December 31, 2013

2013 - முகநூல் - சுயநலம் - 2014

2012 ன் இறுதி நாளிலும் பணியிலிருந்ததாலோ என்னமோ இந்த வருட இறுதியில் சற்றே இளைப்பாற முடிந்தது மகிழ்ச்சியே. அதற்கு வழிவகை செய்த மேலிடத்திற்கு முதல் நன்றி. 2013 ல் கடந்து வந்த பாதைகள் ஏமாற்றத்தையும், சில நேரங்களில் வாழ்க்கையின் மீதான ஒரு வெறுப்பையும், பல நேரங்களில் வருத்தத்தையும் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

எனினும் வெகு நாளைய கனவான ஒரு இசைத்தொகுப்பை நண்பன் மோகனுடன் இணைந்து உன்னிகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், ஜாலி ஆபிரகாம், ஹேமாஜான் போன்றோரின் குரலில் வெளியிடும் வாய்ப்பு இந்த வருடம் தான் அமைந்தது.

இது ஒருபுறமிருந்தாலும் முகநூல் நிமித்தம் பட்ட அவஸ்தைகள் ஏராளம். நாம் பொதுவாக ஒன்று எழுதினால் தனக்கே எழுதியதைப் போன்ற ஃபீலிங்க்ஸ் கொட்டிவிட்டு பீலா விட்டவர்கள் பலர். இது போதாதென்று நண்பர்களுக்குள் பகிர வேண்டிய விஷயங்களை சந்தியில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தவர்களை ஏனென்று கேட்டுவிட்டதால் ஏற்பட்ட குழப்பங்களும் பல.

ஆர்குட், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்த ஆரம்ப நாட்களில் அமைதியாக எந்த அபத்தமும் இல்லாமல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த காலங்கள் மாறிப்போனது இன்று. சம்பந்தமேயில்லாமல் சம்பந்தமற்ற தகவல்களை முகநூலில் பகிர்வதும் (Share), கண்மூடித்தனமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர்வதும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கின்றன.

சம்பவங்களை அதன் உண்மைநிலையை ஆராய்ந்து அறியாமல், அறியவும் முற்படாமல் அப்படியே பகிரும் செயல் முகநூல் பயன்படுத்துபவர்கள் பலரையும் தொற்றியிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

சிலர் தூக்கம் வரவில்லை, தலைவலிக்கிறது என்பதைக் கூட முகநூல் வழியாக Status என்ற பெயரில் உலகம் அறியவேண்டுமென்று ஆசைப்படுவதை என்னவென சொல்வது. எதையாவது கிறுக்கி மற்றவரையும் கிறுக்கு பிடிக்கச் செய்யும் உக்திகள் எங்கிருந்து தான் உதிக்கின்றனவோ தெரியவில்லை.

"ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்தவுடனேயே ஷுட்டிங்கையும் ஆரம்பித்து விடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது" இது சமீபத்தில் twitter ல் அதிகம் ரசித்த ட்வீட். இந்த புகழ் முகநூல் பயன்படுத்துபவர்கள் பலரையும் சாரும். நின்றால், நடந்தால், குனிந்தால் என என்ன செய்தாலும் படம் பிடித்து போடுபவர்களை பார்த்து சிரிப்பதா! அழுவதா!!

பலர் தாங்கள் உணவருந்தினாலும் படமெடுத்து வலையேற்றுகிறார்கள். குறிப்பாக விலையுயர்ந்த உணவகங்களில் சென்று படமெடுத்து ஏற்றுவதைக் குறிப்பிட்டாக வேண்டும். அதோடு விடுகிறார்களா இல்லை... கார் வாங்கினால், பைக் வாங்கினால், வீடு கட்டினால் என தங்களை, தாங்கள் அடைந்திருக்கும் நிலையை உலகம் பார்க்க வேண்டுமென்று புகைப்படங்கள் எடுத்து முகநூலில் ஏற்றுகிறார்கள். இதே வேலையாக இருப்பவர்களை உளவியலில் ASB - Attention Seeking Behaviour குணம் உடையவர்கள் என்று கூறுகிறார்கள். தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் என்றும் பொருள்படலாம்.

