December 31, 2013

2013 - முகநூல் - சுயநலம் - 2014

2012 ன் இறுதி நாளிலும் பணியிலிருந்ததாலோ என்னமோ இந்த வருட இறுதியில் சற்றே இளைப்பாற முடிந்தது மகிழ்ச்சியே. அதற்கு வழிவகை செய்த மேலிடத்திற்கு முதல் நன்றி. 2013 ல் கடந்து வந்த பாதைகள் ஏமாற்றத்தையும், சில நேரங்களில் வாழ்க்கையின் மீதான ஒரு வெறுப்பையும், பல நேரங்களில் வருத்தத்தையும் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

எனினும் வெகு நாளைய கனவான ஒரு இசைத்தொகுப்பை நண்பன் மோகனுடன் இணைந்து உன்னிகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், ஜாலி ஆபிரகாம், ஹேமாஜான் போன்றோரின் குரலில் வெளியிடும் வாய்ப்பு இந்த வருடம் தான் அமைந்தது.

இது ஒருபுறமிருந்தாலும் முகநூல் நிமித்தம் பட்ட அவஸ்தைகள் ஏராளம். நாம் பொதுவாக ஒன்று எழுதினால் தனக்கே எழுதியதைப் போன்ற ஃபீலிங்க்ஸ் கொட்டிவிட்டு பீலா விட்டவர்கள் பலர். இது போதாதென்று நண்பர்களுக்குள் பகிர வேண்டிய விஷயங்களை சந்தியில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தவர்களை ஏனென்று கேட்டுவிட்டதால் ஏற்பட்ட குழப்பங்களும் பல.

ஆர்குட், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்த ஆரம்ப நாட்களில் அமைதியாக எந்த அபத்தமும் இல்லாமல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த காலங்கள் மாறிப்போனது இன்று. சம்பந்தமேயில்லாமல் சம்பந்தமற்ற தகவல்களை முகநூலில் பகிர்வதும் (Share), கண்மூடித்தனமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர்வதும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கின்றன.

சம்பவங்களை அதன் உண்மைநிலையை ஆராய்ந்து அறியாமல், அறியவும் முற்படாமல் அப்படியே பகிரும் செயல் முகநூல் பயன்படுத்துபவர்கள் பலரையும் தொற்றியிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

சிலர் தூக்கம் வரவில்லை, தலைவலிக்கிறது என்பதைக் கூட முகநூல் வழியாக Status என்ற பெயரில் உலகம் அறியவேண்டுமென்று ஆசைப்படுவதை என்னவென சொல்வது. எதையாவது கிறுக்கி மற்றவரையும் கிறுக்கு பிடிக்கச் செய்யும் உக்திகள் எங்கிருந்து தான் உதிக்கின்றனவோ தெரியவில்லை.

"ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்தவுடனேயே ஷுட்டிங்கையும் ஆரம்பித்து விடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது" இது சமீபத்தில் twitter ல் அதிகம் ரசித்த ட்வீட். இந்த புகழ் முகநூல் பயன்படுத்துபவர்கள் பலரையும் சாரும். நின்றால், நடந்தால், குனிந்தால் என என்ன செய்தாலும் படம் பிடித்து போடுபவர்களை பார்த்து சிரிப்பதா! அழுவதா!!

பலர் தாங்கள் உணவருந்தினாலும் படமெடுத்து வலையேற்றுகிறார்கள். குறிப்பாக விலையுயர்ந்த உணவகங்களில் சென்று படமெடுத்து ஏற்றுவதைக் குறிப்பிட்டாக வேண்டும். அதோடு விடுகிறார்களா இல்லை... கார் வாங்கினால், பைக் வாங்கினால், வீடு கட்டினால் என தங்களை, தாங்கள் அடைந்திருக்கும் நிலையை உலகம் பார்க்க வேண்டுமென்று புகைப்படங்கள் எடுத்து முகநூலில் ஏற்றுகிறார்கள். இதே வேலையாக இருப்பவர்களை உளவியலில் ASB - Attention Seeking Behaviour குணம் உடையவர்கள் என்று கூறுகிறார்கள். தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் என்றும் பொருள்படலாம்.

எவரெவர் என்னென்ன செய்கிறார்கள், எங்கிருக்கிறார்கள் என எளிதாக முகநூலின் Status Update களின் மூலம் அறிந்து கொள்ளமுடிவது நண்பர்களுக்குள் சரியெனப் பட்டாலும். பலரும் காணுமாறு பகிரும் போது அதற்கேதுவான பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்தில் வெளிநாடு ஒன்றில் பணிபுரியும் வேலூரை சார்ந்த ஒருவர் முகநூலில் ஊருக்கு செல்கிறேன் என எழுதிவிட்டு போனார். மறுநாள் சென்னை விமானநிலையத்திலிருந்து வேலூருக்கு போகிற வழியில் அவரது நண்பனின் நண்பன் அனைத்துப்பொருட்களையும், அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துவிட்டு தப்பியோடி விட்டார். இதையெல்லாம் சொல்லி உஷாரா இருங்கப்பான்னு சொன்னா போடா உன் வேலயப்பார் என்கின்றனர் பெரும்பாலானோர்.

