Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

June 19, 2026

சிங்காரச் சென்னை எனும் தோற்றப்பிழை

 சிங்காரச் சென்னை என்பதெல்லாம் பெயரளவிற்குத்தான் என்பதை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஒற்றைக் காணொளி சொல்லி விடுகிறது

இத்தனைக்கும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஜார்ஜ் டவுன், பிராட்வே ஆகிய முக்கிய இடங்களை உள்ளடக்கிய சென்னையின் மையப்பகுதி தான் துறைமுகம் தொகுதி.

சுகாதாரமின்மை, வீடுகள் இல்லாமல் பொதுமக்கள் வீதிகளிலும், நடைமேடைகளிலும் தங்கும் நிலைமை. பெண்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு கூட போதிய வசதி இல்லாத நிலை என அத்தனை பிரச்சனைகளைத் தாங்கி நிற்கிறது இந்த பகுதி. ஈக்கள் மொய்க்கும் அந்த இடத்தைப் பார்க்கையில் தலையில் அடித்துக் கொண்டேன்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட - அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதங்கள் சார்ந்த தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் என்ன செய்கிறார்கள் என்று கேள்விகள் எழுந்தாலும் இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டியது அரசு தான். 

இந்த பகுதியை இத்தனை காலம் யார் ஆட்சி செய்தார்கள் இப்போது தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் யார், சென்னையின் தற்போதைய மேயர் யார் என்பதெல்லாம் சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. 

இப்படியானச் சூழலில் வாழும் மக்களுக்காக பரிதாபப்படும் அதே நேரம், சென்னையில் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் சபைகளை, பிரார்த்தனைக் கூடங்களை உருவாக்கி பணம் ஈட்டும் கிறிஸ்தவ நிறுவனங்கள் எத்தனை இப்படியான மக்களை சென்று சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. 

இதனாலேயே தான் ‘நான் ஓர் கிறிஸ்தவனாக சா*க மாட்டேன்’ எனத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது. மக்களோடு மக்களாக நின்ற இயேசுவுக்கும் இன்றைய பணம் விழுங்கி போலி கிறிஸ்தவத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. 

காலம் எல்லாவற்றையும் நம் முன் தெளிவாக நிறுத்தி வைத்திருக்கிறது. 

இதைப் பார்த்துவிட்டு மீண்டால் சிங்காரச் சென்னை 3.0 திட்டத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் என செய்தி. வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஆட்சி எப்படியான சக்தி என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளில் தெரிந்து விடும் 🚶🏽‍♂️

காணொளி - நீலம் சமூக அமைப்பு 

https://youtu.be/fcD3erwGTNg?is=lgZr1LYnmCvHgPGU 

April 30, 2026

தலித் கிறிஸ்தவர் - அரசியல் - எலைட் மனோநிலை

கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் அதிலும் தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோர் தங்களுக்குள் ஒரு எலைட் மனோபாவத்தை கொண்டு நடப்பது விவாதத்திற்கு உரியது.

ஆண்ட பரம்பரை என தங்களைக் குறிப்பிடும் வகையினருக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. 

தங்களது எலைட் மனோபாவம் ஆபத்தானது; அது சமூக நீதி அரசியலுக்கு எதிரானது என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பது பெரும் கேள்விக்குறி!

“கிரேக்கனென்றும் இல்லை யூதனென்றும் இல்லை” எல்லாரும் கடவுள் முன்னால ஒண்ணு தான் அப்படின்னு பவுல் எழுதியிருந்தாலும், நீர் சொல்றத சொல்லும் நாங்க பின்னொட்டு வச்சி கிறிஸ்தவ ப*#ர், கிறிஸ்தவ சா#*, கிறிஸ்தவ வ*#%@ அப்படின்னு சாதியால் தான் அறியப்படுவோம் என பிரிவினை செய்பவர்கள் தான் So Called கிறிஸ்தவர்கள். 

(இதனாலேயே தான் தலித் கிறிஸ்தவர்கள் என்றும் குறிப்பிட்டு எழுத வேண்டி இருக்கிறது.)

தலித் கிறிஸ்தவர்களை மற்ற கிறிஸ்தவ சபையினர் புறந்தள்ளுவது காலங்காலமாக நடந்து வருகிற ஒன்று. (இந்த தலைமுறையினர்  ஓரளவு மாறியிருக்கின்றனர்)

இதில் இன்னும் முரண் நகை என்னவென்றால் ‘தலித் கிறிஸ்தவர்கள் இடையே கூட ஒற்றுமை கிடையாது.’

அது கூட பரவாயில்லை… NEET தேர்வு உள்ளிட்ட எந்த பொது நலன் சார்ந்த விசயத்திலும் தமிழர்களுக்குள்ளேயே அரசியல் கட்சிகள் துவங்கி , அரசியல் சாரா அமைப்புகள் வரை நமக்குள்ளேயே ஒருமித்த கருத்து கிடையாது.  

இஸ்ரேலியர்கள் - இஸ்ரேல் அல்லாதோர் ( புற ஜாதியினர்) என்கிற விவரணைக்கு இணையானது தான் தலித் - தலித் அல்லாதோர் என்கிற விவரணையும். 

இது கிறிஸ்தவத்தின் அடிப்படையிலேயே பிரிவினை இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அதே போன்ற பிரிவினை தமிழர்கள் இடையேயும் சாதி வடிவில் தொடர்கிறது.

சாதிய வேறுபாடு பார்க்காமல் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் செய்து விட்டுப் போன  நற்செயல்கள் தொடராமல் போனதிலும்; ஒடுக்கப்பட்டோர் நலனிற்காக அவர்கள் செய்த சேவைகளை மறந்துவிட்டு தங்கள் சுய லாபத்திற்காக கிறிஸ்தவ தத்துவத்தை வியாபாரமாக்கியதிலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. 

இப்படி உள்ளடி வேலைகள் செய்து தங்கள் மேட்டிமைத்தனத்தை நிறுவி அதன் வழியாக பொருளீட்டும் தலித் கிறிஸ்தவர்கள், பெருநகரங்களில், கேள்விகளுக்கு உள்ளாகும் போது தங்களின் தலித்  அடையாளத்தையும் துறந்து விட தயாராக இருக்கிறார்கள்.

தலித் என தங்களை அடையாளப்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை. 

தங்களை தலித் என்கிற அடையாளத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக…

“நாங்க அந்த ஆளுங்க இல்ல”

“சே… சே… நாங்க SC இல்ல! நாங்க BC தான்” என்பார்கள். 

அதாவது தங்களை பிற சாதியினருக்கு ஒப்பாக காண்பிக்க இவர்கள் முன்வைக்கும் பொய்கள் இவை. 

‘தலித் என்றால் இழிவு’ என காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விவரணைக்கு, தங்கள் நிஜ அடையாளங்களில் இருந்து தப்பிக்க முயலும் தலித்களின் இது போன்றதான சொல்லாடல்கள் மேலும் வலு சேர்க்கின்றன. 

இவற்றை கண்டும் காணாமல் இருந்து விட்டு, இடைநிலைச் சாதியினரை தூக்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவை அளிப்பதும், அவர்களது சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிக்காமலும் இருப்பது சமூக நீதி அரசியலில் நம்பிக்கையுடையவர்களுக்கு அழகல்ல. 

#தேர்தல்2026

#DalitChristians

April 24, 2026

திராவிட கட்சிகளின் அதிகார மமதை

 தேர்தல் - சமூக வலைதளம் - யதார்த்த வாழ்க்கை இவை இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. அதை நம்மால் புரிந்து கொள்ள் முடியும் ஆனால் ஏற்றுக்கொள்வதில்லை. 

பணத்தினால் எதுவும் செய்து விடலாம் என கருதும் கட்சிகளும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை விவாதிக்காத சமூக வலைதள பதிவர்களும் / எழுத்தாளர்களும்/ ஊடகங்களும் அதன் போக்கிலேயே தொடர்கின்றன. 

இவை பெரும்பாலும் Like/ TRP / Votes இவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. 

கன்னியாகுமரியின் இயற்கை வள அழிப்பு; கேரளாவில் இருந்து கன்னியாகுமரியில் கொண்டு கொட்டப்படும் கழிவுகள்; சிவகாசி, விருதுநகர் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்; மாஞ்சோலை மக்களின் வாக்கு பறிப்பு… இவை முதலான இன்னும் பல நூறு பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் / தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இந்த தேர்தலை ஒட்டி நிகழவில்லை. 

ஆனால் வாக்கை மட்டும் இன்னாருக்கு போடுங்கள், அன்னாருக்கு போடுங்கள் என உழப்பல் தொடர்ந்தது. 

கல்வியை அளித்து விட்டு கூடவே வாக்குக்கு காசையும், பொன்னையும், பொருளையும்  கொடுக்கிற கட்சிகள் சமூகத்தில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வரும். 

