April 04, 2011

கிரிக்கெட்டும் வெற்றியும் சச்சினும் பதிவுலகமும்


பதிவுலகில் கால் வைத்த இந்த நான்கு வருடத்தினிடையில் கிரிக்கெட் குறித்து எழுதாமல் இருந்ததில்லை; எனினும் இந்த வருடம் இதுவரை ஒரு கிரிக்கெட் பதிவும் எழுதாமல் இருந்து விட்டேன். இந்தியா வெற்றி பெற்ற பின்னரும் சில வார்த்தைகள் எழுதவில்லையென்றால் அது சரியில்லை என்பதால் தான் இந்த பதிவு.

ஏப்ரல் 2 அன்று இரவு இந்தியர்கள் பலரும் அடைந்த மகிழ்ச்சி சொல்லவொண்ணாதது. அறுபதை கடந்த பலரும் ஆறு வயது சிறாராய் மாறியிருந்தனர். தெருக்கோடியில் வசிப்பவரிலிருந்து பல கோடியில் மிதப்பவர் வரை ஒரே மைதானத்தில் இருந்து இந்திய அணி விளையாடியதை பார்த்து ரசித்தனர். அங்கு வேற்றுமை ஏதுமில்லை. அனைவரின் ஆசையும் இந்தியா வெல்ல வேண்டும் என்பது மட்டுமே.

பதினொரு வருடங்கள் பின்னிட்டு பார்க்கிறேன். 2000 ல் சூதாட்டம், ஊழல் என இந்திய கிரிக்கெட் நலிவுற்றிருந்த நேரம் அது. அசாருதீன், ஜடேஜா, மோங்கியா என பலருக்கு அதில் பங்கிருந்ததாகவும் செய்திகள் வெளிவரவே கிரிக்கெட்டை வெறுத்தவர்களில் நானும் ஒருவன்.

அதன் பின்னர் கிரிக்கெட்டில் மீண்டும் ஈடுபாடு காண்பிக்க தூண்டியது சச்சின் தான். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை வழிநடத்திய பெருமை சச்சினைச் சாரும். அந்த உலகக்கோப்பை தொடரின் நாயகனும் சச்சின் தான்.

அப்படியாக 11 ஆண்டு கசப்புகளைப் பின்னுக்குத் தள்ளி 11 ஆம் எண் அணிந்திருந்த சங்கக்காராவின் பதினொன்று பேரையும் பின் தள்ளி இந்திய நேரப்படி 11 மணியளவில் 2011 ல் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. 

21 வருடங்கள்; ஐந்து உலகக்கோப்பை தொடர்கள் ஆடிய பின்னரும் கிடைக்காத பெருமை ஆறாவது முறை தான் கிடைத்திருக்கிறது சச்சினுக்கு.

21 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டைத் தூக்கி சுமந்தவரை இன்று நாங்கள் சுமப்பதில் பெருமை அடைகிறோம் என விராட் கோலி கூறியிருப்பதும்; பெயர் சொல்ல விரும்பாத ஒரு முக்கியமானவருக்கு தான் இந்த வெற்றி என ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றிக்கு பின்னர் புதிர் போட்ட யுவ்ராஜ், சச்சின் தான் அந்த முக்கியமான நபர் என இப்போது கூறியிருப்பதும்; சச்சினுக்கு இந்த கோப்பையை சமர்ப்பிக்கிறோம் என தோனி, சகீர், ஹர்பஜன் உள்ளிட்ட பலரும் கூறியிருப்பதும்; சச்சின் பெருமைப்பட வேண்டியவை.

எளிமை, பொறுமை, இவற்றை சச்சினடமிருந்து நான் கற்றுக்கொண்டேன் என அணியின் பயிற்சியாளர் கிர்ஸ்டனே கூறியிருப்பது சச்சினுக்கு மேலும் புகழ் சேர்க்கும்.

சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்றுவிடும் என சமீபகாலமாக நிலவும் கருத்து ஏற்புடையதல்ல. ஒருதின போட்டிகளில் சச்சின் அடித்திருக்கும் 48 சதங்களில்  33 சதங்கள் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தவை. அவர் சதமடித்தாலும் அணியிலிருக்கும் பிறர் ஒத்துழையாமல் வெற்றி எப்படி வரும்?

சச்சின் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்றிருந்த நிலைமை தற்போது இல்லை என்பது தான் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய பலமே. சச்சின் ஆடவில்லையென்றால் சேவாக், அவருமில்லையென்றால் கோலி, யுவி, ரைனா என இளம்பட்டாளமே இருக்கிறது. என்றாலும் சச்சின் அணியில் இருப்பதே மற்ற வீரர்களுக்கு ஒரு பலமும், தன்னம்பிக்கையும் கூட.

அணித்தலைவர் தோனியையும், பயிற்சியாளர் கிர்ஸ்டனையும் இங்கு குறிப்பிடாவிட்டால் இந்த பதிவு முழுமையடையாது. சச்சினை தூக்கி சுமந்த இந்திய அணியினர் அதன் பின்னர் கிர்ஸ்டனையும் தூக்கிக் கொண்டு மைதானத்தில் வலம் வந்தனர் என்றால் எந்த அளவிற்கு கிர்ஸ்டன் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பது புரியும்.

கிர்ஸ்டனை வெகுநேரம் யுவ்ராஜ் கட்டியணைத்துக் கொண்டிருந்தார். யுவ்ராஜை உடல்திறன் சரியில்லை என்பதற்காகவும், தொப்பை அதிகமாக இருக்கிறது என்பதற்காகவும் அணியை விட்டு விலக்கி வைத்ததும் கிர்ஸ்டன் தான் என்பது பலருக்கு நினைவில்லாமல் இருக்கலாம். யுவ்ராஜை மீண்டும் அணியில் சேர்த்த பெருமையும் தொடர் நாயகன் விருதிற்கான அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்த பெருமையும் கிர்ஸ்டனையே சாரும். 

எந்த சூழ்நிலையிலும் பதட்டமே அடையாத இரு அணித்தலைவர்களை இறுதிப் போட்டியில் கண்டது மகிழ்ச்சியே. பதட்டம் அடைந்தாலும் அதனை வெளிக்காண்பிக்காமல் வீரர்களின் திறமையை மட்டும் வெளிக்கொணரும் யுக்தி தெரிந்தவர்கள் தோனியும், சங்கக்காராவும்.

தோனியை சுற்றி இருக்கும் திறமையுள்ள இந்திய அணியினரும் இந்த வெற்றியை இலகுவாக்கினர் என்றால் அது மிகையல்ல. இறுதிப்போட்டி வரை உலகக்கோப்பை போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ஓட்டம் 34 தான். எனினும் இறுதிப்போட்டியில் அமர்க்களப்படுத்தி விட்டார்.

எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவதும் தோனிக்கு அழகு தான். உதாரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்தில் அஷ்வினை வெளியே வைத்துவிட்டு நெஹ்ராவை எடுத்தது தவறு தான் என ஒப்புக்கொண்டது அவரது பாணி(இத்தனைக்கும் நெஹ்ரா 10-0-33-2 என்ற முறையில் பந்து வீசி வெற்றிக்கு வழி வகுத்திருந்தார்) அவரை எடுத்தது சரி தான் என்று தோனி அப்போது கூட நியாயம் கற்பிக்கவில்லை.

உலகக்கோப்பையை வென்ற பின்னர் அளித்த பேட்டி ஒன்றில் கங்குலி, திராவிட் மற்றும் கும்ப்ளே ஆகிய மூவரையும் (சச்சின் உட்பட) நினைவு கூர்ந்ததன் மூலம் தோனிக்கு மேலும் நற்பெயரே. 



இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய மற்றொரு காரணம், வீரர்களின் உடற்திறனும், மனவலிமையும் தான். இல்லையென்றால் கால், அரை, மற்றும் இறுதிப் போட்டிகளில் விழுந்து விழுந்து தடுத்திருப்பார்களா? இறுதிப்போட்டியில் 99 ஓட்டங்களை singles என்ற முறையில் ஓடி தான் எடுத்திருப்பார்களா? இதற்காக ஒரு வருடத்திற்கு முன்னரே திட்டங்களை தீட்டிய பயிற்சியாளருக்கும், பிற பயிற்சியாளர்கள் @ Supporting Staff ற்கும் இந்திய அணி கடமைப் பட்டிருக்கிறது.  

ஆட்ட முடிவில் பேசிய சங்கக்காராவின் நேர்த்தியான பேச்சு பலரை கவர்ந்திருக்கக்கூடும். இந்த இந்திய அணியை தோற்கடிக்க வேண்டுமானால் 350 ற்கும் குறைவான ஓட்டங்கள் போதாது என வெளிப்படையாக பேசியது பாராட்டிற்குரியது.

இந்த சந்தோஷங்களுக்கிடையில் கிரிக்கெட் ஏன்? இலங்கையில் தமிழனை காவு வாங்கிய ராஜபக்ஷேவின் வருகை ஏன்? தமிழினம் இலங்கையில் அழியும் போது தமிழன் ஏன் உலகக்கோப்பை வெற்றிக்கு சந்தோஷப்பட வேண்டும் என கேள்வி எழுப்புவர்களுக்கு... விளையாட்டை விளையாட்டாய் பார்த்தாலே போதுமானது என்பது தான் எனது பதில்.

 ---------------
MEMORIES THAT WILL LAST LONG FOR A LIFETIME
ரஜினி, கஜினி, தோனி மைதானத்தில் ஒருசேர இருக்கையில் இந்தியாவிற்கு ஏது தோல்வி என தத்துவமும் பேசுகிறார்கள் சில கிரிக்கெட் ரசிகர்கள். 

INDIAN TEAM SALUTES MURALI

SANGAKKARA THE COOL CAPTAIN STILL SMILES EVEN AFTER THE DEFEAT

SACHIN SHARES HIS HAPPINESS WITH HIS LONG TIME FAN SUDHIR GAUTAM

PLAYER OF THE TOURNAMENT YUVRAJ SINGH



நன்றி: cricinfo

2 comments:

Unknown said...

india team-kku vaalthukkal

ana 2 perusa? 4 perusa?

compare to australians india record panni kattattum

2 kku vaangiyadhukku ivalo aattam-na avan 4 vaangi irukkan? enna panna?

எட்வின் said...

@ madhu

ஏங்க இப்ப தான் ஊழல், சூதாட்டம் இல்லாம அணி நல்லா வந்திட்டு இருக்கு. கிடைச்ச வெற்றிக்கு சந்தோசப்படுவோம். இன்னும் நல்லா பண்ணுவாங்கன்னு எதிர்பார்ப்போம்.

Post a Comment

Related Posts with Thumbnails