இன்றைக்கு இணையமும், முகநூலும், பிற சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்புக்கு முக்கியமான ஊடகங்களாகி விட்டன. அப்படியே மொத்தமாக வேண்டாமென்று ஒதுக்கி விடமுடியாது. அவற்றை எப்படி முறையாக, கவனமாக, உபயோகிக்கிறோம் என்பதே கேள்வி!

பெரும்பாலானோரின் கைபேசிகளில் முகநூல் பார்க்கும் படியான வசதியும் இன்று இருக்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் இன்று முகநூல் உபயோகிக்கின்றனர்.  இதனால் பிறரிடம் இல்லாத ஒரு விஷயத்தை நாம் பகிரும் போது மற்றவரின் மனம் புண்படாதவாறு பகிர்தல் மிக அவசியம். என்னிடம் இது இருக்கிறது, நாங்கள் இத்தனை பெரிய வீடு கட்டி விட்டோம், நான் அங்கு செல்கிறேன், நான் அமெரிக்காவில் இருக்கிறேன், நான் KFC, McDonald போன்ற உணவகங்களில் சாப்பிடுகிறேன் என தம்பட்டம் அடித்து Status Update செய்வதால் இவை இல்லாதவன் மனது சங்கடப்படாதா!? வருத்தப்பட மாட்டானா!?


ஆனால் இன்று முகநூலில் இப்படியான சுயம் போற்றுவோரின் ராஜ்யமே கொடிகட்டி பறக்கிறது. பிறரைக் குறித்த கவலையும், பொதுநலன் கருதுவோரும் வெகு சிலரே. இணையத்தால் உலகம் சுருங்கியிருப்பது உண்மைதான்... கூடவே மனிதனின் மனமும் சுயநலம் என்ற வட்டத்திற்குள் சுருங்கிப் போனது தான் ஆச்சர்யம். 

இசையால் நனைய செய்த இளமை - Music Mojo - Keba Jeremiah

2013 அத்தனை எளிதாக கடந்துவிடவில்லை. எந்த வருடத்தையும் விட மிக அதிகமான (ஏ)மாற்றங்களையும், தோல்விகளையும் சந்தித்த வருடமாகவே பார்க்கிறேன் 2013 ஆம் வருடத்தை. ஆனால் அத்தனை பிரச்சினைகளின் மத்தியிலும் என்னை இன்னும் ஆரோக்கியமாக, ஆனந்தமாக வைத்திருப்பதில் இசைக்கு பெரும்பங்கு உண்டு. நீரின்றி அமையாதுலகு என்பது போன்று இசையின்றி அமையாதுலகு என கூறினாலும் தகும்.

அந்த வகையில் இந்த வருடம் அசர வைத்து, ஆச்சரியப்பட வைத்த இரு தருணங்கள் Music Mojo மற்றும் Keba Jeremiah வின் இசைத் தீண்டல்கள் தான். இளைஞர் பட்டாளமே வரிந்து கட்டிக்கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள் இன்றைய இசையுலகை. அதனை எந்த மொழி பாரபட்சமுமில்லாமல் ஊக்குவித்து வருகிறது கேரளத்தைச் சார்ந்த மாத்ருபூமி பத்திரிக்கை நிறுவனம் ஆரம்பித்த கப்பா தொலைக்காட்சி செய்து வரும் Music Mojo நிகழ்ச்சி.

Music Mojo வில், மொழி வேறுபாடின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளின் திரைப்படப்பாடல்களும், சுயமாக மெட்டமைக்கப்பட்ட பாடல்களும் இளம் இசைக்குழுக்களால் அற்புதமாக அரங்கேற்றப்படுவது தான் சிறப்பு. இளம் இசைக்கலைஞர்களின் திறமைகள் வாய்பிளக்க வைக்கின்றன. அதோடு அவர்களின் இசை புல்லரிக்க வைக்கிறது. இதில் குறிப்பிடும்படியாக ASIMA, Acoustika, Bennet & The Band, Agam, Thaikkudam Bridge, Staccato போன்ற இசைக்குழுக்களைக் கூறலாம் இவர்களுடன் இளம் பாடகர்களான ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், காயத்ரி, நிகில் மேத்யு, ஜ்யோத்சனா, ஜாப் குரியன், நேகா நாயர், மஞ்சரி, பென்னி தயாள், "மூங்கில் தோட்டம்" புகழ் - அபய் ஜோத்புர்கர் என திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன.

