December 13, 2014

உண்மைகளற்ற கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டமும் - புரிதலும்


கிறிஸ்துமஸ் என்றதும் கிறிஸ்து என்ற மனிதர் நினைவிற்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் கொண்டாட்டங்களும், அலங்காரங்களும், விடுமுறைக்காலமும் நினைவில் வந்து செல்வதை மறுக்கவியலாது.

பிறப்பினால் கிறிஸ்தவன் என்பதால் சிறுவயதில் அந்த வயதிற்கான குதூகலமும், சந்தோஷமும், விடுமுறைக்கால மகிழ்ச்சியும் என்னையும் ஆக்கிரமித்திருந்தன. பதின்ம வயதின் பின்னாட்களில் கிறிஸ்துமஸும் அதனைச் சார்ந்த கொண்டாட்டங்களும் ஏன் என்ற வினா எழும்பத் தொடங்கியிருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை கொண்டாட்டங்களில் அதிக நாட்டம் கொண்டிருக்கவில்லை. பணமிருக்கிறவன் ஆடம்பரமாய் கொண்டாடுவதும், ஒன்றுமில்லாதவன் கையேந்துவதுமான காட்சிகள் என்னை யோசிக்க வைத்தன.

சிறுவயதில் டிசம்பர் மாத விடுமுறைக்காலமென்றால் புது ஆடை தைப்பதற்காக அவரவருக்கு விருப்பப்பட்ட துணி எடுக்க குடும்பமாக செல்வது வழக்கம். அந்த சமயங்களில் பல முறை நான் வருவதாயில்லை என தவிர்த்திருக்கிறேன். அம்மா எது எடுத்து வந்தாலும் அதனை தைத்துப் போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.

பதின்ம வயதில் பெற்றோர்களின் அறிவுரைப்படி விவிலியத்தை சற்று ஆழ்ந்து வாசிக்க நேரிட்டது. அது இன்றளவும் பல தெளிவுகளைப் பெற உதவுவதையும், பல விஷயங்களைக் கற்றுத் தந்திருப்பதையும் மறுப்பதிற்கில்லை.

டிசம்பர் மாத முதல் வாரத்திலேயே பலகாரங்கள், இனிப்பு பதார்த்தங்களை தயார் செய்யும் பணிகளை வீட்டில் ஆரம்பித்து விடுவார்கள். அவற்றில் காண்பித்த ஆர்வத்தை கூட கிறிஸ்துமஸ் குடில், மரம், நட்சத்திர விளக்கு போன்றவற்றில் காண்பித்ததில்லை.

வண்ண காகித கொடி கட்டுவதிலும், வாழ்த்து அட்டைகள் சேகரிப்பதிலும் ஆர்வமிருந்ததை மறுப்பதிற்கில்லை.  வீட்டில் மற்றவர்களுக்கு இருந்த கொண்டாட்ட மனோநிலையில் கால்பகுதி கூட எனக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

டிசம்பர் 25 ல் தான் கிறிஸ்து பிறந்தாரா என்பது உள்ளிட்ட பல காரணங்கள் தான் கொண்டாட்டங்களில் எனக்கு ஆர்வமில்லாமல் போக காரணம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

சில வருடங்கள் முன்னர் வரை  அலங்காரத்திற்கென்று, கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம் என வீண் செலவுகளை நானும் செய்து வந்திருக்கிறேன் என்பதை மறுப்பதற்கில்லை.

கிறிஸ்துவில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், ஆடம்பர கிறிஸ்தவ கொண்டாட்டங்களில் எனக்கு இன்றுவரை நாட்டமில்லை. ஏழ்மையின் கோலமாய் பிறந்தார் என்று பிரசிங்கித்து விட்டு ஏழைகளைக் கண்டுகொள்ளாத கிறிஸ்தவ சமூகம் இன்றளவும் இருப்பதை மறுக்கவியலாது.

இயேசு கிறிஸ்து டிசம்பரில் தான் பிறந்தார் என்பதற்கு விவிலியத்தில் ஆதாரம் ஏதுமில்லை. அதோடு பனி பொழியும் குளிர் நிறைந்த இரவில் பிறந்தார் என்பதற்கும் விவிலியத்தில் ஆதாரம் இல்லை.

அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என லூக்கா 2:8 ல் எழுதியிருக்கிறபடி  வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் பார்த்தால் அது குளிர் நிறைந்த இரவாக இருக்கும் வாய்ப்புகள் இல்லை; காரணம் யூதேயாவில் பனிப்பொழிவு அதிகமாக  இருக்கும் டிசம்பர் மாதத்தில்  ஆடு மேய்க்கிறவர்கள் வயல்வெளிகளில் மந்தைகளைக் காக்கும் வழக்கம் கொண்டிருப்பதில்லை.

அதோடு இயேசு பிறந்த அந்த காலகட்டத்தில் குடிமதிப்பு என்ற கணக்கெடுப்பு எழுதப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படியான ஒரு கணக்கெடுப்பு கடுங்குளிர் காலத்தில் சாத்தியமில்லை என்கிறார்கள் வேத வல்லுனர்கள்.