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்த பிறகும் சாதியினால் பிரிந்து கிடக்கிறோம், இளைஞர்களை அரசியல் படுத்தாமல் திரை மோகத்தில் வைத்திருக்கிறோம்; அவர்களை தற்குறிகள் என்றும் அழைக்கிறோம்,  நகரங்களை மேம்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவழித்து விட்டு நம் முதுகெலும்பான கிராமங்களை தேய விட்டிருக்கிறோம். 

பொத்தாம் பொதுவாக சனாதனத்தின் மீது குற்றம் சுமத்தி விட்டு, இடைநிலை சாதியினர் தலித் மக்களின் மீது தொடர்ந்து நிகழ்த்தும் வன்முறைகளை ஒடுக்க தவறிய திராவிட கட்சிகள் இருந்தென்ன பயன். இவர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் தலித் தலைவர்களும் வாயை மூடிக்கொண்டு இருப்பது தான் பேரபத்தம். 

முதல்வரும், துணை முதல்வரும்  இன்று வரை வேங்கைவயலில் கால் வைக்கவில்லை. மக்கள் அங்கு தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறார்கள். 
இவர்கள் இப்படியாக மக்களை பிளவுபடுத்தி வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவது வெறும் வாக்குகளுக்காகவும் அதன் வழியாக பெறும் அதிகாரத்திற்கும் தான் என்பது தான் உண்மை. 

அதனை திராவிட கட்சிகளுக்கு கொடி பிடிப்போர் அறிந்திருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் பெரும்பான்மையின் பக்கம் நின்று ஒத்து ஊதுவதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். 
#தேர்தல்2026

March 25, 2026

தேர்தலும் நம் கீழ்மைகளும்!


தேர்தலும், அரசியலும் மக்கள் நலனிற்கானவை என்பது தானே உண்மை! சாதிய அடிப்படையில் / மதப் பின்னணியில் இயங்குகிற எந்த கட்சியும் எங்கள் சாதியினர் மட்டும் வாக்களியுங்கள் அல்லது எங்கள் மதத்தினர் மட்டும் வாக்களியுங்கள் என்று கேட்பதில்லை தானே! 


அரசியல் அமைப்பு சட்டப்படி எல்லாரும் சமம் என்பதும் உண்மை தானே! அப்படித்தானே அனைவரும் இயங்க வேண்டும்!! 


ஆனால் களம் அப்படியா இருக்கிறது!! 2026 ல் கூட எவரையும் சமமாக நடத்த மறுக்கிற, சாதி / மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிற, கூட்டணி ஆட்சியை அமைக்க மறுக்கிற கட்சிகளாகத் தான் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான  திமுக, அதிமுக இரண்டும் இருக்கின்றன. 


சாமானியர்களுக்கு ஒன்று என்றால் உடனடியாக களத்தில் வந்து நிற்பது கம்யூனிஸ்ட் தோழர்களும், இடதுசாரி கொள்கையையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கிற திருமாவளவன் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே தான். 


ஆனால் அவர்களும் கூட, தொகுதிப் பங்கீடு வரை சாதியத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற திராவிட கட்சிகள் உடன் சேர்ந்தே நிற்கிறார்கள். காலங்காலமாக தொடரும் இது போன்ற கொடுமை வேறில்லை. 


இப்படியாக இவர்கள் சில சட்டமன்ற தொகுதிகளுக்காக, பாராளுமன்ற தொகுதிகளுக்காக  தங்கள் கொள்கைகளை அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் அதிகாரம், பணம், பதவி மேல் இருக்கும் ஆசைகளின்றி வேறில்லை. 


கம்யூனிஸ்ட் / விசிக திமுக கூட்டணியில் இருந்ததால் இவற்றை சாதித்தோம் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன இருக்கிறது! 


சாதிய பாகுபாடு / வன்முறை குறைந்திருக்கிறதா!!

நீட் தேர்வு இல்லை என்று ஆகி விட்டதா!!

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதா!!

செவிலியர்கள் / துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டதா!!


இன்னும் சொல்லப்போனால், சனாதனம் / பாஜக உள்ளே வந்து விடக்கூடாது, அதனால் தான் திமுக உடன் இருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் சனாதனத்தை, சாதியத்தை மறைமுகமாக ஆதரிப்பதே திமுக தான். பாஜக தமிழகத்தில் வளர காரணமும் திமுக தான் என்பது வரலாற்று உண்மை. 


கட்சியினர் துவங்கி பொதுமக்கள் வரை அனைவரையும் பணப்பேய் பிடித்து ஆட்டுவிக்கிறது; சுயநலன்கள், சாதியப் பெருமைகள், மத மேட்டிமைகள் அகலாமல் நிம்மதியான தமிழகம் எக்காலத்தும் சாத்தியமில்லை. 


இந்த தேர்தல்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல! அவை சாமானியனுக்கு எவ்விதத்திலும் நன்மை தருவதில்லை. 


நாம் நம் கீழ்மைகளால் தான் மடிகிறோம்!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!!! 


August 03, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 5

  ‘இதுவரை இல்லாத அளவு’ அச்சுறுத்தல்!

ஒரு நாட்டின் தூண்கள் என சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய இந்நான்கை குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப காலங்களில் காட்சி ஊடகங்கள் என்றால் அரசே ஏற்று நடத்திய தூர்தர்சன் மட்டும் தான். 1991 ல்  அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் தாராளமயமாக்கக் கொள்கைகளினால் தனியாருக்கும் தொலைக்காட்சி உரிமங்கள் வழங்கப்பட்டன, தென் இந்தியாவின் முதல் தனியார்த் தொலைக்காட்சியாக 1992 ல் சன் குழுமத்தினர் அறிமுகமானார்கள்; இன்றைய தேதியில் அந்த எண்ணிக்கை பல நூறுகளைத் தொடும்.

அரசு ஏற்று நடத்துகின்ற தூர்தர்சனில் இன்றளவும் அரசு சம்பந்தமான நிகழ்வுகளும், செய்திகளும் தான் இடம் பெறும். அந்த தொனியில், தனியார் ஊடகங்களும் அதன் தலைமைக்குச் சாதகமான செய்திகளையே வெளிக்கொணர்ந்தாலும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் அவ்வப்போது எடுத்துரைப்பவையாக இருந்து வந்திருக்கின்றன. 

ஆனால் இன்றைய தேதியில் தனியார் செய்தி ஊடகங்களில் கூட எப்படியான செய்திகளை முன்னிறுத்த வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டும் என்பதை ஆளும் ஒன்றிய அரசே தீர்மானம் செய்வதாகத்தான் படுகிறது. குணசேகரன்கள் தரம் தாழ்ந்து நடத்தப்படுவதற்கும் அதைத்தான் காரணம் என்கிறார்கள். இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்களும் அதனை உறுதி செய்திருக்கிறார்.

கோவிட்-19 குறித்தச் செய்திகள் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை ஊடகங்கள் ‘இன்று மட்டும்/ இன்று ஒரே நாளில்/ இதுவரை இல்லாத அளவு’ என்பவற்றைத் தான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லி வருகின்றன. ஆகஸ்ட் 3  மாலை நேரப் புள்ளிவிவரங்களின் படி தமிழகத்தில் 56,698 பேருக்கு தொற்று இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. இது வெறும் தொற்று இருப்பவர்களது எண்ணிக்கை தான். இவர்களில் எத்தனை பேர் நலமாய் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் மறைத்து விட்டு மொத்த எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு ‘இதுவரை 2.63,222’ பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆகஸ்ட் 3 நிலவரத்தின் படி, தொற்று ஏற்பட்டு நலமாகி வீட்டிற்கு போனவர்கள் 2,02,283 பேர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை இவ்வளவு என்று லட்சக்கணக்கை காட்டுவதும், இன்று இத்தனை பேருக்கு என குறிப்பிடுவதை விடுத்து, ‘இன்று மட்டும் ஒரே நாளில் இது வரை இல்லாத அளவிற்கு’ எனவும் அழுத்தி சொல்வதும் மக்களை பயமுறுத்துவதற்கான ஒரு உக்தியாகத்தான் படுகிறது. 

உள்ளிருப்பில் நான்கு மாதங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வாதாரத்திற்கு மக்கள் பெரும் அல்லல் படுகிறார்கள். இன்னமும் உள்ளிருப்புக் காலத்தைத் தொடர்வதன் மூலம் மக்களை அடைத்து விட்டு, தொடர் அச்சத்தில் வைத்துக்  கொண்டு, உரிமைகளுக்கெதிரான அவர்களின் குரல்வளைகளையும் நெறித்து விட்டு என்ன சாதிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

August 23, 2017

கவலை தரும் கல்வியின் தரம்!

