December 25, 2011

Facebook - Fastfood உலகால் மறக்கப்பட்டு வரும் விழாக்கால மகிழ்ச்சிகள்


சிறுவயதில் விடுமுறைக்காலம் என்றாலே அது டிசம்பர் தான். என்ன தான் ஏப்ரல் மே மாதத்தில் பள்ளி விடுமுறையாய் இருந்தாலும்/அது ஒன்றரை மாத கால நீண்ட விடுமுறையாய் இருந்தாலும் டிசம்பர் மாத விடுமுறையின் சந்தோசம் ஒரு பிரத்தியேக சந்தோசம் தான்.


அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. கிடைக்கவிருக்கும் புத்தாடைகளும், பரிசுப் பொருட்களும்அம்மாவின் கரங்களால் தயாரிக்கப்படும் பலகாரங்களும், இனிப்பு வகைகளும்; நண்பர்கள் கூடி ஆரவாரிக்கும் பொழுதுகளும்தெருவெங்கும் களைகட்டும் மின் அலங்காரங்களும்அப்பாவால் வண்ண விளக்குகளால் அமைக்கப்படும் வீட்டு அலங்காரங்களும்;உறவினர்கள் கரங்களிலிருந்து குறிப்பாக தாத்தாபாட்டியிடமிருந்து   கிடைக்க விருக்கும் பணப் பரிசுகளும் தான் காரணங்கள். இன்னும் சொல்லிப்போகலாம்.

இளைஞர் பருவத்தில் டிசம்பர் என்றால் தெருவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளும், உறவினர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகளும் இன்னும் பரவசமாக்கும். குறிப்பாக வெளிநாடுகளில் இறுதி கிடைக்கப்பெறும் வாழ்த்து அட்டைகளில் ஒட்டப்பட்டிருக்கும் தபால் தலையை பார்த்தாலே மேலும் பரவசம் தான். உறவுகளின் கூடுகை இன்னும் உற்சாகம் தரும்


இவை போதாதென்று நண்பர்கள் கூட்டத்துடன் அடிக்கும் அரட்டைகளும், பட்டாசு வெடித்தலும் விடுமுறைக்காலத்தை இன்னும் அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யங்கள்.

ஆனால் இன்று இத்தகைய சுவாரஸ்யங்கள் குறைந்து கொண்டே வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம். உறவுகளை பார்ப்பதே கடினமாகி வருகிறது. உறவினர்கள் விடுமுறைக் காலங்களில் கூடி வருவதே அரிதாகி விட்டது இப்போது.

வெளி ஊர்களிலும், வெளி நாட்டிலும் புலம் பெயர்ந்து வாழுகின்றவர்கள் உறவுகளை சந்திப்பது அபூர்வமாகிப் போனது இன்று. இது போதாதென்று ஒரே ஊரில் வசிப்பவர்கள் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும் குறைந்து வருகிறது. தான்தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்பது தான் மேலோங்கி நிற்கிறது.

வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பேனா பிடித்து எழுதி அனுப்பப்படும் கடிதங்களும்இன்றைய டிஜிட்டல்  உலகில்  பெருவாரியாக குறைந்து வருவது வேதனைப்பட வேண்டிய விஷயம்.பேனாவால் எழுதப்படும் ஒரு கடிதம் தரும் மகிழ்ச்சியை மின்னஞ்சலோ அல்லது டிஜிட்டல் வாழ்த்து அட்டையோ தந்து விடாது.  இன்று இயல்பாக இருக்க விரும்பும் மனிதர்கள் வெகு சிலரே.

கடந்த வாரம் கூட நான் அனுபவப்பட்ட ஒரு நிகழ்வு இந்த கால சந்ததியினரின் மனநிலைமையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. ஊருக்கு வாழ்த்து அட்டை அனுப்ப போகிறேன் என்று நண்பரிடம் நான் கூற அதற்கு பதிலாக நண்பர்... "என்னங்க இந்த காலத்தில யாருங்க இதெல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க" ஒரு தொலைபேசி அழைப்பே  அதிகம் என்றார்.  அவருக்கு கடிதம் எழுதுவதில் அவ்வளவு தான் ஆர்வம் என்று எண்ணிக்கொண்டேன்.  