இயேசு பிறந்த  தினத்தை கணக்கிடுகையில் லூக்கா முதல் அதிகாரத்தில் எழுதியிருக்கிற படி மரியாள் கர்ப்பந்தரித்த போது யோவானின் தாயாரான  எலிசபெத் ஆறு மாதம் கர்ப்பவதியாக இருந்திருக்கிறார், அந்த காலகட்டத்தை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகையில்  செப்டம்பர் இறுதி வாக்கில் இயேசு பிறந்திருக்கக்கக்கூடும் என்று கணிக்கிறார்கள்

இயேசுவின் பிறப்பு கடுங்குளிர் நேரத்திலோ, பனிப்பொழிவின்  போதோ இல்லை என்பது விவிலியத்தில் தெளிவாக இருக்க காலங்காலமாக கிறிஸ்து குளிரின் நடுவே பிறந்தார் எனவும், டிசம்பர் 25 தான் பனிப்பொழுவின் உச்சமாக இருப்பதால் அந்த தினத்தில் தான் அவர் பிறந்ந்திருக்கக்கூடும் எனவும் போதித்து வருபவர்களை என்னவென சொல்ல?

இது போன்ற வழிபாடுகளையும், கொண்டாட்டங்களையும் பாகன் வழிபாடு அல்லது பேய் வழிபாடு என்கிறார்கள். இது போன்ற கற்பனை வழிபாடுகள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்னரும் இருந்து வந்திருக்கிறது என விவிலியம் தெளிவாக கூறுகிறது.

இயேசு கிறிஸ்துவே இது போன்ற கற்பனைக் கதைகளை சாடியிருப்பதாகவும் வேதாகமத்தில் சான்றுகள் உண்டு. மத்தேயு 15:9 ல் மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என இயேசு ஆலயத்தின் மூப்பர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறுகிறார்.

புதிய ஏற்பாட்டில் இவ்விதம் எழுதியிருக்கிறதென்றால், பழைய ஏற்பாட்டில் பாகன் வழிபாடுகளையும் கற்களையும், மண்ணையும், மரங்களையும் வழிபடுவதை எதிர்த்து பல இடங்களில் எழுதியிருப்பதைக் காணலாம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எரேமியா 10:2-4 வரையான வசனங்கள் மிகத் தெளிவாக பாகன் மார்க்கத்தை சாடுகிறது. மரத்தை வெட்டி அதை பொன்னினாலும், வெள்ளியினாலும் அலங்கரிக்கிறார்கள் என்றும், அது வீணென்றும், அத்தகைய ஜனங்களின் வழிபாடு வீணாயிருக்கிறது எனவும் எழுதப்பட்டிருக்கிறது.

பசுமையான மரத்தை வெட்டி அதை அலங்கரித்து அது கீழே விழாமலிருக்கும் படி அதை கட்டி வைப்பது பாகன் சமூகத்தில் வழக்கம். குளிர்காலங்களில் இப்படி வைப்பதனால் அந்த மரம் அதிக நாட்கள் வாடாமலும் இருக்கும். இதையே கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரில் இன்றளவும் கிறிஸ்தவர்கள் சம்பிரதாயமாக செய்து வருகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் தவறென்று கிறிஸ்தவர்களுக்கு இப்போதோ இனிமேலோ எவரும் சொல்லத் தேவையில்லை; இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்னரே எரேமியா தீர்க்கத்தரிசி எப்போதோ சொல்லியிருப்பதாக வேதாகமம் குறிப்பிடுகிறது. (எரேமியா 10:2-4)

இவற்றினிடையில் பரிசுப்பொருள் பரிமாற்றம் என்பது வெறொருமாதிரியான வியாபாரமாக்கல். பணமிருக்கிறவர்கள் தங்களுக்கிடையே பரிசுப்பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்வதும், வாழ்த்து அட்டைகள் பரிமாறுவதும், கிறிஸ்துமஸ் மரங்கள் வாங்குவதும், பட்டாசு விற்பனையும், சான்டா கிளாஸ் ஆடை என்ற பெயரில் அதை வாங்குவதும் வியாபாரிகளுக்கு கொண்ட்டாட்டம்.

இவற்றினிடையில் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகி வருவதும் தொடர்கிறது. 

கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமென விவிலியம் உரைக்கவில்லை; அலங்காரம் செய்து ஆடம்பரமாக புசித்தும் குடித்தும் மகிழ்ந்திருங்கள் எனவும் விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. கிறிஸ்துமஸ் மரம் வைத்து, சான்டா கிளாசை வரவேற்று போஜனம் வழங்குங்கள் எனவும் வசனங்கள் இல்லை.

இப்படியாக வேதாகமம் உரைக்காதவற்றை பாகன் வழிபாடுகளின் வழியில் தொடர்ந்து பின்பற்றி வரும் கிறிஸ்தவர்களிடம் இவற்றையெல்லாம் சொன்னால் ‘போடா போக்கிரிப்பயலே’ உனக்கு  வேறு வேலையில்லை, என கேலியும் கிண்டலும் தான் செய்யப்போகிறார்களெனினும் இவற்றை/உண்மையை/ சத்தியத்தை பதிவு செய்ய வேண்டியது எனது கடமையாயிருக்கிறது.

கிறிஸ்து பிறந்ததில் உண்மையாகவே மகிழ்ச்சி கொண்டிருப்பவர்கள் பணமிருக்கிறவனுக்கு பரிசுப்பொருட்கள் வாங்கித்தருவதை விட்டு விட்டு, அன்றாடம் ஒருவேளை ஆகாரத்திற்கு பிரயாசப்படுகிறவனின்  தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

புத்தாடை வாங்குபவர்கள், பல்லாண்டுகளாக பழையவற்றையே அணிந்து வரும் பரம ஏழைக்கு புதிய ஆடை வாங்கித்தந்து மகிழுவார்கள்.இதைத்தான் விவிலியமும் உரைக்கிறது, ஆனால் கிறிஸ்தவர்கள் இன்றும் செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகத்தானிருக்கிறார்கள் என்பது தான் எனது வருத்தம்.

