July 08, 2016

விபத்துகளும் - வேதனைகளும் - தொடரும் சமூக அலட்சியங்களும்

அண்மை காலங்களில், தினசரிகளைத் திறந்தாலே பக்கென்றிருக்கிறது. நின்று கொண்டிருப்பவர் முதல் பயணம் செய்பவர் வரை விபத்துகளால் மடிவது மிகச் சாதாரணமாகிப் போய் விட்டது. பல வழிகளிலும் பாழ் படிந்த நம் சமூகக் கட்டமைப்பையே இதற்கு முழு முதற் காரணமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

தமிழகம், இந்தியாவிலேயே அதிக விபத்துகளை எதிர்கொள்கிற மாநிலமாகத் திகழ்வதாக, கடந்த ஆண்டின் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.

போக்குவரத்து விதிகளையும், சட்டங்களையும் கடைபிடிக்கத் தவறும்  இந்த சமூகமும், தவறுபவர்களைத் தண்டிக்க வேண்டிய போக்குவரத்து காவல்துறையினர் தமது பணியை நிறைவேற்ற தவறுவதும், ஊழல் பேர்வழிகளால் அமையப்பெற்ற தரமற்ற சாலைகளும் மிகவும்  வருத்தப்பட வேண்டிய விடயம் மட்டுமல்லாமல், வெட்கப்பட வேண்டிய விடயமும் கூட.

எதிர்பாரா நிகழ்வை விபத்து என்று கணக்கில் கொள்ளலாம், ஆனால் வரைமுறைக்கு அதிகமான வேகத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்பதறிந்தும்; தலைக்கவசம் அணியாமல் சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதறிந்தும்; இடம் வலம் திரும்பும் முன்னர் சைகை காண்பித்த பின்னரே திரும்ப வேண்டும் என்பதறிந்தும்; பின்பற்றாமல் ஏற்படுத்தும் மோதல்களை விபத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளல் ஆகாது. அவை கொலை/தற்கொலைகளாகவே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.


சமுக அக்கறையின்றி, வெறும் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து வரும் இந்த சமுதாயமானது, சட்டங்களையும், விதிகளையும், வெறும் ஏடுகளில் உறங்கும் எழுத்துக்களாகவே தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

விதிமீறல்கள், எந்தவொரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் அப்பட்டமாக இங்கு செய்யப்படுவது தான் நம் சமூகத்தின் மிகப் பெரிய நோய்! எப்படி ஒரு அமைச்சர் காலாற நடந்து சென்று மக்களின் குறைகளைக் கேட்பதென்பது நம் சமூகத்தில் சாத்தியமில்லையோ, அதே போன்று, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர், தண்டனைகளுக்கு அஞ்சுவது என்பதும் இங்கு சாத்தியமில்லை.

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பிரதிபலிப்புக் கண்ணாடிகள் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் (குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள்)  தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கு தாண்டுதல்  என விதிமீறல் செய்வோர் தினம் தினம் லட்சக்கணக்கானோர்.

இப்படியாக விதிமீறல் செய்பவர்களால் கடந்த ஆறு மாதங்களில், இருமுறை சிறிய காயங்களுடன் இருசக்கர வாகன விபத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். (இரு தினங்கள் முன்னர் சரக்கு வாகனம் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 24 வயதே நிரம்பிய சகோதரர் ஒருவர் சென்னையில் மாண்டிருக்கிறார்).

அப்படியே விதிமீறல் செய்வோர், போக்குவரத்துக் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாலும், எனக்கு இன்னாரைத் தெரியும், நான் அன்னாரின் உறவு என்று கூறி சமாளித்து விடுகிறார்கள். மறுபுறம் காவல்துறையினர், அரசு அலுவலகங்களில் பணியிலிருப்பவர்களையும், அரசியல் செல்வாக்கு உடையவர்களையும் அவர்களுக்கு பரிச்சயமானவர்களையும் எவ்வித சோதனைகளுக்குள்ளாக்குவதுமில்லை.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் இருந்தும் அதை அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் கொடுத்து வைத்தலும், காவல்துறையினரைக் கண்டால் மட்டுமே அதைத் தலையில் அணிவதும். நான்கு சக்கர வாகனங்களில், இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) காவல்துறையினரின் சோதனையின் போது மட்டுமே அணிவதும், சிவப்பு விளக்கு நிறுத்தங்களில், காவல்துறையினர் இல்லாவிடில் எளிதாகக் கடந்து செல்லுதலும் நம்மவர்களுக்கு கைவந்த கலை.

