August 07, 2010

பணமென்னும் பாதாளத்தில் தொலையும் பந்தங்கள்

 
பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும்,பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என பணத்தைக் குறித்து புழங்கிய பழமொழிகள் பல.

பணம் இருந்தால் பந்தம் பணம் இல்லையென்றால் பந்தம் 'அந்தம்' என்பதே இன்றைய நிலைமை. பணம் படுத்தும் பாடு இன்று கொஞ்ச நஞ்சமல்ல.

உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் ஒரு கொடிய மிருகமாக இன்று பணம் இருப்பதை மறுத்து விட முடியாது.

இன்று பணம் சம்பாதிக்க வளைகுடா நாடுகள், ஐரோப்பா என உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாதது. பணத்திற்காக ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பாதுகாப்பற்ற, மனித உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளுக்கு செல்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி பணம் சம்பாதித்த பலர் இன்று உறவுகளைத் தொலைத்த கதைகள் ஏராளம். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பலருக்கு பெரும்பாலான நேரங்களில் சொந்த பந்தங்களின் நல்லது கெட்டதுக்குக் கூட போகவியலாத நிலைமையை நினைத்தால் மனம் கனக்கிறது.

உறவுகளின் அழுகையையும், சிரிப்பையும் தொலைபேசியில் மட்டுமே கேட்டு நாட்களைக் கடத்துபவர்களின் மனநிலை எத்தனை கொடுமையானது என்பது அதனை அனுபவித்தால் மட்டுமே புரிகின்ற ஒன்று.

இப்படியாக (தூரத்து) உறவுகளை தொலைத்தவர்கள் ஒருபுறமென்றால்... அருகில் இருக்கும் உறவுகளையும் சகவாசிகளையும் தொலைத்த கதைகள் இன்னும் விசித்திரமானது.

ஓவர் டைம் என்ற பெயரில் ஒரே அறையில் உடன் தங்கியிருக்கும் சக தோழரைக் கூட சந்தித்து பேச வாய்ப்பில்லாத அளவிற்கு பணிபுரிகின்றவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. பணம் மட்டுமே வாழ்க்கை என பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தான் கவலை தரும் விஷயம்.

இந்த காரணத்திற்கென்றே மேலதிக நேர (Over Time)பணிகளுக்கு இதுவரை சென்றதில்லை. உறவுகளிடம் உறவாடுவதை விட, சக ஜீவிகளிடம் நட்பு பாராட்டும் நேரத்தை விட மேலதிக நேர பணி தரும் பணம் எனக்கு அதிக சந்தோசத்தை தந்து விடும் என நான் கருதவில்லை.

----

கடந்த வாரம் குவைத்தில் நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்திருந்தார். என்ன விஷயம் என கேட்டேன்... முடி கொட்டுவதால் தான் மொட்டை அடிக்க வேண்டியாகி விட்டது என்றார்.இந்த ஊர் தண்ணீர் சரியில்லாததால் முடி கொட்டுகிறது எனவும் தமிழகம் சென்றால் மீண்டும் முடி வளர்த்துக் கொள்ளலாம் எனவும் சொல்லிப் போனார். (வளைகுடாவில் இருப்பவர்கள் பலர் மொட்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்)

அவரிடம்... நிச்சயமற்ற வருங்காலத்திற்காக நிகழ்காலத்தையும் உங்கள் உண்மையான தோற்றத்தையும் ஏன் இழக்கிறீர்கள்? அப்படி உங்கள் முடி கொட்டுவதை தடுக்க வேண்டுமென்றால் நீங்கள் தமிழகத்திலேயே இருந்து விடலாமே!! என கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து பதில் ஏதுமில்லை.

இப்படித் தான் இன்று பலர் பணம் சம்பாதிப்பதிலும் வருங்காலத்திற்காக நிகழ்காலத்தைத் தொலைத்து நிற்கிறார்கள்.

பணத்தினால் திருமணம் போன்ற பந்தங்களை வாங்கலாம் ஆனால் மனங்களை வாங்கி விட முடியாது என்பதே அப்பட்டமான உண்மை.

8 comments:

priyamudanprabu said...

அப்பட்டமான உண்மை.

vadivel said...

Mudi Azsai lam oru visayam sollathinga edwen. vera ethavathu reason sollunga.

uravugalai vitu vanthavaruku, mudiya illapathu ondrum periya visayam illai.

எட்வின் said...

@ vadivel

Adhu oru udhaaranathukku sonnadhunga... Mudi visyam ellaam oru visayam illa thaan.

Rajkumar said...

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா?
மூளைய வச்சு யோசிச்சா நம்ம ஊரிலே பிழைக்கலாம்.

vijayan said...

அன்பு எட்வின்,இந்த NRI பேர்வழிகளுக்கு உடன்பிறப்புகளோ அல்லது நண்பர்களோ அவர்கள் இந்தியா வரும்போது casual ஆக பேச போனால் கூட ஏதோ கைமாத்து கேட்க வந்துவிட்டார்களோ என்று பயப்படுகிறார்கள்.பார்க்க பாவமாக இருக்கிறது. எல்லா NRI களுக்கும் ஏதோ ஒருவகையில் மனநிலை மருத்துவம் தேவைபடுகிறது என்று பெங்களூர்-இல் உள்ள NIMHANS டாக்டர் ஒருவர் கூறினார்.

எட்வின் said...

நன்றி அன்பர் பிரபுவுக்கு.

@ மு.இரா நிச்சயமாக நம்ம ஊரிலேயே பிழைக்கலாம். என்ன செய்வது... சிலர் பெற்றோர்களின் உந்துதலாலும்,சிலர் குடும்பத் தேவைகளுக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

அண்டை வீடுகளில் எவரேனும் வெளிநாட்டில் இருந்து விட்டால் போதும், உடனே என்ன உங்க பையன்/பொண்ணு வெளிநாடு போகலயா. இங்கயே இருந்து என்னத்த சம்பாதிக்கப் போகிறான்/ள் என்கிறதான கேலிப்பேச்சுக்களையும் கேட்க சகிக்காமல் பலர் வெளிநாடு வருவதுண்டு.

வீட்டில் எவரேனும் வெளிநாட்டிற்கு சென்றால் தான் சில சமூகங்களில் அந்த குடும்பத்திற்கு மரியாதை கிடைக்கிறதாம் :(

எட்வின் said...

vijayan said

//எல்லா NRI களுக்கும் ஏதோ ஒருவகையில் மனநிலை மருத்துவம் தேவைபடுகிறது என்று பெங்களூர்-இல் உள்ள NIMHANS டாக்டர் ஒருவர் கூறினார்.//

சரிதாங்க... பலர் அப்படித் தான் இருக்கிறாங்க. பணத்த மட்டுமே வாழ்க்கையா பார்க்கிறவங்க மனநிலை பணத்தைச் சுற்றியே இருக்கும்.

Vaazhkkaiya tholachiputtu vaazha vandhavanga sangam said...

Rombavum sariya ezhudhi irukkeenga Edwin. Nammai pol silar pala kattaayangalukkaga ippadi velinaadu vandhu avadhi pattukkondu iruppadhu nooru sadhaveedham unmai. Pirandha pillaya paartthu santhoshappada mudiyala, irandha Appavai paartthu azha mudiyala.... enna vaazhkkai idhu. vedhanai mattume minjuginradhu. Panam padutthum paadu.

Post a Comment

Related Posts with Thumbnails