கிறிஸ்துமஸ் குறித்த தவறான புரிதல்களையும், கொண்டாட்டங்களையும் பார்க்கையில் “What is popular is not always right and what is right is not always popular“ என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது.

November 30, 2014

RIP Phil Hughes

நவம்பர் 30, இன்று 26 ஆவது வயதைக் கண்டிருக்க வேண்டிய பிலிப் ஜோயல் ஹ்யூஸ் இன்று இல்லை. 

நவம்பர் 24 ஆம் தேதி இடது கழுத்தில் கொண்ட அடியால் ஹ்யூஸ் மைதானத்தில் மயங்கி விழுந்த போது அது அத்தனை பெரிய ஆபத்தாக எனக்கு தெரியவில்லை. அவர் மரித்துப் போனார் என்ற தகவல் செல்ஃபோனின் திரையில் ப்ரேக்கிங் நியூஸ் என மின்னிய அந்த ஒரு நிமிடம் ஆடிப்போனேன். இந்த தகவல் தவறாக வெளியிடப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் கூட என்னுள் எழுந்தது.

ஹ்யூஸ் காயமடைந்த 24 ஆம் தேதி பெரும்பாலான ஊடகங்கள் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாகதான் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால் காணொளிகள், பந்து அவரது இடது கழுத்தில் தான் காயம் ஏற்படுத்தியிருந்ததை உறுதி செய்தன. இந்த காரணம் தான் அவர் மீண்டு வரக்கூடும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்திருந்தது.       

ஆனால் நாம் ஒன்று நினைக்க நிகழ்பவை வேறொன்றாக இருப்பது போல், ஹ்யூஸ் கழுத்தில் வாங்கிய காயம் அவரது உயிரைப் பறிக்கும் வீரியம் கொண்டிருந்திருக்கிறது. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் வெர்ட்டப்ரல் இரத்தநாளம் (Vertebral Artery) சிதைக்கப்பட்டதால் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு அறுவைசிகிச்சைக்குப் பின்னரும் சரியான முடிவுகளை தராதபடியால் ஹ்யூசின் வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டியதாகிப் போனது.

பிலிப் ஹ்யூஸ் ஆரம்பத்தில் ரக்பி ஆட்டங்களில் ஆர்வம் காட்டினாலும், பின்னர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி தனது 20 ஆவது வயதில் ஆஸ்திரேலியாவிற்காக ஆட தொடங்கியவர். தான் ஆடிய முதல் ஒருதின போட்டியிலேயே சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையும், டெஸ்ட் ஆட்டங்களில் இளவயதிலேயே இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்தவர் என்ற பெருமையும் பெற்றவர்.

செஃபீல்ட் ஷீல்ட் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெறுகின்ற ஆட்டமொன்றில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக ஆடிய போது சீன் அபோட் என்ற மற்றொரு ஆஸ்திரேலியர் எறிந்த பந்து செய்த மாயமான காயம் தான் இத்தனைக்கும் வித்திட்டது. கிரிக்கெட்டில் இத்தகைய காயங்கள் சகஜம் தான் எனினும், ஹ்யூஸ் அடைந்த காயம் அவரது உயிரைப் பறிக்குமளவு ஆபத்தாகிப் போனது தான் மொத்த கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

ஹ்யூஸிற்காக வருந்தும் நிலை ஒருபுறமிருந்தாலும் பந்து வீசிய சீன் அபோட்டிற்கு ஆறுதலும், மனோரீதியான வழிநடத்துதலும் மிக அவசியம்; அதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்து வருவது பாராட்டத்தக்கது.


ஹ்யூஸ் இடது கை ஆட்டக்காரரக இருந்தாலும் அவர் ஆடும் விதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர் மைக்கேல் க்ளார்க்கின் ஆட்டத்தை ஒத்திருக்கும்; குறிப்பாக அவரது கவர் டிரைவ் மற்றும் ஆஃப் டிரைவ். 


கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சார்பாக இரங்கல் செய்தியை பகிர்ந்து கொள்ள வந்த  அணித்தலைவர் மைக்கேல் க்ளார்க் மனதுடைந்து விம்மியது அவர்கள் எவ்விதமான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. கண்முன்னர் நிகழ்ந்த இவ்விழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு ஈடு செய்யமுடியாதது.

408 63* 64 இந்த எண்கள் ஹ்யூஸ் நினைவிருக்குமட்டும் நினைவு கூறப்படும்.

408 - ஆவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர்;
63* அவரது  கடைசி ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த ஓட்டங்கள்;
64 - அவரது ஒருதின ஆட்டத்தில் அவர் அணிகின்ற மேற்சட்டையின் எண் (ஹ்யூசை கவுரவிக்கும் வண்ணம்  இந்த எண் ஓய்வு பெற்றதாக கிரிக்கெட்  ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது)

நவம்பர் 30, இன்று 26 ஆவது வயதைக் கண்டிருக்க வேண்டிய பிலிப் ஜோயல் ஹ்யூஸ் இன்று இல்லை; அவரது மரணம் பல பாடங்களை நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறது; வாழ்க்கைச் சக்கரம் எக்கணம் நிற்குமென எவரும் அறுதியிட்டு கூற முடியாது. முடிந்த வரை நன்மையானதை மட்டுமே செய்வோமென்றால் நாளை நாமும் இங்கு சில நன்மையானவைகளை விதைத்தோம் என்ற பெயராவது நிலைக்கும்.



