August 15, 2014

மதம் - மனிதம் - மனிதன்


நான் நீ, அவன் இவன், அது இது என்பதில் துவங்கி உண்பது, உடுப்பது, கும்பிடுவது, உறங்குவது, அணிவது என அனைத்திலும் பாகுபாடுகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது சிந்திக்கவியாலாத ஓன்று. இத்தகைய பாகுபாடுகள் காலங்காலமாக தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகள் சக மனிதனுடைய வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்குமெனில் அங்கு மனிதன், மனிதம் எனும் தனது சாதாரண நிலையிலிருந்து முரண்பட்டு வாழ முற்படுவதாகத்தான் பார்க்கத்தோன்றுகிறது.

குடிசை-மாளிகை; ஏழை-பணக்காரன்; மேல்சாதி-கீழ்சாதி; கிறிஸ்தவன்-இந்து; இந்து-முஸ்லிம் போன்ற இந்த பிரிவினைகளும், வகுப்புவாத பாகுபாடுகளும் தான் இத்தனை காலமும் அமைதியான ஒரு சமுதாயத்தை தொடர்ந்து சீர்குலைத்து வந்திருக்கின்றன.

இவற்றில் மதச்சாயம் பூசப்பட்ட பிரிவினைகளை தாண்டி மற்றவை ஓரளவு மறக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் மதங்கள் இன்றும் மனித சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தான் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கு கூட வெட்கக்கேடு.

மதங்களையும் பாகுபாடுகளையும் உருவாக்கியது மனிதர்கள் என்பது தான் இதில் விசித்திரம். சக மனிதர்களை மனிதம் போற்றி மனிதர்களாக மதிக்க தெரியாத மதங்கள் இருந்து என்னத்திற்கு?!

என் மதம் தான் உயர்ந்தது, என் மதத்தை பின்பற்றுவோர் உயிரோடிருக்கட்டும், மற்றவர் அழிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைமை கொண்டு கொல்லவும் தயங்காத மதம் பிடித்த மனித மிருகங்கள் தான் இன்றைய மனித சமுதாயத்தின் எதிரி.

மனித சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எந்த மதமும், அம்மதத்தின் பெயரால் அச்சுறுத்தும் மதவெறியர்களும் தான் தற்கால அமைதிக்கு எதிரிகள். இவர்களையும் இவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளையும் எப்படி சமாளிக்க போகிறோம் என்பது தான் கேள்விக்குறி!

பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும், கிறிஸ்தவன் என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் நல்ல மனிதன் என்றழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.
 
கிறிஸ்தவத்தில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் தெய்வ நூலாக கருதுகிற விவிலியத்தில் எழுதியிருப்பதற்கு எதிரான கொள்கைகளை கடைபிடிப்பதும், அதில் இல்லாத கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு பாகுபாடு காண்பிப்பதும் தான்.
சொரூபங்கள் அல்லது விக்கிரகங்களை கும்பிடவோ, நமஸ்கரிக்கவோ கூடாது என விவிலியத்தில் தெளிவாக எழுதி இருக்கையில் இவர்கள் சிலுவையையும், இயேசு, மேரி மாதா என படங்களையும், சிலைகளையும் உருவாக்கிக்கொண்டு வழிபடுவது வேடிக்கை.
கிறிஸ்தவத்தில் பல்வேறு உட்பிரிவுகள் வேறு!! இதே போன்ற உட்பிரிவுகள் பிற மதங்களிலும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மனிதனே மனிதனுக்கு எதிரி என்பதும்; மனிதன் உருவாக்கிய மதமே மனிதத்திற்கு எதிரி என்பதும் தான் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம். ஒரு மதம் ஒரு மனிதனை நற்பண்புடையவானாக்கி சக மனிதர்களையும் மதித்து நடக்க கற்றுக் கொடுக்கவில்லையெனில் அதை விட சாபம் வேறொன்றுமில்லை.
எவரையும் கீழ்த்தரமாக நடத்தவோ, கொலை செய்யவோ எந்த மத நூலும் சொல்லுவதாக கேள்விப்பட்டதில்லை.
விவிலியத்தையும். குரானையும், பிற மதம் சம்பந்தப்பட்ட நூல்களையும் சரிவர படித்தறியாத அரைவேக்காடுகளே இன்று மத போதையேறி மனித குல அமைதிக்கு எதிரான குரல் கொடுத்தும்; சக மனிதர்களை கொன்றும் வருகின்றன.
மதங்கள் அழிக்கப்பட வேண்டும்! ஆனால் அது சாத்தியமா என்றால், இல்லை என்பது தான் பதில். மதங்கள் அழிப்படவில்லை எனினும் மனிதம் போற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails