July 29, 2015

கலாம், எம் எஸ் வி மரணமும் ஊடகங்களின் மறுபக்கமும்

ஊடகங்களின் வளர்ச்சி ஒரு விதத்தில் நல்லது என்றாலும் சில ஊடகங்கள் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று அவைகளின் மறுமுகத்தை காட்டி விடுகின்றன. ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் மூலம் முரணான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பலர் பகிர்வதும் இணையம் வளர்ந்த அளவு எண்ணங்கள் வளரவில்லை என்பதையும் உறுதி செய்கின்றன.

கடந்த இரு வார இடைவெளியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் இயற்கை எய்தினர். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் அவர்கள் இருவர் தொடர்பான செய்திகளை வெளியிட்டும், அவர்கள் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்டும் இருந்தன.

எம்.எஸ்.வி அவர்கள் இயற்கை எய்திய மறு தினம் தந்தி தொலைக்காட்சியில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம், பெண் தொகுப்பாளர் ஒருவர், விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த 'காதோடு தான் நான் பாடுவேன்' பாடலைப் பாடுங்கன்னு கேக்கவும், பயங்கரமா கோபப்பட்டாங்க ஈஸ்வரி அவர்கள். அது குமார் இசையமைத்தது, இங்க தான் நீங்க தப்பு செய்றீங்க, இது கூட தெரியாம ஏன் கேள்வி கேக்குறீங்கன்னுட்டாங்க.

அத சமாளிச்சிட்டு அந்த பெண் தொகுப்பாளர், எம்.எஸ்,வி இசையில வேற எதாவது பாடல் பாடுங்கன்னு கேக்கப் போக, அதுக்கு ஈஸ்வரி அவர்கள் சொன்ன பதிலை அந்த தொகுப்பாளர் மறக்க பல நாட்கள் ஆகலாம். 'மனுசர் இறந்திட்டாருங்கிற துக்கத்தில இருக்கேன், இதில பாடல் பாட சொல்றீங்களேன்னு சொல்ல, சரி தொடர்ந்து பேசுவோம்னு எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைப்பைத் துண்டித்து விட்டு தொடர்ந்து சங்கர் கணேஷ் அவர்களோடு உரையாடலைத் துவங்குகிறார்.

இது இப்படியெனில், கலாம் அவர்கள் மறைவிற்கு பின்னர் தேச, மத, இன, மொழி வேறுபாடின்றி மக்களும், ஊடகங்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில், 24/7 செய்திகள் என விளம்பரம் செய்திருக்கின்ற சத்தியம் தொலைக்காட்சியில் நள்ளிரவு ஒரு மணி வரை கிறிஸ்தவ போதனைகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். காலை 6 மணி வரை அவரகளது ட்விட்டர் பக்கத்திலோ, இணையதளத்திலோ கலாம் அவர்களின் மறைவு குறித்த எந்த பதிவும் கிடையாது. இதிலிருந்தே இவர்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.

மறுபுறம் சமூக வலைதளங்கள் வாயிலாக சில சுயநலம் பிடித்த பதிவர்கள், பழைய நிகழ்வுகளை, கலாம் அவர்களின் இறுதிப் புகைப்படம், அவர் பேசிய இறுதி காணொளி/லி எனவும்; அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாம் அவர்களின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க வருகிறார், கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதம் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருக்கிறது (திர்) என உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவு செய்து மக்களை ஏமாற்றினர்.



இது போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பதிவு செய்பவர்கள் தான் இப்படி என்றால், அதன் ஆழமும், உண்மையும் அறியாமல் பகிர்பவர்களும் ஆயிரக்கணக்கானோர் என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இன்று பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பு இருக்கிறது. ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் பலரும் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. கூடவே, தகவல்களை உறுதிப்படுத்தாமல் பகிர்வதும் அதிகரித்திருக்கிறது. 2011 ஆம் வருடத்திலிருந்தே பலமுறை இந்த சமூக வலைதளங்கள் டாக்டர்.கலாம், ஆச்சி மனோரமா, இயக்குனர் பாலச்சந்தர் போன்ற பலரை  புரளிகளால் நோயாளிகளாக்கியிருக்கிறது, சாகடித்துமிருக்கிறது.

இது, 2014 ல் நான் நலமாய் இருக்கிறேன்  என மறைந்த அப்துல் கலாம் அவர்களே எழுதிய ட்வீட்.
  