பகட்டிற்கும், Fastfood - எந்திர வாழ்க்கைக்கும், Facebook - ஆர்குட் உலகிற்கும் அடிமையாகி போன இந்த கால சந்ததி இழந்திருக்கும் சிறு சிறு சந்தோசங்கள்மகிழ்ச்சிகள் ஏராளம்.  

பணம் சம்பாதிக்கும் அவசரத்தில் பாசங்களையும்பந்தங்களையும், பகிர்வுகளையும் இழந்து நிற்கிறார்கள். என்ன தான் இருந்தாலும் தொண்ணூறுகளில் இருந்த வாழ்க்கை முறை இனி மீண்டும் வருவது கடினம் தான்.

December 05, 2011

திரைப்படம் அரசியல் ஆக்கப்படுவது அழகல்லவே

குத்தாட்டங்களும், அரைகுறை ஆடைகளும் பெரும்பாலான திரைப்படங்களில் முன்னிறுத்தப்பட்டாலும் சில திரைப்படங்கள் கடந்த காலங்களிலும் சரி இன்றைய காலகட்டத்திலும் சரி சமூக நலன் கருதிய கருத்துக்களை பறைசாற்றி வந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

எனினும் திரைப்படங்கள் சமூக நலனை பாதிக்கும் வண்ணம் எடுக்கப்படுவதாக ஒரு சாரார் குறை கூறாமலும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் DAM 999.

திரைப்பட இயக்குனர் சோகன் ராய், தமிழகத்தை சார்ந்தவர் அல்ல என்பதும், தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுக்க மற்றொரு காரணமாக அமைந்து விட்டது.

DAM 999 திரைப்படம் வெளியானால், தமிழக கேரள மக்களிடையே நிலவும் இணக்கமான நிலைமை மாறி கோபமும், மனக்கசப்பும், கைகலப்பும் ஏற்பட்டு விடும் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்.


ஆனால் இன்றைக்கு, தமிழக - கேரள எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது என்றால் அதற்கு முழு காரணம் இரு மாநில அரசியல்வாதிகளும்,அவர்களின் தவறான பிரச்சாரமும் தானேயன்றி வேறொன்றுமில்லை.


சிகரெட் பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற காட்சிகள் அமைக்கடுவதால் ஏற்படாத பாதிப்பு ஒரு அணை உடைவது போன்ற காட்சி அமைப்பதால் ஏற்பட்டு விடப் போகிறதா என்ன!?

மற்றொரு கேள்வியும் இங்கு முன் வைக்க வேண்டியது கட்டாயமாகிறது. DAM 999 திரைப்படம் வெளியாவதற்கு இத்தனை எதிர்ப்பு காட்டுபவர்கள். முல்லைபெரியார் அணையைக் குறித்த Dams - The Lethal Water Bombs என்ற குறும்படம் வெளியான போது எங்கிருந்தார்களோ?

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு விஷயத்தில் இத்தனை அறிக்கைகள் விடுவதும், போராட்டம் நடத்துவதும் கேரள அரசியல்வாதிகளுக்கு அழகோ என்னவோ?

திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்தல் சிறந்தது, அரசியலையும் திரைப்படத்தையும் ஒப்பிடுவது அழகல்லவே.

October 03, 2011

என்ன கேட்பாய்! என்னவென கேட்பாய்!!

எப்படி இருக்கிறாய் என
என்னிடம் வினவினாலும்

என்ன செய்கிறேன் என
என் நண்பனிடம் கேட்டாலும்

என்ன நிகழ்ந்தது என
என் உறவுகளிடம் அங்கலாய்த்தாலும்

என் மனதை நீ அறிவாய்
என நீ கருதினாலும்

என் தலையணையை
என் கண்ணீர் ஈரமாக்கிய
என் தலையணையை - நீ வினவாத வரை

என் கவலையை - நீ
என்றும் விளங்கிக் கொள்ளவியலாது

September 30, 2011

வலைப்பூ - காத்திருப்பு

எண்ணம் எனும் தோட்டத்தில்
எழுத்து எனும் பூ பூக்கும் - தருணம்
ஏனோ இன்னும் வாய்க்கவில்லை

உள்ளுவதையெல்லாம் உடனே
வலையேற்ற வரமுமில்லை

எண்ணம் எனும் தோட்டம்
ஏனோ வாடி நிற்கிறது

எழுதுகோல் எனும்
ஏரைப் பிடித்து
எழுதும் காலம்
எப்போதோ!

பூக்கள் பூப்பது எப்போதோ!!

August 23, 2011

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி!!



இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் நான்கிலும் தோல்வியடைந்து முகம் குப்புற கவிழ்ந்து கிடக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சியின் ஆரம்பமாகத்தான் இதனை கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணங்களாக ஆட்டக்காரர்களின் ஏனோ தானோ போக்கினையும் சரியான திட்டமில்லாமையையும் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறோம் என்ற பாங்கு பெரும்பாலான ஆட்டக்காரர்களிடம் இல்லை. குறிப்பாக மட்டை வீச்சாளர்கள் ஒரு தின போட்டிகள் அல்லது இருபது ஓவர் ஆட்டங்கள் ஆடுகின்ற பாணியிலேயே ஆடியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

சரியான பயிற்சிகள் இல்லாததும், பயிற்சி ஆட்டங்கள் இல்லாததும் இங்கிலாந்தின் காலநிலையோடு ஒன்றிப் போகாமலும் இருந்த ஆட்டக்காரர்களும், போராடும் குணம் இல்லாமையும், அனைத்து ஆட்டங்களிலும் மட்டை வீச்சாளர்களின் சரியான துவக்கமில்லாமையும் இந்தியாவின் , தோல்விகளுக்கான காரணங்கள் தான்.

உலகக்கோப்பை ஆட்டங்களுக்கு பின்னர் சரியான ஓய்வில்லாமல் ஐ.பி.எல் ஆட்டங்களில் ஆடியதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஐ.பி.எல் ஆட்டங்களினால் ஏற்பட்ட காயங்கள் சேவாக், காம்பீர்,  ஷகீர் கான் ஆகியவர்களை சரிவர பங்களிக்க விடாமல் செய்து விட்டது.

அணியினை முன்னிறுத்தாமல் தனி ஒருவரின் சாதனைகளை மட்டுமே குறிப்பாக சச்சினின் 100 ஆவது சதத்தை முன்னிறுத்திய ஊடகங்களையும், விமர்சகர்களையும், ரசிகர்களையும் இங்கு கண்டிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. இனியாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணிக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஐ.பி.எல் போன்ற பணம் கொழிக்கும் வியாபாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை கைவிட முன்வர வேண்டும்.

இங்கிலாந்து அணியினைப் போல சரியான திட்டம் வகுக்காமல் ஆடிய இந்திய அணி தோல்வியடைந்தது அதன் அகங்காரத்திற்கு கிடைத்த வெகுமதியாக கொள்ளலாம். சரியான அறிவுரைகளும் பயிற்சியாளர்களிடமிருந்து இந்திய அணிக்கு கிடைக்கப்பெறவில்லை; இல்லையென்றால் இத்தனை கேவலமான தோல்வி இந்தியா அடைந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் பெருமை காத்த ஒரே ஆட்டக்காரர் ராகுல் திராவிட் தான். மூன்று சதங்களை கண்ட திராவிட்டிற்கு தொடர் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.


பந்து வீச்சில் பிரவீன் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா நன்றாக வீசினாலும் பிறர் இவர்களுக்கு பக்கபலமாக சரியாக வீசுவதில்லை. சுழற்பந்து வீச்சிற்கு பெயர் போன இந்திய அணியில் தற்போது சொல்லிக் கொள்ளும்படி எவரும் இல்லாதது மேலும் வருத்தம் தான்.

இந்திய அணியில் லக்ஷ்மண், ரெய்னா, தோனி இவர்களின் மட்டை வீச்சில் குறிப்பாக Away Swinging மற்றும் Inswinging பந்து வீச்சுகளை எதிர்கொள்ளுகையில் அவர்கள் சரியான மாற்றம் கொண்டு வரவில்லையென்றால்... இந்திய அணி தரவரிசையில் மேலும் கீழிறங்கும் நாட்கள் வெகு தொலைவிலில்லை.

இந்திய அணி சமீப காலங்களில் மிக மிக மோசமாக ஆடிய தொடர் இதுவாகத்தானிருக்கும். தோனி தலைமையில் இந்திய அணி அடைந்த முதல் தொடர் தோல்வியும் இதுவே. இந்திய அணியின் குறைகளை விமர்சிக்கையில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தைக் கண்டிப்பாக பாரட்டியாக வேண்டும். 

