Showing posts with label சிந்தனைகள். Show all posts
Showing posts with label சிந்தனைகள். Show all posts

August 15, 2014

மதம் - மனிதம் - மனிதன்


நான் நீ, அவன் இவன், அது இது என்பதில் துவங்கி உண்பது, உடுப்பது, கும்பிடுவது, உறங்குவது, அணிவது என அனைத்திலும் பாகுபாடுகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது சிந்திக்கவியாலாத ஓன்று. இத்தகைய பாகுபாடுகள் காலங்காலமாக தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகள் சக மனிதனுடைய வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்குமெனில் அங்கு மனிதன், மனிதம் எனும் தனது சாதாரண நிலையிலிருந்து முரண்பட்டு வாழ முற்படுவதாகத்தான் பார்க்கத்தோன்றுகிறது.

குடிசை-மாளிகை; ஏழை-பணக்காரன்; மேல்சாதி-கீழ்சாதி; கிறிஸ்தவன்-இந்து; இந்து-முஸ்லிம் போன்ற இந்த பிரிவினைகளும், வகுப்புவாத பாகுபாடுகளும் தான் இத்தனை காலமும் அமைதியான ஒரு சமுதாயத்தை தொடர்ந்து சீர்குலைத்து வந்திருக்கின்றன.

இவற்றில் மதச்சாயம் பூசப்பட்ட பிரிவினைகளை தாண்டி மற்றவை ஓரளவு மறக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் மதங்கள் இன்றும் மனித சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தான் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கு கூட வெட்கக்கேடு.

மதங்களையும் பாகுபாடுகளையும் உருவாக்கியது மனிதர்கள் என்பது தான் இதில் விசித்திரம். சக மனிதர்களை மனிதம் போற்றி மனிதர்களாக மதிக்க தெரியாத மதங்கள் இருந்து என்னத்திற்கு?!

என் மதம் தான் உயர்ந்தது, என் மதத்தை பின்பற்றுவோர் உயிரோடிருக்கட்டும், மற்றவர் அழிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைமை கொண்டு கொல்லவும் தயங்காத மதம் பிடித்த மனித மிருகங்கள் தான் இன்றைய மனித சமுதாயத்தின் எதிரி.

மனித சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எந்த மதமும், அம்மதத்தின் பெயரால் அச்சுறுத்தும் மதவெறியர்களும் தான் தற்கால அமைதிக்கு எதிரிகள். இவர்களையும் இவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளையும் எப்படி சமாளிக்க போகிறோம் என்பது தான் கேள்விக்குறி!

பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும், கிறிஸ்தவன் என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் நல்ல மனிதன் என்றழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.
 
கிறிஸ்தவத்தில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் தெய்வ நூலாக கருதுகிற விவிலியத்தில் எழுதியிருப்பதற்கு எதிரான கொள்கைகளை கடைபிடிப்பதும், அதில் இல்லாத கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு பாகுபாடு காண்பிப்பதும் தான்.
சொரூபங்கள் அல்லது விக்கிரகங்களை கும்பிடவோ, நமஸ்கரிக்கவோ கூடாது என விவிலியத்தில் தெளிவாக எழுதி இருக்கையில் இவர்கள் சிலுவையையும், இயேசு, மேரி மாதா என படங்களையும், சிலைகளையும் உருவாக்கிக்கொண்டு வழிபடுவது வேடிக்கை.
கிறிஸ்தவத்தில் பல்வேறு உட்பிரிவுகள் வேறு!! இதே போன்ற உட்பிரிவுகள் பிற மதங்களிலும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மனிதனே மனிதனுக்கு எதிரி என்பதும்; மனிதன் உருவாக்கிய மதமே மனிதத்திற்கு எதிரி என்பதும் தான் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம். ஒரு மதம் ஒரு மனிதனை நற்பண்புடையவானாக்கி சக மனிதர்களையும் மதித்து நடக்க கற்றுக் கொடுக்கவில்லையெனில் அதை விட சாபம் வேறொன்றுமில்லை.
எவரையும் கீழ்த்தரமாக நடத்தவோ, கொலை செய்யவோ எந்த மத நூலும் சொல்லுவதாக கேள்விப்பட்டதில்லை.
விவிலியத்தையும். குரானையும், பிற மதம் சம்பந்தப்பட்ட நூல்களையும் சரிவர படித்தறியாத அரைவேக்காடுகளே இன்று மத போதையேறி மனித குல அமைதிக்கு எதிரான குரல் கொடுத்தும்; சக மனிதர்களை கொன்றும் வருகின்றன.
மதங்கள் அழிக்கப்பட வேண்டும்! ஆனால் அது சாத்தியமா என்றால், இல்லை என்பது தான் பதில். மதங்கள் அழிப்படவில்லை எனினும் மனிதம் போற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. 