இதில் நான் அதிகம் ரசித்த பாடல்கள் பலவற்றில்  சில இங்கே. 
ஸ்வேதா மோகன் பாடிய "இன்னும் கொஞ்சம் நேரம்"
 

நிகிதா, நிகில் பாடிய "ஏதோ" 



மஞ்சரி பாடிய "வான் மேகம்"



ஹரிச்சரண் பாடிய "நிலாவே வா"


கேபா ஜெரேமியாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பல ஆண்டுகள் முன்னர் சன் தொலைக்காட்சியில் Route10 இசைக்குழு என்ற பெயரில் ஊ ல ல லா நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் Harmonize Project ற்காக பங்களித்து இப்போது பல இசையமைப்பாளர்களுக்கு Guitar இசை மீட்டுபவர் தான் கேபா. இத்தனை இளம் வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான Guitarist ஆகி இருக்கிறார்.


மூங்கில் தோட்டம் - கேபா ஜெரேமியா


செய்யக்கூடிய விஷயத்தில கவனமும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இவர்கள் அடைந்த சிறப்பைப் போல் எவரும் அடையலாம் என்பதற்கு இவர்களே சாட்சி. இசையின்றி அமையாது உலகு. இவர்களின் இசைக்கு என் வணக்கங்கள். 

எந்திர வாழ்க்கை - ஏன் இந்த வாழ்க்கை

விமானத்தில் எத்தனை முறை பயணம் செய்திருந்தாலும் வெகு அருகே கம்பீரமாக அது பறக்கையில். ஆச்சர்யமாக, முதல் முறை விமானத்தை பார்ப்பது போன்று வேடிக்கை பார்ப்பதும், ரசிப்பதும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது; விமானம் வான் நோக்கி எழுவதிலும் (Take Off) தரை இறங்குவதிலும் (Landing) இருக்கிற அழகு அது  பறக்கும் பொழுது அதிகம் இருப்பதில்லை.

அப்படித்தான் சென்ற வாரம் வாகனத்தில் பயணப்படுகையில், இறக்கைகளால் ஒரு பருந்து எத்தனை ஒய்யாரமாக இடவலமாக சரிந்து பின்னர் ஒரு வட்டமிட்டு மீண்டும் வலஇடமாக சரிந்து பறக்குமோ அதற்கொப்பான ஒரு காட்சியை ஒரு விமானி கண்காண வழி வைத்தார். நகர்கின்ற வாகனத்திலிருந்து தரையிறங்கும் ஒரு விமானத்தின் அழகைக் காண பல ஆயிரம் கண்கள் வேண்டும்.

விமானம் தீண்டிய அத்தருணத்தில் பலவித எண்ணங்கள் என்னை சீண்டிச் சென்றன. விமானம் நிச்சயமாகவே அற்புதமான கண்டுபிடிப்பு தான். ஒரு மாதம், ஒன்றரை மாதம் கடல் மார்க்கமாக பயணித்து வேறொரு நாட்டினை சென்றடைந்த காலம் மாறி சில மணி நேரங்களுக்குள்ளாக சென்றடைவது சாத்தியப்பட்டிருக்கிறது.

விமானம் மட்டுமல்ல...

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் நமது நேரத்தை மிச்சப்படுத்துகின்றன, விரைவாக பணிகளை செய்து முடிக்க வழிகோலுகின்றன. உடல் அசைவும், களைப்பும் அதிகமின்றி எளிமையாக செய்து முடிக்க உதவுகின்றன. மாடும்-கலப்பையும் போய் இன்று டிராக்டர் எந்திரம் உழவுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. உரலும்-உலக்கையும் போய் இன்று கிரைண்டர் ஆதிக்கம் காட்டுகிறது. அம்மியும்-குழவியும் போய் இன்று மிக்சி ஓடுகிறது. ஈக்கலும்-வாரியலும் போய் இன்று வேக்கும் க்ளீனர் சுத்தம் செய்கிறது. கருங்கல் இன்று வாஷிங்மெஷினாகி நிற்கிறது, இப்படி இன்னும் பல.

விதவிதமாக வாகனங்கள், பேருந்துகள், விமானத்தில் பயணிப்பது போன்றே ஆடாமல் அலுங்காமல் பயணிக்க Air Buses, அதி வேகமாக செல்லும் ரயில் வண்டிகள் என போக்குவரத்து வசதிகளும் பலவிதம் தான்! எல்லாம் சிறப்பான கண்டுபிடிப்புகளே! அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் முப்பது, நாற்பது ஆண்டுகள்; முன்னர் இருந்த மன அமைதி, மன நிம்மதி, அகமகிழ்ச்சி, ஆரோக்கியம் இன்று இருக்கிறதா என்று சிந்தித்தால் இல்லை எனவே படும்.