August 17, 2011

உறங்கும் உணர்வுகள்




உணர்வுகளை எவர் தான் அறிவார் - ஒருவர்
உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்
உவகை கொள்ளுமே உலகம்

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப் படுமோ - இல்லை
உதைத்துத் தள்ளப்படுமோ என்ற
உள்ளார்ந்த பீதி ஒருபுறம்!

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுதலால்
உயரவிருக்கும் - மன
உளைச்சல்கள் மறுபுறம் - என்பவற்றால்
உள்ளுக்குள் உறங்கும் உணர்வுகள் ஏராளம்!!

உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்து - உயிரிருந்தும்
உயிரற்ற சடலமாய் நீங்குகிறது மனித வாழ்க்கை.  
உள்ளக்கிடக்கைகளை  எவர் அறிவாரோ! 


July 21, 2011

வெற்று வேர்கள்: புதைத்தவர் எவரோ!!



உறவாடிய பொழுதுகளும்
உணர்வாடிய நிமிடங்களும்
உள்ளிருக்க

வெறுமையாய் பரந்து
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

தொலைந்து போன தூக்கங்களும்
தொலைதூரமாய் அகன்ற நேசங்களும்
தொலையாமல் இன்னும் உள்ளிருக்க

வெறுமையாய்
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

மீள வழியறியாமல்
மேலெழவும் அறியாமல்
மௌனங்கள் மட்டுமே உள்ளிருக்க

வெறுமையாய் பரந்து
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

புதைக்கப்பட்டிருக்கும் வேர்களின் 
வலியை உணர்ந்தவர் எவரோ!
புதைத்தவர் எவரோ!!

வேர்கள் நிச்சயம்
வெற்று அல்ல - அவை ஒரு விருட்சத்தின்
வெற்றி
------------

புகைப்படம் நன்றி: அலெக்ஸ்


July 14, 2011

தெய்வத் திருமகன்-விழிகளில் ஒரு வானவில்-சைந்தவி

தெய்வத் திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிற "விழிகளில் ஒரு வானவில்"  பாடலை இரு தினங்கள் முன்னர் தான் கேட்க நேரிட்டது முதல் முறை கேட்ட போதே அது சைந்தவியின் குரலாகத் தான் இருக்கும் என உணர முடிந்தது. இணையத்தில் தேடிப் பார்த்து சைந்தவி தான் என உறுதி செய்து கொண்டேன்.

அன்றிலிருந்து இதனைக் குறித்து கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்கி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அந்த பாடலை இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசையும், அவர் திருமணம் செய்யவிருக்கும் சைந்தவி அவர்களின் குரலும் தான் முதல் முக்கிய காரணங்கள்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்ற  மாலை நேரம் பாடல் தான் இதற்கு முன்னர் நான் அதிகம் ரசித்தது. "விழிகளில் ஒரு வானவில்" பாடல் அந்த பாடலை விடவும் அதிகம் ரசிக்க வைத்திருக்கிறது. நா.முத்துக்குமார்  அவர்களின் பாடல் வரிகள் குறித்து எதுவும் சொல்ல தேவை இல்ல. பாடல் வரிகளும், இசையும், குரலும் மென்மையாய் இதமாக மனதை வருடுகின்றன. 

அனுபல்லவி உயர்ந்த சுருதியில் பாடப்பட்டாலும் "விழிகளில் ஒரு வானவில்" பாடல் "மாலை நேரம்" பாடலைப் போன்றே தாழ்ந்த சுருதியில் பாடப்பட்ட பாடல்.  மாலை நேரம் பாடலை இயக்குனர். செல்வராகவன் அவர்கள் எழுதி இருந்தார்; இந்த இரு பாடல்களுமே காதலை மையமாக வைத்து எழுதப்பட்டவை; எளிய தமிழில் சிறப்பாக எழுதப்பட்ட இரு பாடல்கள் என்றும் கூறலாம்.

சைந்தவி அவர்களைக் குறித்து 2003 முதல் கேள்விப்பட்டிருக்கிறேன் ஜெயா தொலைக்காட்சியின் ராகமாலிகா நிகழ்ச்சியில் தான் அவர் முதலில் பாடக் கேட்டிருக்கிறேன். அப்போதே அவரது குரலை அதிகம் வியந்ததுண்டு. அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே மேடைகளில் பாடத் துவங்கி விட்டாராம் சைந்தவி.

