December 24, 2015

சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் @ இயேசுவின் பிறப்பு


வியாபாரமயமாக்கப்பட்ட இன்றைய உலகம், இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் காலங்களையும் விட்டுவைக்கவில்லை. 

யகூதா என்றறியப்படுகின்ற யூதேயாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவரான  יֵשׁוּעַ (Yeshu'a in Aramaic ) இயேசுவை, இந்த குளிர்காலங்களிலே ( டிசம்பர் 25 முதல் ஜனவரி 19 வரையிலான இடைப்பட்ட நாட்களில்) யூலே, கிறிஸ்துமஸ், எக்ஸ்மஸ், நோயல் என பல பெயர்களில் நினைவுகூர்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் அதாவது ஏறத்தாழ 6-12 நூற்றாண்டுகளில் இவ்விதம் நினைவு கூர்வதில் எவ்வித சந்தைப்படுத்தலோ, வியாபார நோக்கமோ இல்லையெனினும் அண்மைக் காலங்களில் இயேசுபிறப்பின் நினைவு கூறலை கிறிஸ்துமஸ் என்ற அடைமொழியோடு சந்தைப்படுத்தி, வியாபார களமாக்கி விட்டது தான் இம்மானுடத்தின் சூட்சுமம். 

வாழ்த்து அட்டையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த சந்தைப்படுத்தல், புத்தாடை, அலங்காரம், பட்டாசு, சான்டா கிளாஸ், சிவப்பு வர்ண தொப்பி, நட்சத்திர விளக்கு, அலங்காரத்தோரணை கொண்ட மரம், மதுபானம், கேக் என இன்னும் நீள்கிறது. 

மேற்கத்திய கலாச்சாரத்தை ஒரு போதையாகப் பார்ப்பவர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் இரட்டிப்புப் போதை. 

அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 30-35 மில்லியன் அலங்கார மரங்கள் விற்கப்படுவதாக history இணையதளம் குறிப்பிடுகிறது. 

அமெரிக்காவில் மட்டுமே இப்படியான மூடத்தனத்திற்கு இவ்வளவு பணம் விரயமாகிறது என்றால் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்ட இந்த கிறிஸ்துமஸிற்கு எவ்வளவு பணம் விரயம் செய்யப்படுமென்பது ஊகிக்க முடியாதது. 

பணம் செழுத்தவன் விரயமாக்குவதில் இங்கு எவர்க்கும் நட்டமில்லை, மாறாக இவர்களைப் பார்த்து நாமும் அலங்காரப்படுத்த வேண்டும் என்று கடன் வாங்கி பிச்சைக்காரனாகும் பாமரன் தான் இந்த சந்தைப்படுத்தலில் விழுந்து போகிறான்.

விவேகானந்தரின் கூற்றான "சிக்கனம் என்பது எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதில் அல்ல; என்ன தேவைகளுக்காக செலவு செய்கிறோம் என்பதில் அடங்கியுள்ளது" என்பது தான் இந்த சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் நம்மைக் கேட்க வேண்டிய கேள்வி. 

அதோடு இயேசுவின் பிறப்பையே, மேசியா(கிறிஸ்து)வின் பிறப்பு என்று அடையாளப்படுத்தி இந்த சந்தைப்படுத்தலை உலகமயமாக்கியது தான் அரசியல் வியாபாரிகளின் தந்திரம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளல் அவசியம். 

December 17, 2015

சென்னை வெள்ளத்தில் வெளுத்த கிறிஸ்தவ சபைகளின் சாயம்!

சென்னையில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடிந்தபாடில்லை; நிவாரணப்பணிகள் முழுமையாக சாமானியனை சென்று அடையவுமில்லை; குப்பைமேடுகளும், காசிமேடுகளும், முழுமையாக சுத்தமாக்கப்பட்டு மக்கள் குடுயேறும் நிலைக்கு வரவில்லை; அதற்குள்ளாக கிறிஸ்தவ வியாபாரிகள் டிசம்பர் 12 ஆம் தேதி புதுவாழ்வு ஏஜி சபையில் திறப்பின் வாசல் ஜெபம் என்பதன் பெயரில் தங்கள் சுயமுகத்தை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.

சாமானியர்களும், நெஞ்சில் ஈரமுடையவர்களும், தன்னார்வலர்களும் களத்தில் நின்று உதவிகளும், நிவாரணப்பணிகளும், சுகாதாரப்பணிகளும், மருத்துவப் பணிகளையும் செய்து வரும் இத்தருணத்தில் இவர்கள் ஜெபம் செய்கிறார்கள் (அதையும் விளம்பரப்படுத்தித் தான் செய்கிறார்கள்!!) அதிலும் சென்னையைப் பேரழிவிலிருந்து காத்த தேவனுக்கு நன்றி என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள் (அதாவது இவர்கள் பணம் ஈட்டுகின்ற தலைநகரத்தை முழுமையாக அழிக்காததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் போலும்!!)


"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கிற மத்தேயு 6:5 ஐ அறியாதவர்களா இந்த வியாபாரிகள்!!

ஜெபம் என்பதன் பெயரில், இது போன்ற சுய தம்பட்டங்களைத் தவிர்த்து இவர்கள் தலைமையில், இவர்களுக்கு கீழிருக்கும் மக்களை ஒருங்கிணைத்து களமிறங்கியிருந்தாலே, இந்நேரம் சென்னை சுத்தமாகியிருக்குமே! களப்பணி ஆற்றுவதிலிருந்து இவர்களை தடுப்பது எது?

 ஓய்வு நாளாதலால் ஜெபமும், போதனையும் தவிர்த்து உதவி செய்தல் ஆகாது என்று இறுமாப்புக் கொண்ட சீடர்களை இவர்கள் வணங்கும் இயேசு கடிந்து கொண்டதை அறியாதவர்களா!! இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். மத்தேயு 12:10-12

இந்த சிறியவர்களுக்கு எவனொருவன் செய்யாமலிருக்கிறானோ அது பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு செய்யாமற் போனதாகும் என்பதையும் அறியாத பதர்களா இவர்கள்!! மத்தேயு 25:34-46

கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்பதையேனும் அறிவார்களா இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். யாக்கோபு 2:16-20

நற்போதனைகளைத் திரித்து மக்களுக்கு எடுத்துரைப்பதாலும், நற்செயல்கள் செய்ய இவர்கள் கைகள் குறுகியிருப்பதும் கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு புகழைச் சேர்ப்பதுமல்ல.

மக்களிடம் இருந்து காணிக்கை என்பதன் பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு மக்கள் அவர்களையும் அறியாமலே பலியாவது தான் வேதனை தரும் விடயம். மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளல் அவசியம்.

வியாபாரமாக்கப்பட்ட இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளிடம் மனிததத்தையும், சக மனிதனுக்கு உதவும் திராணியையும் எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம் என்பது மட்டும் புரிகிறது.
Related Posts with Thumbnails