February 19, 2015

விஜய் டிவி சூப்பர் சிங்கர் - சர்ச்சைகளும் புரிந்ததும்



பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட சூப்பர் சிங்கர் ஜூனியரின் நான்காவது சீசன் இறுதி சுற்று நாளை அதாவது பிப்ரவரி 20 ஆம் தியதி சென்னையில் அரங்கேறுவதாக இருக்கிறது.

இசையில் நாட்டம் இருப்பதாலும், தொடர்ந்து இந்த பாடல் நிகிழ்ச்சியை பார்த்து வருவதாலும் எனக்கு புரிந்த சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதால் தான் இந்த பதிவு.

சூப்பர் சிங்கர் 2006 ஆம் ஆண்டு துவங்கி கடந்த 8 ஆண்டுகளில் நான்கு சீனியர் போட்டிகள், நான்கு ஜூனியர் போட்டிகள் என எட்டு சீசனை நிறைவு செய்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் விளம்பரப்படுத்தலாலும், தொகுத்து வழங்கும் பாணியினாலும், நட்சத்திரங்களை அரங்கத்திற்குள் அழைத்து வருகிற திறமையினாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருப்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

பங்கு பெறும் போட்டியாளர்களை ஊக்குவிப்பதும், அனந்த் வைத்யநாதன் அவர்களைக் கொண்டு போட்டியாளர்கள் குரலை மென்மேலும் மெருகேற்றுவதும், சரிவர பாடமுடியாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தருவாயிலிருக்கும் போட்டியாளர்களையும் அரவணைத்து செல்வதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தனித்துவம் என்று சொல்லலாம்.

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் எல்லா நிகழ்ச்சிகளைப் போன்றே சூப்பர் சிங்கராலும் சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. நடுவர்கள் பாகுபாடு பார்க்கிறார்கள் எனவும், திறமைகளை இருட்டடிப்பு செய்து அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கே அதிக ஆதரவு தருகிறார்கள் என்பதும், பிற மாநிலத்தவர்களுக்கே (நடுவர்கள் உட்பட) அதிக வாய்ப்புகள் தருகிறார்கள் எனவும், அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் சூப்பர் சிங்கரின் அனைத்து சீசனிலும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

இந்த ஜூனியர் சீசன் 4 ல் அதிகமாக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது, 'தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என சொல்லிவிட்டு வேற்று மாநிலத்தவர்களின் குரலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.

ஆனால் இந்த சூப்பர் சிங்கரின் தாரக மந்திரமான 'தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்/ தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என்பது விஜய் தொலைக்காட்சியின் சாதாரண விளம்பரப்படுத்தல் தான்; கடந்த எட்டு வருடங்களாக தமிழகத்தில் இருந்து மட்டுமே போட்டியாளார்களை ஏற்றுக்கொள்வோம் என எங்கும் விளம்பரப்படுத்தி இருந்ததாக தெரியவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் போட்டியாளர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதென்பது விஜய் தொலைக்காட்சியின் வியாபார உக்தியாகத்தான் தெரிகிறது.

அதற்கான முதல் அச்சாரம் தான் முதல் சீசனில் வெற்றிபெற்றவரும், கேரள மாநிலம், கோட்டயத்தைச் சார்ந்தவருமான 'நிகில் மேத்யூ'. இதைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா, காஷ்மீர் என பிற மாநிலங்களில் இருந்தும் பலர் படையெடுக்கத் துவங்கினர்.

இந்த சீசனின் மற்றுமொரு சர்ச்சை நன்றாக பாடிக்கொண்டிருந்த அனுஷுயாவை போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்பது தான். இதற்கு வருத்தப்பட்டவர்கள், வசைபாடியவர்கள், தரம்தாழ்ந்து பேசியவர்கள் அனைவரும் அனுஷுயா தமிழ்நாட்டைச் சார்ந்தவர் இல்லை என்பதை மறந்து விட்டுத்தான் அவற்றை செய்திருக்க வேண்டும்!! ஒரு கட்டத்தில் நடுவர்களான சித்ரா, மனோ இருவர் மீதான தனிப்பட்ட தாக்குதல், கருத்து சுதந்திரம் என்பதன் பெயரில் எல்லை மீறிப் போகவே 'யூடியூப்' தளத்தில் இருந்து அந்த காணொளியையே நீக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது விஜய் தொலைக்காட்சி. 

தமிழக போட்டியாளர்களையே இந்த நிகழ்ச்சியில் வைக்க வேண்டும், மற்ற மாநிலத்தவர்களை எல்லாம் எதற்கு விஜய் தொலைக்காட்சி தூக்கி வைத்து கொண்டாடுகிறது என்று ஆதங்கப்பட்டவர்களே, அனுஷுயா பாண்டிச்சேரியைச் சார்ந்தவர் என்பதறியாமல் அவர் வெளியேற்றப்பட்ட போது அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டார்கள்.

எனக்குப் புரிந்த வரை பிற மாநிலம் சார்ந்தவர்களை பங்குபெற செய்வது முழுக்க முழுக்க விஜய் தொலைக்காட்சியின் தாரக உரிமை மட்டுமல்லாது அது அவர்களின் வியாபார உக்தியும் கூ. அதோடு மொபைல் மற்றும் ஆன்லைன் ஓட்டு முறையும் அவர்களின் வியாபாரமே! (இல்லையென்றால் குறைவான வாக்குகளே வாங்கியிருந்த ஸ்ரீஷாவை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்து ஓட்டு போட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்களா!!) (ஸ்ரீஷா மிகச்சிறந்த குரல்வளமும், திறமையும் கொண்டவர் என்பதையும் ஒத்துக்கொண்டாக வேண்டும்) யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நிகழ்ச்சியை ரசிப்பதை விட்டுவிட்டு வசைபாடுவதும், வீண் தர்க்கங்களிலும் ஈடுபடுவதும் நேர விரயமே.