இவரது சகோதரி வினயா உடன் இணைந்து பல கர்நாடக மேடைக் கச்சேரிகளும் செய்திருக்கிறார் சைந்தவி. இன்றைய இளைய தலைமுறையில் கர்நாடக இசையிலும், மெல்லிசையிலும் மிகச்சிறப்பாக பாடுபவர்களில் சைந்தவி குறிப்பிடத்தக்கவர். அதோடு திரை இசைப்பாடல்களிலும் முத்திரைப் பதித்து விட்டார். மேற்கத்திய இசையும் முறையாக கற்று தேர்ந்தவர் என்பது இணையத்தில் உலவிய போது கிடைத்த தகவல்.

நாளை (15.07.2011) வெளியாகவிருக்கும் தெய்வத்திருமகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். மாலைநேரம் பாடலைப் போன்றே விழிகளில் ஒரு வானவில் பாடலையும் எனது கைவண்ணத்தில் சில புகைப்படங்களுடன் + பாடல் வரிகளுடன் காணொளியாக மாற்றியிருக்கிறேன். அதன் யூடியூப் சுட்டி இங்கே. பாடலை கீழே இணைக்கவும் செய்திருக்கிறேன்.



புகைப்படம் நன்றி: http://www.lakshmansruthi.com/index.asp 


July 11, 2011

கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம்: இதெல்லாம் ஒரு பொழப்பு

அடப்பாவிகளா 15 ஓவர் மீதியிருந்திச்சேடா அதுக்குள்ள Mutual Understanding அது இதுன்னு சொல்லி ஆட்டத்த நிறுத்திப்புட்டு Draw னு ஏமாத்திப்புட்டீங்களே.(மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில்) இதுல தரவரிசைல முதல் இடமாம் இந்தியாவுக்கு... நல்லாக்கீது உங்க அழுகுனி ஆட்டம்

இந்த அழுகுனி ஆட்டம் ஆடுறதுக்கு ஆட்டமே ஆடியிருக்க வேண்டாமே! ஆட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஆட்டத்த சமநிலைல முடிச்சிருவோம்னு சொல்லிட்டு கும்மியடிக்கவாது போயிருக்கலாமே.

பதினைந்து ஓவர்கள் அதாவது 90 பந்துகளுடன் ஏழு விக்கெட்டுகளும் மீதமிருக்க 86 ஓட்டங்கள் எடுக்க முடியாதா என்ன? இரு பக்கமும் வெற்றி சாதகமாகத் தானே இருந்தது.

இரு அணிகளுக்குமே தோற்று விடுவோம் என்ற பயமா இல்லை ஐந்து நாட்கள் ஆடி விட்டோம் என்ற களைப்பா தெரியவில்லை?! இத்தனைக்கும் முதல் மற்றும் இரண்டாம் நாள் ஆட்டங்கள் மழையினிமித்தம் முழுமையாக நடைபெறவில்லை.

இப்படி அழுகுனி ஆட்டம் ஆடினால் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க எவர் தான் மைதானத்திற்கு வருவார்?

இரு அணித்தலைவர்கள் பரஸ்பரம் பேசி சமநிலையில் முடித்துக் கொள்கிறார்கள்; இன்றையதினத்தை கிரிக்கெட்டில் மற்றுமொரு கருப்புதினமாக கணக்கில் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் ஒரு கிரிக்கெட் ரசிகனால் :(


July 01, 2011

ஜூன் போனா ஜூலைக் காற்றே...

குடும்பப் பொறுப்புகள் ஏதும் எழுத விடாமல் முடக்கிப்போட்டு விட்டன. எழுதப்பட்டும் முடங்கிக் கிடக்கும் கட்டுரைகள் வலையேற்றப்படாமல் இருக்கின்றன.

ஜூலையிலாவது வாய்ப்பு அமையுமா தெரியவில்லை. அனைவருக்கும் இந்த மாதம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். 

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு... 