சில like களுக்காகவும், share களுக்காகவும் சமூக வலைதளங்களில் இது போன்ற பொய் பிரச்சாரங்களை பதிவு செய்வது வாடிக்கையாகவே தொடர்கிறது. நாம் சுதாரிக்கவில்லையென்றால் நம்மையும் முட்டாளிக்கி விடும் இந்த இணைய சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

பி.கு: இதுவரை ஷில்லாங்கில், கலாம் அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்ததோ, அவர் உரையாடிய இரு நிமிட உரையோ எங்கும் வலையேற்றப்படவில்லை.

July 28, 2015

அக்னிச்சிறகுகள் விரித்த அப்துல் கலாம் அவர்கள்

திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மறைந்து விட்டார் என்று இரவு 11 மணி அளவில் செய்தியறிந்ததும் முதலில் நம்பவில்லை. நல்ல உடல்திறனோடு இருந்தவருக்கு என்னவாயிற்று என்று யோசித்துக்கொண்டே தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக மாற்றி உறுதி செய்து கொண்டேன்.

அப்துல் கலாம் அவர்களைக் குறித்து நான் எழுதித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை எனினும் அவரது வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொண்ட சில பாடங்களை பதிவு செய்யவில்லையென்றால் அது எனது கடமையிலிருந்து மாறுவதாகப்படும்.

ராமேஸ்வரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் எனினும் படிப்பில் அவரது கெட்டித்தனமும், கடின உழைப்பும், நேர்மையும், வைத்திருந்த உயர் பண்புகளும் தான் அவரை இந்த தேசத்தின் தலைவராகும் அளவிற்கு உயர்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் மூத்த விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் என்ற அகங்காரத்தையோ, தலைக்கனத்தையோ அவரது இறுதி மூச்சிருக்கும் வரை காண்பிக்கவில்லை என்பதை விட வேறு என்ன வேண்டும் அவரது எளிமையைப் பற்றிக் குறிப்பிட.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' கணியன் பூங்குன்றனார் பெருமையையும், தமிழின் பெருமையையும் உயர்த்திப் பேசியவர் என்பதையும், மரண தண்டனைக்கு எதிரான கொள்கையுடைவர் என்பதையும் மறந்து விட முடியாது. 



புத்தகங்கள் அதிகமாக வாசித்திராதவன் எனினும் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் முன் வாய்த்தது. ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட அந்த புத்தகம் சைனீஸ், ப்ரெஞ்ச் உட்பட பதிமூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றால் அவரது சுயசரிதை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பெரிது.



இன்றும் அவர் மறைவிற்கு நாடு, மொழி, இன, மத வேறுபாடின்றி இரங்கல் தெரிவிக்கிறார்கள் என்றால் அது அவரது எளிமைக்கும், திறமைக்கும், நற்பெயருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதையே.

அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தாலும், இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவரைத் தனது குடும்பத்தில் ஒருவராக பாவிப்பதை அவரது மறைவிற்குப் பின் அறிந்து கொள்ள முடிகிறது.

அவர் மறைந்தாலும் அவரது புகழும், இந்திய விஞ்ஞானத்திற்கு அவர் அளித்த அறிவுக் கொடைகளும் என்றும் மறையாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

-----

பி.கு: ஜூலை 28 ஒரு தினம் மட்டும், வழக்கமாக Facebook பக்கத்தை தற்காலிகமாக செயலிழக்க செய்வது உண்டு, காரணம், அதில் கடமைக்கென வலையேற்றப்படும் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி எழுதுவதில் இருந்து தப்பிப்பதற்காக. அது போன்று Deactivate செய்து விட்டு மற்றுமொரு தலையங்கத்தில் எழுதலாம் என மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன், அதன் முன் தற்செயலாக தொலைக்காட்சியைக் கவனிக்கவே கலாம் அவர்களின் மறைவுச் செய்தி. அதனாலேயே இந்த பதிவு.