அனைத்துமே வியாபாரமயமாக்கப்பட்ட  இன்றைய  காலகட்டத்தில் கல்வி மட்டும் விதி விலக்கல்ல. தனியார்மயமாக்கப்பட்டதில் ஒரு வகையில் நன்மைகள் இருந்தாலும், கல்வியின் தரம், இன்று பெரும் கேள்விக் குறியே! அதோடு, நேர்முகத்தேர்வைக் கூட நம்பிக்கையுடன்  சந்திக்கும் திறமை இன்றி, வெறும் வெத்து பட்டங்களோடே வெளிவரும் மாணவர்கள்தான் அதிகம்.

வாழ்க்கையைக் குறித்ததான புரிதலையோ; உலகின் மீதான தெளிவான, அகன்ற பார்வையையோ இன்றைய கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறுகின்றன.

வெறும் புத்தகத்தை மட்டுமே நம்பி, புத்தகப்புழுக்களாக மாறிப் போகும் மாணவர்களின் நிலைமை மிக வருத்தத்திற்குரியது. வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த கல்விமுறை மிக ஆபத்தானது; மன அழுத்தத்தைத் தரக் கூடியது என்றும் தாராளமாக சொல்லக் கூடிய அளவிற்கு தான் அதன் தரம் உள்ளது.

தோல்விகளை எதிர்கொள்ளவும்; தோல்விகளில் தரும் பாடங்களில் இருந்து புதிய பாதைகளை அமைத்துக் கொள்தலையும் பயிற்றுவிப்பதற்கு இங்கு ஆசிரியர்களோ, இந்த சமூக கட்டமைப்போ இடம் தராதது பரிதாபத்திற்குரியது/ உயிரை மாய்த்து விட வழிவகை செய்வது,

என்ன தான் ஆங்கில வழியில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பித்தல் இருந்தாலும், தெளிவான, சரியான ஆங்கில உச்சரிப்புகளைக் கூட அறியாத ஆசிரியர்களாலேயே மாணவர்கள் கற்பிக்கப்படுவது பெரும் ஏமாற்று வேலை.

நேற்று பள்ளியில் இருந்து வந்த மகன், க்றிஸ்ட் என்று சொல்லிப் படித்துக் கொண்டிருந்தான். என்னடா அதன் Spelling என்று கேட்டேன், ‘C-h-r-i-s-t என்றான்; அது க்றிஸ்ட் இல்லடா, க்றைஸ்ட் என்றேன்; இல்லை, இல்லை! எங்க மிஸ் இப்பிடித்தான் சொல்லிக்குடுத்தாங்க அப்டின்னான்!

வேறொரு கல்லூரியில் மாணவச் சேர்க்கைக்காக Prospectus வாங்குவதற்காக சென்றிருந்தேன், அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் PROS-PECTAAAS இப்ப குடுக்கிறதில்ல அப்படின்னாங்க; என்னங்கன்னு திரும்ப கேட்டேன்; Prospectus என்பதில் டாவை இன்னும் ஆ போட்டு ப்ரோஸ்பெக்ட்ஆஆஸ் என்றார்கள். பிறகு தான் விளங்கியது, Prospectus என்று.

ஆங்கிலத்தையும் முறையாக கற்பிக்காமல் தமிழிலும் சரிவர புரிய வைக்கத்தெரியாத ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கு கிடைத்த சாபம்.

July 08, 2016

விபத்துகளும் - வேதனைகளும் - தொடரும் சமூக அலட்சியங்களும்

அண்மை காலங்களில், தினசரிகளைத் திறந்தாலே பக்கென்றிருக்கிறது. நின்று கொண்டிருப்பவர் முதல் பயணம் செய்பவர் வரை விபத்துகளால் மடிவது மிகச் சாதாரணமாகிப் போய் விட்டது. பல வழிகளிலும் பாழ் படிந்த நம் சமூகக் கட்டமைப்பையே இதற்கு முழு முதற் காரணமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

தமிழகம், இந்தியாவிலேயே அதிக விபத்துகளை எதிர்கொள்கிற மாநிலமாகத் திகழ்வதாக, கடந்த ஆண்டின் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.

போக்குவரத்து விதிகளையும், சட்டங்களையும் கடைபிடிக்கத் தவறும்  இந்த சமூகமும், தவறுபவர்களைத் தண்டிக்க வேண்டிய போக்குவரத்து காவல்துறையினர் தமது பணியை நிறைவேற்ற தவறுவதும், ஊழல் பேர்வழிகளால் அமையப்பெற்ற தரமற்ற சாலைகளும் மிகவும்  வருத்தப்பட வேண்டிய விடயம் மட்டுமல்லாமல், வெட்கப்பட வேண்டிய விடயமும் கூட.

எதிர்பாரா நிகழ்வை விபத்து என்று கணக்கில் கொள்ளலாம், ஆனால் வரைமுறைக்கு அதிகமான வேகத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்பதறிந்தும்; தலைக்கவசம் அணியாமல் சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதறிந்தும்; இடம் வலம் திரும்பும் முன்னர் சைகை காண்பித்த பின்னரே திரும்ப வேண்டும் என்பதறிந்தும்; பின்பற்றாமல் ஏற்படுத்தும் மோதல்களை விபத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளல் ஆகாது. அவை கொலை/தற்கொலைகளாகவே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.


சமுக அக்கறையின்றி, வெறும் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து வரும் இந்த சமுதாயமானது, சட்டங்களையும், விதிகளையும், வெறும் ஏடுகளில் உறங்கும் எழுத்துக்களாகவே தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

விதிமீறல்கள், எந்தவொரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் அப்பட்டமாக இங்கு செய்யப்படுவது தான் நம் சமூகத்தின் மிகப் பெரிய நோய்! எப்படி ஒரு அமைச்சர் காலாற நடந்து சென்று மக்களின் குறைகளைக் கேட்பதென்பது நம் சமூகத்தில் சாத்தியமில்லையோ, அதே போன்று, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர், தண்டனைகளுக்கு அஞ்சுவது என்பதும் இங்கு சாத்தியமில்லை.

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பிரதிபலிப்புக் கண்ணாடிகள் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் (குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள்)  தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கு தாண்டுதல்  என விதிமீறல் செய்வோர் தினம் தினம் லட்சக்கணக்கானோர்.

இப்படியாக விதிமீறல் செய்பவர்களால் கடந்த ஆறு மாதங்களில், இருமுறை சிறிய காயங்களுடன் இருசக்கர வாகன விபத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். (இரு தினங்கள் முன்னர் சரக்கு வாகனம் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 24 வயதே நிரம்பிய சகோதரர் ஒருவர் சென்னையில் மாண்டிருக்கிறார்).

அப்படியே விதிமீறல் செய்வோர், போக்குவரத்துக் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாலும், எனக்கு இன்னாரைத் தெரியும், நான் அன்னாரின் உறவு என்று கூறி சமாளித்து விடுகிறார்கள். மறுபுறம் காவல்துறையினர், அரசு அலுவலகங்களில் பணியிலிருப்பவர்களையும், அரசியல் செல்வாக்கு உடையவர்களையும் அவர்களுக்கு பரிச்சயமானவர்களையும் எவ்வித சோதனைகளுக்குள்ளாக்குவதுமில்லை.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் இருந்தும் அதை அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் கொடுத்து வைத்தலும், காவல்துறையினரைக் கண்டால் மட்டுமே அதைத் தலையில் அணிவதும். நான்கு சக்கர வாகனங்களில், இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) காவல்துறையினரின் சோதனையின் போது மட்டுமே அணிவதும், சிவப்பு விளக்கு நிறுத்தங்களில், காவல்துறையினர் இல்லாவிடில் எளிதாகக் கடந்து செல்லுதலும் நம்மவர்களுக்கு கைவந்த கலை.

இவை போன்றதான நம் சமூகத்தின் ‘ஏனோதானோ’ பழக்கவழக்கங்களும், பெரு வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகளையும், சிறு வாகன ஓட்டுனர்களையும் (குறிப்பாக மிதிவண்டிகளை) ஏளனமாகப் பாவித்தலும், போக்குவரத்து விதிமுறை மீறல்களும், கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் இல்லா நிலையும், பாதசாரிகளுக்கான நடைபாதை ஆக்கிரமிரப்புகளைக் கண்டுகொள்ளாமையும், விதிமுறைகளை சரிவர நடைமுறைப் படுத்தாமையும், காவல்துறையின் கண்டுகொள்ளாமையும், மிக மோசமான சாலைகளும் மாறாத வரை, விபத்துகள் @ கொலைகளும், தற்கொலைகளும் தொடர்ந்து நிகழவே அதிகம் வாய்ப்பிருக்கின்றது. 

