இன்னொருத்தியுடன் வைத்துப் பார்ப்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும்; இந்த மாதிரியான திரைப்படங்கள் தேவையற்றவை எனவும் எதிர்கருத்துக்கள் எழாமலும் இல்லை.

எனினும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என (என்னைப்போன்று) Perfectionism கொண்டிருக்காமல் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என சொல்லியிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதோடு Cervical Cancer - கருப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷில்பா ஷெட்டியை கேவலமாக திட்டிய இங்கிலாந்தைச் சார்ந்த Jade Goody யும் தனது 27 ஆவது வயதிலேயே இந்த புற்றுநோயால் தான் இறந்து போனார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

இந்த திரைப்படத்திற்கு மறறொரு ப்ளஸ் இசை. பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்கள் ஷங்கர்-எஸான்-லாய். பாடல்களும் அருமையாக இருக்கின்றன. அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கஜோலின் நடிப்பு மிகச்சிறப்பு

Hamesha-Forever-எப்பொழுதும் உறவுகள் தேவை என்பதையும், உறவுகளின் மேன்மையையும் உணர்த்தியிருக்கும் திரைப்படம் We Are Family.

திரைப்படம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் திரைப்படமாக்கப்பட்டிருப்பதும்; இது தான் இயக்குனருக்கு முதல் திரைப்படம் என்பதும்; ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து 1998 ல் வெளியான Stepmom என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் என்பதும்; இயக்குனர் கரன் ஜோகரின் தயாரிப்பு என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.



September 15, 2010

இது தான் NDTV ன் நடுநிலை

தொடர்ந்து பாரபட்சமாக தான் செயல்படுவோம் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் என்.டி.டி.வி செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தினர். இலங்கைத்தமிழர் விஷயத்திலும் சரி, தமிழகத்தைக் குறித்த எந்த விஷயமானாலும் சரி இருட்டடிப்பு செய்வதே வடக்கில் இருக்கும் ஊடகங்களுக்கு வழக்கமாகிப் போய் விட்டது.

அதே நேரத்தில் அரசியல் தலைவர்களின் நிகழ்வுகளாகட்டும்; பெரிய இடங்களின் திருமணமாகட்டும்; அதில் அவர்கள் காட்டும் அக்கறை இருக்கிறதே அப்பப்பா. சில வாரங்கள் முன்னர் நடந்து முடிந்த சூப்பர் ஸ்டாரின் மகள் திருமணத்தைக் கூட ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருந்தார்கள். (அவர் மராத்திய இரத்தமாக இருப்பதாலோ என்னமோ?!!)

வழக்கமாக ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் தேவையின்றி பிரேக்கிங் நியூஸ் என்று போடுபவர்கள் ஐ.பி.எல்-3 இறுதிப் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோற்கடித்த போது அதனைச் செய்யவில்லை. பிற்பாடு ஆற அமர சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது என்று சொன்னார்களே தவிர மும்பை தோல்வியடைந்தது என்று செய்தியளிக்க முடியவில்லை அவர்களால்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடக்கும் தற்சமயமும் இதே நிலை தான். நேற்று தெற்கு ஆஸ்திரேலியா அணியிடம் மும்பை இன்டியன்ஸ் அணி தோல்வியடைந்து சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறிய பின்னரும் மும்பையை வெட்கமின்றி மெச்சியிருக்கிறார்கள். BATTLING REDBACKS STUN MIGHTY MUMBAI INDIANS என்று பீத்தியிருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஏமாற்றுவார்களோ? என்.டி.டி.வி யின் அந்த செய்தியை இங்கே படிக்கலாம்.

September 14, 2010

யு.எஸ் ஓபனும் நடாலும்

ஞாயிற்றுக்கிழமையே முடிந்திருக்க வேண்டிய யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் மழையின் காரணமாக திங்களன்று முடிவுக்கு வரவிருக்கின்றன.

ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒற்றையருக்கான போட்டிகளில் இறுதிப்போட்டி வரை எந்த ஒரு செட்டையும் இழக்காமல் நேர் செட்களில் வெற்றி பெற்று டென்னிஸ் தரவரிசையில் தான் முதலிடத்தில் இருப்பதற்கான நியாயம் கற்பித்து விட்டார். 

மறுபுறம் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக் 2004-2008 வரை ஐந்து முறை தொடர்ந்து யு.எஸ் ஓபன் பட்டம் வென்றவரான உலகின் முன்னாள் முதல் நிலை வீரர் ரோஜர் ஃபெடரரை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு புதிய உத்வேகத்துடன் வந்திருக்கிறார். 

இவர்கள் இருவருமே யு.எஸ் ஓபன் பட்டத்தை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடால் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம்களில் இதுவரை 8 பட்டங்களைப் பெற்றிருந்தாலும் யு.எஸ் ஓபன் பட்டம் மற்றும் அவர் கரங்களுக்கு இன்னும் எட்டவில்லை.  

இதனை எழுதிக்கொண்டிருக்கையில் நடால் முதல் செட்டில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆடி வருகிறார். தனது முதல் யு.எஸ் ஓபன் பட்டத்தைப் பெறுவார் என்று நம்பலாம். 

மகளிர் ஆட்டங்களைப் பொறுத்த வரை அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளில் முதல் நிலை வீராங்கனை செரீனா இந்த முறை களமிறங்கவில்லை. வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதி வரை தாக்குப்பிடித்தார். அரையிறுதியில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸிடம் தோற்றுப் போனார்.கிம் இறுதிப் போட்டியில் எளிதாக வெற்றியும் பெற்று விட்டார். 