July 22, 2015

ஆன்மீகப் போலிகள்

மதம் கொண்டு, மதியின்றி. பிறரின் அமைதியான வாழ்க்கை முறைக்கு சில போலி ஆன்மீகவாதிகள் பங்கம் விளைவிப்பது சமீப காலமாக தொடர்வது வருத்தத்திற்குரியது. அப்படிப்பட்டவர்களை ஆன்மீகவாதிகள் என்று குறிப்பிடுவதை விட தீவிர(மத)வாதிகள் என்று குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமதான் மாதம் கடந்த சில தினங்கள் முன்னர் தான் ஈத் நன்னாளுடன் முடிவிற்கு வந்தது. இஸ்லாமிய சகோதரர்களின் முதல் நோக்கமே சமாதானம் என்பது தான். எவரையும் சந்திக்கும் பொழுதும் முதலில் அவர்கள் சொல்வது உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் - 'அஸ் சலாம் அலைக்கும்' என்பதே.

ஆனால் அந்த சமாதானத்திற்கே உலை வைக்கும் படியான செயலை, அவர்களின் பிரார்த்தனை நேரத்தில், மசூதிக்குள்ளேயே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த சம்பவம் குவைத் நாட்டில் சில வாரங்கள் முன்னர் நடந்தது; இது போன்றே பாகிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் என்று அறியப்படுபவர்களே!!! மதம் கொண்டு சமாதானத்திற்கு உலை வைக்கின்றனர்.

தமிழகத்திலும் ரமதான் மாதத்தில் இஸ்லாம் சகோதரர்களுக்குள்ளேயே அரிவாள் வெட்டுகளும், கொலைகளும் அரங்கேறியதை பத்திரிக்கைக்கள் வாயிலாக அறிய நேரிட்டது.

இந்த அனுபவங்களையும், சில பெயர் கிறிஸ்தவ, பெயர் இந்து நண்பர்களின் உபவாச, விரத காலங்களிலும் இருந்து பெற்ற அனுபவங்களையும் வைத்துப் பார்க்கையில் இம்மூன்று மதத்தினருமே நோன்பு, உபவாசம், விரதம் இருப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நன்றாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
  
பல கிறிஸ்தவர்கள் உபவாசம் என்பதன் பெயரில் ஒரு மாதம் முதல் நாற்பது நாட்கள் வரை புலால் உண்பதை நிறுத்துவார்கள், பிரார்த்தனையும் தவறாது செய்வார்கள், ஆனால் அவரகள் செயல்களில் எந்த வேறுபாடும் இருக்காது; தொடர்ந்து பொய் சொல்வதையும், பிறர்மேல் வீண் பழிகளை சுமத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். தேவையிலிருப்போருக்கு உதவி செய்யவும் மறுப்பார்கள். இவர்கள் போலிகளன்று வேறென்ன?

சில இந்து சகோதரர்கள், சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கிறேன், அதனால் மது அருந்துவதில்லை, புகை பிடிப்பதில்லை, பொய் சொல்லுவதில்லை என்று பக்தி மயமாக இருப்பார்கள். ஆனால் மாலையைக் கழற்றினால் மது அருந்தலாம், எந்த தீய பழக்கவழக்கங்களிலும் ஈடுபடலாம் தவறில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பலரது நோன்பும், உபவாசமும், விரதமும் இன்று இப்படித்தான் பெயரளவில் இருந்து வருகிறது. ஆன்மீகத்தை சரிவர புரிந்தவர்கள், வேதங்களை முறையாக பயின்றவர்கள் சமுதாயத்துடன் அமைதியை கடைபிடிக்கவே விரும்புவார்களன்றி சமுதாயத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

அனைத்து ஆன்மீக மார்க்கங்களும் சமாதானத்தையே பறைசாற்றி வருகின்றன, வேதங்களை சரியாக புரிந்து கொள்ளாத சில அரைவேக்காட்டு ஆன்மீக வாதிகள் தான் சமாதான குலைச்சலுக்கு காரணிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.

விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும், குறிப்பாக எளிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று ஓங்கியிருப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவு திருட்டும், கொலைகளும், ஏமாற்றுதலும் நடந்து வருகிறது. கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் சாமியார்களும், போதகர்களும் இந்த வகையினரே.

மதவேறுபாடின்றி சக மனிதர்களை மனிதர்களாய் பாவிக்கும் நாள் வரும் வரை இங்கு மதத்தின் சாயலால் நடந்தேறும் வன்முறைகளுக்கு முடிவிருக்காது என்று தான் தோன்றுகிறது.