இவை போன்றதான நம் சமூகத்தின் ‘ஏனோதானோ’ பழக்கவழக்கங்களும், பெரு வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகளையும், சிறு வாகன ஓட்டுனர்களையும் (குறிப்பாக மிதிவண்டிகளை) ஏளனமாகப் பாவித்தலும், போக்குவரத்து விதிமுறை மீறல்களும், கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் இல்லா நிலையும், பாதசாரிகளுக்கான நடைபாதை ஆக்கிரமிரப்புகளைக் கண்டுகொள்ளாமையும், விதிமுறைகளை சரிவர நடைமுறைப் படுத்தாமையும், காவல்துறையின் கண்டுகொள்ளாமையும், மிக மோசமான சாலைகளும் மாறாத வரை, விபத்துகள் @ கொலைகளும், தற்கொலைகளும் தொடர்ந்து நிகழவே அதிகம் வாய்ப்பிருக்கின்றது. 

May 19, 2016

தேர்தல் முடிவுகளும், புரிதலும்

இந்த முறை மக்களை மொத்தமாக குறை சொல்லி விடவும் முடியாது. சற்று தெளிவாகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். வாக்கு சதவீதம் குறைந்தாலும் சென்ற ஆட்சிக்கெதிரான அதிருப்தியை சென்னையிலும், குமரியிலும் காண்பித்திருக்கிறார்கள். வளர்மதி, கோகுல இந்திரா, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் போன்றோரை தோற்கடித்திருக்கின்றனர். சரத்குமார் எனும் கருவேப்பிலையை தாளித்திருக்கிறார்கள். தெளிவற்ற விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக வினர் தோற்கடிப்பட்டு அவர்களின் வாக்கு சதவீதம் சரிக்கப்பட்டு இருக்கிறது. 

இனவாத அரசியல் செய்த சீமான் விரட்டப்பட்டிருக்கிறார். சாதி அரசியல் செய்கின்ற அன்புமணி அவரது சொந்த மண்ணிலேயே வீழ்ந்திருக்கிறார். 

திருமாவளவனை வெற்றி பெற வைக்கவே போராடியிருக்கிறார்கள், ஆனால் அவர்,சூழ்ச்சியால் வெறும் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 
கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடாநட்பில் சேர்ந்து வாங்கிக் கொண்டார்கள். 

கோவை. தெற்கில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வானதி தோற்றது போன்ற ஒரு சில தொகுதி வேட்பாளர்களே ஏமாற்றம் தந்தாலும் திமுக, அதிமுக வின் பிற வேட்பாளர்களை மக்கள் ஆதரித்திருப்பதில் அதிகம் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. 

காரணம் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வேட்பாளர்களும் அந்த அளவிலேயே இருந்தனர். 

சிலர் பணத்திற்கு வாக்கு செலுத்தியிருந்தாலும், பணம் மட்டுமே இந்த முடிவுகளை தீர்மானித்திருக்கின்ற்ன என்று எளிதில் சொல்லி விடவும் முடியாது. 

தேர்தல் நேரங்களில் மக்கள் பணத்தை இயல்பாகவே எதிர்பார்க்கிறார்கள். வாங்கக்கூடாது என்று பலமுனை தாக்குதல் தொடுத்தாலும்... அவர்களாக தருகிறார்கள் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என தேர்தல் அலுவலர்களிடமே மல்லுக்கு நிற்கிறார்கள். 'அரசு அலுவலகத்திற்கு சென்றால் எங்களிடம் பிடுங்குகிறார்கள் தானே' 'இப்போது நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம்' என்று தெளிவாக இருக்கிறார்கள். 

பணம் எவரிடமிருந்து கிடைக்கப்பெற்றாலும் அவர்கள் எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றிருக்கிறார்களோ அதையே செய்வார்கள். 

ஆக இங்கு முன்மாதிரியான தலைவர்கள் இல்லாதவரை மக்களில் ஒரு சாரார் தொடர்ந்து வாக்குகளை வியாபாரப் பொருளாக பாவிப்பதையே தொடர்ந்து செய்வர். 

எப்படியாயினும் தமிழகத்தில் இதுவரையில்லாத அளவிற்கு ஒரு வலுவான எதிர்கட்சி பலம் சட்டமன்றத்திற்குள் நுழைவதே இந்த தேர்தலின் வெற்றி தான். ஒரே குறை கம்யூனிஸ்ட்கள் அந்த பட்டியலில் இல்லையென்பதே!


May 17, 2016

வாக்குப்பதிவு சதவீத குறைவும் - மக்களின் அலட்சியமும் - தேர்தல் ஆணையமும்

அதென்னவோ தெரியல, சென்னையும், கன்னியாகுமரியும் திரும்பத் திரும்ப வாக்குப்பதிவு சதவீதத்தில் சுணக்கம் காண்பித்து வருகின்றன. இத்தனைக்கும் கற்றவர்களை அதிகம் கொண்டிருக்கின்றன இவ்விரு மாவட்டங்களும். 

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகக்குறைவாக சென்னையிலும், குமரியிலும் 68 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த முறையும் சென்னையில் 60% குமரியில் 66% அளவிற்கே வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
தமிழகம் நூறு சதவீதம் என்ற நோக்கத்தோடு தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் சென்னை மிகக் குறைவான வாக்குப்பதிவைக் கண்டிருப்பது சில விடயங்களை நமக்கு உணர்த்துகிறது.
முதல் முறை வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்கவில்லையா என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும், 2011 ஐ விட 2016 ல் பத்து சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் சென்னையில் பதிவாகியிருப்பதற்கு அது ஒரு பெரிய காரணியாக இருந்து விடும் என்று சொல்வதிற்கில்லை.

டிசம்பரில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு பலரும் சென்னையை விட்டு வேறு மாவட்டங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து விட்டதால் கூட குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது.
அப்படியே இடம் பெயர்ந்திருந்தாலும், தேர்தலுக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்டதான நான்கு மாத கால இடைவெளியில் முகவரி மாற்றம் செய்து அவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்க முடியும்.
தேர்தல் ஆணையம் பழைய முகவரியில் இருக்கும் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சதவீதத்தைக் குறைத்திருக்ககூடும். ஆனால் ஓட்டுப் போடுவதால் என்ன ஆகி விடப் போகிறது என்கிற மனநிலையில் இருப்பவர்களால் இதெல்லாம் சாத்தியமில்லை.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வதும் சாத்தியமான ஒன்றே. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் பிழைப்பிற்காக குடியேறிய பலர் அவர்கள் சொந்த மாவட்டங்களில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக இரட்டைப் பதிவு செய்திருப்பார்கள். இதுவும் வாக்குப்பதிவு சதவீதத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்த சாத்தியமான ஒன்று.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் ஒருபுறம் தவறு செய்கிறார்களென்றால் மறுபுறம் தேர்தல் ஆணையம் இது போன்ற இரட்டைப் பதிவுகளை சரிவர கணக்கில் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு, இரு வருடத்திற்கும் மேலான எனது முகவரி மாற்றத்திற்குப் பின்னரும் எனது பெயர் நெல்லை வாக்காளர் பட்டியலில் இன்னும் தொடர்கிறது. அதனை நீக்குமாறு இருமுறை வேண்டுகோள் விடுத்தும் இன்னும் நமது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
இவையெல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய விடயம் நமது மக்களின் அலட்சியம். படித்தவர்களை விட படிக்காதக் கிராமப்புற மக்கள் அதிகம் வாக்குப்பதிவு செய்வது கண்கூடு. வாக்களிப்பதால் என்னவாகி விடப் போகிறது, எவர் வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகிறார்கள் என்ற பரவலான பேச்சு பலருக்குள் இல்லாமலில்லை.
வாக்களிப்பதை ஒரு கடமையாகக் கருதாமல், நமது உரிமையாக கருதும் நிலைமை இருந்தால் வாக்குப் பதிவு சதவீதத்தில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்குப் பதிவு சதவீதம் வரும் தேர்தல்களில் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
அதோடு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அல்லது கணினி மூலமாக Online வாக்கு அளிக்கும் வாய்ப்புகள் குறைத்து தேர்தல் ஆணையம் வரும் காலங்களில் ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

நாகர்கோவில்
17.05.2016

May 01, 2016

தற்'போதை'ய தமிழகம்!