வாகனங்கள் ஏற்படுத்தும் இரைச்சலும்; அவசர அவசரமான வாழ்க்கை முறைகளும்; அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பரபரப்பான ஓட்டமும்; பண சம்பாதிப்பதில் இருக்கும் அளவற்ற நாட்டமும்; போக்குவரத்து நெரிசலும்; வாகன விபத்துகளும்; பொதுநலமற்ற சுயநலமான வாழ்க்கையும் மனிதனை மனிதத்துவம் இல்லாமல் செய்துவிட்டது என்பதே உண்மை.

சென்ற தலைமுறையில் 70-80 வயது என இருந்த மனிதனின் சராசரி ஆயுள் இன்று 40-50 என குறைந்து போனதற்கு எவர் காரணமோ, எந்திரம் தான் காரணமோ?! இல்லை எந்திரம் போன்று வாழ்க்கையை பிடிக்க ஓடும் மனிதன் தான் காரணமோ!? இவையிரண்டையுமே காரணம் சொல்லலாம்.

மனிதனின் கண்டுபிடிப்புகள் அவனது ஆயுளை அவனறியாமலே குறைத்திருப்பது தான் நிஜம். உடல் அசையாமல் எந்திரங்களின் உதவி கொண்டு பணிகளை இலகுவாக முடிக்கின்ற ஒருவருக்கு வயிறு முன்னே தள்ளாமல் என்ன செய்யும்? Shower ன் புண்ணியத்தால் குளிப்பதற்கு கூட குனிந்து தண்ணீரை முகரத் தேவையில்லை இன்று. இப்படியே போனால் உடல் பருமனடையாமலா இருக்கும். இதனாலேயே வாயில் நுழையாத வியாதிகள் எல்லாம் மனிதனுள் நுழைந்து இறுதியில் மாரடைப்பும் வந்து ஆளே அம்பேல் ஆகிவிடுகிறார் நாற்பதுகளுக்குள்ளேயே.

இது ஒருபுறமென்றால் அவசர குடுக்கைகளால், அலப்பறை 'குடி'மகன்களால், அதிவேக வாகன ஓட்டிகளால், அஜாக்கிரதையால் ஏற்படும் வாகன விபத்துகள் எக்கச்சக்கம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் எண்ணற்றவே. மருத்துவத்தால் ஆயுள் நீட்டிக்கப்பட்டாலும் அது வேதிப் பொருட்களுக்கு நம்மை அடிமையாகவே வைத்து முன்னடத்தும்.

இன்று நாகரீகம் வளர்ந்திருக்கிறது ஆனால் மனிதனின் வாழ்நாள் குறைந்திருக்கிறது, நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன ஆனால் உடல் இயக்க நுட்பங்கள் தேய்ந்திருக்கின்றன. விஞ்ஞானத்தால் உலகம் ஒளிர்கிறது ஆனால் உள்மனதில் உபாதைகள் தான் ஒளிர்கின்றன. உலகம் ஒரு சிறிய கிராமமாகிப்போனது ஆனால் கிராமத்தான் தன் முகவரியை இழந்து நிற்கிறான். புல்வெளிகள் புல்டோசரால் புதுசாலைகளாக்கப்படுகின்றன, வயல்வெளிகள் வானுயர மாடமாளிகைகளாகி நிற்கின்றன.


எல்லாவிதத்திலும் உலகம் உயர்ந்திருக்கிறது - சரி தான்; கூடவே மனிதனும், மனிதத்தைப் போற்றி, சுயநலமற்று - பொதுநலம் கருதி, அவசரப்படாமல் - நிதானம் காத்து, எந்திரங்களை அளவாக பயன்படுத்தி வாழ்க்கையை வாழுவானெனின் வாழ்வில் உயர்வான், வாழ்நாளில் உயர்வான். 

November 26, 2013

அபாயகரமான மன அழுத்தமும் - ஜோனத்தான் ட்ரோட்டும்

‘மன அழுத்தம்’ என்கிற ‘STRESS’ என்பது இன்று மன நல மருத்துவத்துறையில் பரவலாக பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஒரு விஷயம் அல்லது வியாதியாக இருந்தாலும் சாமானிய மக்களிடையே மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன்.

மனஅழுத்தம் ஒருவரை வெகு மெளனமாக கரையான் சிதைப்பது போல் சிறிது சிறிதாக சிதைத்து விடும் கொடுமை நிறைந்ததுஎன்பது தான் பலரும் அறியாத உண்மை. வாழ்க்கையின் மீது வெறுப்பை விதைத்து உயிரையும் மாய்த்து விட ஏவும் விஷமேறியது மன அழுத்தம்.