நன்றி: க்ரிக்இன்ஃபோ
Images Courtesy: dailymail.co.uk



October 02, 2014

தலைகுனிய வைக்கும் அரசியல், கிரிக்கெட், சினிமாத் துறையினர்

பணத்திற்காகவும், புகழிற்காகவும் மானத்தையும்  கூட பொருட்படுத்தாத ஒரு சமுதாயத்துடன் வாழ்ந்துவருகிறோம் என்பதற்கு கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே சாட்சி. 

முன்னாள் முதல்வரின் கைதும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் இதுவா நம் தமிழகம் என்ற கேள்வியை என்னில் ஏற்படுத்தியிருந்தன. பேருந்துகளில் கல் வீசியும், தீயிட்டும்; அப்பாவிகளின் சாலையோர கடைகளை சேதமாக்கியும்; பேருந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தும் தங்களின் விசுவாசத்தை தலைமைக்கும், ஊடகங்களுக்கும் காண்பித்துக் கொண்டிருந்தனர்  (இவை அனைத்தையும் நிகழ்ந்த சம்பவங்கள் என்பதை விட நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் என குறிப்பிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும்) 

இத்தகைய செயல்கள் கோபத்தில் நிகழ்த்தப்பட்டவை என்பது ஒருபுறமிருந்தாலும் பிறர் கவன ஈர்ப்புக்காக குறிப்பாக ஊடக கேமராக்களின் கவனத்தை ஈர்க்க நிகழ்த்தப்பட்ட நாடகங்களாகவே பார்க்க முடிகிறது. இதனை உளவியலில் ASB – Attention Seeking Behaviour என்கிறார்கள்.  

இதைத்தான் பன்னீர் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்பின் போது வேறுவடிவத்தில் (அழுகை மூலம்) அரங்கேற்றினார்கள்.  

பதவிகளை தொடர்ந்து காப்பாற்றவும், பணங்களில் திளைக்கவும், சுயமரியாதையையும், மானத்தையும் இழக்க சற்றும் யோசிக்காத இவர்களிடமிருந்து நீதி, நியாயம், நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.  

இவர்கள் தான் இப்படியென்றால் திரைத்துறையை சார்ந்தவர்கள் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஊழலையும், கொள்ளையடித்தலையும், மக்களை ஏய்த்துப் பிழைத்தலையும் நியாயப்படுத்துகிறார்கள். திரைப்படங்களில் ஊழலுக்கெதிராக குரல் கொடுத்தவர்களை, கேவலம், நாம் தான் நம்பி ஏமார்ந்திருக்கிறோம்.  

தங்களின் உண்மையான முகம் இது தான் என தமிழக மக்களுக்கு தாங்களாகவே காட்டியிருப்பதற்கு திரைத்துறையினரைக் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்!! 

இத்தனை காலமும் பிழைப்பிற்காகத்தான் ஊழலை ஒழிப்பது போன்றும், தீயவை  ஒழிப்பது போன்றும் திரைப்படங்கள் எடுத்து கூவி கூவி விற்றிருக்கிறார்கள். நாங்கள் பிழைப்பதற்காக எத்தகைய ஈனச்செயலும் செய்ய தயாராக இருக்கிறோம் என சொல்லாமல் சொல்லி விட்டார்கள். 

பாமரனோ இன்னும் சில வாரங்களில் இதையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் இவர்கள் எடுக்கப்போகும் திரைப்படங்களை வாய்பிளந்து பார்க்கத்தான் போகிறான்.  

அரசியலும், திரைப்படத்துறையும் இப்படியென்றால், கிரிக்கெட் இவைகளுக்கெள்ளாம் ஒரு படி மேலே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவிற்கு தான் இந்தியா என்பதை கொண்டிருக்கிறது, மற்றபடி இந்தியாவாவது, தேசப்பற்றாவது என்பது தான் இவர்களின் செயல்பாடு. 

பண ஆசை யாரைத்தான் விட்டது, கிரிக்கெட் வாரியங்களையும், அதன் தலைவர்களையும், ஆட்டக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரியாவில் தற்போது நடந்து கொண்டிருக்க, அதில் பங்கேற்க கிரிக்கெட் அணியை அனுப்பாமல், சாம்பியன்ஸ் லீக்கில் ஆட விட்டு ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நாட்டிற்காக விளையாடுவதை தவிர்த்து பணத்துக்காக விளையாடுகிறார்கள் என்பதற்கு இதை விட சான்று என்ன வேண்டும். இதைக் குறித்து இதுவரை எந்த மூத்த கிரிக்கெட் ஆட்டகாரர்களும் கருத்து தெரிவித்ததாக இல்லை. மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடியும் வாயை திறந்ததாக இல்லை. இத்தனைக்கும் அரசியல் தலைவர்கள் தான் பல கிரிக்கெட் வாரியங்களுக்கு தலைவர்களாக இருக்கின்றனர். குஜாராத் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது பா.ஜ.க வின் தலைவர் அமித் ஷா அந்த பொறுப்பை கவனித்துக் கொள்கிறார். 