May 31, 2011

அது ஒரு அழகிய கனா காலம்

காலங்கள் எத்தனை வேகமாய் செல்கிறதோ அத்தனை வேகமாய் கவனங்களும் எண்ணங்களும் வேகமாய் கடந்து போகத்தான் செய்கின்றன. ஆனால் நமது எண்ணங்களும் கவனங்களும் எத்தனை அதிக சந்தோஷத்தை நமக்கு அளிக்கின்றன என சற்றே எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறி தனிக்குடித்தனம் நடத்தி வரும் பலர் இன்று இழந்து வரும் சந்தோஷங்கள் கணக்கில் அடங்காதவை. பெற்றோரின் அரவணைப்பு, சுற்றங்களின் நேசபாசம் இவை தான் அவை எல்லாவற்றிலும் முதன்மையான மிகப்பெரிய இழப்பு.

கிராம வாழ்வை விட்டு நகரில் குடியேறியிருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் அலுத்தாலும் பின்னர் ஆடம்பர வாழ்வு அவர்களை ஆக்கிரமித்து விடுகிறது அல்லது கட்டிப்போட்டு விடுகிறது. கிராமத்து வாசமும், திண்ணைப் பேச்சுகளும்; ஆலமர, ஆற்றோர ஆசுவாசமும் மெல்ல மறந்து டிஸ்கோத்தே ஆர்ப்பாட்டங்களும், தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேறுபவற்றையே சுவாசித்து ஆசிவாசித்து விடுதலும் பழகிப் போய்விடுகிறது.

அஞ்சல் அட்டை @ போஸ்ட் கார்ட்; உள்ளூர் கடிதம் @ inland ஆனது. பின்னர் கடிதப் போக்குவரத்தும் குறைந்து மின்னஞ்சல் ஆனது. இன்று மின்னஞ்சல் அனுப்பினால் கூட கண்டு கொள்பவர்கள் வெகு சிலரே. முகநூலும் ஆர்குட்டும், டிவிட்டரும் முக்கியமாகிப் போனது இன்று.

ஆர்குட்டில் ஏன் எனக்கு scrap அனுப்பவில்லை, முகநூலில் ஏன் எனக்கு Post எதுவும் பண்ணவில்லை என கேள்வி கேட்பவர்கள் மின்னஞ்சலை கூட கவனிக்க நேரமின்றி இருக்கின்றனர். தேவையற்ற spam மின்னஞ்சல்களை நீக்குவதற்கு கூட இந்த facebook உலகில் நேரமில்லை.

இந்த facebook உலகம் கடிதம் வரைதலிலும் கரங்களால் எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகள் அனுப்புவதிலும் இருக்கம் சுவாரஸ்யத்தை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது.

தனிமையில் தியானம் செய்யவோ; தனிமையாக சிந்திக்கவோ இன்றைக்கு பலருக்கும் சமயம் வாய்ப்பதில்லை. பணியிடங்களில் பணிகளின் தலை வலியென்றால்; வீடுகளில் சீரியல் எனப்படும் மகா மெகா தொடர்களின் ஆர்ப்பாட்டம் ;அல்லது நடிகர் உடல்நல குறைவு, நடிகை கால் தவறி விழுந்தார் போன்ற Breaking News களின் பிதற்றல்கள். இவற்றினிடையில் தனிமைக்கும் சுயமாக சிந்திப்பதற்கும் குடும்பத்தினரோடு உறவாடுவதற்கும், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் ஏது சமயம்.

இன்னும் உண்டு...

May 29, 2011

ஐ.பி.எல் கிரிக்கெட் ஒரு பார்வை


"Cricket Overdose" ஆகி விட்டதாகத் தான் கிரிக்கெட் விமர்சகர்கள் கடந்த ஒரு மாத காலமாக கருத்துரைத்து வருகிறார்கள். ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெற்ற நேற்றும் கூட ரவிசாஸ்திரி அவர்கள் அதைத் தான் குறிப்பிட்டிருந்தார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மிக அதிகமாவே விளையாடப்பட்டு வருகின்றன. ஆட்டக்காரர்களுக்கு சரியான ஓய்வும் கிடைப்பதில்லை. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஆடவிருக்கும் ஆட்டங்களில் மூத்த ஆட்டக்காரர்கள் பலரும் காயத்தின் காரணமாக சேர்க்கப்படவில்லை என்பது இந்த cricket overdose ஆல் தான்.

உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு வாரத்திற்குள்ளாக ஐ.பி.எல் போட்டிகள் துவங்கியது; அன்பரும், பதிவருமான லோஷன் அவர்கள் முன்னொரு பதிவில் எழுதியிருந்தது போல இந்திய அணி உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடுவதற்கு கூட நேரமில்லாமல் போனது ஒரு வகையில் துரதிருஷ்டம் தான்.

ஐ.பி.எல் இருபது ஓவர் ஆட்டங்கள் எந்த அளவுக்கு திறமையை வெளிக்கொணரும் என்ற கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் பஞ்சாப்பின் பால் வால்தட்டி, கொல்கத்தாவின் அப்துல்லா, கேரளாவின் பரமேஸ்வரன் ன புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சியே.

இந்த நான்காம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் எனக்கு சுவாரஸ்யமாக தோன்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவிடுகிறேன்.

1. சச்சினின் பெருந்தன்மை

மும்பை இன்டியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சச்சின் பெங்களூருக்கு எதிரான போட்டி ஒன்றின் முடிவில் தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதினையும் ஒரு இலட்ச ரூபாயையும் அம்பத்தி ராயுடுவுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவரது கையில் காசோலையையும் அளித்தது தான் என்னை அதிகம் நெகிழ வைத்த நிகழ்வு. (நியாயப்படி ராயுடுவிற்கு தான் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வெற்றியில் சச்சின் 55 ஓட்டங்களும் ராயுடு 63 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்)

2. கங்குலியின் பிரவேசம்

இந்த ஐ.பி.எல் தொடரின் நகைச்சுவைகளில் ஒன்றாக கங்குலியின் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். கொல்கத்தா அணியினர் வங்காளத்தின் புலி, தாதா கங்குலிக்காக இந்த முறை கோப்பையைக் கைப்பற்றுவோம் என கொக்கரிக்க அவரோ 'போங்கடா நொன்னைகளா' என்கின்ற மாதிரி புனே அணியிடம் சென்று சரணடைந்தார். அவரது காலில் விழுந்து நமஸ்கரித்த ரசிகர் ஒருவரைப் பார்த்தால் அ.தி.மு.க தலைமை பெருமைபட்டுக்கொள்ளலாம். 


3. இஷாந்த் ஷர்மா 3-0-12-5

கேரள அணிக்கு எதிராக ஐதராபாத்தின் இஷாந்த் ஷர்மா வீசிய மூன்று ஓவர்கள் தான் இந்த ஐ.பி.எல் லின் சிறந்த பந்து வீச்சாக நான் கருதுகிறேன். 3-0-12-5 என்பது அவரது பந்து வீச்சின் சுருக்கம். மூன்று ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார் இஷாந்த். கேரளா 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஆட்டத்தையும் இழந்தது.

4. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - Super தான்

இறுதிப் போட்டியின் இடைவேளையின் போது சென்னையின் ஆட்டத்தைக் குறித்து ரவிசாஸ்திரி அவர்கள் கூறும் போது... முரளி விஜய் மற்றும் ஹசியின் ஆட்டம் கிரிக்கெட்டிற்கான அனைத்து அம்சங்களும் உடையதாயிருந்தது என புகழ்ந்திருந்தார். சிக்ஸர்களையும், பவுண்டரிகளை மட்டுமே நம்பியிராமல் அவர்கள் இருவரும் ஓடி சேர்த்த ஓட்டங்கள் தான் ரவியை இவ்வாறு புகழச் செய்தது. அது தான் சென்னையின் பலமும் கூட. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 158 ஓட்டங்கள் குவித்தனர்.

பலரின் வாதத்திற்கு வாய்ப்பூட்டும் போட வைத்தார் Captain Cool தோனி. கெய்லின் விக்கெட்டிற்கு அத்தனை சந்தோஷப்பட்ட மனிதர் வெற்றி பெற்ற போது அத்தனை அமைதி காத்தார். அது தான் ஒரு தலைவனுக்கு அழகும் கூட.

மற்ற அணிகளைப் போலல்லாமல் திரைத்துறையினர் அதிகம் திரண்டு வராத ஒரே அணி சென்னை மட்டும் தான். அவர்களின் ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த கோப்பை. வாழ்த்துக்கள் சென்னை சிங்கங்களே.

நன்றி: கிரிகின்போ 
Related Posts with Thumbnails