மன அழுத்தத்தினால் அவதியுறும் ஒருவருக்கு மிக முக்கியமான தேவை அவரது உள்ளக்கிடக்கைகளை செவிமடுக்கும் ஒரு மனமும், ஓய்வும், தகுந்த ஆலோசனைகளுமே.

ஒருவரது உள்ளக்கிடக்கைகளை செவிமடுத்து கேட்கவும் நேரமில்லாத இன்றைய அவசர உலகத்தில் மன அழுத்தம் மிகக்கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் அறியப்படாத நிலையிலேயே உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure), நீரிழிவு, மனத்தளர்வு (Depression), மாரடைப்பு (Cardiac Arrest) போன்ற இன்ன பிற வியாதிகளும் மன அழுத்தத்தினால் ஒருவருக்கு வந்து சேரக்கூடிய அபாயமும் உண்டு.

பணம் சம்பாதிக்கின்ற அவசரத்தில் இன்று பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் அளவளாவுகிற நேரமும், அவர்களது மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தருணமும் கிடைப்பதில்லை. குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்க இயலவில்லை என்றாலும் அவர்களோடு அமர்ந்து உரையாடவும் நேரமற்று இருக்கும் பெற்றோரைத்தான் இன்று அதிகம் பார்க்க முடிகிறது.

வீடுகளில் துவங்குகின்ற இத்தகைய சூழ்நிலை பள்ளிக்கூடம், கல்லூரி, பணியிடங்கள் என அநேகமாக அனைத்து வட்டாரங்களிலும் வியாபித்திருப்பது தான் வியப்பிற்குரியது.

பெற்றோர்களின் கவனிப்பின்மை, திக்குமுக்காட வைக்கும் பாடத்திட்டங்கள், ஆசிரியர்களால் ஒதுக்கப்படுதல், நட்பு மற்றும் உறவுகளில் ஏற்படும் சிறு விரிசல்கள்,வேலைப்பளு, வேலைவாய்ப்பின்மை, ஏமாற்றங்கள், தோல்விகள் என மன அழுத்தம் பல ரூபங்களில் வரும் தன்மை வாய்ந்தது.

படிப்பு மற்றும் பணிகளில் கவனம் செலுத்தமுடியாமை, தேவையில்லாமல் எரிச்சல்/கோபப்படுதல், தனிமையை விரும்புதல், அதிக தூக்கம், தூய்மையின்மை என பல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தது மனழுத்தம்.

மன அழுத்தத்திற்கு பலிகடா ஆன சமீபத்திய பிரபலம் ‘ஜோனத்தான் ட்ரோட்’ என்கிற இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டக்காரர். ட்ரோட் ஆஸ்திரேலியாவில் அவரது ஆட்டத்தை தொடர முடியாமல் தற்போது தாய்நாட்டிற்கு திரும்பி சென்றிருக்கிறார்.

குடும்பத்தினரின் அரவணைப்பும், பாசமும், கவனிப்பும், ஓய்வுமே இப்போது அவருக்கு தேவையாயிருக்கிறது. ஓரிரு மாதங்களாகவே ட்ரோட் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

மன அழுத்தத்தினால் அவதியுறும் எவர் ஒருவருக்கு அன்பும். அரவணைப்பும், ஓய்வும் மறுக்கப்படுகின்றதோ அவர் தற்கொலையும் செய்து விட துணிந்து விடுவது தான் மன அழுத்தத்தின் உச்சகட்ட விளைவு.

மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டறிதல் உயிர்பலியை தவிர்க்கும் என்பதால் பணம் சம்பாதிக்கும் அவசரத்திலும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மனம் விட்டு பேசுதல் நம் மனதை இலகுவாக்கும். படிப்பு-வீடு; வேலை-வீடு என்றிருக்காமல், விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு அருகிலிருக்கும் பூங்காக்களுக்கேனும் போய்வருவது மன அழுத்தத்தை குறைக்கும். அதோடு பேராசைக் கொள்ளாமல், இருப்பதை வைத்து நிறைவாக வாழ்வதும் மன நிறைவைத் தரும்; மன அழுத்தம் நீக்கும்.

