Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

April 16, 2009

மனைவியை கொன்ற தீவிரவாதிகளை மன்னித்த மகான்

நேற்று(15.04.09) ndtv தொலைக்காட்சியில் நவம்பர் 2008 மும்பை தாக்குதலின் விசாரணை குறித்த விவாதம் நடைபெற்றது. Times Of India's Consulting Editor ம் தனது மனைவியுமான திருமதி.சபீனா சாந்தனுவை, மும்பைத் தாக்குதலில் இழந்த திரு.சாந்தனு அவர்களும் பங்குபெற்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் குறிப்பிடுகையில் அஜ்மல் கசாப் வழக்கின் விசாரணையை நாங்கள் பின் தொடரவில்லை;அதனைக் குறித்து அறியவும் விரும்பவில்லை; நானும் எனது இரு பிள்ளைகளும் விரும்புவது எல்லாம் அஜ்மல் கசாப் மரண தண்டனைக்கு விலக்கப்பட வேண்டும்.அவர் உயிருடன் வைக்கப்பட வேண்டும்.

எனது மனைவி மும்பை தாக்குதலில் குறிவைக்கப்படவில்லை; தீவிரவாதிகளின் தாக்குதலில் மடிந்த மற்றுமொரு பலிகடா, அவ்வளவு தான்.

எங்களுக்கு வருத்தம் இல்லாமலில்லை,ஆனாலும் கசாப் மீது எந்த கோபமோ வெறுப்போ எங்களுக்கு இல்லை.அவர் மீது கோபம் கொள்வதினாலோ மேலும் கவலை அடைவதாலோ நாங்கள் எதனையும் ஈட்டப் போவதில்லை.மறைந்த எனது மனைவி மீண்டு வந்து விடப் போவதுமில்லை என கூறினார்.

அதோடு அவரின் 12 வயது மகன் அஜ்மல் கசாப்பை சிறைச்சாலையில் சென்று சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறான் எனவும் கூறினார்.

ஏற்கெனவே நளினியை சிறைச்சாலையில் பிரியங்கா காந்தி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போன்ற மனித நேயம் மிக்கவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் பாராட்டினாலும் தகும்.திரு.சாந்தனு அவர்களை மகான் என தலையங்கத்தில் குறிப்பிட்டதும் தகும் என்றே கருதுகிறேன்.

இந்த நிகழ்ச்சியின் போது பங்கு பெற்று பேசிய மூத்த வழக்கறிஞரும்,இந்திராகாந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதிட்டவருமான திரு.ராம்ஜெத்மலானி, சாந்தனுவை வெகுவாக பாராட்டியதோடு இந்த கருத்துக்களை கேட்கும் ஒவ்வொரு தீவிரவாதியும் வெட்கப் பட வேண்டும் என்றார்.அதோடு இந்த கருத்துக்களை அனைத்து செய்தி ஊடகங்களும் வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.

March 04, 2009

பொருளாதாரத்தை சீர்குலைக்க நடத்தப்பட்ட தாக்குதல்

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீதான தாக்குதலை அவர்கள் மீதான தாக்குதலாக மட்டுமே கருத முடியாது.ஏற்கெனவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தெற்காசிய பகுதியை மேலும் பொருளாதார சீர்கேட்டிற்குள்ளாக்கும் மற்றுமொரு முயற்சியாகவே இது தோன்றுகிறது.

இந்தியாவின் பொருளாதார மையமான மும்பையில் 2008,நவம்பர் மாதம் நடந்த தாக்குதலுக்கும் தற்போது லாகூரில் நடந்த தாக்குதலுக்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லையெனவே படுகிறது.

இரு தாக்குதலையும் தொடுத்தவர்கள் மிக சாதாரண வழிபோக்கர்களைப் போலவே செயல்பட்டு தங்கள் இலக்கை அடைந்திருக்கின்றனர்.

இரு நாட்டு பாதுகாப்பு கவசங்களையும் மிக எளிதாக கடந்து தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். தாக்குதலுக்கு பின்னர் சர்வ சாதாரணமாக மும்பை விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து சென்றது போல லாகூரிலும் தப்பித்து சென்றிருக்கின்றனர் தீவிரவாதிகள்.

தற்போது வெளியாகியுள்ள ஜியோ தொலைக்காட்சியின் வீடியோக்களில் லாகூரில் இரு சக்கர வாகனங்களில் தீவிரவாதிகள் தப்பி செல்லும் போது அவர்களை எதிர்க்க ஒரு போலீசையும் கூட காணவில்லை.பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரத்தில் பாதுகாப்பு அத்தனை பலமாக இருந்திருக்கிறது!!!