என்ன கொடுமைடா இது! என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கின்றது தமிழகத்தில் தற்போதைய நிலைமை. பத்திரிக்கையைத் திருப்பினால் விபத்து, கொலை, கொள்ளை, மோசடி, வரதட்சணைக் கொடுமை, கடத்தல், கற்பழிப்பு என பட்டியலிடப்படும் தனி மனித அல்லல்கள் ஒரு புறமென்றால், மறுபுறம், அந்த கட்சி சரியில்லை, இந்த கட்சி இவ்வளவு கொள்ளை என பட்டியல் போடப்படும் அரசியல் கட்சிகளின் வெறித்தனங்கள் பக்கங்களை நிரப்புகின்றன.
தொலைக்காட்சியைத் திருப்பினால் எந்நேரமும் எவரேனும் நாங்கள் இதைச் செய்வோம்! அதைச் செய்வோம்!! என கூவிக் கொண்டிருக்கின்றனர். போதா குறைக்கு அரசியல் நாகரீகமின்றி தனிமனிதத் தாக்குதல் பரவலாக அனைத்து கட்சியினராலும் தொடுக்கப்படுகின்றது; அந்த அளவில் தான் ஒவ்வொரு கட்சியினரும் நடந்தும் கொள்கிறார்கள்.
நிதித்துறையில் இருந்து நீதித்துறை வரை எங்கு செல்லினும் பாமரனுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கனியை எட்டும் முயற்சியெடுக்கவே இங்கு பலருக்கு கணி காண்பிக்க வேண்டியிருக்கிறது.
சாதிய அடக்கு முறைகளும், மதச்சண்டைகளும், பெண்ணடிமைத்தனங்களும், கல்வி வியாபாரமாக்கப்படுதலும், விவசாயிகளின் அவலங்களும், தற்கொலைகளும், இன்னும் தொடரத்தான் செய்கின்றன.
பொதுவெளியில் மக்களின் செயல்பாடு இன்னும் ஏமாற்றமளிப்பதாய் இருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து, முன் பதிவு மையங்கள் வரை வரிசையில் நிற்க வேண்டும் என்ற சாதாரண மனநிலை கூட பெரும்பாலான மக்களிடம் இல்லை. இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஏன் இத்தனை வேகமாக இயக்கப்படுகின்றன என்பதன் விடை தெரியவில்லை. சக வாகன ஓட்டுனர்களை, பாதசாரிகளை இன்னும் சொல்லப் போனால் போக்குவரத்து விதிமுறைகளைக் கூட பலரும் மதிப்பதில்லை.
மக்கள் மிக வேகமாக பயணிக்கின்றனர், ஒருவரை மற்றவர் முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பரவலாக அனைவருக்கும் இருக்கிறது; ஆனால் தானும் வாழ வேண்டும், கூடவே மற்றவரும் வாழ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. சக மனிதர்கள் இன்றி சுயமாக வாழ்ந்து விட முடியாது என்ற புரிதலும் இல்லை.
குப்பைகளைக் களைவதிலும், சுகாதாரமாய் வாழ்வதிலும் பொது மனிதராய் நமக்கு இருக்கும் அக்கறை இன்னும் சராசரிக்குக் கீழே தான். பிரயாணங்களின் நடுவே, சன்னல்களின் வழியே வீசியெறியப்படும் காகித, பிளாஸ்டிக் குப்பைகளும்; வயல்வெளிகளில் கொட்டப்படும் வேதிக் கழிவுகளும், மக்காத குப்பைகளுமே போதும் நம் அக்கறையைச் சுட்டிக்காட்ட!!
பணம் செழுத்தவன் வரி ஏய்ப்பு செய்து பகட்டாக வாழ்வதும், பணம் இல்லாதவன் கடனாலும், பசியினாலும் தொடர்ந்து மடிவதும் ஒரே மண்ணில் தான் என்பது வேதனைக்குரிய விடயம்.
இவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும் சங்கதி ‘டாஸ்மாக்’மதுபானக் கடைகள். கல்லூரி விழாக்களில் துவங்கி, திருவிழா, திருமணவிழா, கட்சி விழாக்கள் வரை மதுபானமில்லாத விழாக்கள் இல்லையெனலாம். போதை ஏற்படுத்தும் வில்லங்கங்களும், கைகலப்புகளும், விபத்துக்களும், குடும்பத் தகராறுகளும், வியாதிகளும், மரணங்களும் இன்னும் தொடர்வது தான் கொடுமைகளில் எல்லாம் பெரிய கொடுமை.
இத்தனைக் கொடுமைகளின் ஊடே நமது ஊரில் வாழ்வதை ஒரு சாகசம் என்று கூட சொல்லலாம்!
மதுவிலக்கு, கல்விக்கடன்களில் இருந்து விலக்கு, முதியோர் உதவித் திட்டம், விவசாயிகளின் நலன் காப்பு என கட்சிகள் அளித்திருக்கிற வாக்குறுதிகள் தமிழகத்தை நேர்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், சில நூறுகளுக்காக விலை போகிறவர்களும், இலவசங்களை எதிர்பார்ப்பவர்களும், அரசு நிதிகளை தம் வசமாக்கும் அதிகார வர்க்கமும், லஞ்சம் பெறும் கயவர்களும், கல்விக் கொள்ளையர்களும் தமிழகத்தில் தொடரும் வரை தமிழகத்தின் அல்லல்கள் தொடரவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

01/05/2016
நாகர்கோவில்.

March 16, 2016

அணைக்கப்பட வேண்டிய மதங்களைத் தாண்டிய சாதீ!


‘விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருக்கு சார்’, ஒருத்தரோட இரத்தத்த இன்னொருத்தருக்குக் குடுத்து உயிர் பிழைக்க வைக்கிறாங்க; ஒருத்தரோட கருமுட்டையை வேறொருத்தருக்கு செலுத்தி, அவங்க வழியாகக் குழந்தை பெத்துக்கிறாங்க; ‘இப்போலாம் யார் சார் சாதி பாக்கிறா’ என்பது போன்ற பேச்சுகள் அங்கங்கே தொனித்தாலும் சாதி எனும் தீ தொடர்ந்து பற்றியெரியத்தான் செய்கிறது.

மேம்போக்காகப் பார்த்தால் சாதி, மத, இன, நிற வேறுபாடுகள்/வெறிகள் இல்லை எனத் தோன்றினாலும் அவை ஆழ்மனங்களில் விதைகளாக இன்றும் உறங்கிக் கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு திருப்பூர் கொடூரம் ஒரு உதாரணம்.

இத்தகைய சாதிய பாகுபாடுகள் இந்து மதத்தில் மட்டுமே தொடர்ந்து இருந்து வருகிறது என்போமானால் நாம் நமது கண்களைக் கட்டிக்கொண்டும், செவிகளை அடைத்துக் கொண்டும் வாழ்ந்து வருகிறோம் என்று தான் பொருள்பட முடியும்.

தென் தமிழகத்தில் எவர் எந்த ஆலயத்திற்கு செல்கிறார் என்பதை வைத்தே அவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் எனக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடிகின்ற அளவு சாதியெனும் பேய் வியாபித்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்குள்ளேயே பல பிரிவுகள் இருந்து வருகின்றன. இதில் வேற்றுப் பிரிவினரை/ வேறு சாதியினரைத் திருமணம் செய்து கொள்ளும் கிறிஸ்தவர்கள் வெகு சிலரே.

பிற சாதி/மத/இனத்தைச் சார்ந்த ஒருவருடன் நட்பு பாராட்டுவதையே புருவம் உயர்த்திப் பார்க்கும் கிறிஸ்தவ சமூகம் தான், அன்பைப் பெருமையாக பேசுகிறது!! இணையத்தில் திருப்பூர் சம்பவத்திற்குப் பொங்குகிறது! என்று கருதுகையில் நாம் வாழும் சமூகத்தை நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

இருவருக்கிடேயே நடைபெறும் சாதாரண உரையாடல்களின் நடுவே மூன்றாவது ஒருவரைக் குறித்து பேச்செழுகையில், 'அவன் நம்மாளா'?  என்று வினவப்படுவதிலிருந்தே சாதியம் நம்மோடே பின்னிப் பிணைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மிகச்சிறப்பாக பாடும் திறமையுள்ள உறவினர் ஒருவரைக் குறித்து சில தினங்கள் முன்னர் 'அவன் மட்டும் வேற சாதிப்பயலா இருந்திருந்தா, இந்நேரம் பெரிய ஆளா வந்திருப்பான்' என்றார் அப்பா; பதிலுக்கு ஆமாம் என்றேன். அது தான் நிதர்சனும் கூட.

செய்தி ஊடகங்கள், குறிப்பிட்ட சமூகத்தினரை சிலாகித்து எழுதுவதும், அவர்களை முன்னிலைப்படுத்துவதும் இன்றளவும் இருந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதக் கொண்டாண்டங்களின் செய்திகளில் சவேரியார், கிறிஸ்து அரசர் ஆலயங்களைக் குறிப்பிட்டு எழுதிய இந்து தினசரி, லுத்தரன் உட்பட்ட ஆலயங்களை இருட்டடிப்பு செய்ததில் இருந்தே இவை போன்ற ஊடகங்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்ள முடியும்.

ிறமைகள் இருந்தும், ஒரு சாராரை மட்டம் தட்டுவதில் இன்றைய சமூகமும், ஊடகங்களும், அரசியல் வியாபாரிகளும் தொடர்ந்து குறிப்பாய் இருப்பதிலிருந்தே சாதியத்தின் வன்மத்தை உணரலாம். 'ஜீவா' 'இறுதிச்சுற்று' போன்ற திரைப்படங்கள் இதைத்தான் உணர்த்தியிருந்தன. சாதி/மதக் கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆயிரம் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், திரைப்படங்கள் வெளிவந்தாலும் தனிமனித சிந்தனை மாறாவிடில் இது இன்னும் தொடரவே வாய்ப்பிருக்கின்றது.

பிறந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் வேலையில் அமருவோரை விட, பிறந்த ஊரிலேயே வளர்ந்து, படித்தோ/படிக்காமலோ சிறு வேலைகளில் அமருவோரின் மனநிலையும், வீம்பிற்காக அவர்கள் முன்னெடுக்கும் சாதியம் சார்ந்த கருத்துகளும், கொலை செய்யும் அளவிற்கு வீரியம் மிக்கவை என்பது மறுக்கமுடியாத ஒன்று. குறுகிய வட்டத்திற்குள்ளான அவர்களது வாழ்க்கை முறையும், பரந்துபட்ட சிந்தனையின்மையுமே இதற்கு காரணம் எனலாம்.

'எங்க ஏரியா உள்ள வராதே' போன்றதான வாசகங்களும் இவர்களிலிருந்தே உண்டாகியிருக்க வேண்டும்!! ஊர்களில் வயது முதிர்ந்தும், எண்ணங்களில் முதிர்ச்சியடையாத சிலரின் சொற்களுக்கு விலைபோகும் இளைஞர்களைக் குறித்து கவிஞர். மகுடேசுவரன் இரு தினங்கள் முன்னர் பின்வருமாறு மிகத் தெளிவாக எடுத்தியம்பியிருந்தார்.
    
       "சாதி ஆளுமைக்குப் பெயர் பெற்ற பிரிவினரில் தேர்ச்சியான கல்வியறிவு பெற்றவர்கள் இடத்தைக் காலி செய்து விட்டார்கள். வெளிநாட்டுக்கும் பெருமாநகரங்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். போனவர்கள் போக, மீதமுள்ளவர்களில் பலர் வாழ்க்கயை மாற்றத்தக்க புதிய கல்விக்கோ சிந்தனைக்கோ ஆட்படாத பழைமையின் எச்சங்கள். பெரும்பாலும் 'மதுக்குடியர்கள்'. இவர்கள் தீவிரமாக ஈடுபடுவதற்கு ஏதேனும் ஒரு உணர்ச்சிகரமான பற்றுதல் வேண்டியிருக்கிறது...

    ...அந்த இடத்தில் தான் ஏதோ ஒன்றின் அடிப்படைவாதம் அவர்களைக் கவர்கிறது. சாதி, மதம் போன்ற அடிப்படைவாதங்களுக்கு முதலில் இரையாகிறார்கள். இந்த அடிப்படைவாதக் கொள்கையில் நின்றாலும் கூட, ஆக்கப்பூர்வமாகச் செய்வதற்கு எண்ணற்றவை இருக்கின்றன. ஆனால், அவற்றை நோக்கி அவர்களை யாரும் வழிநடத்தமாட்டார்கள். இது ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய சமூக நிலவரம். மேலோட்டமான உரையாடல்களால் இவற்றை களைவதற்கில்லை" என்றிருந்தார் கவி. மகுடேசுவரன். இது தான் இன்றைய நிதர்சனம்.

ம்பேத்காரையும், பெரியாரையுமே பைத்தியம் என்கிற கொலைவெறியர்கள்; பகிரங்கமாகக் கொல்லப்பட்டவரின் சடலத்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்பவர்கள்; கணவனின் சடலத்தைக் கூட இறுதியாக ஒரு முறை பார்த்து விடத் துடித்த மனைவியின் தனி மனித சுதந்திரத்திற்கு தடை போட்ட அரசு; வாக்குகளுக்காக இவற்றைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் திராவிடக் கட்சிகள்; சாதி அரசியலை முன்வைக்கும் பாமக போன்ற கட்சிகள் என நீளும் இந்த பட்டியல் இல்லாமல் போகும் காலம் மட்டும் சாதிவெறி தொடர்ந்து இருக்கத்தான் போகிறது.