என்றும் அன்புடன்,

எட்வின்





November 21, 2013

பதிவுலகம் - விக்கிபீடியா - தினகரன் - நான் - Plagiarism

பலரும் கருதுவது போன்று எழுதுவது அத்தனை எளிதல்ல. எழுதுவதற்கேற்ற சூழ்நிலையும், மனோநிலையும் எளிதாக அமைந்து விடுவதில்லை. எனினும் ஒருவர் எழுதுவதை அதற்குரிய அங்கீகாரமில்லாமல் மற்றொருவர் அப்படியே நகலெடுத்து அவர்களே எழுதியதைப் போன்ற ஒரு ,மாயபிம்பத்தை ஏற்படுத்துவதில் என்ன தான் சிறப்பிருக்கிறதோ தெரியவில்லை. இதனை ஆங்கிலத்தில் Plagiarism என்கிறார்கள்.

சில தினங்கள் முன்பு எதேச்சையாக தினகரன் இணையதளத்தில் சச்சினைக் குறித்த கட்டுரை ஒன்றை "சச்சின் பற்றி சில சுவாரசிய தகவல்" என்ற தலைப்பில் வாசிக்க நேரிட்டது, ஆரம்பத்திலேயே அந்த எழுத்தின் நடை, ஐந்து வருடங்கள் முன்னர் இந்த வலைப்பூவில் நான்  எழுதியது தான் எனப் புரிந்தது. கடைசி முற்றுப்புள்ளி வரை படித்து விட்டு உறுதியும் செய்து கொண்டேன்.

இத்தனைக்கும் அது நான் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ஒரு கட்டுரை. இதே கட்டுரையை தமிழ் விக்கிபீடியாவும் வெளியிட்டிருக்கிறார்கள் எனது மொழிபெயர்ப்புக்கு அளிக்க வேண்டிய தக்க மரியாதையை அளித்து. ஆனால் தினகரனோ எனது வலைப்பூவின் சுட்டியையோ அல்லது தமிழ் விக்கிப்பீடியாவின் சுட்டியையோ குறிப்பிடாமல் அவர்கள் எழுதியது போன்றொரு கானல்நீரை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

எழுத்திற்குரிய ஊக்குவிப்பும், அங்கீகாரமும் இருந்தால் அது எழுதுபவரை இன்னும் மெருகேறச் செய்யும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அது இல்லாமல் போகும் போது எழுதுபவர் மனமுடைந்து போவது சகஜமே.

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எழுதுவதில் சிக்கல்கள் இருந்ததை மறுப்பதிற்கில்லை. எழுத்தாளன் என்று சொல்வதற்கில்லை. இத்தனை காலமும் முடிந்ததை எழுதி வந்திருக்கிறேன், மனதில் பட்ட விஷயங்களை எழுதியிருக்கிறேன், சில மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறேன், பிற இணையதள தகவல்களை பகிர்ந்திருக்கிறேன்..

இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் ஆவல். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எழுத்துக்களுக்கும் எழுத்துகளுக்கும் என்றும் மதிப்பிருக்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகளினூடே உணரமுடிகிறது.

எழுத்துக்கள் மும்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எழுத்துகளை முகர்வோர் மத்தியில். ஒரே எழுத்தை சிலர் சாதகமாகப் பார்க்கின்றனர், சிலர் பாதகமாக பார்க்கின்றனர் சிலர் நடுநிலையாகப் பார்க்கின்றனர்.

இம்மூன்று விதமான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது மனோபாவம் தான் ஒரு எழுத்தாளனுக்கு அழகு. எழுதுகிற அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

November 16, 2013

சச்சின் எனும் ஒரு எளிமையான மனிதருக்கு நன்றி

24 வருடங்கள் முன்பு கராச்சியில் நவம்பர் 15 அன்று தனது 16 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பித்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கரின் பயணம் அதே நவம்பர் 16 அன்று முடிவுக்கு வந்தது அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் முடிவிற்கு கனக்கச்சிதமாக எழுதப்பட்ட வரலாறு எனலாம். சச்சினின் சகாப்தம் அவரது சொந்த மண்ணிலேயே முடிவுக்கு வருவது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கின்ற மரியாதை என கூற முடியும். இது போலொரு மரியாதை சவுரவ், டிராவிட், லக்ஷ்மண் இவர்களுக்குக் கூட அளிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் இங்கு. 


ஏப்ரல் 24 ல் பிறந்த சச்சின், 24 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் 200 டெஸ்ட் ஆட்டங்கள், 463 ஒரு நாள் ஆட்டங்கள், 34347 சர்வதேச ஓட்டங்கள், 100 சதங்கள், 164 அரை சதங்கள், 200 விக்கெட்கள் என அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு அளித்த பங்கினை இந்த தலைமுறையை சார்ந்த எவராலும் மறக்கவியலாது. அவரது சாதனைகளை பட்டியலிட இந்த ஒரு பக்கம் போதாது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்ட தர வரிசையில் முதலிடம், உலகக் கோப்பை வெற்றி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் அதிக ஓட்டங்களை எடுத்தவர், அதிக சதங்களை குவித்தவர், உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ஓட்டங்களை அடித்தவர், எந்த அணியினரும் பின்வாங்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிக அதிக சதங்களை எடுத்தவர், ரஞ்சி, துலீப், இரானி ஆட்டங்களில் முதல் ஆட்டங்களிலேயே சதங்களை அடித்தவர். பதினைந்தாவது வயதில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை செய்தவர்.

