July 29, 2015

கலாம், எம் எஸ் வி மரணமும் ஊடகங்களின் மறுபக்கமும்

ஊடகங்களின் வளர்ச்சி ஒரு விதத்தில் நல்லது என்றாலும் சில ஊடகங்கள் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று அவைகளின் மறுமுகத்தை காட்டி விடுகின்றன. ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் மூலம் முரணான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பலர் பகிர்வதும் இணையம் வளர்ந்த அளவு எண்ணங்கள் வளரவில்லை என்பதையும் உறுதி செய்கின்றன.

கடந்த இரு வார இடைவெளியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் இயற்கை எய்தினர். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் அவர்கள் இருவர் தொடர்பான செய்திகளை வெளியிட்டும், அவர்கள் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்டும் இருந்தன.

எம்.எஸ்.வி அவர்கள் இயற்கை எய்திய மறு தினம் தந்தி தொலைக்காட்சியில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம், பெண் தொகுப்பாளர் ஒருவர், விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த 'காதோடு தான் நான் பாடுவேன்' பாடலைப் பாடுங்கன்னு கேக்கவும், பயங்கரமா கோபப்பட்டாங்க ஈஸ்வரி அவர்கள். அது குமார் இசையமைத்தது, இங்க தான் நீங்க தப்பு செய்றீங்க, இது கூட தெரியாம ஏன் கேள்வி கேக்குறீங்கன்னுட்டாங்க.

அத சமாளிச்சிட்டு அந்த பெண் தொகுப்பாளர், எம்.எஸ்,வி இசையில வேற எதாவது பாடல் பாடுங்கன்னு கேக்கப் போக, அதுக்கு ஈஸ்வரி அவர்கள் சொன்ன பதிலை அந்த தொகுப்பாளர் மறக்க பல நாட்கள் ஆகலாம். 'மனுசர் இறந்திட்டாருங்கிற துக்கத்தில இருக்கேன், இதில பாடல் பாட சொல்றீங்களேன்னு சொல்ல, சரி தொடர்ந்து பேசுவோம்னு எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைப்பைத் துண்டித்து விட்டு தொடர்ந்து சங்கர் கணேஷ் அவர்களோடு உரையாடலைத் துவங்குகிறார்.

இது இப்படியெனில், கலாம் அவர்கள் மறைவிற்கு பின்னர் தேச, மத, இன, மொழி வேறுபாடின்றி மக்களும், ஊடகங்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில், 24/7 செய்திகள் என விளம்பரம் செய்திருக்கின்ற சத்தியம் தொலைக்காட்சியில் நள்ளிரவு ஒரு மணி வரை கிறிஸ்தவ போதனைகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். காலை 6 மணி வரை அவரகளது ட்விட்டர் பக்கத்திலோ, இணையதளத்திலோ கலாம் அவர்களின் மறைவு குறித்த எந்த பதிவும் கிடையாது. இதிலிருந்தே இவர்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.

மறுபுறம் சமூக வலைதளங்கள் வாயிலாக சில சுயநலம் பிடித்த பதிவர்கள், பழைய நிகழ்வுகளை, கலாம் அவர்களின் இறுதிப் புகைப்படம், அவர் பேசிய இறுதி காணொளி/லி எனவும்; அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாம் அவர்களின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க வருகிறார், கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதம் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருக்கிறது (திர்) என உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவு செய்து மக்களை ஏமாற்றினர்.



இது போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பதிவு செய்பவர்கள் தான் இப்படி என்றால், அதன் ஆழமும், உண்மையும் அறியாமல் பகிர்பவர்களும் ஆயிரக்கணக்கானோர் என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இன்று பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பு இருக்கிறது. ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் பலரும் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. கூடவே, தகவல்களை உறுதிப்படுத்தாமல் பகிர்வதும் அதிகரித்திருக்கிறது. 2011 ஆம் வருடத்திலிருந்தே பலமுறை இந்த சமூக வலைதளங்கள் டாக்டர்.கலாம், ஆச்சி மனோரமா, இயக்குனர் பாலச்சந்தர் போன்ற பலரை  புரளிகளால் நோயாளிகளாக்கியிருக்கிறது, சாகடித்துமிருக்கிறது.

இது, 2014 ல் நான் நலமாய் இருக்கிறேன்  என மறைந்த அப்துல் கலாம் அவர்களே எழுதிய ட்வீட்.
  
சில like களுக்காகவும், share களுக்காகவும் சமூக வலைதளங்களில் இது போன்ற பொய் பிரச்சாரங்களை பதிவு செய்வது வாடிக்கையாகவே தொடர்கிறது. நாம் சுதாரிக்கவில்லையென்றால் நம்மையும் முட்டாளிக்கி விடும் இந்த இணைய சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

பி.கு: இதுவரை ஷில்லாங்கில், கலாம் அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்ததோ, அவர் உரையாடிய இரு நிமிட உரையோ எங்கும் வலையேற்றப்படவில்லை.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails