January 06, 2016

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!

திரைப்படப் பாடல்களை அதிகம் கேட்டிராத பருவம் அது, கேட்கும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறாத காலம். வீட்டில் ஆன்மீகப் பாடல்களைக் கேட்பதற்கென சின்ன நேஷனல் டேப் ரெக்கார்டர் ஒன்றும், செய்திகள் கேட்பதற்கென ஒரு ரேடியோப் பெட்டியும் உண்டு. 

திரைப்படப் பாடல்கள் கேட்பதாக தெரிந்தாலே வீட்டில் அத்தனைக் கோபப்படுவார்கள், சத்தமும் போடுவார்கள். ஆனால் இன்று செல்கிற இடமெல்லாம் டங்காமாரியும், டண்டனக்காவுமாக காதில் வந்து விழுகின்றன. (இவ்விருப் பாடல்களுக்கும் இசையமைத்தது கிறிஸ்தவ நம்பிக்கைக் கொண்டவர்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்)

வீட்டில் இருந்த கெடுபிடிகள் மூலம் இளையராஜாவின் பல நல்ல இசைத்தொகுப்புகள் செவிகளைத் தீண்டாமலே போய்விட்டன. 

எனினும், பதின்ம வயதில், தொண்ணூறுகளுக்குப் பிறகு ரேடியோ அலைவரிசைகளை மாற்றுவது எப்படியென்பதை அறிந்த பின்னர் அப்பா இல்லாத நேரம் ரேடியோவில் சில பாடல்களையாவது கேட்டுவிட முயற்சித்தது உண்டு.

தமிழ்த் திரையுலகையே தன் வசம் வைத்திருந்த இசை சகாப்தமான இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. அப்போது தான் மணிரத்னம் அவர்கள் ரஹ்மான் எனும் இளைஞனை ரோஜா திரைப்படத்தின் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கிறார். இளைஞன் என்று கூட சொல்ல முடியாத  அளவிற்கு உருவத்தில் சிறுவனாய் ரஹ்மான் இருந்தார்.


1992 ல் 'சின்னச் சின்ன ஆசை' பாடல் ஒலிக்காத தெருக்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான். 

மின்மினியின் வசீகரக் குரல் 'சின்ன சின்ன ஆசை'க்கு அத்தனைப் பொருத்தம். ரோஜா திரைப்படம் வெளியான பின்னரும் ரேடியோவில் அடிக்கடி அந்த பாடலை ஒலிக்கச்செய்து கொண்டிருந்தார்கள். 

தமிழில் மட்டுமல்லாது 'சோட்டி சி ஆஷா' என இந்தியிலும் வெளியான 'சின்ன சின்ன ஆசை' இந்தியா முழுவதையும் ஒரு புதுவிதமான இசையை அனுபவிக்கச் செய்தது அன்று. 

இருபத்தைந்து வயது மட்டுமே நிறைந்த ஒரு இளம் இசையமைப்பாளரை இந்தியா 1992 ல் ரோஜாவிற்காக கொண்டாடியது. இன்று உலகம் முழுவதும் அவர் கோலோச்சாத இசைமேடைகள் இல்லை எனும் அளவுக்கு திலீப்குமார் @ அல்லா ரக்கா ரஹ்மான் வளர்ந்திருப்பதற்கு காரணம் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், அலட்டல் இல்லாத அவரது எளிமையும், ஆன்மீகப் பாதையுமே. 

அன்று ரஹ்மானை ரசிக்கத் தொடங்கியவன் இன்றும் தொடர்கிறேன். தென்றலே தென்றலே, ஓர் வெண்ணிலா - காதல்தேசம்; நேற்று இல்லாத மாற்றம் - புதியமுகம்; வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்; தொடத்தொட - இந்திரா; அன்பென்ற மழையிலே - மின்சாரக்கனவு; நேற்று அவள் இருந்தாள் - மரியான்; சித்திரை நிலா - கடல் என தொடர்கிறது நான் அதிகம் விரும்புகிற ரஹ்மானின் பாடல்கள். 

இன்று பிறந்தநாள் காணும் இசைப்புயலுக்கு வாழ்த்துகள். 
Related Posts with Thumbnails