டிராவிட் உடன் சேர்ந்து 1999 ல் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 331 ஓட்டங்கள் குவித்தவர், சவுரவ் கங்குலியுடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 22 சதங்களை எடுத்தவர். தொடர்ந்து 185 ஒரு தின ஆட்டங்களில் ஆடியவர் என எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின்.

இன்னும் எழுதி செல்லலாம் சச்சினின் பெருமைகளை. இத்தனை சாதனைகளை செய்திருந்தாலும் சச்சின் இன்னும் நம் உள்ளத்தில் உயர்ந்து நிற்பது அவரது சாதனைகளால் அல்ல அவரது எளிமையாலும், தன்னடக்கத்தாலுமே.


எத்தனையோ சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரகள் இந்தியாவிலும் பிற அணிகளிலும் இருந்திருக்கிறார்கள், எனினும் அனைவராலும் மதிக்கப்பட்ட, மரியாதை அளிக்கப்பட்ட, கவுரவப்படுத்தப்பட்ட ஒரே வீரர் சச்சினாகத்தான் இருக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டு பிராட்மேன், லாரா, ஷேன்வார்ன், வாசிம் அக்ரம் போன்றோர் சச்சினுக்கு செய்த மரியாதையும் அவருடன் ஆடிய சவுரவ் கங்குலி, டிராவிட் போன்றோர் நேரிலேயே வந்து மரியாதை செய்வதும். பிற விளையாட்டு நட்சத்திரங்களான லூயிஸ் ஹாமில்டன், ரோஜர் ஃபெடரர், மைக்கேல் ஷுமாக்கர் போன்றோர் இணையதளங்கள் மூலமாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதுமே.

கிரிக்கெட் இல்லாத ஒரு வாழ்வை சச்சினால் நினைத்துப் பார்ப்பது கடினம் தான் எனினும் இந்திய கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து சச்சின் பங்களிப்பார் என எதிர்பார்க்கலாம்.

சச்சின் இல்லாத கிரிக்கெட்டை பார்ப்பது எளிது ஆனால் கிரிக்கெட் இல்லாத சச்சினைப் பார்ப்பது கடினமே என கூறிய சச்சினின் மனைவி அஞ்சலியின் ஆதங்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சச்சினின் வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது விருப்பத்தோடு எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் நாம் வெற்றி பெற முடியும் என்பது தான்.

சச்சினை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்த, ஊக்குவித்த அவரது பெற்றோர்கள், சகோதரர் அஜித் டெண்டுல்கர், பயிற்சியாளர் அச்ரேக்கர், ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியை ராகினி தேசாய் இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சிறுவர்களை அவர்களுக்கு விருப்பமான கலைகளில் அல்லது விளையாட்டுகளில் அவர்களுக்கான முழு சுதந்திரத்தை அளித்து அவர்களை ஊக்குவித்தால் அவர்களும் நாளைய சச்சின்களே.

October 18, 2013

தாயும் நானே தங்க இளமானே Vs தேவனே நான் உமதண்டையில்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 16/10/2013 தேதி ஒளிபரப்பில் தற்செயலாக மதுமிதா பாடிய "தாயும் நானே தங்க இளமானே" என்ற பாடலை கேட்க நேர்ந்தது. பாடலின் ஆரம்பத்திலேயே இந்த மெட்டு "தேவனே நான் உமதண்டையில்" என்ற கிறிஸ்தவ பாடலின் மெட்டைப் போலல்லவா இருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எனினும் முழுப்பாடலையும் கேட்டு விட்டு ஒரு தீர்மானத்திற்கு வருவோம் என காத்திருந்தேன்; முழுப்பாடலும் முடிந்தது... சந்தேகமேயில்லாமல் 'தேவனே நான்' பாடலின் மெட்டும் 'தாயும் நானே' பாடலின் மெட்டும் ஒன்றே என தெளிவாகியிருந்தது..