May 19, 2016

தேர்தல் முடிவுகளும், புரிதலும்

இந்த முறை மக்களை மொத்தமாக குறை சொல்லி விடவும் முடியாது. சற்று தெளிவாகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். வாக்கு சதவீதம் குறைந்தாலும் சென்ற ஆட்சிக்கெதிரான அதிருப்தியை சென்னையிலும், குமரியிலும் காண்பித்திருக்கிறார்கள். வளர்மதி, கோகுல இந்திரா, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் போன்றோரை தோற்கடித்திருக்கின்றனர். சரத்குமார் எனும் கருவேப்பிலையை தாளித்திருக்கிறார்கள். தெளிவற்ற விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக வினர் தோற்கடிப்பட்டு அவர்களின் வாக்கு சதவீதம் சரிக்கப்பட்டு இருக்கிறது. 

இனவாத அரசியல் செய்த சீமான் விரட்டப்பட்டிருக்கிறார். சாதி அரசியல் செய்கின்ற அன்புமணி அவரது சொந்த மண்ணிலேயே வீழ்ந்திருக்கிறார். 

திருமாவளவனை வெற்றி பெற வைக்கவே போராடியிருக்கிறார்கள், ஆனால் அவர்,சூழ்ச்சியால் வெறும் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 
கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடாநட்பில் சேர்ந்து வாங்கிக் கொண்டார்கள். 

கோவை. தெற்கில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வானதி தோற்றது போன்ற ஒரு சில தொகுதி வேட்பாளர்களே ஏமாற்றம் தந்தாலும் திமுக, அதிமுக வின் பிற வேட்பாளர்களை மக்கள் ஆதரித்திருப்பதில் அதிகம் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. 

காரணம் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வேட்பாளர்களும் அந்த அளவிலேயே இருந்தனர். 

சிலர் பணத்திற்கு வாக்கு செலுத்தியிருந்தாலும், பணம் மட்டுமே இந்த முடிவுகளை தீர்மானித்திருக்கின்ற்ன என்று எளிதில் சொல்லி விடவும் முடியாது. 

தேர்தல் நேரங்களில் மக்கள் பணத்தை இயல்பாகவே எதிர்பார்க்கிறார்கள். வாங்கக்கூடாது என்று பலமுனை தாக்குதல் தொடுத்தாலும்... அவர்களாக தருகிறார்கள் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என தேர்தல் அலுவலர்களிடமே மல்லுக்கு நிற்கிறார்கள். 'அரசு அலுவலகத்திற்கு சென்றால் எங்களிடம் பிடுங்குகிறார்கள் தானே' 'இப்போது நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம்' என்று தெளிவாக இருக்கிறார்கள். 

பணம் எவரிடமிருந்து கிடைக்கப்பெற்றாலும் அவர்கள் எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றிருக்கிறார்களோ அதையே செய்வார்கள். 

ஆக இங்கு முன்மாதிரியான தலைவர்கள் இல்லாதவரை மக்களில் ஒரு சாரார் தொடர்ந்து வாக்குகளை வியாபாரப் பொருளாக பாவிப்பதையே தொடர்ந்து செய்வர். 

எப்படியாயினும் தமிழகத்தில் இதுவரையில்லாத அளவிற்கு ஒரு வலுவான எதிர்கட்சி பலம் சட்டமன்றத்திற்குள் நுழைவதே இந்த தேர்தலின் வெற்றி தான். ஒரே குறை கம்யூனிஸ்ட்கள் அந்த பட்டியலில் இல்லையென்பதே!


May 17, 2016

வாக்குப்பதிவு சதவீத குறைவும் - மக்களின் அலட்சியமும் - தேர்தல் ஆணையமும்

அதென்னவோ தெரியல, சென்னையும், கன்னியாகுமரியும் திரும்பத் திரும்ப வாக்குப்பதிவு சதவீதத்தில் சுணக்கம் காண்பித்து வருகின்றன. இத்தனைக்கும் கற்றவர்களை அதிகம் கொண்டிருக்கின்றன இவ்விரு மாவட்டங்களும். 

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகக்குறைவாக சென்னையிலும், குமரியிலும் 68 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த முறையும் சென்னையில் 60% குமரியில் 66% அளவிற்கே வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
தமிழகம் நூறு சதவீதம் என்ற நோக்கத்தோடு தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் சென்னை மிகக் குறைவான வாக்குப்பதிவைக் கண்டிருப்பது சில விடயங்களை நமக்கு உணர்த்துகிறது.
முதல் முறை வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்கவில்லையா என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும், 2011 ஐ விட 2016 ல் பத்து சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் சென்னையில் பதிவாகியிருப்பதற்கு அது ஒரு பெரிய காரணியாக இருந்து விடும் என்று சொல்வதிற்கில்லை.

டிசம்பரில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு பலரும் சென்னையை விட்டு வேறு மாவட்டங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து விட்டதால் கூட குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது.
அப்படியே இடம் பெயர்ந்திருந்தாலும், தேர்தலுக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்டதான நான்கு மாத கால இடைவெளியில் முகவரி மாற்றம் செய்து அவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்க முடியும்.
தேர்தல் ஆணையம் பழைய முகவரியில் இருக்கும் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சதவீதத்தைக் குறைத்திருக்ககூடும். ஆனால் ஓட்டுப் போடுவதால் என்ன ஆகி விடப் போகிறது என்கிற மனநிலையில் இருப்பவர்களால் இதெல்லாம் சாத்தியமில்லை.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வதும் சாத்தியமான ஒன்றே. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் பிழைப்பிற்காக குடியேறிய பலர் அவர்கள் சொந்த மாவட்டங்களில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக இரட்டைப் பதிவு செய்திருப்பார்கள். இதுவும் வாக்குப்பதிவு சதவீதத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்த சாத்தியமான ஒன்று.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் ஒருபுறம் தவறு செய்கிறார்களென்றால் மறுபுறம் தேர்தல் ஆணையம் இது போன்ற இரட்டைப் பதிவுகளை சரிவர கணக்கில் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு, இரு வருடத்திற்கும் மேலான எனது முகவரி மாற்றத்திற்குப் பின்னரும் எனது பெயர் நெல்லை வாக்காளர் பட்டியலில் இன்னும் தொடர்கிறது. அதனை நீக்குமாறு இருமுறை வேண்டுகோள் விடுத்தும் இன்னும் நமது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
இவையெல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய விடயம் நமது மக்களின் அலட்சியம். படித்தவர்களை விட படிக்காதக் கிராமப்புற மக்கள் அதிகம் வாக்குப்பதிவு செய்வது கண்கூடு. வாக்களிப்பதால் என்னவாகி விடப் போகிறது, எவர் வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகிறார்கள் என்ற பரவலான பேச்சு பலருக்குள் இல்லாமலில்லை.
வாக்களிப்பதை ஒரு கடமையாகக் கருதாமல், நமது உரிமையாக கருதும் நிலைமை இருந்தால் வாக்குப் பதிவு சதவீதத்தில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்குப் பதிவு சதவீதம் வரும் தேர்தல்களில் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
அதோடு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அல்லது கணினி மூலமாக Online வாக்கு அளிக்கும் வாய்ப்புகள் குறைத்து தேர்தல் ஆணையம் வரும் காலங்களில் ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

நாகர்கோவில்
17.05.2016

May 01, 2016

தற்'போதை'ய தமிழகம்!