இறுதிப்போட்டியில் அனுஷுயா, ஹரிப்பிரியா அல்லது பரத் வெற்றி பெற அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது, நாளை இரவு தெரிந்து விடும்.


February 14, 2015

தில்லியின் காதல் நாயகன் - அரவிந்த் கெஜ்ரிவால்

பிப்ரவரி 14 - உலகம் இன்று, வேலன்டைன் தினம் - காதல் என உணர்வுப்பூர்வமாக அணுகிக்கொண்டிருக்க. தில்லியில் பாமரன் மீதான தன் காதலை ஆம் ஆத்மி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

46 வயதான அரவிந்த் கெஜ்ரிவால் எட்டாவது முதல்வராக தில்லியில் அமர்ந்திருக்கிறார் இன்று; அமர்ந்திருக்கிறார் என்று சொல்வதை விட பாமரனுக்காக தன் முதுகில் பாரத்தை ஏற்றியிருக்கிறார் என்று சொல்லலாம். 

வெகு விரைவாக ஒரு உயர்ந்த பதவியில் அவர் அமர்ந்து விட்டதாக தோன்றினாலும், இந்த உயரத்தை அடைய 14 வருடம் ஆகியிருக்கிறது என்றால் அது சற்று ஆச்சர்யமே! அவரது வெற்றிக்குப் பின் 14 ஆண்டு கால கனவும், கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், விடாத முயற்சிகளும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத மன தைரியமும் இருந்திருக்கின்றன எனலாம்.

கூடவே, அனைத்து தருணங்களிலும் உறுதுணையாக இருந்த துணைவியும், மக்கள் நலனுக்காக களத்தில் நின்று தொடர்ந்து போராடி வரும் சக நண்பர்களும் அவரது பெரிய பலம். 

பதவியேற்பு விழாவின் போது அவர் பல விஷயங்களைக் குறித்து பேசியிருந்தாலும், என்னை அதிகம் கவர்ந்தது 'lal battis' குறித்த கருத்தே! அமைச்சர்களின் வாகனங்களில் உபயோகப்படுத்தும் சிவப்பு விளக்கை அதிகம் பயன்படுத்த மாட்டோம் என்பதே அது.

அதோடு ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில் தற்பெருமை கொள்வதோ, அமைச்சர் செல்கிறார் என்பதற்காக போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பதோ, பாமரனுக்கு இடையூறாக இருப்பதோ கூடாது எனவும் தெளிவாக பேசியிருக்கிறார். இது போன்ற அவர்களது எளிமையும், சாதாரண மனிதர்களையும் மதித்து நடக்கும் போக்கும் தான் அவர்களுக்கு வெற்றி பெற்று தந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

முன்னாள் கேரள முதல்வரான அச்சுதானந்தன் இது போன்றதொரு எளிமையான வாழ்க்கை முறையைத்தான் கடைபிடித்து வந்தார்; சாமானியர்களோடு கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார், காய்கறி சந்தைக்கு கூட அவரே சென்று வருவார். ஆனால் அங்கிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரால் ஊழலை சமாளிக்க முடியவில்லை. 

அதே போன்றதொரு எளிமையை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பார்க்க முடிகிறது. ஊழலுக்கு எதிரான அவரது முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பதே பாமரனின் எதிர்பார்ப்பு. 

தில்லியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பட்டதாரிகளும், இளைஞர்களுமே. இந்த படையினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சாமானியர்களுக்காக தற்போது நிர்ப்பந்தத்தால் அரசியலில் பிரவேசித்திருக்கும் கெஜ்ரிவால் அவர்கள் கல்கத்தாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருந்த சமயம் அங்கிருக்கும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்திலும், ராமகிருஷ்ணா மிஷனிலும் சிறிது காலம் ஆர்வலராக இருந்திருக்கிறார். 

பாமரனின் கஷ்டம் புரிந்த ஒருவரால் தான் இத்தனை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட முடியும் என்பதற்கு இவைகளே சான்று.

பெரிய அரசு அலுவலகங்களிலிருந்து, சிறு அரசு பணிகள் நடக்கும் இடங்கள் வரை ஊழல் வியாபித்திருந்ததை சான்றிதழ்களில் அரசின் அங்கீகார முத்திரை வேண்டி தில்லி சென்றிருந்த போது கண்கூடாக காண நேர்ந்தது. இதற்கு முழுமுதற் காரணமே இடைத்தரகர்கள் தான். 

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதுமே இது போன்ற இடைத்தரகர்கள் பலர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வருகின்றன; இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் தில்லி விரைவில் ஊழலற்ற மாநிலமாகும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

ஆம் ஆத்மியின் பாமரனனுடனான இந்த புதிய காதல் அத்தியாயம் சுபமாக முடிவுரை எழுதப்பட்டால் இன்னும் பல மாநில ஆட்சிமுறைகளுக்கு இது ஒரு முன்னுரையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பிரபல கருத்துச்சித்திர கலைஞர் ஆர். கே. லக்ஷ்மன் அவர்கள் இன்று இருந்திருந்து கெஜ்ரிவாலின் வெற்றியை பார்த்திருப்பாரானால் பெருமகிழ்ச்சியடைந்திருப்பார்.


Related Posts with Thumbnails