புகைப்படம் நன்றி: G. ராமமூர்த்தி 
-------------

(சாதியின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி/வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை, பொருளாதார வசதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீடாக மாற்ற வேண்டியதைக் குறித்ததான வரைவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை இனி வரும் அரசுகளேனும் புரிந்து செயல்படுதல் அவசியம்)

February 23, 2016

சுவரொட்டி, விளம்பரப் பலகை மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழகம்

'டிஜிட்டல்’ தொழில்நுட்பம் முறையிலான அச்சுகள் வந்த பின்னர், விளம்பரப் படுத்துதல் என்பது ஒரு புதிய பரிமாணத்திற்குள் காலடி எடுத்து வைத்ததை மறுப்பதிற்கில்லை. வர்ணமயமான, ரசிக்கும் படியான டிஜிட்டல் விளம்பரப்படுத்துதல் என்பது இன்று துதிபாடல்களாலும், தனிமனித விளம்பரப்படுத்துதலாலும், சுய தம்பட்டங்களாலும் அதன் அழகை இழந்து நிற்கிறது.

சிறிய விழாக்கள் முதல் பெரிய மாநாடுகள் வரை டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் வைக்கப்படாத நிகழ்வுகள் இன்று விரல்விட்டு எண்ணக்கூடியவையே. கட்சி விழாக்கள், கோவில் விழாக்கள், கிறிஸ்தவ கூட்டங்கள், திருமணங்கள், திரைப்பட வெளியீடுகள் என எதுவும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆளுயரத்திலிருந்து, ஆனை உயரம் வரை வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மூலம் சாமானியன் படும் அல்லல்களுக்கு அளவில்லை. இது போன்ற பலகைகள் @ Flex Board களை வைப்பவர்கள் பேருந்து நிலையங்கள் என்றும், பேருந்து நிறுத்தங்கள் என்றும், நெருக்கடி நிறைந்த போக்குவரத்து வளைவுகள் என்றும், நடைபாதை என்றும் கண்டுகொள்வதில்லை

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டரங்கத்தின் முகப்பு, எஸ்.எல்.பி பள்ளியின் அருகேயுள்ள நடைபாதை, வேப்பமூடு சந்திப்பிலுள்ள பூங்கா, பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், சிறைச்சாலை என எதையும் விட்டு வைக்கவில்லை விளம்பரப் பலகைப் பிரியர்கள்.

ஒழுகினசேரி 

தேரேகால்புதூர் 

அண்ணா விளையாட்டரங்கம் 

வடசேரி 

 வேப்பமூடு சந்திப்பு 


அண்மையில் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இது போன்ற விளம்பரப் பலகை ஒன்று, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் அகற்றிய காவல்துறை அதிகாரியை பகிரங்கமாக மிரட்டிய அரசியல்வாதிகளைப் போன்றோர் கொண்டிருக்கும் பணபலமும், ஆள்பலமும் தான் இவர்களுக்கு தீனி.

இதில் உச்சபட்ச நகைச்சுவை, இவர்கள் மின்சார வாரியத்தின் Transformer ஐயும் கூட விட்டு வைக்காதது தான். மட்டுமல்லாது ஒரு மாவட்டத்தின் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் 'விளம்பரம் செய்யாதீர்' என்ற எச்சரிப்பிற்குப் பின்னரும், கிறிஸ்தவ கூட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்தியிருப்பதில் இருந்தே இந்த விளம்பரப்படுத்தல் எனும் மன நோயின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.


பதிவுத்துறை அலுவலகம் 

சிறைச்சாலை, நாகர்கோவில் 


ட்சிகள் ஒருபுறமென்றால் மறுபுறம் திரைப்பட ரசிகர்கள், புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது, கதாநாயகனுடன், இவர்கள் முகங்களையும் சேர்த்து அச்சிடும் விளம்பரப் பலகைகளின் கொடுமை சொல்லி மாளாது. அதே போன்று திருமண வீடுகளிலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் தங்கள் விருப்ப நாயகர்களின் படங்களையும் சேர்த்து அச்சிட்டு வாழ்த்து தெரிவிக்கும் அக்கப்போர்களும் தொடரத்தான் செய்கின்றன. இதே பாணியில் அண்மைக் காலங்களில் கிறிஸ்தவர்களும் இறங்கியிருப்பது தான் ஆச்சர்யம்.