தாக்குதல் நடந்த அன்று பேருந்திற்கு வழக்கமாக அளிக்கப்படும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என ஆட்டக்காரர்கள் சென்ற பேருந்தின் பின்னால் சென்ற வேனில் பயணித்த ஆட்ட நடுவர் கிரிஸ் ப்ரோடும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடரும் தீவிரவாத தாக்குதல்களால் ஏற்கெனவே பிற நாடுகள் விளையாட்டிற்காக பாகிஸ்தானிற்கு செல்ல மறுத்து வருகையில் தற்போதைய லாகூர் தாக்குதல் மற்றும் மும்பை தாக்குதலினால் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசியாவின் பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் சர்வதேச ஆட்டக்காரர்களும் கூட செல்லத் தயங்கலாம்.

இதனால் விளையாட்டின் மூலம் கிடைக்கும் வருவாயும், சுற்றுலா பயணிகள்,விளையாட்டுகளை கண்டுகளிக்க வரும் வெளிநாட்டு பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயும் வெகுவாக பாதிக்கப்படும்.

IPL போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் மட்டும் சுமார் 4000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுமென தெரிகிறது.அப்படியென்றால் 2010ல் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகள்,2011 ன் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் மேலும் பிற விளையாட்டுகள் ரத்து செய்யப்படுமானால் நிச்சயமாகவே பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு அதிக பாதிப்பு ஏற்படலாம்.

அதோடு சர்வதேச அரங்கில் தெற்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு முறைகளும் கேள்விகளுக்குள்ளாகும், இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையில் காணப்படும் எஞ்சிய சகோதரத்துவமும் குறையலாம்.

இவைகள் தான் தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இருந்திருக்க வேண்டும்,இதில் அவர்கள் வெற்றியும் கண்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெறப் போகின்ற தேர்தலிலும் அதன் பின்னர் ஆட்சி அமைப்பதற்காக நடக்கவிருக்கும் முயற்சிகளினிடையிலும் என்னென்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

February 21, 2009

தீவிரவாதிகளுக்கு துணை போகும் செய்தி ஊடகங்கள்

பிரேக்கிங் நியூஸ் என்றாலே இப்போது சகஜமாகிவிட்டது.சினிமா ரிலீஸ் ஒத்தி வைப்பு,நடிகர் கால் முறிவு,போன்றவற்றிர்க்கெல்லாம் பிரேக்கிங் நியூஸ் போட்டு அந்த வார்த்தைக்கே ஒரு மதிப்பில்லாமல் ஆக்கி விட்டார்கள் இன்றைய செய்தி ஒளிபரப்பு ஊடகங்கள்.

நவம்பர் 2008ல் மும்பை நகரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போது,நாட்டில் வேறு பிரச்சனைகளே இல்லாததால்!!! 72 மணி நேரம் தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்து கமாண்டோ படையினருக்கு நெருக்கடி கொடுத்தவர்களும் இந்த கயவர்கள் தான்.

கமாண்டோக்கள் எங்கு இருந்து தாக்குதல் செய்கிறார்கள்,எத்தனை கமாண்டோக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் உள்ளே இருக்கும் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக தகவல் பரிமாற்றம் செய்தவர்களும் இந்த பிரேக்கிங் நியூஸ் சிங்கங்களே.

இங்கே பாருங்கள் நேரலை ஒளிபரப்பின் கொடுமையை.

என்ன தான் தொலைக்காட்சி கேபிள்கள்,தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தாலும்,தீவிரவாத அரக்கர்கள் செயற்கைக்கோள் தொலைபேசி மூலமும்,செல்ஃபோன்கள் மூலமும் நிச்சயமாக வெளியில் நடக்கும் விஷயங்களைக் குறித்து அறிந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் கமாண்டோக்களுக்கு கடும் சவாலாக இருந்திருக்க மாட்டார்கள்.

தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே சாட்சியான அஜ்மல் கசாப்பையும் இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது.ஏற்கெனவே தாலிபானிடமிருந்தும் தாவூத்திடமிருந்தும் கசாப்பின் உயிருக்கு ஆபத்து வந்திருக்கும் நிலையில், இப்போது பாகிஸ்தானும் எப்படியாவது அஜ்மல் கசாப்பை இந்தியாவின் கரங்களிலிருந்து மாற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது.

நிலைமை இவ்வாறிருக்க ஆங்கில ஊடகங்களோ... கசாப் ஆர்தர் ரோடு ஜெயிலில் இருக்கிறார்;அங்கிருந்து வெடிகுண்டு துளைக்காத செல்லிற்கு மாற்றப்படுகிறார்;அவருக்கு சிறப்புப்படையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று இத்தனை மணிக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என ஒரு தகவல் விடாமல் கொட்டித் தீர்க்கின்றன.