February 01, 2014

நாகர்கோவில்-அறிந்ததும்-புரிந்ததும்

பதினைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் சொந்த மண்ணான நாகர்கோவிலில் இரு வாரங்கள் செலவிடும்படியான வாய்ப்பு இந்த வருடம் தான் வாய்த்தது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா என்ற கங்கைஅமரன் அவர்கள் எழுதிய பாடல் தான் நினைவிற்கு வருகிறது இதை எழுதத் துவங்குகையில்.

நாகர்கோவிலின் வனப்பைக் குறிந்து அறிந்தவர்களுக்கு தெரியும் அதன் சிறப்பு. பச்சைப்பசேல் என எங்கும் நிறைந்திருக்கும் வயல்வெளிகளும் அதன் எழிலும், ஓங்கி உயர்ந்து நிற்கும் தென்னைகளின் நளினமும், பசுமை நிறைந்து அரணாக நிற்கும் மலை முகடுகளும், வெள்ளக் குளிர்மையால் பரந்து விரிந்திருக்கும் குளமும் குளத்தாங்கரைகளும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கே உரித்தான அழகு. நாகர்கோவிலில் எடுத்த சில புகைப்படங்கள் அடுத்த பதிவில்.

இத்தனை அழகை ரசிக்கும் வாய்ப்பு பதினைந்தாண்டு காலத்திற்கு பின்னர் இந்த வருடம் ஜனவரியில் வாய்த்தது. அதோடு நாகர்கோவிலையும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் சிலவற்றையும் அவற்றின் நிகழ்வுகளையும் அவதானிக்கும் வாய்ப்பும் அமைந்தது.

உயிரை வாங்கும் சாலைகள்/ கிலியை ஏற்படுத்தும் வாகனங்கள்

முன்னெப்போதுமில்லாத போக்குவரத்து நெரிசலும், வாகனங்களின் ஆக்கிரமிப்பும் சலிப்பைத் தந்ததை மறுப்பதற்கில்லை. வழக்கமாகவே நாகர்கோவிலின் சாலைகள் குறுகலானவை, எதிரெதிரே பேருந்துகள் செல்வது கூட சிரமப்பட்டு தான் செல்ல வேண்டும். சாலைகளுக்கும், கடைகளுக்குமிடையேயான இடைவெளி வெகுகுறைவு. நடைபாதைகள் பெயருக்கு தான் இருக்கின்றன. இருசக்கர வாகனங்கள் தான் நடைபாதைகளையும் ஆக்கிரமித்துள்ளன.

வாகனங்கள் இவ்வளவாக பெருகியிருப்பினும் சாலை விரிவாக்கமோ, சாலை சீரமைப்போ நடப்பதாகத் தெரியவில்லை. அத்தனை குண்டு குழிகள் சாலைகளில். இதில் சாலை பாதுகாப்பு வாரம் வேறு அனுசரிக்கிறார்கள். இது ஒருபுறமென்றால் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் இதற்கு மேலிருக்கிறார்கள். பெரும்பாலானோரிடம் பொறுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்தனை வேகமாக செல்வதில் என்ன அலாதி இன்பமோ! சிவப்பு விளக்கு இருந்தால் அதையும் மதிக்காமல் வாகனத்தைச் செலுத்துபவர்களை என்னவென சொல்வது. அப்படித்தான் ஒருமுறை வேப்பமூடு சந்திப்பில் மினிபஸ் ஒன்றினால் விபத்துள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பினேன்.

உயிரை எடுக்கும் டாஸ்மாக் கடைகள்

எந்த கடைகளில் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடைகளில் கூட்டத்திற்கு குறைவேயில்லை. சரக்கை அடித்து விட்டு சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிர்சேதத்தைக் குறித்து எவருக்கும் கவலையில்லை. சற்று நேர அற்ப போதைக்காக உயிரையும் பணயம் வைப்பவர்களை என்னவென சொல்வது.

புத்தேரி குளத்தை ஒட்டியவாறு டாஸ்மாக் கடை ஒன்றிருக்கிறது. அதனருகே ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி (சிலவருடங்களாகவே) மேம்பாலப்பணியும் நடைபெற்று வருகிறது. மேம்பாலப்பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. டாஸ்மாக்கில் குடித்து விட்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததால் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த பலரையும் காண நேர்ந்தது.

இன்னும் தொடர்ந்து ஏமா(ற்)றும் கிறிஸ்தவ கூட்டங்கள்

முன்னெப்போதுமில்லாத அளவு பிரார்த்தனை திருவிழாக்களும், சுகமளிக்கும் பெருவிழாக்களும், தெய்வீக சமாதானமளிக்கும் கூட்டங்களும் நடந்தேறுவதையும் கவனிக்க நேரிட்டது. மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுவரும் சில கும்பல்களுக்கு மக்களே பொருளாதார உதவிகள் அளித்து வருவது தான் இன்னும் ஆச்சரியம் தருகிறது. ஊழியம்  என்பது மக்களை சென்று சேர்ந்த காலம் மாறி இன்று மக்களை கவர்கிற; இங்கு வாருங்கள் சமாதானம் கிடைக்கும், இங்க வாங்க சுகம் கிடைக்கும் என்று கிறிஸ்துவின் பெயரில் கொள்ளையடித்து; உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதித்து ஊரை ஏமாற்றுபவர்கள் பெருகியிருப்பது சமூக அவலம்.

