April 26, 2012

அன்பர் 'அலெக்ஸ்' கடத்தலும் உணர்த்தும் விஷயங்களும்

வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு ஏதும் நிகழ்கையில் மட்டும் தான் மனமும், எண்ண ஓட்டங்களும் சற்றே விசாலமடையும் அல்லது வேறு விதமாக யோசிக்க துவங்கும்; அதிலும் குறிப்பாக நமக்கு நெருக்கமான ஒருவரை கணக்கில் கொள்கையில் அவர் சார்ந்த விஷயமென்றால் இன்னும் ஆர்வமாக அந்த விஷயத்தை அணுகுவோம். 

அப்படித்தான் நண்பர் 'அலெக்ஸ்' கடத்தப்பட்ட பின்னர் அவரை சார்ந்தவர்களாகட்டும்  நான் உட்பட்ட அவரை முன்பே அறிந்தவர்களாகட்டும்,   இன்னும் விசாலமாக யோசிக்க/ விவாதிக்க துவங்கியிருக்கிறார்கள்/ துவங்கியிருக்கிறோம். 


'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்று சொல்லிப் போனதெல்லாம் இறந்த காலமாகிப் போய் கொண்டிருக்க இன்னமும் நிகழ்காலமாகக் கருதிக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வடக்கில் செழிப்பாக இருக்கிறார்கள் இங்கு நாம் தான் ரேஷன் அரிசிக்கும்,மண்ணெண்ணைக்கும் தவியாய் தவிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புபவர்களும்  இல்லாமலில்லை.

இவ்வித மனநிலைமை கொண்டவர்களில் பலர் நக்சலைட்டுகள் குறித்தோ, வடகிழக்கு மாநிலங்கள் குறித்தோ, அங்கு வாழும் பழங்குடி - ஆதிவாசிகள் குறித்தோ, அவர்கள் படும் அல்லல்களை குறித்தோ அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்விதம் ஆதிவாசிகள் படுகிற சிரமங்களை அறியாதவர்களுக்காகட்டும், 'அலெக்ஸ்' மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிகிறார் என்று (மட்டுமே) அறிந்தும் அவர் எவ்விதமான சூழ்நிலையில் பணிபுரிகிறார் என்று அறியாதவர்களுக்காகட்டும், அன்பர் 'அலெக்ஸ்' அவர்களின் தற்போதைய நிலைமை, நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருக்கும் நக்சல் பிரச்சினையையும்; சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் இன்னமும் மின்சாரமில்லாத, சரியான மருத்துவ வசதிகள் இல்லாத குக்கிராமங்களையும்; அவர்கள் மத்தியில் பணிபுரியும் 'அலெக்ஸ்' அவர்களின் அயராத உழைப்பையும்; அர்ப்பணிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. 

சாதாரணமாக கலெக்டர் என்றாலே உயர்ந்த பதவி என்பதும், எவ்வித பிரச்சினையும் இல்லாத வேலை என்பதும், சுகபோக வாழ்க்கை என்ற எண்ணமும் தான் பலரிடம் மேலோங்கியிருக்கிறது. பேச்சு வழக்கில் கூட ஒருவரை உயர்த்திக் கூற வேண்டுமென்றால் "அவனுக்கென்ன, கலெக்டர் மாதிரி வாழுறான்" என்பது மாதிரியான சொற்றொடர்களைத் தான் சமூகம் பிரயோகித்து வருகிறது.

அப்படித்தான் நானும் கருதி வந்திருந்தேன்... ஆனால் ஒரு மாவட்டத்தை ஆளுகிறவருக்கு எத்தனை விதமான நெருக்கடிகள் என சற்று சிந்தித்தால் தான் புரிய வருகிறது.

சமூக பணிகள் என்ற பெயரிலும், ஏழைகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரிலும் இன்று பணத்தை மட்டும் அனுப்பி விட்டு கைகட்டி நிற்கின்ற நாம் எங்கே...!! களத்தில் நேரடியாக, மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு அர்ப்பணிப்போடு பணிபுரிகின்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்கே!!!

சமூக நலனுக்காக, மக்கள் உரிமைகளுக்காக உழைக்கும் அலெக்ஸ் போன்றவர்கள் அனைவரும் வணக்கத்திற்குரியவர்கள். இவர்கள் முன் நாம் ஒன்றுமில்லை.

பள்ளிப்பருவத்தில் நெல்லையில் அவருடனும்,பிற நண்பர்களுடனும் பரிமாறிய சம்பாஷனைகளும், கிரிக்கெட் ஆட்டங்களும் தான் நினைவிற்கு வருகின்றன.

'அலெக்ஸ்' மீண்டும் வருவார்; மீண்டு வருவார்; என்ற நம்பிக்கையிருக்கிறது :)

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
திரு அலெக்ஸ் திரும்பிவர மனப்பூர்வமாக பிரார்த்திப்போம்.
நன்றி, வாழ்த்துகள் திரு எட்வின்.

எட்வின் said...

@ Rathnavel Natarajan

மிக்க நன்றிங்க...

இந்த வலைப்பூவைத் தொடர்வதற்கும் நன்றி. அலெக்ஸ் அவர்க்ள் நிச்சயம் திரும்பி வருவார்.

அதிகம் எழுதி வந்தேன். தற்போது குடும்பப் பொறுப்புகளும், பணிப்பளுவும் சிந்தனையை சுருக்கி வைத்திருக்கின்றன.

Post a Comment

Related Posts with Thumbnails