என்ன கொடுமைடா இது! என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கின்றது தமிழகத்தில் தற்போதைய நிலைமை. பத்திரிக்கையைத் திருப்பினால் விபத்து, கொலை, கொள்ளை, மோசடி, வரதட்சணைக் கொடுமை, கடத்தல், கற்பழிப்பு என பட்டியலிடப்படும் தனி மனித அல்லல்கள் ஒரு புறமென்றால், மறுபுறம், அந்த கட்சி சரியில்லை, இந்த கட்சி இவ்வளவு கொள்ளை என பட்டியல் போடப்படும் அரசியல் கட்சிகளின் வெறித்தனங்கள் பக்கங்களை நிரப்புகின்றன.
தொலைக்காட்சியைத் திருப்பினால் எந்நேரமும் எவரேனும் நாங்கள் இதைச் செய்வோம்! அதைச் செய்வோம்!! என கூவிக் கொண்டிருக்கின்றனர். போதா குறைக்கு அரசியல் நாகரீகமின்றி தனிமனிதத் தாக்குதல் பரவலாக அனைத்து கட்சியினராலும் தொடுக்கப்படுகின்றது; அந்த அளவில் தான் ஒவ்வொரு கட்சியினரும் நடந்தும் கொள்கிறார்கள்.
நிதித்துறையில் இருந்து நீதித்துறை வரை எங்கு செல்லினும் பாமரனுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கனியை எட்டும் முயற்சியெடுக்கவே இங்கு பலருக்கு கணி காண்பிக்க வேண்டியிருக்கிறது.
சாதிய அடக்கு முறைகளும், மதச்சண்டைகளும், பெண்ணடிமைத்தனங்களும், கல்வி வியாபாரமாக்கப்படுதலும், விவசாயிகளின் அவலங்களும், தற்கொலைகளும், இன்னும் தொடரத்தான் செய்கின்றன.
பொதுவெளியில் மக்களின் செயல்பாடு இன்னும் ஏமாற்றமளிப்பதாய் இருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து, முன் பதிவு மையங்கள் வரை வரிசையில் நிற்க வேண்டும் என்ற சாதாரண மனநிலை கூட பெரும்பாலான மக்களிடம் இல்லை. இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஏன் இத்தனை வேகமாக இயக்கப்படுகின்றன என்பதன் விடை தெரியவில்லை. சக வாகன ஓட்டுனர்களை, பாதசாரிகளை இன்னும் சொல்லப் போனால் போக்குவரத்து விதிமுறைகளைக் கூட பலரும் மதிப்பதில்லை.
மக்கள் மிக வேகமாக பயணிக்கின்றனர், ஒருவரை மற்றவர் முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பரவலாக அனைவருக்கும் இருக்கிறது; ஆனால் தானும் வாழ வேண்டும், கூடவே மற்றவரும் வாழ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. சக மனிதர்கள் இன்றி சுயமாக வாழ்ந்து விட முடியாது என்ற புரிதலும் இல்லை.
குப்பைகளைக் களைவதிலும், சுகாதாரமாய் வாழ்வதிலும் பொது மனிதராய் நமக்கு இருக்கும் அக்கறை இன்னும் சராசரிக்குக் கீழே தான். பிரயாணங்களின் நடுவே, சன்னல்களின் வழியே வீசியெறியப்படும் காகித, பிளாஸ்டிக் குப்பைகளும்; வயல்வெளிகளில் கொட்டப்படும் வேதிக் கழிவுகளும், மக்காத குப்பைகளுமே போதும் நம் அக்கறையைச் சுட்டிக்காட்ட!!
பணம் செழுத்தவன் வரி ஏய்ப்பு செய்து பகட்டாக வாழ்வதும், பணம் இல்லாதவன் கடனாலும், பசியினாலும் தொடர்ந்து மடிவதும் ஒரே மண்ணில் தான் என்பது வேதனைக்குரிய விடயம்.
இவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும் சங்கதி ‘டாஸ்மாக்’மதுபானக் கடைகள். கல்லூரி விழாக்களில் துவங்கி, திருவிழா, திருமணவிழா, கட்சி விழாக்கள் வரை மதுபானமில்லாத விழாக்கள் இல்லையெனலாம். போதை ஏற்படுத்தும் வில்லங்கங்களும், கைகலப்புகளும், விபத்துக்களும், குடும்பத் தகராறுகளும், வியாதிகளும், மரணங்களும் இன்னும் தொடர்வது தான் கொடுமைகளில் எல்லாம் பெரிய கொடுமை.
இத்தனைக் கொடுமைகளின் ஊடே நமது ஊரில் வாழ்வதை ஒரு சாகசம் என்று கூட சொல்லலாம்!
மதுவிலக்கு, கல்விக்கடன்களில் இருந்து விலக்கு, முதியோர் உதவித் திட்டம், விவசாயிகளின் நலன் காப்பு என கட்சிகள் அளித்திருக்கிற வாக்குறுதிகள் தமிழகத்தை நேர்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், சில நூறுகளுக்காக விலை போகிறவர்களும், இலவசங்களை எதிர்பார்ப்பவர்களும், அரசு நிதிகளை தம் வசமாக்கும் அதிகார வர்க்கமும், லஞ்சம் பெறும் கயவர்களும், கல்விக் கொள்ளையர்களும் தமிழகத்தில் தொடரும் வரை தமிழகத்தின் அல்லல்கள் தொடரவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

01/05/2016
நாகர்கோவில்.

March 16, 2016

அணைக்கப்பட வேண்டிய மதங்களைத் தாண்டிய சாதீ!


‘விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருக்கு சார்’, ஒருத்தரோட இரத்தத்த இன்னொருத்தருக்குக் குடுத்து உயிர் பிழைக்க வைக்கிறாங்க; ஒருத்தரோட கருமுட்டையை வேறொருத்தருக்கு செலுத்தி, அவங்க வழியாகக் குழந்தை பெத்துக்கிறாங்க; ‘இப்போலாம் யார் சார் சாதி பாக்கிறா’ என்பது போன்ற பேச்சுகள் அங்கங்கே தொனித்தாலும் சாதி எனும் தீ தொடர்ந்து பற்றியெரியத்தான் செய்கிறது.

மேம்போக்காகப் பார்த்தால் சாதி, மத, இன, நிற வேறுபாடுகள்/வெறிகள் இல்லை எனத் தோன்றினாலும் அவை ஆழ்மனங்களில் விதைகளாக இன்றும் உறங்கிக் கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு திருப்பூர் கொடூரம் ஒரு உதாரணம்.

இத்தகைய சாதிய பாகுபாடுகள் இந்து மதத்தில் மட்டுமே தொடர்ந்து இருந்து வருகிறது என்போமானால் நாம் நமது கண்களைக் கட்டிக்கொண்டும், செவிகளை அடைத்துக் கொண்டும் வாழ்ந்து வருகிறோம் என்று தான் பொருள்பட முடியும்.

தென் தமிழகத்தில் எவர் எந்த ஆலயத்திற்கு செல்கிறார் என்பதை வைத்தே அவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் எனக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடிகின்ற அளவு சாதியெனும் பேய் வியாபித்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்குள்ளேயே பல பிரிவுகள் இருந்து வருகின்றன. இதில் வேற்றுப் பிரிவினரை/ வேறு சாதியினரைத் திருமணம் செய்து கொள்ளும் கிறிஸ்தவர்கள் வெகு சிலரே.

பிற சாதி/மத/இனத்தைச் சார்ந்த ஒருவருடன் நட்பு பாராட்டுவதையே புருவம் உயர்த்திப் பார்க்கும் கிறிஸ்தவ சமூகம் தான், அன்பைப் பெருமையாக பேசுகிறது!! இணையத்தில் திருப்பூர் சம்பவத்திற்குப் பொங்குகிறது! என்று கருதுகையில் நாம் வாழும் சமூகத்தை நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

இருவருக்கிடேயே நடைபெறும் சாதாரண உரையாடல்களின் நடுவே மூன்றாவது ஒருவரைக் குறித்து பேச்செழுகையில், 'அவன் நம்மாளா'?  என்று வினவப்படுவதிலிருந்தே சாதியம் நம்மோடே பின்னிப் பிணைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மிகச்சிறப்பாக பாடும் திறமையுள்ள உறவினர் ஒருவரைக் குறித்து சில தினங்கள் முன்னர் 'அவன் மட்டும் வேற சாதிப்பயலா இருந்திருந்தா, இந்நேரம் பெரிய ஆளா வந்திருப்பான்' என்றார் அப்பா; பதிலுக்கு ஆமாம் என்றேன். அது தான் நிதர்சனும் கூட.

செய்தி ஊடகங்கள், குறிப்பிட்ட சமூகத்தினரை சிலாகித்து எழுதுவதும், அவர்களை முன்னிலைப்படுத்துவதும் இன்றளவும் இருந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதக் கொண்டாண்டங்களின் செய்திகளில் சவேரியார், கிறிஸ்து அரசர் ஆலயங்களைக் குறிப்பிட்டு எழுதிய இந்து தினசரி, லுத்தரன் உட்பட்ட ஆலயங்களை இருட்டடிப்பு செய்ததில் இருந்தே இவை போன்ற ஊடகங்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்ள முடியும்.

ிறமைகள் இருந்தும், ஒரு சாராரை மட்டம் தட்டுவதில் இன்றைய சமூகமும், ஊடகங்களும், அரசியல் வியாபாரிகளும் தொடர்ந்து குறிப்பாய் இருப்பதிலிருந்தே சாதியத்தின் வன்மத்தை உணரலாம். 'ஜீவா' 'இறுதிச்சுற்று' போன்ற திரைப்படங்கள் இதைத்தான் உணர்த்தியிருந்தன. சாதி/மதக் கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆயிரம் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், திரைப்படங்கள் வெளிவந்தாலும் தனிமனித சிந்தனை மாறாவிடில் இது இன்னும் தொடரவே வாய்ப்பிருக்கின்றது.

பிறந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் வேலையில் அமருவோரை விட, பிறந்த ஊரிலேயே வளர்ந்து, படித்தோ/படிக்காமலோ சிறு வேலைகளில் அமருவோரின் மனநிலையும், வீம்பிற்காக அவர்கள் முன்னெடுக்கும் சாதியம் சார்ந்த கருத்துகளும், கொலை செய்யும் அளவிற்கு வீரியம் மிக்கவை என்பது மறுக்கமுடியாத ஒன்று. குறுகிய வட்டத்திற்குள்ளான அவர்களது வாழ்க்கை முறையும், பரந்துபட்ட சிந்தனையின்மையுமே இதற்கு காரணம் எனலாம்.