July 02, 2015

150 ஆவது ஆண்டில் - The Salvation Army - தொண்டு நிறுவனம்


1865 ல் கிழக்கு லண்டன் கிறிஸ்தவ பணி என்று ஆரம்பிக்கப்பட்டு இந்நாட்களில் இரட்சணிய சேனை (The Salvation Army) என்றறியப்படும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் 2/7/2015 ல் தனது 150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

அந்த கொண்டாட்டங்களின் ஒருபாகமாக கிழக்கு லண்டனின் மிகப்பெரிய அரங்கான O2 Arena வில் 126 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு இந்த மாதம் முதல் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

இரட்சணிய சேனை அமைப்பு இப்போது 126 நாடுகளில் தனது தன்னார்வ தொண்டுப் பணிகளையும், நலிந்தவர்களுக்கு கல்விச்சேவையையும், மருத்துவச் சேவைகளையும், பேரிடர் உதவிப்பணிகளையும்,  வழங்கிவருவதைக் குறித்து, இந்த அமைப்பைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவைப் பொருத்த வரையில் 1882 ல் பம்பாயில்  ஃப்ரெடரிக் பூத் டக்கர் என்ற ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட இதன் பணிகள் ஆரம்ப காலங்களில் பல நெருக்கடிகளையும், சவால்களையும் கடந்து வந்ததை மறுப்பதிற்கில்லை.

1853 ல் தமது தந்தை பீகாரில் துணை ஆணையாளராக இருந்த போது பிறந்த ஃப்ரெடரிக் பூத் டக்கர். 1881 ல் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்த போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தொண்டுப்பணிக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதுவரை அமிர்தசரஸ், சிம்லா ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளராகவும், உதவி நீதிபதியாகவும் பதவிகள் வகித்திருக்கிறார்.

உயர்பதவிகள் பல வகித்திருந்தும் தொண்டுப் பணிகளை செய்யும் படியாக தன்னை அர்ப்பணித்து தனது ஆங்கிலப் பெயரை ஃபக்கீர் சிங் எனவும் மாற்றி, பல தொலைவுகள் கடந்து, பசியிலிருப்போர், கைவிடப்பட்டோர், பிச்சைக்காரர்கள், மதுபான அடிமைகள் போன்றோர் மத்தியில் தொண்டு ஆற்றியிருக்கிறார்.

இவரைப் போன்றோரினாலும், தங்கள் வாழ்க்கையை நலிந்தவர்களுக்கென அர்ப்பணித்த ஆங்கிலேயர்களாலும், இந்தியர்களாலும் கட்டி எழுப்பப்பட்ட இரட்சணிய சேனை தொண்டு நிறுவனம் இன்று இந்தியாவில் நலிவடைந்து வருவதை கனத்த மனதுடன் பதிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.

குறிப்பாக தாயில்லா குழந்தைகள் பாதுகாப்பு மையம், ஊனமுற்றோருக்கான பட்டயப் படிப்பு பயிற்சி மையம், ஏழை எளியோருக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, இந்தியாவில் 133 ஆண்டு கால சரித்திரம் உடைய தொண்டு நிறுவனத்தை அதன் அழிவிற்கு நேராக வழிநடத்தி செல்லுகிறார்களோ என்ற அச்சம் எழாமலில்லை.

பூத் டக்கர் அவர்கள் 1891 ல் 'இருண்ட இந்தியா' என்ற புத்தகத்தில்  இந்தியா, பட்டினியினாலும், பஞ்சத்தினாலும், விபச்சாரத்தினாலும், குடி வெறியர்களாலும், சாதிப் பிரிவுகளினாலும் பெரும்பாடு படுகிறது என்று குறிப்பிட்டிருக்கும் நிலை 124 ஆண்டுகள் கழித்து இன்றும் தொடர்கிறது என்பது மிகவும் வருத்தப்படவும், கேவலப்படவும் வேண்டிய விஷயம்.

இத்தனை களேபரங்கள் மத்தியிலும் இந்த அமைப்பின் நற்பணிகளுக்கென்று தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வரும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

150 ஆவது ஆண்டு  கொண்டாட்டங்களில் பங்கு பெற இந்தியாவில் இருந்து பிரயாணப்பட்டுச் சென்றிருப்பவர்கள், நாமும் லண்டன் சென்றோம், சில நினைவுகளைத் தேக்கினோம் என்ற மட்டில் நின்று விடாமல், புதிய உத்வேகத்தோடு தொண்டுப் பணிகளைத் தொடர்வார்களானால், 150 வருடங்கள் முன்னர் இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்திய வில்லியம் பூத்தின் கனவு நனவாகும்.

Related Posts with Thumbnails