ஊழியர்கள் என சொல்லப்படுபவர்கள் வறுமையிலிருப்பவர்களுக்கு, ஏழைகளுக்கு உதவிகள் செய்த காலம் மாறி இன்று அவர்களிடமிருந்தும் பணத்தை உறிஞ்சும் வக்கிரத்தை என்னவென சொல்வது. ஏமாறுகிற மக்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்களும் தொடர்வதில் ஆச்சரியமில்லை.

வரதட்சணை-பகட்டு-திருமணங்கள்

தமிழ்நாட்டிலேயே கல்விகற்றவர்கள் அதிகம் இருப்பவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் என்பது பலரும் அறிந்ததே; ஆனால் இதே கற்றவர்களால் நடந்தேறும் குற்றங்களும் அதே அளவு வியாபித்திருப்பது தான் மகா கேவலமான விஷயம். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவு வரதட்சணைக் கொடுமை இங்கு தான் காணப்படுகிறது. பண்பை மறந்து பகட்டையும்; அன்பை மறந்து அணிகலன்களையும் நாடி செல்லுகின்ற எம்மினத்தை  என்னவென சொல்வது.

திருமணங்களில் மங்கையரைப் பார்க்க வேண்டுமே... அப்பப்பா! அவர்கள் கழுத்தே இறங்குகிற அளவு நகைகளை அணிந்து தங்களை அலங்கோலப்படுத்திக் கொள்கிறார்கள். இதை ஒரு விதமான சமூக அந்தஸ்தாகக் கருதுகிறார்கள். அவர்கள் வீட்டில் அப்படி செய்திருக்கிறார்கள்; அவர்கள் பெண்ணிற்கு அத்தனை நகைகள் போட்டிருந்தார்கள்; நம் பெண்ணிற்கும் போட வேண்டும் என்ற ஒரு நினைப்பே பெரும்பாலானோரிடம் மேலோங்கியிருக்கிறது. இத்தனை நகைகள் வைத்திருப்பவர்களிடம் பணத் தேவையிருக்கும் ஒருவர் போய் நின்றால் கைவிரிப்பது தான் நடந்தேறும்.

இது
நான் வாழும்
நாஞ்சில் நகரம்

இங்கு
மதச்சாயத்திற்கு விலையுண்டு
ஆனால்
மனிதத்திற்கு விலையில்லை
மனிதாபிமானத்திற்கும் விலையில்லை

டாஸ்மாக் வாங்கித்தருபவன் நண்பேண்டா
பாசமாக இருப்பவன் எவர்க்கும் வேண்டா

மானம் போனால் என்ன
பானமே பெரிது எமக்கு

இங்கு
வரதட்சணை வாங்கியவர்
வாழவைக்கும் மாப்பிள்ளை
வரதட்சணை வாங்காதவர்
குறையுள்ள மாப்பிள்ளை

இது தான்
நான் வாழும்
நாஞ்சில் நகரம்

December 31, 2013

எந்திர வாழ்க்கை - ஏன் இந்த வாழ்க்கை

விமானத்தில் எத்தனை முறை பயணம் செய்திருந்தாலும் வெகு அருகே கம்பீரமாக அது பறக்கையில். ஆச்சர்யமாக, முதல் முறை விமானத்தை பார்ப்பது போன்று வேடிக்கை பார்ப்பதும், ரசிப்பதும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது; விமானம் வான் நோக்கி எழுவதிலும் (Take Off) தரை இறங்குவதிலும் (Landing) இருக்கிற அழகு அது  பறக்கும் பொழுது அதிகம் இருப்பதில்லை.

அப்படித்தான் சென்ற வாரம் வாகனத்தில் பயணப்படுகையில், இறக்கைகளால் ஒரு பருந்து எத்தனை ஒய்யாரமாக இடவலமாக சரிந்து பின்னர் ஒரு வட்டமிட்டு மீண்டும் வலஇடமாக சரிந்து பறக்குமோ அதற்கொப்பான ஒரு காட்சியை ஒரு விமானி கண்காண வழி வைத்தார். நகர்கின்ற வாகனத்திலிருந்து தரையிறங்கும் ஒரு விமானத்தின் அழகைக் காண பல ஆயிரம் கண்கள் வேண்டும்.

விமானம் தீண்டிய அத்தருணத்தில் பலவித எண்ணங்கள் என்னை சீண்டிச் சென்றன. விமானம் நிச்சயமாகவே அற்புதமான கண்டுபிடிப்பு தான். ஒரு மாதம், ஒன்றரை மாதம் கடல் மார்க்கமாக பயணித்து வேறொரு நாட்டினை சென்றடைந்த காலம் மாறி சில மணி நேரங்களுக்குள்ளாக சென்றடைவது சாத்தியப்பட்டிருக்கிறது.

விமானம் மட்டுமல்ல...