எவரெவர் என்னென்ன செய்கிறார்கள், எங்கிருக்கிறார்கள் என எளிதாக முகநூலின் Status Update களின் மூலம் அறிந்து கொள்ளமுடிவது நண்பர்களுக்குள் சரியெனப் பட்டாலும். பலரும் காணுமாறு பகிரும் போது அதற்கேதுவான பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்தில் வெளிநாடு ஒன்றில் பணிபுரியும் வேலூரை சார்ந்த ஒருவர் முகநூலில் ஊருக்கு செல்கிறேன் என எழுதிவிட்டு போனார். மறுநாள் சென்னை விமானநிலையத்திலிருந்து வேலூருக்கு போகிற வழியில் அவரது நண்பனின் நண்பன் அனைத்துப்பொருட்களையும், அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துவிட்டு தப்பியோடி விட்டார். இதையெல்லாம் சொல்லி உஷாரா இருங்கப்பான்னு சொன்னா போடா உன் வேலயப்பார் என்கின்றனர் பெரும்பாலானோர்.

இன்றைக்கு இணையமும், முகநூலும், பிற சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்புக்கு முக்கியமான ஊடகங்களாகி விட்டன. அப்படியே மொத்தமாக வேண்டாமென்று ஒதுக்கி விடமுடியாது. அவற்றை எப்படி முறையாக, கவனமாக, உபயோகிக்கிறோம் என்பதே கேள்வி!

பெரும்பாலானோரின் கைபேசிகளில் முகநூல் பார்க்கும் படியான வசதியும் இன்று இருக்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் இன்று முகநூல் உபயோகிக்கின்றனர்.  இதனால் பிறரிடம் இல்லாத ஒரு விஷயத்தை நாம் பகிரும் போது மற்றவரின் மனம் புண்படாதவாறு பகிர்தல் மிக அவசியம். என்னிடம் இது இருக்கிறது, நாங்கள் இத்தனை பெரிய வீடு கட்டி விட்டோம், நான் அங்கு செல்கிறேன், நான் அமெரிக்காவில் இருக்கிறேன், நான் KFC, McDonald போன்ற உணவகங்களில் சாப்பிடுகிறேன் என தம்பட்டம் அடித்து Status Update செய்வதால் இவை இல்லாதவன் மனது சங்கடப்படாதா!? வருத்தப்பட மாட்டானா!?


ஆனால் இன்று முகநூலில் இப்படியான சுயம் போற்றுவோரின் ராஜ்யமே கொடிகட்டி பறக்கிறது. பிறரைக் குறித்த கவலையும், பொதுநலன் கருதுவோரும் வெகு சிலரே. இணையத்தால் உலகம் சுருங்கியிருப்பது உண்மைதான்... கூடவே மனிதனின் மனமும் சுயநலம் என்ற வட்டத்திற்குள் சுருங்கிப் போனது தான் ஆச்சர்யம். 

இசையால் நனைய செய்த இளமை - Music Mojo - Keba Jeremiah

2013 அத்தனை எளிதாக கடந்துவிடவில்லை. எந்த வருடத்தையும் விட மிக அதிகமான (ஏ)மாற்றங்களையும், தோல்விகளையும் சந்தித்த வருடமாகவே பார்க்கிறேன் 2013 ஆம் வருடத்தை. ஆனால் அத்தனை பிரச்சினைகளின் மத்தியிலும் என்னை இன்னும் ஆரோக்கியமாக, ஆனந்தமாக வைத்திருப்பதில் இசைக்கு பெரும்பங்கு உண்டு. நீரின்றி அமையாதுலகு என்பது போன்று இசையின்றி அமையாதுலகு என கூறினாலும் தகும்.

அந்த வகையில் இந்த வருடம் அசர வைத்து, ஆச்சரியப்பட வைத்த இரு தருணங்கள் Music Mojo மற்றும் Keba Jeremiah வின் இசைத் தீண்டல்கள் தான். இளைஞர் பட்டாளமே வரிந்து கட்டிக்கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள் இன்றைய இசையுலகை. அதனை எந்த மொழி பாரபட்சமுமில்லாமல் ஊக்குவித்து வருகிறது கேரளத்தைச் சார்ந்த மாத்ருபூமி பத்திரிக்கை நிறுவனம் ஆரம்பித்த கப்பா தொலைக்காட்சி செய்து வரும் Music Mojo நிகழ்ச்சி.

Music Mojo வில், மொழி வேறுபாடின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளின் திரைப்படப்பாடல்களும், சுயமாக மெட்டமைக்கப்பட்ட பாடல்களும் இளம் இசைக்குழுக்களால் அற்புதமாக அரங்கேற்றப்படுவது தான் சிறப்பு. இளம் இசைக்கலைஞர்களின் திறமைகள் வாய்பிளக்க வைக்கின்றன. அதோடு அவர்களின் இசை புல்லரிக்க வைக்கிறது. இதில் குறிப்பிடும்படியாக ASIMA, Acoustika, Bennet & The Band, Agam, Thaikkudam Bridge, Staccato போன்ற இசைக்குழுக்களைக் கூறலாம் இவர்களுடன் இளம் பாடகர்களான ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், காயத்ரி, நிகில் மேத்யு, ஜ்யோத்சனா, ஜாப் குரியன், நேகா நாயர், மஞ்சரி, பென்னி தயாள், "மூங்கில் தோட்டம்" புகழ் - அபய் ஜோத்புர்கர் என திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன.

