March 24, 2011

போலி மருத்துவர்கள்-பொறியாளர்கள் வரிசையில் தொடரும் போலி விமானிகள்



ஜெய்ப்பூரில் 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்திற்காக பணிபுரிந்து வரும் விமானிகள் இருவர் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்; கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த பிரச்சினையை சற்றே ஆழமாக பார்த்ததில் சான்றிதழ்களில் தவறேதுமில்லை என்பதும் விமானிகளாவதற்கு உரிய பயிற்சிப் பள்ளியில் முறையான பயிற்சி பெறாமலே பயிற்சி பெற்றதாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதும் புரிய வருகிறது.

மேலும் நான்காயிரம் விமானிகள் பட்டியிலடப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்களாம். போலிகள் இங்கேயுமா என ஆச்சரியம் மேலிட்டாலும்; கல்வி என்பது வியாபாரம் என்றாகி விட்ட இந்த காலத்தில் இந்த விமானிகள் செய்திருக்கும் சான்றிதழ் மோசடியில் புதிய விஷயம் ஏதும் ஒளிந்திருப்பதாகத் தெரியவில்லை.

சில லட்சங்களை நீட்டினால் விமானிகளுக்கான சான்றிதழ்கள் என்ன மருத்துவர் என்ற பட்டம் கூட கரங்களில் தவழும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது பலரும் கண்ட உண்மை.

பல மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் வகுப்புகளுக்கு சரியாக வராத மாணவர்களும் அபராதம் என்ற பெயரில் சில ஆயிரங்களை கட்டிவிட்டு பிற மாணவர்களைப் போன்றே தேர்வு எழுதுவதையும்; சராசரியான மதிப்பெண்களைப் பெற்று வெற்றிபெறுவதையும் கண்கூடாகக் கண்டவன் நான்.

முறையான செய்முறை பயிற்சியை அளிக்காத கல்லூரிகள் இன்று எத்தனை? முறையான பயிற்சி அளிக்கப்பட்டும் வகுப்புகளை புறக்கணிக்கின்ற மாணவக் கூட்டங்கள் இன்று எத்தனை?! திறமையான ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகள் இன்று தமிழகத்தில் மட்டும் எத்தனை உள்ளன!!

கல்லூரிகளை விடுங்கள், முறையான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இன்று இந்தியாவில் எத்தனை! எத்தனை?!

இதற்கெல்லாம் காரணம் யார்? ஏன் இவற்றை தவிர்க்க இயலவில்லை!? என்ற கேள்விகளை எழுப்பினால் அரசாங்கம், அமைச்சர்கள் என்று தான் பழி போடுவோம். அவர்கள் ஒருவகையில் காரணமானாலும்; முறையான பயிற்சி ஏதும் பெறாமலே எப்படியாவது சான்றிதழைப் பெற்று விட துடிக்கும் மாணவ சமுதாயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு காரணம் தான் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நாமும், கல்வி இயக்குனரும், அமைச்சர் பெருமக்களும், அரசாங்கமும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமானால் போலி விமானிகள் என்ன போலி மருத்துவர்களும், பொறியாளர்களும் இன்னும் தொடரத்தான் செய்வார்கள்.

நன்றி: ndtv cnn-ibn

March 09, 2011

நிறைவடையா மனித மனம்


மீண்டும்! மீண்டும்!! மீண்டும்!!! எத்தனை முறை மீட்சியையும் மாட்சியையும் கண்டாலும் நிறைவடைவதில்லை மனித மனம்.

இன்றளவும் பெரும்பாலானோர் நிறைவற்றவர்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. சில ஆண்டுகள் முன்னிருந்த நிலைமையை சற்று திரும்பிப் பார்த்தால் இன்று, இந்த நொடி எவ்வளவோ வசதிகளைப் பெற்றிருக்கிறோம்; வளமை அடைந்திருக்கிறோம்... எனினும் மனதில் நிறைவில்லை நம்மில் பலருக்கு.

வருங்காலத்திற்காக நிகழ்காலத்து சந்தோஷங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம். முன்னொரு பதிவில் எழுதியிருந்த வண்ணம்... 

"பணங்களை சம்பாதிக்கும் அவசரத்தில் 
 மனங்களை சம்பாதிக்க மறக்கிறோம், 
 மறுக்கிறோம்" !!

நடந்து செல்பவருக்கு மிதிவண்டி வாங்க ஆசை, மிதிவண்டியில் செல்பவருக்கு இருசக்கர வாகனம் வாங்க ஆசை, இரு சக்கர வாகனத்தில் செல்பவருக்கு நான்கு சக்கர வாகனம் வாங்க ஆசை. இவ்விதமான ஆசைகள் நிறைவேறினாலும் பலரது மனங்களில் நிறைவில்லை.

ஆசைப்பட்டு வாங்கிய பின்னரும் வேறு நிறத்தில் வாங்கியிருக்கலாமோ; வேறு வடிவத்தில் வாங்கியிருக்கலாமோ என மனநிறைவடையா பல கேள்விகள்.

இதைத்தான் "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என அன்றே சொல்லிப் போனார்களோ என்னமோ!

பொருட்கள் மீதான மோகமும் ஈடுபாடும் தீர்ந்து போனால் கூட பரவாயில்லை. மனிதர்களிடம் குறிப்பாக நண்பர்களை; கட்டிய மனைவி, கணவன்மார்களையே மாற்ற நினைக்கும் மனித மனங்களை நினைத்தால் விசித்திரமாகத் தானிருக்கிறது.

என்றும் எதிலும் திருப்தியில்லாமல் இருப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் நிச்சயமாக நிம்மதி என்பது கேள்விக்குறி தான்.

குறைவிலும் நிறைவான மனம் கொள்வதும்; பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பதை வைத்து மனநிறைவடைவதும் தான் மகிழ்ச்சியான வாழ்வின் மந்திரம்.

"கனவு காணுங்கள்" என அப்துல் கலாம் கூறியது போன்ற கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை தான்; ஆனால் அந்த கனவுகள் நிஜங்களை தொலைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதோடு நமது சக்திக்கும் / வருமானத்திற்கும் மிஞ்சிய கனவுகளாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வருகின்ற மானம் (வருமானம்) காற்றோடு போகின்ற மானமாகிப் போய் விடும்.
Related Posts with Thumbnails