இவைகள் மறைமுகமாக தாலிபானிற்கும்,பாகிஸ்தானிற்கும் நாமளிக்கும் தகவல்கள் இல்லையா.இவை எல்லாம் ரகசியமாக காக்கப்பட வேண்டிய விஷயங்கள் இல்லையா?

இந்த ரகசியங்களைக் கூட காப்பாற்ற இயலாத பாதுகாப்புத்துறையா இந்தியாவை காப்பாற்றப் போகின்றது? தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த தகவல் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது என உளவுத்துறையும், இல்லை அப்படி ஒன்றும் தகவல்கள் பரிமாறப்படவில்லை என மகாராஷ்டிரா காவல்துறையும் ஒருவரையொருவர் சொல்லும் குற்றங்களுக்கு மட்டும் குறைவில்லை.

பாதுகாப்பு ரகசியங்கள் உயர் பதவிகளில் இருக்கும் சில கருங்காலிகளால் எப்படியோ வெளியிடப்பட்டாலும் அதனை இப்படியா ஊடகங்களில் செய்தி(தீ)களாக வெளியிடுவது.தீயென பரவும் இந்த ரகசியங்களை இவர்கள் தெரிந்தே ஒளிபரப்புகிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா?

தாஜ் தாக்குதலின் போது நேரலையாக ஒளிபரப்புவதா?வேண்டாமா? என அவர்களுக்குள்ளாகவே (குறிப்பாக என்.டி.டி.வி ஆங்கில சானலில்) இரு வேறு கருத்துகள் நிலவின;அதுவும் நேரலையில் விவாதிக்கிறார்கள்!!

மற்றொரு நேரலை ஒளிபரப்பு கொடுமை

ஊடக சுதந்திரம் என சொல்லிக்கொண்டு ஒரு நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை கூச்சமில்லாமல் வெளியிடும் இவர்களை தடைசெய்வதை விட்டு விட்டு வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசாங்கம்.


இவை போன்ற ஊடகங்களும்,பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும் உயர் பதவிகளிலிருக்கும் கயவர்களும் இந்தியாவில் தொடர்ந்து இருக்கின்ற வரையில் குண்டுவெடிப்புகளும்,தீவிரவாத தாக்குதல்களும் தொடரத் தான் செய்யும்.

February 17, 2009

விளையாட்டிற்கு வேட்டு வைக்கும் விரோதங்கள்

ந்தியா - பாகிஸ்தான்
ஸ்ரேல் - பாலஸ்தீன்
உலக டென்னிஸ் தரவரிசையில் 48 ஆவது இடத்திலிருக்கும் இஸ்ரேல் டென்னிஸ் வீராங்கனை ஷஹார் பியருக்கு துபாய் WTA டென்னிஸ் போட்டிகளில் விளையாட ஐக்கிய அரபு நாடுகள் விசா வழங்க அனுமதி மறுத்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனத்தினிடையிலான காசா பகுதி பிரச்சினையில் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் அநியாய தாக்குதலின் போது குரல் கொடுக்காமலிருந்த வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு நாடுகள் இப்போது இஸ்ரேலிய வீராங்கனை ஒருவரை ஏற்க மறுப்பது ஏனோ தெரியவில்லை.

துபாயின் இச்செயலுக்கு உலக டென்னிஸ் அமைப்பின் சேர்மனான லேரி ஸ்காட் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.தரவரிசையின்படி ஆடுவதற்கு தகுதி பெற்ற வீரர் ஒருவருக்கு அனுமதியளிக்காமல் இருப்பது சரியல்ல என கூறியுள்ளார்.

இப்பிரச்சினையால் வருங்காலங்களில் துபாயில் டென்னிஸ் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும் எனவும் தெரிகிறது.ஷஹார் ஒரு இஸ்ரேலியர் என்பதை தவிர அனுமதி மறுப்பிற்கு வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க ஆசியாவிலோ,இந்தியாவிற்கு பாகிஸ்தானும், பாகிஸ்தானிற்கு இந்தியாவும் தங்கள் வீரர்களை அனுப்புவதில்லை என கடந்த மாதம் முடிவெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுகளின் மூலம் சகோதரத்துவத்தை வளர்த்த காலங்கள் மாறி இன்று விரோதங்கள் பெருகி வருவது நாம் வாழ்ந்து வரும் காலகட்டம் எத்தனை ஆபத்தானது என்பதை மீண்டும் உணர்த்துகிறது.
Related Posts with Thumbnails