பின்னர் கூகுளில் "தாயும் நானே" பாடலின் முழு விவரங்களை தேடினேன். 1982 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் ஜானகி அம்மையார் அவர்கள் ரஜினி காந்த் நடித்த "எங்கேயோ கேட்ட குரல்" என்ற திரைப்படத்திற்காக பாடிய பாடல் என்ற விவரம் கிடைத்தது. இதே மெட்டில் பி. சுசீலா அம்மையார் அவர்கள் குரலில் "இந்த மங்களம் செழிக்கவே" என்ற கிறிஸ்தவ திருமணப்பாடலும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவனே நான் உமதண்டையில் பாடல் மதுரை ஜில்லா பகுதிகளில் ஊழியம் செய்து வந்த போதகர். சந்தியாகு என்பவரால், Nearer, my God, To Thee என்ற ஆங்கிலப்பாடலைத் தழுவி எழுதப்பட்டது. எழுதப்பட்ட ஆண்டின் விவரம் தெரியவில்லை.

இவ்விதமாக கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த காலகட்டங்களில் பாடல்கள் நமது பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு தான் மெட்டமைக்கப்பட்டன. தஞ்சையை சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரி என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ண பிள்ளை என்பவரும்  பல கிறிஸ்தவ கீர்த்தனைகளை  எழுதி இருக்கிறார்கள்.  அவற்றை பெரும்பாலும் இசைத்தட்டில் பாடியவர்கள் நடராஜ முதலியார் மற்றும்  ஜிக்கி அவர்கள். சில பாடல்களை பி.சுசீலா அவர்களும் பாடியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவரான எல்.ஆர்.ஈஸ்வரி (லூர்து மேரி ராஜேஸ்வரி ஈஸ்வரி) பாடிய அம்மன் பக்தி பாடல்கள் மிக பிரபலம். இந்துவான ஜிக்கி பாடிய கிறிஸ்தவ பாடல்கள் மிக பிரபலம்.  (சுசீலா அவர்கள் பாடிய எல்லா ஹிந்து, கிறிஸ்தவ,   பக்தி பாடல்களும் பிரபலம்.).

ஆனால் இன்று மதத்தின் பெயரால் அடித்துக்கொண்டு சாவதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது, மனிதன் என்று மதத்தை விட்டு மனிதத்தை தழுவுகிறானோ அன்று தான் இம்மண்ணுலகம் மகிழும்.

தேவனே நான் உமதண்டையில் பாடலும், தாயும் நானே பாடலும் "துஜாவந்தி" ராகத்தில் மெட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவையிரண்டில் எந்த பாடல் முதலில் மெட்டமைக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி: விஜய் தொலைக்காட்சி
விக்கிப்பீடியா


October 13, 2013

அகங்காரம் அநாகரீகம்

அமெரிக்கால செத்தாலும்
ஆப்பிரிக்கால செத்தாலும்

அண்டார்டிக்கால செத்தாலும்
ஆய்(ஐ)ரோப்பால செத்தாலும்

பாலைவனத்திலயே செத்தா கூட
பொணம் பொணம் தான

அமெரிக்கால செத்தாலும் பொணம் தான
அமிஞ்சக்கரைல செத்தாலும் பொணம் தான
அமெரிக்கா பொணம்னு சொல்லுவாங்களா - இல்ல
அமிஞ்சக்கரை பொணம்னு தான் சொல்லுவாங்களா

அப்புறமென்ன - நான்
அமெரிக்கால இருக்கேன் - நான்
ஆய்(ஐ)ரோப்பால இருக்கேன்னு
அசிங்கம் பிடிச்ச போல பேச்சு;
அவசியமா இதெல்லாம்!

அகங்காரத்த நான் எனும்
அகங்காரத்த என்னைக்கு
அழிக்கிறியோ அன்னைக்கு தான்
அகம் மகிழும்
அண்டமும் மகிழும்
ஆண்டவனும் மகிழுவான்

September 21, 2013

காகித கிடக்கைகள்

உணரப்படாத விசும்பல்கள்
கண்கள் காணாத கிறுக்கல்கள்
காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன
கடற்கரையில் சுண்டலுக்குப் பின்னர்
எவரோ எவருக்கோ எழுதிய கடிதம்

September 10, 2013

பெண்ணியம்? ஒரு கேள்விக்குறி

மின்னும் வளையலும்
ஜொலிக்கும் சங்கிலியும்
முகவுரை முடியுமுன்
முடிவுரை ஆகிப் போகின்றன
கடன் கொடுத்தவள் வரவே
முகூர்த்த வீட்டில்;

தாலியேறியதும் மூளியாகிறாள்
தான் பெற்ற இரவலுக்காக!
திருமணத்திற்கு வந்தவள்!!

July 15, 2013

தந்தி சேவைகள் - வரலாறு ஆகியது

ஜூலைத்திங்கள் பதினான்காம் தேதியோடு தந்தி சேவைகள் நிறுத்தப்படும் என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. மழையென்றும், வெயிலென்றும் பாராமல் தங்களது பணியை ஒரு சேவையாக செய்த ஒவ்வொரு தபால்துறை ஊழியனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.








Related Posts with Thumbnails