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் நமது நேரத்தை மிச்சப்படுத்துகின்றன, விரைவாக பணிகளை செய்து முடிக்க வழிகோலுகின்றன. உடல் அசைவும், களைப்பும் அதிகமின்றி எளிமையாக செய்து முடிக்க உதவுகின்றன. மாடும்-கலப்பையும் போய் இன்று டிராக்டர் எந்திரம் உழவுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. உரலும்-உலக்கையும் போய் இன்று கிரைண்டர் ஆதிக்கம் காட்டுகிறது. அம்மியும்-குழவியும் போய் இன்று மிக்சி ஓடுகிறது. ஈக்கலும்-வாரியலும் போய் இன்று வேக்கும் க்ளீனர் சுத்தம் செய்கிறது. கருங்கல் இன்று வாஷிங்மெஷினாகி நிற்கிறது, இப்படி இன்னும் பல.

விதவிதமாக வாகனங்கள், பேருந்துகள், விமானத்தில் பயணிப்பது போன்றே ஆடாமல் அலுங்காமல் பயணிக்க Air Buses, அதி வேகமாக செல்லும் ரயில் வண்டிகள் என போக்குவரத்து வசதிகளும் பலவிதம் தான்! எல்லாம் சிறப்பான கண்டுபிடிப்புகளே! அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் முப்பது, நாற்பது ஆண்டுகள்; முன்னர் இருந்த மன அமைதி, மன நிம்மதி, அகமகிழ்ச்சி, ஆரோக்கியம் இன்று இருக்கிறதா என்று சிந்தித்தால் இல்லை எனவே படும்.

வாகனங்கள் ஏற்படுத்தும் இரைச்சலும்; அவசர அவசரமான வாழ்க்கை முறைகளும்; அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பரபரப்பான ஓட்டமும்; பண சம்பாதிப்பதில் இருக்கும் அளவற்ற நாட்டமும்; போக்குவரத்து நெரிசலும்; வாகன விபத்துகளும்; பொதுநலமற்ற சுயநலமான வாழ்க்கையும் மனிதனை மனிதத்துவம் இல்லாமல் செய்துவிட்டது என்பதே உண்மை.

சென்ற தலைமுறையில் 70-80 வயது என இருந்த மனிதனின் சராசரி ஆயுள் இன்று 40-50 என குறைந்து போனதற்கு எவர் காரணமோ, எந்திரம் தான் காரணமோ?! இல்லை எந்திரம் போன்று வாழ்க்கையை பிடிக்க ஓடும் மனிதன் தான் காரணமோ!? இவையிரண்டையுமே காரணம் சொல்லலாம்.

மனிதனின் கண்டுபிடிப்புகள் அவனது ஆயுளை அவனறியாமலே குறைத்திருப்பது தான் நிஜம். உடல் அசையாமல் எந்திரங்களின் உதவி கொண்டு பணிகளை இலகுவாக முடிக்கின்ற ஒருவருக்கு வயிறு முன்னே தள்ளாமல் என்ன செய்யும்? Shower ன் புண்ணியத்தால் குளிப்பதற்கு கூட குனிந்து தண்ணீரை முகரத் தேவையில்லை இன்று. இப்படியே போனால் உடல் பருமனடையாமலா இருக்கும். இதனாலேயே வாயில் நுழையாத வியாதிகள் எல்லாம் மனிதனுள் நுழைந்து இறுதியில் மாரடைப்பும் வந்து ஆளே அம்பேல் ஆகிவிடுகிறார் நாற்பதுகளுக்குள்ளேயே.

இது ஒருபுறமென்றால் அவசர குடுக்கைகளால், அலப்பறை 'குடி'மகன்களால், அதிவேக வாகன ஓட்டிகளால், அஜாக்கிரதையால் ஏற்படும் வாகன விபத்துகள் எக்கச்சக்கம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் எண்ணற்றவே. மருத்துவத்தால் ஆயுள் நீட்டிக்கப்பட்டாலும் அது வேதிப் பொருட்களுக்கு நம்மை அடிமையாகவே வைத்து முன்னடத்தும்.

இன்று நாகரீகம் வளர்ந்திருக்கிறது ஆனால் மனிதனின் வாழ்நாள் குறைந்திருக்கிறது, நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன ஆனால் உடல் இயக்க நுட்பங்கள் தேய்ந்திருக்கின்றன. விஞ்ஞானத்தால் உலகம் ஒளிர்கிறது ஆனால் உள்மனதில் உபாதைகள் தான் ஒளிர்கின்றன. உலகம் ஒரு சிறிய கிராமமாகிப்போனது ஆனால் கிராமத்தான் தன் முகவரியை இழந்து நிற்கிறான். புல்வெளிகள் புல்டோசரால் புதுசாலைகளாக்கப்படுகின்றன, வயல்வெளிகள் வானுயர மாடமாளிகைகளாகி நிற்கின்றன.