இப்படியாக இந்தியா ஊழலில் திளைக்க அரசியலும், திரைப்படத்துறையும், கிரிக்கெட் வாரியமும் மிகப்பெரிய காரணிகளாக தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றினோடு கார்ப்பரேட் ஆசாமிகள் சிலரையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நான்கும் நாற்புறமும் இருந்து கொண்டு இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றன. 

இந்தியா வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த காலம் மாறி இன்று கருப்பனுக்கு அதாவது கருப்புப்பணத்திற்கு அடிமையாகிக் கிடக்கிறது. 

இந்தியாவில் பாமரன் மடிகின்றான்; விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான்; மீனவன் பிடிக்கப்படுகின்றான்; தரமான கல்வியைப் பெற ஏழை பாடுபடுகிறான்;  சாமானியன் சரியான மருத்துவ வசதியின்றி மரிக்கின்றான்.  

இவர்களை கவனிப்பாரில்லை, ஊழல் செய்தாருக்கு சொம்பு தூக்கவும், கொள்ளையடித்தவர்களை ஆதரிக்கவுமே இங்கு நேரமில்லாத நிலையில் சாமானியனை ஏறெடுத்துப் பார்ப்பவன் யார்!

August 23, 2014

நீயா நானா - கோபி - BP - ஜூஜூபி

ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒளிபரப்பான (மருத்துவர்கள் Vs நோயாளிகள்) நீயா நானா விவாதத்தில் கோபிநாத் அவர்களும், நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குனருமான ஆண்டனி அவர்களும் வியாதிகளைப் பற்றிய சரியான தகவல்கள் பெறாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


பேச்சுக்கு பேச்சு BP சுகர தான சார் சொல்லப் போறீங்கன்னு மருத்துவர்களை எதுவுமறியாத பச்சப் பிள்ளைங்கள ஏதாவது காரணம் சொல்லி வாயை அடைப்பது போல் அடைத்து விட்டிருக்கிறார் கோபிநாத்.
மருத்துவர்கள் கூறிய பல முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களையும், உண்மைகளையும், மருத்துவம் சம்பந்தமான தகவல்களையும் கத்தரித்து விஜய் தொலைக்காட்சிக்கு சாதகமாக நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள், என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.
கல்வியும், மருத்துவமும் வியாபாரமாக்கப்பட்டு இருபதிற்கும் மேலான ஆண்டுகள் ஆன நிலையில் இன்று சாமானியன் சரியான கல்வியைப் பெறுவதும், தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவதும் குதிரைக்கொம்பாகி  விட்டதை  மறுப்பதிற்கில்லை.
பணம் இருந்தால் தான் இன்று மரியாதை என்ற நிலைமை இன்று கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மட்டுமல்ல; சமுதாயத்திலும், சொந்த பந்தங்களிடையேயும் பரவலாக காணப்படுகிறது.
மருத்துவர்கள் வரம்பு மீறி கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதிலும், பணத்திற்காக தேவையற்ற பரிசோதனைகள் செய்கிறார்கள் என்பதிலும் உண்மைகள் இல்லாமலில்லை.
ஆனால் இன்றைக்கு போலிகளும், மனசாட்சி இல்லாதவர்களும், கள்ளத்தனம் செய்பவர்களும் இல்லாத துறைகள் இல்லை.  எல்லா துறைகளிலும் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள், நேர்மையற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
இந்த போலிகளை கண்டறிந்து களையெடுக்க வேண்டிய செயல் அரசினுடையது; அதே நேரத்தில் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதும் இங்கு பொருந்தும்.
இவை ஒருபுறமிருக்க கோபிநாத் அவர்கள் விஷயமறியாமல் எந்த டாக்டர் கிட்ட போனாலும் சுகர், BP தான் பெரிய வியாதி என்கிறார்கள் எனவும் சர்க்கரை அளவையும், இரத்த அழுத்த அளவையும் அறிந்து கொள்ளவே தேவையில்லை; அவற்றை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்பது போன்ற தொனியில் விறைப்பாக வார்த்தைகளை விதைத்திருக்கிறார்.
மருத்துவத்துறையில் ஒரு நோயாளி அல்லது பரிசோதனை செய்ய வேண்டி வரும் எந்த ஒரு நபரிடமும் முதலாவதாக நோக்கப்பட வேண்டிய முக்கிய அறிகுறிகள் @ Vital Signs ல் உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, ஒரு நிமிடத்தில் நாம் எடுக்கும் சுவாச எண்ணிக்கை, இரத்த அழுத்தம் போன்றவை அடங்கும்.
இவை வழக்கமாக செய்யப்படும் சோதனைகள். இது ஒரு பதினைந்து வருடம் முந்தைய நிலைமை. இன்று இவற்றினுடன்;  இரத்தத்தில் சர்க்கரை அளவு, Oxygen Saturation என்றறியப்படும் ஆக்சிஜன் அளவு போன்றவை அடிப்படையாக செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள். இவை இல்லாமல் எந்த மருத்துவரும் ஒரு வியாதியை அறுதியிட்டு கூற முடியாது; எந்த ஒரு நோயாளிக்கும் மேற்கொண்டு மருத்துவம் செய்யவும் முடியாது.
இப்படியாகப்பட்ட BP, சுகரை கோபிநாத் அவர்கள் இதெல்லாம் ஒரு வியாதியா!! BP, சுகர் நோக்குவதெல்லாம் வியாபார உக்தி என்று விஷயமறியாமல் கத்தியிருக்கிறார். 
இன்னும் சொல்லப்போனால் இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அதிகமாக இருத்தலையும் மருத்துவத்துறை வியாதியாக பாவிப்பது ஒரு பக்கமிருப்பினும் எண்ணற்ற பிற வியாதிகளுக்கு அடிப்படை காரணமே இந்த BP ம் Sugar  ம் தான் என்பது மிக முக்கியமான விஷயம்; பலர் அறிந்திராத உண்மையும் கூட.
இந்த ஒரு அடிப்படை காரணம் கூட தெரியாமல் கோபிநாத் உளறியிருக்கிறார். அவரது உளறலை அவரே தவறென ஒத்துக்கொள்ளும் காலம் வெகு தொலைவிலில்லை.
மூளை, கண்கள், இரத்த நாளங்கள், இருதயம், சிறுநீரகம் போன்றவை பழுதாக அடிப்படையே BP ம் SUGAR ம் தான். மேலும் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு அடிப்படையும் இவை தான்.
ஆனா இதெல்லாம் அண்ணன் கோபிநாத்திற்கு ஜூஜூப்பியாம். மேட்டரே இல்லாம சும்மா அடிச்சி விடுற கோட் கோபிநாத் அவர்கள் இனிமேலேனும் அவையடக்கம் கொண்டு அடக்கி வாசித்தால் நல்லது.

