August 27, 2015

நல்ல நாள் பார்க்கும் கிறிஸ்தவர்கள்

சமீபத்திய பதிவுகள் அனைத்தும் கிறிஸ்தவம் சார்ந்தும், சமயங்கள் சார்ந்துமே இருப்பதை மறுப்பதற்கில்லை. பெற்று வருகின்ற பெரும்பாலான அனுபவங்கள் சமயம் சார்ந்து இருக்கின்ற படியால் இப்படியாக பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தின் பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், கிறிஸ்தவர்கள் என்று அறியப்படுபவர்களையும்!! கொண்டிருப்பதை பலரும் அறிந்ததே.

பெரும்பாலும் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்களை உடைய குடும்பங்கள் தான் குமரி மாவட்டத்தில் அதிகம். அதில் பெரும்பாலான குடும்பங்கள் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளையும் கொண்டிருக்கின்றன.

நாள், நேரம், நட்சத்திரம், ஜாதகம் மற்றும் இன்னபிற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர் தான் கிறிஸ்தவர்கள் தெய்வமாக வணங்கும் 'இயேசுகிறிஸ்து'. ஆனால் இன்று, மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் அதிலும் பட்டதாரிகள் கூட மூட நம்பிக்கைகளில் ஒரு பிடியை வைத்திருப்பதைத்தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

இன்று (27/08/2015) தற்செயலாக அரசன்குழியில், திருமணம் நடைபெறும் ஆலயம் வரை செல்ல வேண்டியதாயிற்று. அரசன்குழியில் திருமணம் நடத்தும் போதகரை அந்த திருமணம் முடிந்து இறச்சகுளம் அருகில் இருக்கும் டென்னிஸ்புரம் ஆலயம் வரை கொண்டு சென்று விட வேண்டியிருந்தது. டென்னிஸ்புரத்தில் மற்றுமொரு திருமணத்தை அதே போதகர் நடத்த வேண்டிய கட்டாயம். (பெண் வீட்டார் அழைப்பின் படி)

10:20 ற்கு முடிய வேண்டிய திருமணம், மாப்பிள்ளை வீட்டாரின் தாமதத்தால் மணி 10:50 கடந்தும் முடிந்தபாடில்லை. மற்ற வீட்டிலிருந்து போதகருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கவே,  போதகரை அரசன்குழியில் இருந்து டென்னிஸ்புரத்திற்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றேன்.

இவ்விரு திருமணங்கள் மட்டுமல்லாது துவரங்காடு, திட்டுவிளை மற்றும் இறச்சகுளம் போன்ற பகுதிகளிலும் திருமணங்கள் நடைபெற்றன. இத்தனை திருமணங்கள் ஒரே நாளில் வைப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் அது நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் சார்ந்த விஷயமாகத்தான் இருக்கும்.

இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல, நாட்காட்டியின் பஞ்சாங்கத்தில் இன்று முகூர்த்த நாள் எனவும், 10:45 முதல் 11:45 வரை நல்ல நேரம் என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து நல்லதைச் செய்வார், நல்லதையே செய்வார் என விசுவாசிக்கிறவர்கள் நல்ல நாளும், நல்ல நேரமும் பார்த்து திருமணம் செய்வதும், செய்துவைப்பதும் முரண்.


பாமர ஜனங்கள் தான் மூடநம்பிக்கைகளில் இன்னும் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றால் போதகர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அவர்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஆச்சர்யம் தருகிறது. நிச்சயமாகவே, நாசரேத் ஊரைச் சார்ந்த இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதிலும், கிறிஸ்தவன் என்று பெயரளவில் சொல்லிக்கொள்வதற்குமிடையே அதிக வித்தியாசமிருப்பதை மறுப்பதற்கில்லை.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails