May 31, 2011

அது ஒரு அழகிய கனா காலம்

காலங்கள் எத்தனை வேகமாய் செல்கிறதோ அத்தனை வேகமாய் கவனங்களும் எண்ணங்களும் வேகமாய் கடந்து போகத்தான் செய்கின்றன. ஆனால் நமது எண்ணங்களும் கவனங்களும் எத்தனை அதிக சந்தோஷத்தை நமக்கு அளிக்கின்றன என சற்றே எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறி தனிக்குடித்தனம் நடத்தி வரும் பலர் இன்று இழந்து வரும் சந்தோஷங்கள் கணக்கில் அடங்காதவை. பெற்றோரின் அரவணைப்பு, சுற்றங்களின் நேசபாசம் இவை தான் அவை எல்லாவற்றிலும் முதன்மையான மிகப்பெரிய இழப்பு.

கிராம வாழ்வை விட்டு நகரில் குடியேறியிருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் அலுத்தாலும் பின்னர் ஆடம்பர வாழ்வு அவர்களை ஆக்கிரமித்து விடுகிறது அல்லது கட்டிப்போட்டு விடுகிறது. கிராமத்து வாசமும், திண்ணைப் பேச்சுகளும்; ஆலமர, ஆற்றோர ஆசுவாசமும் மெல்ல மறந்து டிஸ்கோத்தே ஆர்ப்பாட்டங்களும், தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேறுபவற்றையே சுவாசித்து ஆசிவாசித்து விடுதலும் பழகிப் போய்விடுகிறது.

அஞ்சல் அட்டை @ போஸ்ட் கார்ட்; உள்ளூர் கடிதம் @ inland ஆனது. பின்னர் கடிதப் போக்குவரத்தும் குறைந்து மின்னஞ்சல் ஆனது. இன்று மின்னஞ்சல் அனுப்பினால் கூட கண்டு கொள்பவர்கள் வெகு சிலரே. முகநூலும் ஆர்குட்டும், டிவிட்டரும் முக்கியமாகிப் போனது இன்று.

ஆர்குட்டில் ஏன் எனக்கு scrap அனுப்பவில்லை, முகநூலில் ஏன் எனக்கு Post எதுவும் பண்ணவில்லை என கேள்வி கேட்பவர்கள் மின்னஞ்சலை கூட கவனிக்க நேரமின்றி இருக்கின்றனர். தேவையற்ற spam மின்னஞ்சல்களை நீக்குவதற்கு கூட இந்த facebook உலகில் நேரமில்லை.

இந்த facebook உலகம் கடிதம் வரைதலிலும் கரங்களால் எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகள் அனுப்புவதிலும் இருக்கம் சுவாரஸ்யத்தை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது.

தனிமையில் தியானம் செய்யவோ; தனிமையாக சிந்திக்கவோ இன்றைக்கு பலருக்கும் சமயம் வாய்ப்பதில்லை. பணியிடங்களில் பணிகளின் தலை வலியென்றால்; வீடுகளில் சீரியல் எனப்படும் மகா மெகா தொடர்களின் ஆர்ப்பாட்டம் ;அல்லது நடிகர் உடல்நல குறைவு, நடிகை கால் தவறி விழுந்தார் போன்ற Breaking News களின் பிதற்றல்கள். இவற்றினிடையில் தனிமைக்கும் சுயமாக சிந்திப்பதற்கும் குடும்பத்தினரோடு உறவாடுவதற்கும், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் ஏது சமயம்.

இன்னும் உண்டு...

2 comments:

செம்மலர் செல்வன் said...

தல,நாம் இது போன்று இழந்த விஷயங்கள் நிறைய. தொடந்து எழுதுங்கள்.

ஒரு வேண்டுகோள், இதை ஏன் நீங்கள் தனித்தனி பதிவாக எழுதாமல் மொத்தமாக ஒரு தொகுப்பாக எழுதி புத்தக வடிவில் ஆக்க கூடாது?

Unknown said...

இயந்திரமய மாகிவிட்ட வாழ்வில் நாம் நிறையவே இழந்து வருகிறோம்

Post a Comment

Related Posts with Thumbnails