எப்படியாவது ஒரு விளம்பரப் பலகையில் நமது புகைப்படமும் வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஊருக்கு ஊர், ன்று விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது ஒரு வகை மனநோயாகவே மாறியிருக்கிறது. இத்தகைய சுய தம்பட்டங்கள், அரசியல் தலைவர்களை, மதத் தலைவர்களை திருப்திப்படுத்த அச்சடிக்கப்படும் விளம்பரங்கள், வரும் தலைமுறைக்கு மிகத்தவறான முன்னுதாரணாக அமையும் என்பது தான் இன்னும் வேதனை தரும் விடயம்.

January 06, 2016

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!

திரைப்படப் பாடல்களை அதிகம் கேட்டிராத பருவம் அது, கேட்கும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறாத காலம். வீட்டில் ஆன்மீகப் பாடல்களைக் கேட்பதற்கென சின்ன நேஷனல் டேப் ரெக்கார்டர் ஒன்றும், செய்திகள் கேட்பதற்கென ஒரு ரேடியோப் பெட்டியும் உண்டு. 

திரைப்படப் பாடல்கள் கேட்பதாக தெரிந்தாலே வீட்டில் அத்தனைக் கோபப்படுவார்கள், சத்தமும் போடுவார்கள். ஆனால் இன்று செல்கிற இடமெல்லாம் டங்காமாரியும், டண்டனக்காவுமாக காதில் வந்து விழுகின்றன. (இவ்விருப் பாடல்களுக்கும் இசையமைத்தது கிறிஸ்தவ நம்பிக்கைக் கொண்டவர்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்)

வீட்டில் இருந்த கெடுபிடிகள் மூலம் இளையராஜாவின் பல நல்ல இசைத்தொகுப்புகள் செவிகளைத் தீண்டாமலே போய்விட்டன. 

எனினும், பதின்ம வயதில், தொண்ணூறுகளுக்குப் பிறகு ரேடியோ அலைவரிசைகளை மாற்றுவது எப்படியென்பதை அறிந்த பின்னர் அப்பா இல்லாத நேரம் ரேடியோவில் சில பாடல்களையாவது கேட்டுவிட முயற்சித்தது உண்டு.

தமிழ்த் திரையுலகையே தன் வசம் வைத்திருந்த இசை சகாப்தமான இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. அப்போது தான் மணிரத்னம் அவர்கள் ரஹ்மான் எனும் இளைஞனை ரோஜா திரைப்படத்தின் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கிறார். இளைஞன் என்று கூட சொல்ல முடியாத  அளவிற்கு உருவத்தில் சிறுவனாய் ரஹ்மான் இருந்தார்.


1992 ல் 'சின்னச் சின்ன ஆசை' பாடல் ஒலிக்காத தெருக்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான். 

மின்மினியின் வசீகரக் குரல் 'சின்ன சின்ன ஆசை'க்கு அத்தனைப் பொருத்தம். ரோஜா திரைப்படம் வெளியான பின்னரும் ரேடியோவில் அடிக்கடி அந்த பாடலை ஒலிக்கச்செய்து கொண்டிருந்தார்கள். 

தமிழில் மட்டுமல்லாது 'சோட்டி சி ஆஷா' என இந்தியிலும் வெளியான 'சின்ன சின்ன ஆசை' இந்தியா முழுவதையும் ஒரு புதுவிதமான இசையை அனுபவிக்கச் செய்தது அன்று. 

இருபத்தைந்து வயது மட்டுமே நிறைந்த ஒரு இளம் இசையமைப்பாளரை இந்தியா 1992 ல் ரோஜாவிற்காக கொண்டாடியது. இன்று உலகம் முழுவதும் அவர் கோலோச்சாத இசைமேடைகள் இல்லை எனும் அளவுக்கு திலீப்குமார் @ அல்லா ரக்கா ரஹ்மான் வளர்ந்திருப்பதற்கு காரணம் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், அலட்டல் இல்லாத அவரது எளிமையும், ஆன்மீகப் பாதையுமே. 

அன்று ரஹ்மானை ரசிக்கத் தொடங்கியவன் இன்றும் தொடர்கிறேன். தென்றலே தென்றலே, ஓர் வெண்ணிலா - காதல்தேசம்; நேற்று இல்லாத மாற்றம் - புதியமுகம்; வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்; தொடத்தொட - இந்திரா; அன்பென்ற மழையிலே - மின்சாரக்கனவு; நேற்று அவள் இருந்தாள் - மரியான்; சித்திரை நிலா - கடல் என தொடர்கிறது நான் அதிகம் விரும்புகிற ரஹ்மானின் பாடல்கள். 

இன்று பிறந்தநாள் காணும் இசைப்புயலுக்கு வாழ்த்துகள். 
Related Posts with Thumbnails