November 26, 2013

அபாயகரமான மன அழுத்தமும் - ஜோனத்தான் ட்ரோட்டும்

‘மன அழுத்தம்’ என்கிற ‘STRESS’ என்பது இன்று மன நல மருத்துவத்துறையில் பரவலாக பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஒரு விஷயம் அல்லது வியாதியாக இருந்தாலும் சாமானிய மக்களிடையே மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன்.

மனஅழுத்தம் ஒருவரை வெகு மெளனமாக கரையான் சிதைப்பது போல் சிறிது சிறிதாக சிதைத்து விடும் கொடுமை நிறைந்ததுஎன்பது தான் பலரும் அறியாத உண்மை. வாழ்க்கையின் மீது வெறுப்பை விதைத்து உயிரையும் மாய்த்து விட ஏவும் விஷமேறியது மன அழுத்தம்.

மன அழுத்தத்தினால் அவதியுறும் ஒருவருக்கு மிக முக்கியமான தேவை அவரது உள்ளக்கிடக்கைகளை செவிமடுக்கும் ஒரு மனமும், ஓய்வும், தகுந்த ஆலோசனைகளுமே.

ஒருவரது உள்ளக்கிடக்கைகளை செவிமடுத்து கேட்கவும் நேரமில்லாத இன்றைய அவசர உலகத்தில் மன அழுத்தம் மிகக்கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் அறியப்படாத நிலையிலேயே உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure), நீரிழிவு, மனத்தளர்வு (Depression), மாரடைப்பு (Cardiac Arrest) போன்ற இன்ன பிற வியாதிகளும் மன அழுத்தத்தினால் ஒருவருக்கு வந்து சேரக்கூடிய அபாயமும் உண்டு.

பணம் சம்பாதிக்கின்ற அவசரத்தில் இன்று பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் அளவளாவுகிற நேரமும், அவர்களது மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தருணமும் கிடைப்பதில்லை. குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்க இயலவில்லை என்றாலும் அவர்களோடு அமர்ந்து உரையாடவும் நேரமற்று இருக்கும் பெற்றோரைத்தான் இன்று அதிகம் பார்க்க முடிகிறது.

வீடுகளில் துவங்குகின்ற இத்தகைய சூழ்நிலை பள்ளிக்கூடம், கல்லூரி, பணியிடங்கள் என அநேகமாக அனைத்து வட்டாரங்களிலும் வியாபித்திருப்பது தான் வியப்பிற்குரியது.

பெற்றோர்களின் கவனிப்பின்மை, திக்குமுக்காட வைக்கும் பாடத்திட்டங்கள், ஆசிரியர்களால் ஒதுக்கப்படுதல், நட்பு மற்றும் உறவுகளில் ஏற்படும் சிறு விரிசல்கள்,வேலைப்பளு, வேலைவாய்ப்பின்மை, ஏமாற்றங்கள், தோல்விகள் என மன அழுத்தம் பல ரூபங்களில் வரும் தன்மை வாய்ந்தது.

படிப்பு மற்றும் பணிகளில் கவனம் செலுத்தமுடியாமை, தேவையில்லாமல் எரிச்சல்/கோபப்படுதல், தனிமையை விரும்புதல், அதிக தூக்கம், தூய்மையின்மை என பல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தது மனழுத்தம்.

மன அழுத்தத்திற்கு பலிகடா ஆன சமீபத்திய பிரபலம் ‘ஜோனத்தான் ட்ரோட்’ என்கிற இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டக்காரர். ட்ரோட் ஆஸ்திரேலியாவில் அவரது ஆட்டத்தை தொடர முடியாமல் தற்போது தாய்நாட்டிற்கு திரும்பி சென்றிருக்கிறார்.

குடும்பத்தினரின் அரவணைப்பும், பாசமும், கவனிப்பும், ஓய்வுமே இப்போது அவருக்கு தேவையாயிருக்கிறது. ஓரிரு மாதங்களாகவே ட்ரோட் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

மன அழுத்தத்தினால் அவதியுறும் எவர் ஒருவருக்கு அன்பும். அரவணைப்பும், ஓய்வும் மறுக்கப்படுகின்றதோ அவர் தற்கொலையும் செய்து விட துணிந்து விடுவது தான் மன அழுத்தத்தின் உச்சகட்ட விளைவு.

மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டறிதல் உயிர்பலியை தவிர்க்கும் என்பதால் பணம் சம்பாதிக்கும் அவசரத்திலும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மனம் விட்டு பேசுதல் நம் மனதை இலகுவாக்கும். படிப்பு-வீடு; வேலை-வீடு என்றிருக்காமல், விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு அருகிலிருக்கும் பூங்காக்களுக்கேனும் போய்வருவது மன அழுத்தத்தை குறைக்கும். அதோடு பேராசைக் கொள்ளாமல், இருப்பதை வைத்து நிறைவாக வாழ்வதும் மன நிறைவைத் தரும்; மன அழுத்தம் நீக்கும்.

என்றும் அன்புடன்,

எட்வின்





No comments:

Post a Comment

Related Posts with Thumbnails