May 04, 2015

பாமரனுக்கு பாதகமாகும் பந்த்/ முழு அடைப்பு போராட்டங்கள்

கடந்த மாதம் ஏப்ரலில் மட்டும் குறைந்தது மூன்று முறை (முழு அடைப்பு) போராட்டங்களை சந்திக்க நேரிட்டது; மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று. துறைக்கு ஒரு சங்கங்களை வைத்துக் கொண்டு போராட்டம் என கொடிகளை பிடித்து விடுகின்றனர். அல்லல் படுவதோ சாமானியன் தான்.

பாமரனின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்பதறிந்தும் வங்கி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முதலானவர்களும் இதர துறை ஊழியர்களும் போராட்டம் என எளிதாக அறிவித்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கி விடுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி போக்குவரத்து சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நேரில் பார்த்தவன் என்ற நிலையில் இதை பதிவு செய்வது அவசியமாகிறது. அதோடு கடந்த காலங்களில் இது போன்ற போராட்டங்களின் பாதிப்புகளையும் கடந்து வந்திருக்கிறேன்.

ஏப்ரல் 30 அன்று தமிழகத்தில் சில இடங்களில் பாதிப்பு இருந்தாலும், ஆளுங்கட்சியினர் சார்ந்த தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபடாததால் அத்தியாவசிய பேருந்துகள் இயக்கத்திலிருந்தது சற்று ஆறுதல் தான். இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தமிழக எல்லைக்கு சற்று அப்பால் கேரள எல்லைக்குள் பணிக்காகவும், வியாபரத்திற்காகவும், மருத்துவ வசதிக்காகவும், விமான பயணங்களுக்காகவும் பயணித்தவர்களின் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.


காரணம், தமிழக எல்லையான களியக்காவிளைக்கு அப்பால் பேருந்துகள் இயக்கப்படவில்லை, நான்கு சக்கர வாகனங்களும் கேரள எல்லைக்குள் நுழைய தயங்கிய நிலை தான் ஏப்ரல் 30 அன்று முழுவதும் இருந்து வந்தது. கேரள தமிழக எல்லைப் பகுதிகளைச் சார்ந்த சில வாகனங்கள் குறிப்பாக KL ல் துவங்கும் கேரள பதிவு எண்கள் கொண்டவையே அதிகம் இயக்கத்திலிருந்தன. அவையனைத்தும் மருத்துவமனை அவசரம்/திருமணம்/ஏர்போர்ட் அவசரம் என்று அச்சடிக்கப்பட்ட காகிதங்களை கண்ணாடிகளில் தாங்கிக்கொண்டே இயக்கப்பட்டன.

(கேரளம், 'ஹர்த்தால்' என்ற பெயரில் நடத்தும் முழு அடைப்புப் போராட்டங்களுக்கு பெயர் போனது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்)

ஏப்ரல் 30 ம் அன்று தேர்வு ஒன்றிற்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்தேன், குறிப்பிட்ட தியதியில் தான் வந்தாக வேண்டும் என முன்னரே அறிவுருத்தப்பட்டிருந்ததால் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம். பேருந்து நிலையம் சென்றால் களியக்காவிளை கடந்து கேரள எல்லைக்குள் பேருந்துகள் செல்லாது என்று அறிவித்து விட்டார்கள். நான்கு சக்கரவாகன ஓட்டுனரும் கைவிரிக்கவே வேறு வழியின்றி இரு சக்கர வாகனத்திலேயே சென்று வர வேண்டியதாகிப் போனது.


இவை போன்ற போக்குவரத்து முடக்கங்கள் பாமரனை பாதிப்பது ஒருபுறமென்றால் மருத்துவர்கள் போராட்டம் என்ற பெயரில் பாமரனின் உடல்நிலையை மேலும் கவலைக்கிடம் ஆக்குவதும், வங்கி ஊழியர்கள் போராட்டம் என்பதன் பெயரில் பண பரிவர்த்தனைகளை முடக்குவதும் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இவர்களின் நியாயமான கோரிக்கைகளை பணியிலிருக்கும் போது தான் அரசுக்கோ, அவர்கள் துறை சார்ந்த மேலிடங்களுக்கோ புரிய வைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான் புரியவில்லை.


தங்களின் பணி நேரத்தில் தான் போராட்டங்கள் செய்ய வேண்டுமா? பணி நேரம் தவிர்த்த பிற நேரங்களில் ஏன் அரசாங்க பொது ஊழியர்கள் போராட்டம் செய்ய மறுக்கின்றனர்? இவர்களது கோரிக்கைகளை முறையாக அரசிடமும், பெருகியிருக்கும் ஊடகங்கள் மூலமும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தெரிவிக்கலாமே? 
Related Posts with Thumbnails