August 15, 2014

மதம் - மனிதம் - மனிதன்


நான் நீ, அவன் இவன், அது இது என்பதில் துவங்கி உண்பது, உடுப்பது, கும்பிடுவது, உறங்குவது, அணிவது என அனைத்திலும் பாகுபாடுகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது சிந்திக்கவியாலாத ஓன்று. இத்தகைய பாகுபாடுகள் காலங்காலமாக தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகள் சக மனிதனுடைய வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்குமெனில் அங்கு மனிதன், மனிதம் எனும் தனது சாதாரண நிலையிலிருந்து முரண்பட்டு வாழ முற்படுவதாகத்தான் பார்க்கத்தோன்றுகிறது.

குடிசை-மாளிகை; ஏழை-பணக்காரன்; மேல்சாதி-கீழ்சாதி; கிறிஸ்தவன்-இந்து; இந்து-முஸ்லிம் போன்ற இந்த பிரிவினைகளும், வகுப்புவாத பாகுபாடுகளும் தான் இத்தனை காலமும் அமைதியான ஒரு சமுதாயத்தை தொடர்ந்து சீர்குலைத்து வந்திருக்கின்றன.

இவற்றில் மதச்சாயம் பூசப்பட்ட பிரிவினைகளை தாண்டி மற்றவை ஓரளவு மறக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் மதங்கள் இன்றும் மனித சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தான் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கு கூட வெட்கக்கேடு.

மதங்களையும் பாகுபாடுகளையும் உருவாக்கியது மனிதர்கள் என்பது தான் இதில் விசித்திரம். சக மனிதர்களை மனிதம் போற்றி மனிதர்களாக மதிக்க தெரியாத மதங்கள் இருந்து என்னத்திற்கு?!

என் மதம் தான் உயர்ந்தது, என் மதத்தை பின்பற்றுவோர் உயிரோடிருக்கட்டும், மற்றவர் அழிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைமை கொண்டு கொல்லவும் தயங்காத மதம் பிடித்த மனித மிருகங்கள் தான் இன்றைய மனித சமுதாயத்தின் எதிரி.

மனித சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எந்த மதமும், அம்மதத்தின் பெயரால் அச்சுறுத்தும் மதவெறியர்களும் தான் தற்கால அமைதிக்கு எதிரிகள். இவர்களையும் இவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளையும் எப்படி சமாளிக்க போகிறோம் என்பது தான் கேள்விக்குறி!

பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும், கிறிஸ்தவன் என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் நல்ல மனிதன் என்றழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.
 
கிறிஸ்தவத்தில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் தெய்வ நூலாக கருதுகிற விவிலியத்தில் எழுதியிருப்பதற்கு எதிரான கொள்கைகளை கடைபிடிப்பதும், அதில் இல்லாத கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு பாகுபாடு காண்பிப்பதும் தான்.
சொரூபங்கள் அல்லது விக்கிரகங்களை கும்பிடவோ, நமஸ்கரிக்கவோ கூடாது என விவிலியத்தில் தெளிவாக எழுதி இருக்கையில் இவர்கள் சிலுவையையும், இயேசு, மேரி மாதா என படங்களையும், சிலைகளையும் உருவாக்கிக்கொண்டு வழிபடுவது வேடிக்கை.
கிறிஸ்தவத்தில் பல்வேறு உட்பிரிவுகள் வேறு!! இதே போன்ற உட்பிரிவுகள் பிற மதங்களிலும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மனிதனே மனிதனுக்கு எதிரி என்பதும்; மனிதன் உருவாக்கிய மதமே மனிதத்திற்கு எதிரி என்பதும் தான் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம். ஒரு மதம் ஒரு மனிதனை நற்பண்புடையவானாக்கி சக மனிதர்களையும் மதித்து நடக்க கற்றுக் கொடுக்கவில்லையெனில் அதை விட சாபம் வேறொன்றுமில்லை.
எவரையும் கீழ்த்தரமாக நடத்தவோ, கொலை செய்யவோ எந்த மத நூலும் சொல்லுவதாக கேள்விப்பட்டதில்லை.
விவிலியத்தையும். குரானையும், பிற மதம் சம்பந்தப்பட்ட நூல்களையும் சரிவர படித்தறியாத அரைவேக்காடுகளே இன்று மத போதையேறி மனித குல அமைதிக்கு எதிரான குரல் கொடுத்தும்; சக மனிதர்களை கொன்றும் வருகின்றன.
மதங்கள் அழிக்கப்பட வேண்டும்! ஆனால் அது சாத்தியமா என்றால், இல்லை என்பது தான் பதில். மதங்கள் அழிப்படவில்லை எனினும் மனிதம் போற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. 