இதில் நான் அதிகம் ரசித்த பாடல்கள் பலவற்றில்  சில இங்கே. 
ஸ்வேதா மோகன் பாடிய "இன்னும் கொஞ்சம் நேரம்"
 

நிகிதா, நிகில் பாடிய "ஏதோ" 



மஞ்சரி பாடிய "வான் மேகம்"



ஹரிச்சரண் பாடிய "நிலாவே வா"


கேபா ஜெரேமியாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பல ஆண்டுகள் முன்னர் சன் தொலைக்காட்சியில் Route10 இசைக்குழு என்ற பெயரில் ஊ ல ல லா நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் Harmonize Project ற்காக பங்களித்து இப்போது பல இசையமைப்பாளர்களுக்கு Guitar இசை மீட்டுபவர் தான் கேபா. இத்தனை இளம் வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான Guitarist ஆகி இருக்கிறார்.


மூங்கில் தோட்டம் - கேபா ஜெரேமியா


செய்யக்கூடிய விஷயத்தில கவனமும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இவர்கள் அடைந்த சிறப்பைப் போல் எவரும் அடையலாம் என்பதற்கு இவர்களே சாட்சி. இசையின்றி அமையாது உலகு. இவர்களின் இசைக்கு என் வணக்கங்கள். 

எந்திர வாழ்க்கை - ஏன் இந்த வாழ்க்கை

விமானத்தில் எத்தனை முறை பயணம் செய்திருந்தாலும் வெகு அருகே கம்பீரமாக அது பறக்கையில். ஆச்சர்யமாக, முதல் முறை விமானத்தை பார்ப்பது போன்று வேடிக்கை பார்ப்பதும், ரசிப்பதும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது; விமானம் வான் நோக்கி எழுவதிலும் (Take Off) தரை இறங்குவதிலும் (Landing) இருக்கிற அழகு அது  பறக்கும் பொழுது அதிகம் இருப்பதில்லை.

அப்படித்தான் சென்ற வாரம் வாகனத்தில் பயணப்படுகையில், இறக்கைகளால் ஒரு பருந்து எத்தனை ஒய்யாரமாக இடவலமாக சரிந்து பின்னர் ஒரு வட்டமிட்டு மீண்டும் வலஇடமாக சரிந்து பறக்குமோ அதற்கொப்பான ஒரு காட்சியை ஒரு விமானி கண்காண வழி வைத்தார். நகர்கின்ற வாகனத்திலிருந்து தரையிறங்கும் ஒரு விமானத்தின் அழகைக் காண பல ஆயிரம் கண்கள் வேண்டும்.

விமானம் தீண்டிய அத்தருணத்தில் பலவித எண்ணங்கள் என்னை சீண்டிச் சென்றன. விமானம் நிச்சயமாகவே அற்புதமான கண்டுபிடிப்பு தான். ஒரு மாதம், ஒன்றரை மாதம் கடல் மார்க்கமாக பயணித்து வேறொரு நாட்டினை சென்றடைந்த காலம் மாறி சில மணி நேரங்களுக்குள்ளாக சென்றடைவது சாத்தியப்பட்டிருக்கிறது.

விமானம் மட்டுமல்ல...

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் நமது நேரத்தை மிச்சப்படுத்துகின்றன, விரைவாக பணிகளை செய்து முடிக்க வழிகோலுகின்றன. உடல் அசைவும், களைப்பும் அதிகமின்றி எளிமையாக செய்து முடிக்க உதவுகின்றன. மாடும்-கலப்பையும் போய் இன்று டிராக்டர் எந்திரம் உழவுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. உரலும்-உலக்கையும் போய் இன்று கிரைண்டர் ஆதிக்கம் காட்டுகிறது. அம்மியும்-குழவியும் போய் இன்று மிக்சி ஓடுகிறது. ஈக்கலும்-வாரியலும் போய் இன்று வேக்கும் க்ளீனர் சுத்தம் செய்கிறது. கருங்கல் இன்று வாஷிங்மெஷினாகி நிற்கிறது, இப்படி இன்னும் பல.

