கிறிஸ்தவர்கள் என ஒரு அடையாளத்தை தங்களுக்கென்று கொண்டு நடப்பவர்கள் செயல்படும் விதமும், அவர்கள் வாழ்க்கை முறையும் இன்று பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாகவும், பொதுநலமற்றதாகவும், சிந்தனை அற்றவதாகவும் இருப்பதாகவே உணர்கிறேன்.
நாங்கள் கிறிஸ்தவர்கள்; நாங்கள் தான் உத்தமர்கள்; நாங்கள் மட்டுமே மேலோகிற்கு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பாக்கியமற்றவர்கள் என்ற நினைப்பும் ஏளனமும் இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பலரிடமும் அதிகமாகவே நிலவி வருகிறது.
இவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு அவர்கள் மட்டுமே காரணமும் அல்லர். அவர்களுக்கு போதிக்கப்படுகின்ற கிறிஸ்தவ கோட்பாடுகளும், போதிக்கின்றவர்களும், அவர்கள் வாழும் சூழ்நிலையும் கூட காரணம் என சொல்லலாம்.
பிறருக்கு உதவி என்று வருகின்ற போது இன்று பல கிறிஸ்தவர்கள் பின்வாங்கிப் போவதும்; ஆலயங்களுக்கு லட்சங்களாய் காணிக்கை அளிக்கும் பலர் பிறருக்கு உதவி என வரும் போது இல்லையென கைவிரிப்பதும் சகஜமாகி வருகிறது.
முன்னொரு பதிவில் "பணம் பெருகப் பெருக பலருக்கு குணம் சிறுத்துப் போவது ஏனோ" என எழுதியிருந்தேன்; அதுவும் இவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கண்கூடாக நான் கண்டவையே.
விவிலியத்தில் மத்தேயு 25:40 ல் கூறியிருக்கிறபடி என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்பதையும் அதே மத்தேயு 25:46 ல் கூறியிருக்கிறபடி இப்படி செய்யாதவர்கள் நித்திய ஆக்கினை அடைவார்கள் என்பதையும் இந்த கிறிஸ்தவர்கள் அறியாதவர்களா என்ன?
இன்னும் சிலர் தங்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றிக் கொண்டாலும் அவர்களின் சான்றிதழ்களில் முன்னர் பின்பற்றி வந்த அதே பழைய சமயத்தை வைத்திருப்பதன் மர்மம்... கிறிஸ்தவர்கள் (BC) என சான்றிதழில் இருந்தால் தங்களின் பணிக்கும், பணி நிமித்தம் கிடைக்கும் வசதிகளுக்கும் பங்கம் வந்து விடும் என்பது தான் அது. ஏனென்றால் அது SC இது BC. இவர்களை பெயர் கிறிஸ்தவர்கள் என கூட கூறலாம்.
வேறு சிலர் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வண்ணம் 40 நாள் அசைவம் சாப்பிட மாட்டார்களாம்; அது என்னத்திற்கு என்று தான் புரியவில்லை. 40 நாளும் சாப்பிடாமல் இருப்பதை ஏன் கடைபிடிக்கவில்லையோ தெரியவில்லை!
அதை மற்றவர்களிடமும் சொல்லிப் பெருமைப்பட்டு கொள்கிறார்கள். விவிலியத்தில் மத்தேயு 6:17ல் "நீயோ உபவாசிக்கும் போது, மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக..."என எழுதியிருப்பதற்கு என்ன சொல்வார்களோ?
கிறிஸ்தவன் பெரியவன்; கிறிஸ்தவம் பெரியது; மற்றவர்கள் எல்லாம் யாரோ! என்ற மனப்பாங்கு உடையவர்கள் அனைவரையும் குறித்து பரிதாபப்படுகிறேன். கிறிஸ்தவம் என்பது குறித்து இயேசு பிரசிங்கித்ததாக விவிலியத்தில் காணப்படவில்லை. அவர் நீதி நியாயத்திற்காக போராடினாரேயன்றி ஒரு சமயத்தையோ, மதத்தையோ உருவாக்க வரவில்லை.
இயேசுவின் மரணத்திற்கு பின்னர் அவரது சீஷர்களுக்கு தான் முதலாவது கிறிஸ்தவர்கள் (அப்போஸ்தலர் 11:26) என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் உடையவர்கள் தான் மேலோகிற்கு செல்வார்கள் என்பதை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தான் பார்க்கிறேன்.
கிறிஸ்தவன் என்ற பெயர் உடையவனோ இல்லையோ உண்மையாயிருக்கிற எவரும், உத்தமமான வாழ்க்கை நடத்தும் எவரும் இறைவனடி சேர்வர் என்ற கோட்பாட்டையே விவிலியம் உரைக்கிறதேயன்றி சக மனிதனிடம் பகைமை பாராட்டவோ, எந்த சமயத்தாரையும் வெறுக்கவோ விவிலியம் வியாக்கியானம் செய்யவில்லை.
இதற்கு மாறாக பிற சமயத்தினரை எதிரியாக பார்ப்பதும், தாங்கள் தான் பரிசுத்தர்கள், மேலோகிற்கு போகும் பாக்கியம் பெற்றவர்கள் என சில பெயர் கிறிஸ்தவர்கள் சொல்லித் திரிவது அவர்களுக்கும், அவர்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அழகல்ல.
அப்படிப்பார்த்தால் இன்று கிறிஸ்தவர்கள் பாடவும், கேட்கவும் செய்கின்ற பல பாடல்கள் பிற சமய நம்பிக்கையுடைய பாடகர்கள் பாடினவை தான். இதற்கு என்ன சொல்லுவார்களோ!!
மதங்கள் வாழ்ந்தது போதும்; மனிதர்களை வாழ விடுங்கள்; மனிதம் வாழட்டும்.
சிலுவையில் இயேசு மொழிந்ததாக 7 வசனங்களை நினைவு கூறுபவர்கள் மலைப்பிரசங்கத்தின் போது அவர் மொழிந்த எட்டாவது வசனத்தை மறந்து போவது ஏனோ! நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. (மத்தேயு 5:11)