எல்லாவிதத்திலும் உலகம் உயர்ந்திருக்கிறது - சரி தான்; கூடவே மனிதனும், மனிதத்தைப் போற்றி, சுயநலமற்று - பொதுநலம் கருதி, அவசரப்படாமல் - நிதானம் காத்து, எந்திரங்களை அளவாக பயன்படுத்தி வாழ்க்கையை வாழுவானெனின் வாழ்வில் உயர்வான், வாழ்நாளில் உயர்வான். 

November 26, 2013

அபாயகரமான மன அழுத்தமும் - ஜோனத்தான் ட்ரோட்டும்

‘மன அழுத்தம்’ என்கிற ‘STRESS’ என்பது இன்று மன நல மருத்துவத்துறையில் பரவலாக பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஒரு விஷயம் அல்லது வியாதியாக இருந்தாலும் சாமானிய மக்களிடையே மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன்.

மனஅழுத்தம் ஒருவரை வெகு மெளனமாக கரையான் சிதைப்பது போல் சிறிது சிறிதாக சிதைத்து விடும் கொடுமை நிறைந்ததுஎன்பது தான் பலரும் அறியாத உண்மை. வாழ்க்கையின் மீது வெறுப்பை விதைத்து உயிரையும் மாய்த்து விட ஏவும் விஷமேறியது மன அழுத்தம்.

மன அழுத்தத்தினால் அவதியுறும் ஒருவருக்கு மிக முக்கியமான தேவை அவரது உள்ளக்கிடக்கைகளை செவிமடுக்கும் ஒரு மனமும், ஓய்வும், தகுந்த ஆலோசனைகளுமே.

ஒருவரது உள்ளக்கிடக்கைகளை செவிமடுத்து கேட்கவும் நேரமில்லாத இன்றைய அவசர உலகத்தில் மன அழுத்தம் மிகக்கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் அறியப்படாத நிலையிலேயே உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure), நீரிழிவு, மனத்தளர்வு (Depression), மாரடைப்பு (Cardiac Arrest) போன்ற இன்ன பிற வியாதிகளும் மன அழுத்தத்தினால் ஒருவருக்கு வந்து சேரக்கூடிய அபாயமும் உண்டு.

பணம் சம்பாதிக்கின்ற அவசரத்தில் இன்று பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் அளவளாவுகிற நேரமும், அவர்களது மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தருணமும் கிடைப்பதில்லை. குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்க இயலவில்லை என்றாலும் அவர்களோடு அமர்ந்து உரையாடவும் நேரமற்று இருக்கும் பெற்றோரைத்தான் இன்று அதிகம் பார்க்க முடிகிறது.

வீடுகளில் துவங்குகின்ற இத்தகைய சூழ்நிலை பள்ளிக்கூடம், கல்லூரி, பணியிடங்கள் என அநேகமாக அனைத்து வட்டாரங்களிலும் வியாபித்திருப்பது தான் வியப்பிற்குரியது.

பெற்றோர்களின் கவனிப்பின்மை, திக்குமுக்காட வைக்கும் பாடத்திட்டங்கள், ஆசிரியர்களால் ஒதுக்கப்படுதல், நட்பு மற்றும் உறவுகளில் ஏற்படும் சிறு விரிசல்கள்,வேலைப்பளு, வேலைவாய்ப்பின்மை, ஏமாற்றங்கள், தோல்விகள் என மன அழுத்தம் பல ரூபங்களில் வரும் தன்மை வாய்ந்தது.

படிப்பு மற்றும் பணிகளில் கவனம் செலுத்தமுடியாமை, தேவையில்லாமல் எரிச்சல்/கோபப்படுதல், தனிமையை விரும்புதல், அதிக தூக்கம், தூய்மையின்மை என பல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தது மனழுத்தம்.

மன அழுத்தத்திற்கு பலிகடா ஆன சமீபத்திய பிரபலம் ‘ஜோனத்தான் ட்ரோட்’ என்கிற இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டக்காரர். ட்ரோட் ஆஸ்திரேலியாவில் அவரது ஆட்டத்தை தொடர முடியாமல் தற்போது தாய்நாட்டிற்கு திரும்பி சென்றிருக்கிறார்.

குடும்பத்தினரின் அரவணைப்பும், பாசமும், கவனிப்பும், ஓய்வுமே இப்போது அவருக்கு தேவையாயிருக்கிறது. ஓரிரு மாதங்களாகவே ட்ரோட் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

மன அழுத்தத்தினால் அவதியுறும் எவர் ஒருவருக்கு அன்பும். அரவணைப்பும், ஓய்வும் மறுக்கப்படுகின்றதோ அவர் தற்கொலையும் செய்து விட துணிந்து விடுவது தான் மன அழுத்தத்தின் உச்சகட்ட விளைவு.

மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டறிதல் உயிர்பலியை தவிர்க்கும் என்பதால் பணம் சம்பாதிக்கும் அவசரத்திலும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மனம் விட்டு பேசுதல் நம் மனதை இலகுவாக்கும். படிப்பு-வீடு; வேலை-வீடு என்றிருக்காமல், விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு அருகிலிருக்கும் பூங்காக்களுக்கேனும் போய்வருவது மன அழுத்தத்தை குறைக்கும். அதோடு பேராசைக் கொள்ளாமல், இருப்பதை வைத்து நிறைவாக வாழ்வதும் மன நிறைவைத் தரும்; மன அழுத்தம் நீக்கும்.

என்றும் அன்புடன்,

எட்வின்





September 10, 2013

பெண்ணியம்? ஒரு கேள்விக்குறி

மின்னும் வளையலும்
ஜொலிக்கும் சங்கிலியும்
முகவுரை முடியுமுன்
முடிவுரை ஆகிப் போகின்றன
கடன் கொடுத்தவள் வரவே
முகூர்த்த வீட்டில்;

தாலியேறியதும் மூளியாகிறாள்
தான் பெற்ற இரவலுக்காக!
திருமணத்திற்கு வந்தவள்!!

December 15, 2012

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில்


மனித குலம் எத்தனையோ நாகரீகங்களைக் கடந்தும்; இத்தனை ஆயிரம் ஆண்டுகளை கடந்தும்; இத்தனை இலட்சம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கண்டும் - கடந்தும்; இத்தனை கோடி மாற்றங்களைக் கடந்து; இத்தனை மில்லியன் மரணங்களைக் கடந்தும் இன்னும் தனக்கென, தனக்குள்ளாக, தன் குடும்பத்திற்குள்ளாக, தன் மாவட்டத்திற்குள்ளாக, தன் மாநிலத்திற்குள்ளாக, தன் தேசத்திற்குள்ளாக ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள்ளாகவே வாழ்ந்து வருவது வியப்பிற்குரியது.

தன் அல்லது தனது என்ற எண்ணம் நம் அல்லது நமது என்ற அளவில் அதிகம் வளராதது வருத்தத்திற்குரியது.

ஒரு மனிதனின் அடிப்படை வேரான அவனது குடும்பத்திலிருந்து துவங்கலாம். குடும்பத்திற்குள் ஒருவர் உயர்ந்த கருத்தை அல்லது வழக்கத்திற்கு மாறான கருத்தை முன் வைத்து விட்டால் போதும்; அது எத்தனை நல்ல கருத்தாக இருந்தாலும்... உடனே அவன்/ள் என்ன சொல்வது... அதெல்லாம் சரி வராது என தட்டிக்கழிப்பது தான் நடந்தேறும்.

குடும்பத்திற்குள் இப்படியென்றால் குடும்பங்களுக்குள் வேற்றுமைகளுக்கு சொல்லவே வேண்டாம்... அந்த குடும்பம் என்ன சொல்வது; அவர்கள் அப்படி என்றால் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமா; அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டத்தான் வேண்டுமா என வீம்பு செய்வது கண்கூடு.

தனிமனித உறவுகளை எடுத்துக் கொண்டால்... அங்கேயும் இது தான். கருத்துக்களை செவிமடுக்கவும், அமர்ந்து பேசவும் எவர்க்கும் சமயமில்லை. மாறாக மனத்தாங்கல்கள் வரும் போது... ‘உன்னிடம் பணம் இருக்கிறது’ என்பதால் அல்லது “நான் அழகில்லை என்பதால் தானே” என்பதான வீண் வாதங்கள் எடுத்து வைக்கப்படுகிறது.

மாவட்டங்களைப் பார்க்கப் போனால்... அங்கும் இது தான். நீ பாண்டி நான் நாஞ்சில், நீ மேற்கு நான் கிழக்கு என பிரித்துப் பார்ப்பவர்கள் தான் அதிகம்.

மாநிலங்களுக்குள் நீ தமிழன் - நான் மலையாளி; நீ கன்னடன் - நான் தெலுங்கன்; நீ பிகாரி - நான் மராத்தி என்பதான வேற்றுமைகள் இன்னும் தொடர்வது  மிகுந்த வருத்தத்திற்குரியது. வேற்றுமைகள் - வைராக்கியத்தையும், வீம்பையும், அகங்காரத்தையும் அதற்குள்ளாக அடக்கி வைத்திருப்பது தான் அதன் கோர முகம்.

அதனால் தான் தமிழகத்திற்குள் முழுமையாக காலடி வைக்க காவிரியும், கிருஷ்ணாவும் இன்னும் காத்திருக்கின்றன; முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது; மகாராஷ்டிராவில் பீகார், ஒரிசாவைச் சார்ந்தவர்கள் இன்றும் ஒடுக்கப்படுகின்றனர்.

தேசங்கள் இவற்றிற்கெல்லாம் மேலே ஒரு படி... இந்தியா என்ன சொல்வது என பாகிஸ்தானும்; அமெரிக்கா என்ன சொல்வது என ஈரானும்; இஸ்ரேல் என்ன சொல்வது என பாலஸ்தீனும்; ரஷ்யா என்ன சொல்வது என சீனாவும்  முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது தொடரும் வரை பிரச்சினைகளும் முடிவிற்கு வராது.