கிம் கிளைஸ்டர் பெறும் மூன்றாவது யு.எஸ் ஓபன் பட்டம் இது. கடந்த வருடத்திலும் கிம் தான் சாம்பியன். 2007 ல் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் அந்த இரண்டு வருட இடைவெளியில் ஒரு குழந்தையையும் பெற்று விட்டு மீண்டும் 2009 ல் களமிறங்கினார் அந்த வருடமே யு.எஸ் ஓபனில் வெற்றியும் பெற்ற பெருமைக்குரியவர். 

இந்திய வீரர்களைப் பொறுத்த வரையில், மகளிர் ஒற்றையர் போட்டிகளில் இரண்டாம் சுற்றோடு சானியா மிர்சா வெளியேறினார். ரோஹன் போபன்னா பாகிஸ்தான் வீரர் குரேஷியுடன் இணை சேர்ந்து இரட்டையர் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்று உலகின் முதல் நிலை இணையான பிரையன் சகோதரர்களிடம் தோற்றுப் போயினர். அதுவே மிகப்பெரிய சாதனை தான். 

எனினும் இந்தியா-பாகிஸ்தான் சமாதானத்திற்கு இவர்கள் இணைந்து குரல் கொடுத்திருப்பது பாராட்டவும் வரவேற்கவும் பட வேண்டிய விஷயம்.   

லியாண்டர் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும், கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் காலிறுதியிலும் தோற்றுப் போனார். மகேஷ் பூபதி இரட்டையர் ஆட்டத்தில் இரண்டாவது சுற்றிலும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறினார். 

கோப்பையைப் போன்று காட்சியளிக்கும் யு.எஸ் ஓபன் இறுதிப் போட்டிகள் நடக்கும் ஆர்தர் ஆஷ் மைதானம் தான் உலகிலேயே மிகப்பெரிய டென்னிஸ் மைதானம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

(மழையினால் ஆட்டம் இன்றும் தடைபடுமா என்பது தெரியவில்லை. இயற்கையை எவர் தான் கட்டுப்படுத்த முடியும்)

நன்றி: விக்கி & யு.எஸ் ஓபன் 

September 13, 2010

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

வீட்டிற்கு வீடு வாசல்படி என்பதன் படி இன்று பிரச்சினை என்பது அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது. பிரச்சினை இல்லாத மனிதர்களை பற்றி எவரும் கேள்விப்பட்டதாக இருக்கமுடியாது. எனினும் தனிமனிதர் ஒருவரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம் அவரே தான் என்பது மறுக்க முடியாத உண்மை.அதனால் அன்றே கணியன் பூங்குன்றனார் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'என்று கூறிச் சென்றிருக்கிறார்.

அப்படியென்றால் பிரச்சினைகள் அனைத்திற்கும் நாம் மட்டும் தான் காரணமா? பிறரால் நமக்கு பிரச்சினைகள் ஏற்படுவதில்லையா என கேள்விகளும் எழாமல் இல்லை?  ஒரு விஷயத்தை பிரச்சினையாக பார்க்கும் மனநிலையும் சகஜமாக பார்க்கும் மனநிலையும் அவரவரை சார்ந்தது என்ற உண்மையும் புலப்படுகிறது. இதனைப்பற்றி பதிவர் சேசுரா  அவரது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பல பிரச்சினைகளுக்கு நமது நாவு காரணமாகி விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் விளையாட்டாக (சில நேரங்களில் வேண்டுமென்றே) ஏதாவது எவரிடம் சொல்லி வைக்க; அது தேவையற்ற விவாதத்திற்கும் விதண்டாவாதத்திற்கும் வழிவகை செய்து விடுகிறது. மற்றவரது கோபத்திற்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு விடுவது தான் இன்னும் வேடிக்கை.

வேடிக்கையாக சொன்ன விஷயத்தை மற்றவர் மறந்து மன்னித்து விட்டால் சொல் அம்பு எய்தவருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும்; வேறொரு சந்தர்ப்பத்தில் முன்னர் எய்த சொல் அம்பின் தழும்புகளால் அந்த நிகழ்வை மீண்டும் எடுத்துச்சொல்லும் நிலைமை வரும் பட்சத்தில் எய்தவருக்கு அதனை விட பெரிய வலி ஏதும் இருக்காது. வள்ளுவன், "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என சொல்லிச் சென்றது இதனை மனதில் வைத்து தான் போலும்.

பிரச்சினைகளை ஒரு சுமையாக கருதாமல் மிக எளிதாக எதிர்கொண்டு சமாளித்து விடுகின்ற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய மனநிலையைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் சகஜமே. அதற்கு நேர் எதிராக ஒன்றுமில்லாத விஷயத்தையும் பிரச்சினையாக பார்க்கிற ஆசாமிகளும் இருக்கிறார்கள்.

எது எப்படியாயினும் எவர் எப்படியாயினும் நம்மைத் தொடரும் தீமைகளுக்கும் நன்மைகளுக்கும் நாம் உதிர்க்கும் வார்த்தைகளும்; விஷயங்களை நாம் அணுகும் முறைகளும் தானே காரணமேயல்லாமல் வேறொருவரும், வேறெதுவும் இல்லை.
Related Posts with Thumbnails