விதவிதமாக வாகனங்கள், பேருந்துகள், விமானத்தில் பயணிப்பது போன்றே ஆடாமல் அலுங்காமல் பயணிக்க Air Buses, அதி வேகமாக செல்லும் ரயில் வண்டிகள் என போக்குவரத்து வசதிகளும் பலவிதம் தான்! எல்லாம் சிறப்பான கண்டுபிடிப்புகளே! அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் முப்பது, நாற்பது ஆண்டுகள்; முன்னர் இருந்த மன அமைதி, மன நிம்மதி, அகமகிழ்ச்சி, ஆரோக்கியம் இன்று இருக்கிறதா என்று சிந்தித்தால் இல்லை எனவே படும்.

வாகனங்கள் ஏற்படுத்தும் இரைச்சலும்; அவசர அவசரமான வாழ்க்கை முறைகளும்; அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பரபரப்பான ஓட்டமும்; பண சம்பாதிப்பதில் இருக்கும் அளவற்ற நாட்டமும்; போக்குவரத்து நெரிசலும்; வாகன விபத்துகளும்; பொதுநலமற்ற சுயநலமான வாழ்க்கையும் மனிதனை மனிதத்துவம் இல்லாமல் செய்துவிட்டது என்பதே உண்மை.

சென்ற தலைமுறையில் 70-80 வயது என இருந்த மனிதனின் சராசரி ஆயுள் இன்று 40-50 என குறைந்து போனதற்கு எவர் காரணமோ, எந்திரம் தான் காரணமோ?! இல்லை எந்திரம் போன்று வாழ்க்கையை பிடிக்க ஓடும் மனிதன் தான் காரணமோ!? இவையிரண்டையுமே காரணம் சொல்லலாம்.

மனிதனின் கண்டுபிடிப்புகள் அவனது ஆயுளை அவனறியாமலே குறைத்திருப்பது தான் நிஜம். உடல் அசையாமல் எந்திரங்களின் உதவி கொண்டு பணிகளை இலகுவாக முடிக்கின்ற ஒருவருக்கு வயிறு முன்னே தள்ளாமல் என்ன செய்யும்? Shower ன் புண்ணியத்தால் குளிப்பதற்கு கூட குனிந்து தண்ணீரை முகரத் தேவையில்லை இன்று. இப்படியே போனால் உடல் பருமனடையாமலா இருக்கும். இதனாலேயே வாயில் நுழையாத வியாதிகள் எல்லாம் மனிதனுள் நுழைந்து இறுதியில் மாரடைப்பும் வந்து ஆளே அம்பேல் ஆகிவிடுகிறார் நாற்பதுகளுக்குள்ளேயே.

இது ஒருபுறமென்றால் அவசர குடுக்கைகளால், அலப்பறை 'குடி'மகன்களால், அதிவேக வாகன ஓட்டிகளால், அஜாக்கிரதையால் ஏற்படும் வாகன விபத்துகள் எக்கச்சக்கம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் எண்ணற்றவே. மருத்துவத்தால் ஆயுள் நீட்டிக்கப்பட்டாலும் அது வேதிப் பொருட்களுக்கு நம்மை அடிமையாகவே வைத்து முன்னடத்தும்.

இன்று நாகரீகம் வளர்ந்திருக்கிறது ஆனால் மனிதனின் வாழ்நாள் குறைந்திருக்கிறது, நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன ஆனால் உடல் இயக்க நுட்பங்கள் தேய்ந்திருக்கின்றன. விஞ்ஞானத்தால் உலகம் ஒளிர்கிறது ஆனால் உள்மனதில் உபாதைகள் தான் ஒளிர்கின்றன. உலகம் ஒரு சிறிய கிராமமாகிப்போனது ஆனால் கிராமத்தான் தன் முகவரியை இழந்து நிற்கிறான். புல்வெளிகள் புல்டோசரால் புதுசாலைகளாக்கப்படுகின்றன, வயல்வெளிகள் வானுயர மாடமாளிகைகளாகி நிற்கின்றன.


எல்லாவிதத்திலும் உலகம் உயர்ந்திருக்கிறது - சரி தான்; கூடவே மனிதனும், மனிதத்தைப் போற்றி, சுயநலமற்று - பொதுநலம் கருதி, அவசரப்படாமல் - நிதானம் காத்து, எந்திரங்களை அளவாக பயன்படுத்தி வாழ்க்கையை வாழுவானெனின் வாழ்வில் உயர்வான், வாழ்நாளில் உயர்வான். 
Related Posts with Thumbnails