இவற்றிற்கு எல்லாம் சமய சாயம் பூசுவது இன்னும் வருத்தமளிக்கும் விஷயம். சாதி சமய வேற்றுமைகள் தான் பிற வேற்றுமைகள் அனைத்திற்கும் அடிப்படையான காரணம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் இதை மறுப்பவர்கள் தான் அதிகம் என்பது விசித்திரமான உண்மை.

இத்தனை வேற்றுமைகளின் நடுவே தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உயிர்கள் எண்ணிக்கையிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உறவுகள் சொல்லிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உண்டாக்கிய விரிசல்கள் இன்னும் தொடர்கிறது...

எவ்வித சாதி, சமய, மொழி, தேசிய, கலாச்சார வேற்றுமைகள் இல்லாமால் மனிதனை  மனிதனாகப் பார்த்தலும்; சக மனிதனின், சக மாநிலத்தவனின், சக தேசத்தை சார்ந்தவனின் பிரச்சினைகளை நமது பிரச்சினையாக பார்த்தலும் தான் இத்தகைய வேற்றுமைகள் ஏற்படுத்திய விரிசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றே தோன்றுகிறது.

December 25, 2011

Facebook - Fastfood உலகால் மறக்கப்பட்டு வரும் விழாக்கால மகிழ்ச்சிகள்


சிறுவயதில் விடுமுறைக்காலம் என்றாலே அது டிசம்பர் தான். என்ன தான் ஏப்ரல் மே மாதத்தில் பள்ளி விடுமுறையாய் இருந்தாலும்/அது ஒன்றரை மாத கால நீண்ட விடுமுறையாய் இருந்தாலும் டிசம்பர் மாத விடுமுறையின் சந்தோசம் ஒரு பிரத்தியேக சந்தோசம் தான்.


அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. கிடைக்கவிருக்கும் புத்தாடைகளும், பரிசுப் பொருட்களும்அம்மாவின் கரங்களால் தயாரிக்கப்படும் பலகாரங்களும், இனிப்பு வகைகளும்; நண்பர்கள் கூடி ஆரவாரிக்கும் பொழுதுகளும்தெருவெங்கும் களைகட்டும் மின் அலங்காரங்களும்அப்பாவால் வண்ண விளக்குகளால் அமைக்கப்படும் வீட்டு அலங்காரங்களும்;உறவினர்கள் கரங்களிலிருந்து குறிப்பாக தாத்தாபாட்டியிடமிருந்து   கிடைக்க விருக்கும் பணப் பரிசுகளும் தான் காரணங்கள். இன்னும் சொல்லிப்போகலாம்.

இளைஞர் பருவத்தில் டிசம்பர் என்றால் தெருவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளும், உறவினர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகளும் இன்னும் பரவசமாக்கும். குறிப்பாக வெளிநாடுகளில் இறுதி கிடைக்கப்பெறும் வாழ்த்து அட்டைகளில் ஒட்டப்பட்டிருக்கும் தபால் தலையை பார்த்தாலே மேலும் பரவசம் தான். உறவுகளின் கூடுகை இன்னும் உற்சாகம் தரும்


இவை போதாதென்று நண்பர்கள் கூட்டத்துடன் அடிக்கும் அரட்டைகளும், பட்டாசு வெடித்தலும் விடுமுறைக்காலத்தை இன்னும் அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யங்கள்.

ஆனால் இன்று இத்தகைய சுவாரஸ்யங்கள் குறைந்து கொண்டே வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம். உறவுகளை பார்ப்பதே கடினமாகி வருகிறது. உறவினர்கள் விடுமுறைக் காலங்களில் கூடி வருவதே அரிதாகி விட்டது இப்போது.

வெளி ஊர்களிலும், வெளி நாட்டிலும் புலம் பெயர்ந்து வாழுகின்றவர்கள் உறவுகளை சந்திப்பது அபூர்வமாகிப் போனது இன்று. இது போதாதென்று ஒரே ஊரில் வசிப்பவர்கள் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும் குறைந்து வருகிறது. தான்தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்பது தான் மேலோங்கி நிற்கிறது.

வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பேனா பிடித்து எழுதி அனுப்பப்படும் கடிதங்களும்இன்றைய டிஜிட்டல்  உலகில்  பெருவாரியாக குறைந்து வருவது வேதனைப்பட வேண்டிய விஷயம்.பேனாவால் எழுதப்படும் ஒரு கடிதம் தரும் மகிழ்ச்சியை மின்னஞ்சலோ அல்லது டிஜிட்டல் வாழ்த்து அட்டையோ தந்து விடாது.  இன்று இயல்பாக இருக்க விரும்பும் மனிதர்கள் வெகு சிலரே.