'எங்க ஏரியா உள்ள வராதே' போன்றதான வாசகங்களும் இவர்களிலிருந்தே உண்டாகியிருக்க வேண்டும்!! ஊர்களில் வயது முதிர்ந்தும், எண்ணங்களில் முதிர்ச்சியடையாத சிலரின் சொற்களுக்கு விலைபோகும் இளைஞர்களைக் குறித்து கவிஞர். மகுடேசுவரன் இரு தினங்கள் முன்னர் பின்வருமாறு மிகத் தெளிவாக எடுத்தியம்பியிருந்தார்.
    
       "சாதி ஆளுமைக்குப் பெயர் பெற்ற பிரிவினரில் தேர்ச்சியான கல்வியறிவு பெற்றவர்கள் இடத்தைக் காலி செய்து விட்டார்கள். வெளிநாட்டுக்கும் பெருமாநகரங்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். போனவர்கள் போக, மீதமுள்ளவர்களில் பலர் வாழ்க்கயை மாற்றத்தக்க புதிய கல்விக்கோ சிந்தனைக்கோ ஆட்படாத பழைமையின் எச்சங்கள். பெரும்பாலும் 'மதுக்குடியர்கள்'. இவர்கள் தீவிரமாக ஈடுபடுவதற்கு ஏதேனும் ஒரு உணர்ச்சிகரமான பற்றுதல் வேண்டியிருக்கிறது...

    ...அந்த இடத்தில் தான் ஏதோ ஒன்றின் அடிப்படைவாதம் அவர்களைக் கவர்கிறது. சாதி, மதம் போன்ற அடிப்படைவாதங்களுக்கு முதலில் இரையாகிறார்கள். இந்த அடிப்படைவாதக் கொள்கையில் நின்றாலும் கூட, ஆக்கப்பூர்வமாகச் செய்வதற்கு எண்ணற்றவை இருக்கின்றன. ஆனால், அவற்றை நோக்கி அவர்களை யாரும் வழிநடத்தமாட்டார்கள். இது ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய சமூக நிலவரம். மேலோட்டமான உரையாடல்களால் இவற்றை களைவதற்கில்லை" என்றிருந்தார் கவி. மகுடேசுவரன். இது தான் இன்றைய நிதர்சனம்.

ம்பேத்காரையும், பெரியாரையுமே பைத்தியம் என்கிற கொலைவெறியர்கள்; பகிரங்கமாகக் கொல்லப்பட்டவரின் சடலத்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்பவர்கள்; கணவனின் சடலத்தைக் கூட இறுதியாக ஒரு முறை பார்த்து விடத் துடித்த மனைவியின் தனி மனித சுதந்திரத்திற்கு தடை போட்ட அரசு; வாக்குகளுக்காக இவற்றைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் திராவிடக் கட்சிகள்; சாதி அரசியலை முன்வைக்கும் பாமக போன்ற கட்சிகள் என நீளும் இந்த பட்டியல் இல்லாமல் போகும் காலம் மட்டும் சாதிவெறி தொடர்ந்து இருக்கத்தான் போகிறது.

புகைப்படம் நன்றி: G. ராமமூர்த்தி 
-------------

(சாதியின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி/வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை, பொருளாதார வசதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீடாக மாற்ற வேண்டியதைக் குறித்ததான வரைவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை இனி வரும் அரசுகளேனும் புரிந்து செயல்படுதல் அவசியம்)

February 23, 2016

சுவரொட்டி, விளம்பரப் பலகை மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழகம்

'டிஜிட்டல்’ தொழில்நுட்பம் முறையிலான அச்சுகள் வந்த பின்னர், விளம்பரப் படுத்துதல் என்பது ஒரு புதிய பரிமாணத்திற்குள் காலடி எடுத்து வைத்ததை மறுப்பதிற்கில்லை. வர்ணமயமான, ரசிக்கும் படியான டிஜிட்டல் விளம்பரப்படுத்துதல் என்பது இன்று துதிபாடல்களாலும், தனிமனித விளம்பரப்படுத்துதலாலும், சுய தம்பட்டங்களாலும் அதன் அழகை இழந்து நிற்கிறது.

சிறிய விழாக்கள் முதல் பெரிய மாநாடுகள் வரை டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் வைக்கப்படாத நிகழ்வுகள் இன்று விரல்விட்டு எண்ணக்கூடியவையே. கட்சி விழாக்கள், கோவில் விழாக்கள், கிறிஸ்தவ கூட்டங்கள், திருமணங்கள், திரைப்பட வெளியீடுகள் என எதுவும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆளுயரத்திலிருந்து, ஆனை உயரம் வரை வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மூலம் சாமானியன் படும் அல்லல்களுக்கு அளவில்லை. இது போன்ற பலகைகள் @ Flex Board களை வைப்பவர்கள் பேருந்து நிலையங்கள் என்றும், பேருந்து நிறுத்தங்கள் என்றும், நெருக்கடி நிறைந்த போக்குவரத்து வளைவுகள் என்றும், நடைபாதை என்றும் கண்டுகொள்வதில்லை

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டரங்கத்தின் முகப்பு, எஸ்.எல்.பி பள்ளியின் அருகேயுள்ள நடைபாதை, வேப்பமூடு சந்திப்பிலுள்ள பூங்கா, பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், சிறைச்சாலை என எதையும் விட்டு வைக்கவில்லை விளம்பரப் பலகைப் பிரியர்கள்.

ஒழுகினசேரி 

தேரேகால்புதூர் 

அண்ணா விளையாட்டரங்கம் 

வடசேரி 

 வேப்பமூடு சந்திப்பு 


அண்மையில் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இது போன்ற விளம்பரப் பலகை ஒன்று, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் அகற்றிய காவல்துறை அதிகாரியை பகிரங்கமாக மிரட்டிய அரசியல்வாதிகளைப் போன்றோர் கொண்டிருக்கும் பணபலமும், ஆள்பலமும் தான் இவர்களுக்கு தீனி.

இதில் உச்சபட்ச நகைச்சுவை, இவர்கள் மின்சார வாரியத்தின் Transformer ஐயும் கூட விட்டு வைக்காதது தான். மட்டுமல்லாது ஒரு மாவட்டத்தின் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் 'விளம்பரம் செய்யாதீர்' என்ற எச்சரிப்பிற்குப் பின்னரும், கிறிஸ்தவ கூட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்தியிருப்பதில் இருந்தே இந்த விளம்பரப்படுத்தல் எனும் மன நோயின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.


பதிவுத்துறை அலுவலகம் 

சிறைச்சாலை, நாகர்கோவில் 


ட்சிகள் ஒருபுறமென்றால் மறுபுறம் திரைப்பட ரசிகர்கள், புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது, கதாநாயகனுடன், இவர்கள் முகங்களையும் சேர்த்து அச்சிடும் விளம்பரப் பலகைகளின் கொடுமை சொல்லி மாளாது. அதே போன்று திருமண வீடுகளிலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் தங்கள் விருப்ப நாயகர்களின் படங்களையும் சேர்த்து அச்சிட்டு வாழ்த்து தெரிவிக்கும் அக்கப்போர்களும் தொடரத்தான் செய்கின்றன. இதே பாணியில் அண்மைக் காலங்களில் கிறிஸ்தவர்களும் இறங்கியிருப்பது தான் ஆச்சர்யம்.

எப்படியாவது ஒரு விளம்பரப் பலகையில் நமது புகைப்படமும் வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஊருக்கு ஊர், ன்று விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது ஒரு வகை மனநோயாகவே மாறியிருக்கிறது. இத்தகைய சுய தம்பட்டங்கள், அரசியல் தலைவர்களை, மதத் தலைவர்களை திருப்திப்படுத்த அச்சடிக்கப்படும் விளம்பரங்கள், வரும் தலைமுறைக்கு மிகத்தவறான முன்னுதாரணாக அமையும் என்பது தான் இன்னும் வேதனை தரும் விடயம்.

December 17, 2015

சென்னை வெள்ளத்தில் வெளுத்த கிறிஸ்தவ சபைகளின் சாயம்!

சென்னையில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடிந்தபாடில்லை; நிவாரணப்பணிகள் முழுமையாக சாமானியனை சென்று அடையவுமில்லை; குப்பைமேடுகளும், காசிமேடுகளும், முழுமையாக சுத்தமாக்கப்பட்டு மக்கள் குடுயேறும் நிலைக்கு வரவில்லை; அதற்குள்ளாக கிறிஸ்தவ வியாபாரிகள் டிசம்பர் 12 ஆம் தேதி புதுவாழ்வு ஏஜி சபையில் திறப்பின் வாசல் ஜெபம் என்பதன் பெயரில் தங்கள் சுயமுகத்தை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.