August 07, 2014

ஆன்டர்ர்ர்ர்சனும், ஜடேஜாவும், ஐசீசீயும்!!!

கிரிக்கெட் ஜென்டில்மேன்களுடைய விளையாட்டு என்பதெல்லாம் இன்றைக்கு பெயரளவில் தான் என்பதற்கு அண்மை காலங்களில் மைதானங்களில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே சாட்சி.

இதில் சமீபத்திய நிகழ்வு இங்கிலாந்தில் ஜேம்ஸ் என்ற ஜிம்மி ஆன்டர்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே ஏற்பட்ட தகராறு. 

இந்த தொடரின் ஆரம்ப டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்காம், ட்ரென்ட்பிரிட்ஜில் நடைபெற்றது. ஆரம்ப ஆட்டத்திலேயே ஆன்டர்சன் தான் வலிய வம்புக்கு போனார் ஜடேஜாவிடம். 

ஆன்டர்சன் வீசிய பந்து ஒன்று ஜடேஜாவின் மட்டையை கடந்து செல்லவே அதனை அவுட் என கருதிய ஆன்டர்சன் நடுவரிடம் முறையீடு செய்தார்; நடுவர் அவுட் கொடுக்காமல் போகவே ஜடேஜாவிடம்  Sledging என்ற பெயரில் திட்டினார். இதை அப்போதே நடுவர்கள் கண்டித்திருந்தால் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்திருக்க வாய்ப்பில்லை.

மைதானத்தில் திட்டியது போதாதென்று மதிய உணவு இடைவேளைக்கென்று மைதானத்தில் இருந்து பெவிலியன் நோக்கி அணித்தலைவர் தோனியும் ஜடேஜாவும் சென்று கொண்டிருக்கையில் அவர்களுடன் நடந்து சென்ற ஆன்டர்சன் தொடர்ந்து பிதற்றிக் கொண்டே வந்திருக்கிறார்.


ஒரு சமயத்தில் சகிக்க முடியாத ஜடேஜா ஆன்டர்சனை நோக்கி கோபமாக திரும்பிருக்கிறார் (கையில் மட்டையும் இருந்திருக்கிறது) உடனே ஆன்டர்சன் ஜடேஜாவை கையால் தள்ளியிருக்கிறார்.  

எல்லாம் பதிவாகியிருக்கையில் தள்ளல் சம்பவம் மட்டும் கேமராவில் பதிவாகவில்லை என்கிறது ஐசிசி. அன்று பெவிலியன் அருகில் இருந்த CCTV பழுதாகி விட்டது. அதனால் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்ற பெயரில் ஆன்டர்சனுக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லை இந்த ஐசிசி. இத்தனைக்கும் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் தான் ஐசிசிக்கும் தலைவர்.

முன்னாள் ஆட்டக்காரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆலன் வில்கின்ஸ் ஆன்டர்சனின் நடவடிக்கைகளைக் குறித்து விஸ்டன் பத்திரிக்கைக்கு எழுதுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

If Jimmy Anderson had been a tennis player, he would never have finished a match”

கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவாற்கு எதிரான ஆஷஸ் தொடரின் போது நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்ட ஆன்டர்சன் இப்போது அதை இந்திய அணியின் மீது காண்பிப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.



2008 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிட்னி டெஸ்ட் வாக்குவாதத்தில் சைமண்ட்ஸ் க்கு எதிராரக ஹர்பஜன் தண்டனை பெற்றார். 2013 நவம்பரில் க்ளார்க் ஆன்டர்சனுக்கெதிராக தண்டனை பெற்றார். சமீபத்தில் ஐபில் 7 ல் ஸ்டார்க்-பொல்லார்ட் இடையேயான ஆக்ரோஷம் எந்த தண்டனையையும்  எவருக்கும் பெற்றுத்தரவில்லை.

 இப்படியாக Gentlemen’s Game என அறியப்பட்டிருந்த கிரிக்கெட்டில் இன்று வரம்பு மீறுதல் என்பதும்,ஒருவர் மற்றொருவரை மிகவும் கீழ்த்தரமாக திட்டுவது என்பதும் சகஜமாகிப் போனது.

கால்பந்து ஆட்டங்களில் இருக்கும் மஞ்சள், சிவப்பு அட்டைகளைப் போன்ற  நடைமுறைகள் கிரிக்கெட்டிற்கு தேவையில்லை எனினும், இருக்கின்ற சட்டங்களை சரிவர பின்பற்றுவதும்; மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் ஆட்டக்காரர்களை சரிவர கண்டித்தலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவை சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் ஐசிசி என்பது ஐசீசீ ஆகிப்போகும் என்பதில் ஆச்சரியமில்லை.

May 17, 2014

2014 தேர்தல் ஒரு பார்வை - மோடி-லேடி-டாடி

பத்து வருட கால காங்கிரசின் ஆட்சிக்கு முடிவு கட்டியிருக்கிறது 2014 மக்களவை தேர்தல். காங்கிரசின் முதல் ஐந்து ஆண்டு கால ஆட்சி சொல்லும்படி இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி கண்ட  விலைவாசி ஏற்றம், எரிவாயுக்களின் விலையேற்றம், பணவீக்கம், பெரும் ஊழல் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்து தந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இத்தனை வெறுப்புகளும் அதோடு வருங்கால இந்தியாவை வழிநடத்தி செல்ல, சொல்லும் படியான ஒரு தலைமை இல்லாமையும் காங்கிரசுக்கு பெருத்த அடியை இந்த தேர்தல் வழங்கியிருக்கிறது.

சில மாதங்கள் முன்னர் டெல்லியில் எவருமே எதிர்பாராமல் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சியினர் தங்களுக்கு கிடைத்த நற்பெயரை தாங்களே கெடுத்துக்கொண்டாற் போல் இந்த தேர்தலில் அதிகம் பேசப்படாமல் போய்விட்டனர்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் மேலும் மேலும் பிற கட்சியினரை குறை சொல்லியே டெபாசிட் இழந்து நிற்கிறார்கள் இன்று. ஒருவேளை டெல்லியில் ஆட்சியை தொடர்ந்து நடத்தியிருந்தார்களானால் அங்கிருந்து அவர்கள் கட்சியை விஸ்தாரப்படுத்தியிருக்கலாம். இதனாலேயே, சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றியை கொடுத்த டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு ஒரு இடம் கூட அளிக்காமல் மண்ணை கவ்வ வைத்திருக்கின்றனர்.

பாரதிய ஜனதாவை பொறுத்த வரை, அவர்களின்  மிகத்தெளிவான திட்டமிடலும், ஊடக வழி பிரச்சாரமும், மோடியை முன்னிறுத்தியதும் அவர்களே எதிரபாராத வெற்றியை தந்தது என்றால் காங்கிரசின் ஊறிப்போன ஊழலும், மக்கள் மத்தியில் இருந்த வெறுப்பும் பாரதிய ஜனதாவிற்கு மேலும் சாதகமாகிப் போனது.

மோடி அலை என்று ஊடகங்கள் பறைசாற்றினாலும் தமிழகம், கேரளா, ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க இன்னும் தங்கள் காலை ஊன்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியிருப்பது எவருமே கணிக்காத ஒரு முடிவு என்பதாகத்தான் படுகிறது. காங்கிரசும் திமுகவும் வரலாறு காணாத தோல்வியை சந்தித்திருக்கின்றன. ஈழத்தமிழர் விஷயத்தில் இரட்டை வேடம் அணிந்த இவ்விரு கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டதில் அதிக ஆச்சரியமில்லை. எனினும் ஒரு இடம் கூட கிடைக்காமல் போகும் என எவரும் எதிர்பார்க்கவில்லை தான். திமுகவிற்கு பாரம்பரிய ஓட்டுகள் விழுந்தாலும் அவர்களின் ஊழலும், சந்தர்ப்பவாத அரசியலும், அழகிரியின் வெளியேற்றமும், NOTA வும் திமுகவினர் முகத்தில் கரியை அள்ளிப் பூசியிருக்கின்றன.

கிறிஸ்தவர்களும், இந்துக்களும் சம எண்ணிக்கையுடைய கன்னியாகுமரியில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும் பா.ஜ.க. வின்  பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றிமுகம் கண்டிருக்கிறார். ஆம் ஆத்மியின் சுப.உதயகுமார் அவர்கள் எதிர்பார்த்த அளவு ஓட்டுகள் பெறாமல் போனது எப்படி என்பதும் புரியவில்லை.

வைகோ அவர்கள் அவரது சந்தர்ப்பவாத அரசியல் காரணங்களால் தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கிறேன். எந்தவொரு கொள்கையுமில்லா விஜயகாந்த் உடன் கூட்டணி என்பது அவருக்கே அழகாயிருக்கிறதா என தெரியவில்லை. பிரச்சாரத்தின் போது மக்கள் முன்னர் விஜயகாந்த் இவரை அறிமுகப்படுத்தி பேசுகிறார் என்றால் இதை விட கொடுமை என்ன வேண்டும்!!

தருமபுரி ஜனங்கள் தங்கள் சாதி சனத்தை அத்தனை எளிதில் விட்டுக்கொடுத்து விட மாட்டார்கள்  என்பதற்கு அன்புமணி அவர்களின் வெற்றி சாட்சி. இன்னும் எத்தனை இளவரசன்களை இழக்க வேண்டுமென தெரியவில்லை.


பாஜக முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்வது நல்ல விஷயம் தான். புதிய அரசாங்கம் அனைத்து பிரிவினரையும் அரவணைத்து புதிய கொள்கைகளுடன் இந்தியாவை முன்னேற்ற எத்தனிக்குமானால் ஏவருக்கும் மகிழ்ச்சியே. 
Related Posts with Thumbnails