சாமானியர்களும், நெஞ்சில் ஈரமுடையவர்களும், தன்னார்வலர்களும் களத்தில் நின்று உதவிகளும், நிவாரணப்பணிகளும், சுகாதாரப்பணிகளும், மருத்துவப் பணிகளையும் செய்து வரும் இத்தருணத்தில் இவர்கள் ஜெபம் செய்கிறார்கள் (அதையும் விளம்பரப்படுத்தித் தான் செய்கிறார்கள்!!) அதிலும் சென்னையைப் பேரழிவிலிருந்து காத்த தேவனுக்கு நன்றி என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள் (அதாவது இவர்கள் பணம் ஈட்டுகின்ற தலைநகரத்தை முழுமையாக அழிக்காததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் போலும்!!)


"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கிற மத்தேயு 6:5 ஐ அறியாதவர்களா இந்த வியாபாரிகள்!!

ஜெபம் என்பதன் பெயரில், இது போன்ற சுய தம்பட்டங்களைத் தவிர்த்து இவர்கள் தலைமையில், இவர்களுக்கு கீழிருக்கும் மக்களை ஒருங்கிணைத்து களமிறங்கியிருந்தாலே, இந்நேரம் சென்னை சுத்தமாகியிருக்குமே! களப்பணி ஆற்றுவதிலிருந்து இவர்களை தடுப்பது எது?

 ஓய்வு நாளாதலால் ஜெபமும், போதனையும் தவிர்த்து உதவி செய்தல் ஆகாது என்று இறுமாப்புக் கொண்ட சீடர்களை இவர்கள் வணங்கும் இயேசு கடிந்து கொண்டதை அறியாதவர்களா!! இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். மத்தேயு 12:10-12

இந்த சிறியவர்களுக்கு எவனொருவன் செய்யாமலிருக்கிறானோ அது பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு செய்யாமற் போனதாகும் என்பதையும் அறியாத பதர்களா இவர்கள்!! மத்தேயு 25:34-46

கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்பதையேனும் அறிவார்களா இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். யாக்கோபு 2:16-20

நற்போதனைகளைத் திரித்து மக்களுக்கு எடுத்துரைப்பதாலும், நற்செயல்கள் செய்ய இவர்கள் கைகள் குறுகியிருப்பதும் கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு புகழைச் சேர்ப்பதுமல்ல.

மக்களிடம் இருந்து காணிக்கை என்பதன் பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு மக்கள் அவர்களையும் அறியாமலே பலியாவது தான் வேதனை தரும் விடயம். மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளல் அவசியம்.

வியாபாரமாக்கப்பட்ட இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளிடம் மனிததத்தையும், சக மனிதனுக்கு உதவும் திராணியையும் எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம் என்பது மட்டும் புரிகிறது.

August 16, 2015

மதுவிலக்கு - களியக்காவிளை - மலையடி குமார் பேச்சு



சசி பெருமாள் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து ஆளுங்கட்சியைத் தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் டாஸ்மாக் ஒழிப்பிறகு ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சில தினங்கள் முன்னர் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சொந்த அலுவல் நிமித்தம் தமிழக-கேரள எல்லையில் இருக்கும் காரக்கோணம் மருத்துவக்கல்லூரிக்கு 13 ஆம் தியதி செல்ல வேண்டியிருந்தது. காரக்கோணம் செல்வதற்கு களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து பிறிதொரு பேருந்தில் பயணம் செய்தாக வேண்டுமென்பதால களியக்காவிளையில் இறங்கினேன்.

இறங்கியதுமே காதில் விழுந்த மலையாள குரலிலிருந்து,  அங்கு அரசியல் கூட்டம் நடைபெறுவதாக அறிய முடிந்தது. சற்றே உன்னித்து கவனித்ததும் அது மது ஒழிப்புக்கு ஆதரவான உரை என புரிந்தது.

அந்த உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் தமிழில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தாலும் நிகழ்த்தப்பட்ட உரை மலையாளத்தில் இருந்தது என்பதாலும், உரையாற்றியவர் தெளிவான நடையோடு பேசியதாலும் அதனை பதிவு செய்ய ஆரம்பித்தேன். கேரளத்தின் மதுவிலக்கு, தமிழகத்தின் டாஸ்மாக், தோழர் சசி பெருமாளின் மதுவிலக்குக்கு எதிரான போராட்டங்கள் போன்றவைக் குறித்து விரிவாக கருத்துக்களைப் பதிவு செய்தார் உரையாற்றியவர்.

உரையின் இறுதியில் அவரை சந்தித்து அவரது பெயரை அறிந்து கொண்டதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் பரிமாறும் வாய்ப்பும் கிடைத்தது. மலையடி பகுதியைச் சார்ந்த குமார் என்பதாக தெரிவித்தார் அந்த பெரியவர். ஏறக்குறைய 60 வயது இருக்கும் அவருக்கு. இத்தனை வயதிலும் மிகத்தெளிவாக, புள்ளிவிவரங்களோடு, உரை நிகழ்த்துகிறார் என்பது குறித்து பெரிதும் ஆச்சர்யப்பட்டேன். பேச்சை முடித்த கையோடு அவர் மற்றுமொரு இடத்தில் உரையாற்றுவதற்காக புறப்பட்டு சென்றார்.

இப்படியாக மதுவிலக்குக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் பிடிவாதம் கொண்டு மது குறைப்பு குறித்து கூட எந்த அறிவிப்பும் வெளியிடாத ஒரு அரசைப் பெற்றிருப்பதற்கு நாம் வெட்கப்படவேண்டும்.

February 19, 2015

விஜய் டிவி சூப்பர் சிங்கர் - சர்ச்சைகளும் புரிந்ததும்



பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட சூப்பர் சிங்கர் ஜூனியரின் நான்காவது சீசன் இறுதி சுற்று நாளை அதாவது பிப்ரவரி 20 ஆம் தியதி சென்னையில் அரங்கேறுவதாக இருக்கிறது.

இசையில் நாட்டம் இருப்பதாலும், தொடர்ந்து இந்த பாடல் நிகிழ்ச்சியை பார்த்து வருவதாலும் எனக்கு புரிந்த சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதால் தான் இந்த பதிவு.

சூப்பர் சிங்கர் 2006 ஆம் ஆண்டு துவங்கி கடந்த 8 ஆண்டுகளில் நான்கு சீனியர் போட்டிகள், நான்கு ஜூனியர் போட்டிகள் என எட்டு சீசனை நிறைவு செய்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் விளம்பரப்படுத்தலாலும், தொகுத்து வழங்கும் பாணியினாலும், நட்சத்திரங்களை அரங்கத்திற்குள் அழைத்து வருகிற திறமையினாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருப்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

பங்கு பெறும் போட்டியாளர்களை ஊக்குவிப்பதும், அனந்த் வைத்யநாதன் அவர்களைக் கொண்டு போட்டியாளர்கள் குரலை மென்மேலும் மெருகேற்றுவதும், சரிவர பாடமுடியாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தருவாயிலிருக்கும் போட்டியாளர்களையும் அரவணைத்து செல்வதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தனித்துவம் என்று சொல்லலாம்.

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் எல்லா நிகழ்ச்சிகளைப் போன்றே சூப்பர் சிங்கராலும் சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. நடுவர்கள் பாகுபாடு பார்க்கிறார்கள் எனவும், திறமைகளை இருட்டடிப்பு செய்து அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கே அதிக ஆதரவு தருகிறார்கள் என்பதும், பிற மாநிலத்தவர்களுக்கே (நடுவர்கள் உட்பட) அதிக வாய்ப்புகள் தருகிறார்கள் எனவும், அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் சூப்பர் சிங்கரின் அனைத்து சீசனிலும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

இந்த ஜூனியர் சீசன் 4 ல் அதிகமாக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது, 'தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என சொல்லிவிட்டு வேற்று மாநிலத்தவர்களின் குரலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.

ஆனால் இந்த சூப்பர் சிங்கரின் தாரக மந்திரமான 'தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்/ தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என்பது விஜய் தொலைக்காட்சியின் சாதாரண விளம்பரப்படுத்தல் தான்; கடந்த எட்டு வருடங்களாக தமிழகத்தில் இருந்து மட்டுமே போட்டியாளார்களை ஏற்றுக்கொள்வோம் என எங்கும் விளம்பரப்படுத்தி இருந்ததாக தெரியவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் போட்டியாளர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதென்பது விஜய் தொலைக்காட்சியின் வியாபார உக்தியாகத்தான் தெரிகிறது.

அதற்கான முதல் அச்சாரம் தான் முதல் சீசனில் வெற்றிபெற்றவரும், கேரள மாநிலம், கோட்டயத்தைச் சார்ந்தவருமான 'நிகில் மேத்யூ'. இதைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா, காஷ்மீர் என பிற மாநிலங்களில் இருந்தும் பலர் படையெடுக்கத் துவங்கினர்.

இந்த சீசனின் மற்றுமொரு சர்ச்சை நன்றாக பாடிக்கொண்டிருந்த அனுஷுயாவை போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்பது தான். இதற்கு வருத்தப்பட்டவர்கள், வசைபாடியவர்கள், தரம்தாழ்ந்து பேசியவர்கள் அனைவரும் அனுஷுயா தமிழ்நாட்டைச் சார்ந்தவர் இல்லை என்பதை மறந்து விட்டுத்தான் அவற்றை செய்திருக்க வேண்டும்!! ஒரு கட்டத்தில் நடுவர்களான சித்ரா, மனோ இருவர் மீதான தனிப்பட்ட தாக்குதல், கருத்து சுதந்திரம் என்பதன் பெயரில் எல்லை மீறிப் போகவே 'யூடியூப்' தளத்தில் இருந்து அந்த காணொளியையே நீக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது விஜய் தொலைக்காட்சி. 

தமிழக போட்டியாளர்களையே இந்த நிகழ்ச்சியில் வைக்க வேண்டும், மற்ற மாநிலத்தவர்களை எல்லாம் எதற்கு விஜய் தொலைக்காட்சி தூக்கி வைத்து கொண்டாடுகிறது என்று ஆதங்கப்பட்டவர்களே, அனுஷுயா பாண்டிச்சேரியைச் சார்ந்தவர் என்பதறியாமல் அவர் வெளியேற்றப்பட்ட போது அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டார்கள்.

எனக்குப் புரிந்த வரை பிற மாநிலம் சார்ந்தவர்களை பங்குபெற செய்வது முழுக்க முழுக்க விஜய் தொலைக்காட்சியின் தாரக உரிமை மட்டுமல்லாது அது அவர்களின் வியாபார உக்தியும் கூ. அதோடு மொபைல் மற்றும் ஆன்லைன் ஓட்டு முறையும் அவர்களின் வியாபாரமே! (இல்லையென்றால் குறைவான வாக்குகளே வாங்கியிருந்த ஸ்ரீஷாவை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்து ஓட்டு போட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்களா!!) (ஸ்ரீஷா மிகச்சிறந்த குரல்வளமும், திறமையும் கொண்டவர் என்பதையும் ஒத்துக்கொண்டாக வேண்டும்) யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நிகழ்ச்சியை ரசிப்பதை விட்டுவிட்டு வசைபாடுவதும், வீண் தர்க்கங்களிலும் ஈடுபடுவதும் நேர விரயமே.

இறுதிப்போட்டியில் அனுஷுயா, ஹரிப்பிரியா அல்லது பரத் வெற்றி பெற அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது, நாளை இரவு தெரிந்து விடும்.


October 02, 2014

தலைகுனிய வைக்கும் அரசியல், கிரிக்கெட், சினிமாத் துறையினர்

பணத்திற்காகவும், புகழிற்காகவும் மானத்தையும்  கூட பொருட்படுத்தாத ஒரு சமுதாயத்துடன் வாழ்ந்துவருகிறோம் என்பதற்கு கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே சாட்சி. 

முன்னாள் முதல்வரின் கைதும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் இதுவா நம் தமிழகம் என்ற கேள்வியை என்னில் ஏற்படுத்தியிருந்தன. பேருந்துகளில் கல் வீசியும், தீயிட்டும்; அப்பாவிகளின் சாலையோர கடைகளை சேதமாக்கியும்; பேருந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தும் தங்களின் விசுவாசத்தை தலைமைக்கும், ஊடகங்களுக்கும் காண்பித்துக் கொண்டிருந்தனர்  (இவை அனைத்தையும் நிகழ்ந்த சம்பவங்கள் என்பதை விட நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் என குறிப்பிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும்) 

இத்தகைய செயல்கள் கோபத்தில் நிகழ்த்தப்பட்டவை என்பது ஒருபுறமிருந்தாலும் பிறர் கவன ஈர்ப்புக்காக குறிப்பாக ஊடக கேமராக்களின் கவனத்தை ஈர்க்க நிகழ்த்தப்பட்ட நாடகங்களாகவே பார்க்க முடிகிறது. இதனை உளவியலில் ASB – Attention Seeking Behaviour என்கிறார்கள்.  

இதைத்தான் பன்னீர் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்பின் போது வேறுவடிவத்தில் (அழுகை மூலம்) அரங்கேற்றினார்கள்.  

பதவிகளை தொடர்ந்து காப்பாற்றவும், பணங்களில் திளைக்கவும், சுயமரியாதையையும், மானத்தையும் இழக்க சற்றும் யோசிக்காத இவர்களிடமிருந்து நீதி, நியாயம், நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.  

இவர்கள் தான் இப்படியென்றால் திரைத்துறையை சார்ந்தவர்கள் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஊழலையும், கொள்ளையடித்தலையும், மக்களை ஏய்த்துப் பிழைத்தலையும் நியாயப்படுத்துகிறார்கள். திரைப்படங்களில் ஊழலுக்கெதிராக குரல் கொடுத்தவர்களை, கேவலம், நாம் தான் நம்பி ஏமார்ந்திருக்கிறோம்.  

தங்களின் உண்மையான முகம் இது தான் என தமிழக மக்களுக்கு தாங்களாகவே காட்டியிருப்பதற்கு திரைத்துறையினரைக் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்!! 

இத்தனை காலமும் பிழைப்பிற்காகத்தான் ஊழலை ஒழிப்பது போன்றும், தீயவை  ஒழிப்பது போன்றும் திரைப்படங்கள் எடுத்து கூவி கூவி விற்றிருக்கிறார்கள். நாங்கள் பிழைப்பதற்காக எத்தகைய ஈனச்செயலும் செய்ய தயாராக இருக்கிறோம் என சொல்லாமல் சொல்லி விட்டார்கள். 

பாமரனோ இன்னும் சில வாரங்களில் இதையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் இவர்கள் எடுக்கப்போகும் திரைப்படங்களை வாய்பிளந்து பார்க்கத்தான் போகிறான்.  

அரசியலும், திரைப்படத்துறையும் இப்படியென்றால், கிரிக்கெட் இவைகளுக்கெள்ளாம் ஒரு படி மேலே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவிற்கு தான் இந்தியா என்பதை கொண்டிருக்கிறது, மற்றபடி இந்தியாவாவது, தேசப்பற்றாவது என்பது தான் இவர்களின் செயல்பாடு. 

பண ஆசை யாரைத்தான் விட்டது, கிரிக்கெட் வாரியங்களையும், அதன் தலைவர்களையும், ஆட்டக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரியாவில் தற்போது நடந்து கொண்டிருக்க, அதில் பங்கேற்க கிரிக்கெட் அணியை அனுப்பாமல், சாம்பியன்ஸ் லீக்கில் ஆட விட்டு ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நாட்டிற்காக விளையாடுவதை தவிர்த்து பணத்துக்காக விளையாடுகிறார்கள் என்பதற்கு இதை விட சான்று என்ன வேண்டும். இதைக் குறித்து இதுவரை எந்த மூத்த கிரிக்கெட் ஆட்டகாரர்களும் கருத்து தெரிவித்ததாக இல்லை. மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடியும் வாயை திறந்ததாக இல்லை. இத்தனைக்கும் அரசியல் தலைவர்கள் தான் பல கிரிக்கெட் வாரியங்களுக்கு தலைவர்களாக இருக்கின்றனர். குஜாராத் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது பா.ஜ.க வின் தலைவர் அமித் ஷா அந்த பொறுப்பை கவனித்துக் கொள்கிறார். 

இப்படியாக இந்தியா ஊழலில் திளைக்க அரசியலும், திரைப்படத்துறையும், கிரிக்கெட் வாரியமும் மிகப்பெரிய காரணிகளாக தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றினோடு கார்ப்பரேட் ஆசாமிகள் சிலரையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நான்கும் நாற்புறமும் இருந்து கொண்டு இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றன. 

இந்தியா வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த காலம் மாறி இன்று கருப்பனுக்கு அதாவது கருப்புப்பணத்திற்கு அடிமையாகிக் கிடக்கிறது. 

இந்தியாவில் பாமரன் மடிகின்றான்; விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான்; மீனவன் பிடிக்கப்படுகின்றான்; தரமான கல்வியைப் பெற ஏழை பாடுபடுகிறான்;  சாமானியன் சரியான மருத்துவ வசதியின்றி மரிக்கின்றான்.  

இவர்களை கவனிப்பாரில்லை, ஊழல் செய்தாருக்கு சொம்பு தூக்கவும், கொள்ளையடித்தவர்களை ஆதரிக்கவுமே இங்கு நேரமில்லாத நிலையில் சாமானியனை ஏறெடுத்துப் பார்ப்பவன் யார்!
Related Posts with Thumbnails