கடந்த வாரம் கூட நான் அனுபவப்பட்ட ஒரு நிகழ்வு இந்த கால சந்ததியினரின் மனநிலைமையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. ஊருக்கு வாழ்த்து அட்டை அனுப்ப போகிறேன் என்று நண்பரிடம் நான் கூற அதற்கு பதிலாக நண்பர்... "என்னங்க இந்த காலத்தில யாருங்க இதெல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க" ஒரு தொலைபேசி அழைப்பே  அதிகம் என்றார்.  அவருக்கு கடிதம் எழுதுவதில் அவ்வளவு தான் ஆர்வம் என்று எண்ணிக்கொண்டேன்.  

பகட்டிற்கும், Fastfood - எந்திர வாழ்க்கைக்கும், Facebook - ஆர்குட் உலகிற்கும் அடிமையாகி போன இந்த கால சந்ததி இழந்திருக்கும் சிறு சிறு சந்தோசங்கள்மகிழ்ச்சிகள் ஏராளம்.  

பணம் சம்பாதிக்கும் அவசரத்தில் பாசங்களையும்பந்தங்களையும், பகிர்வுகளையும் இழந்து நிற்கிறார்கள். என்ன தான் இருந்தாலும் தொண்ணூறுகளில் இருந்த வாழ்க்கை முறை இனி மீண்டும் வருவது கடினம் தான்.

May 31, 2011

அது ஒரு அழகிய கனா காலம்

காலங்கள் எத்தனை வேகமாய் செல்கிறதோ அத்தனை வேகமாய் கவனங்களும் எண்ணங்களும் வேகமாய் கடந்து போகத்தான் செய்கின்றன. ஆனால் நமது எண்ணங்களும் கவனங்களும் எத்தனை அதிக சந்தோஷத்தை நமக்கு அளிக்கின்றன என சற்றே எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறி தனிக்குடித்தனம் நடத்தி வரும் பலர் இன்று இழந்து வரும் சந்தோஷங்கள் கணக்கில் அடங்காதவை. பெற்றோரின் அரவணைப்பு, சுற்றங்களின் நேசபாசம் இவை தான் அவை எல்லாவற்றிலும் முதன்மையான மிகப்பெரிய இழப்பு.

கிராம வாழ்வை விட்டு நகரில் குடியேறியிருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் அலுத்தாலும் பின்னர் ஆடம்பர வாழ்வு அவர்களை ஆக்கிரமித்து விடுகிறது அல்லது கட்டிப்போட்டு விடுகிறது. கிராமத்து வாசமும், திண்ணைப் பேச்சுகளும்; ஆலமர, ஆற்றோர ஆசுவாசமும் மெல்ல மறந்து டிஸ்கோத்தே ஆர்ப்பாட்டங்களும், தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேறுபவற்றையே சுவாசித்து ஆசிவாசித்து விடுதலும் பழகிப் போய்விடுகிறது.

அஞ்சல் அட்டை @ போஸ்ட் கார்ட்; உள்ளூர் கடிதம் @ inland ஆனது. பின்னர் கடிதப் போக்குவரத்தும் குறைந்து மின்னஞ்சல் ஆனது. இன்று மின்னஞ்சல் அனுப்பினால் கூட கண்டு கொள்பவர்கள் வெகு சிலரே. முகநூலும் ஆர்குட்டும், டிவிட்டரும் முக்கியமாகிப் போனது இன்று.

ஆர்குட்டில் ஏன் எனக்கு scrap அனுப்பவில்லை, முகநூலில் ஏன் எனக்கு Post எதுவும் பண்ணவில்லை என கேள்வி கேட்பவர்கள் மின்னஞ்சலை கூட கவனிக்க நேரமின்றி இருக்கின்றனர். தேவையற்ற spam மின்னஞ்சல்களை நீக்குவதற்கு கூட இந்த facebook உலகில் நேரமில்லை.

இந்த facebook உலகம் கடிதம் வரைதலிலும் கரங்களால் எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகள் அனுப்புவதிலும் இருக்கம் சுவாரஸ்யத்தை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது.

தனிமையில் தியானம் செய்யவோ; தனிமையாக சிந்திக்கவோ இன்றைக்கு பலருக்கும் சமயம் வாய்ப்பதில்லை. பணியிடங்களில் பணிகளின் தலை வலியென்றால்; வீடுகளில் சீரியல் எனப்படும் மகா மெகா தொடர்களின் ஆர்ப்பாட்டம் ;அல்லது நடிகர் உடல்நல குறைவு, நடிகை கால் தவறி விழுந்தார் போன்ற Breaking News களின் பிதற்றல்கள். இவற்றினிடையில் தனிமைக்கும் சுயமாக சிந்திப்பதற்கும் குடும்பத்தினரோடு உறவாடுவதற்கும், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் ஏது சமயம்.

இன்னும் உண்டு...

March 09, 2011

நிறைவடையா மனித மனம்


மீண்டும்! மீண்டும்!! மீண்டும்!!! எத்தனை முறை மீட்சியையும் மாட்சியையும் கண்டாலும் நிறைவடைவதில்லை மனித மனம்.

இன்றளவும் பெரும்பாலானோர் நிறைவற்றவர்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. சில ஆண்டுகள் முன்னிருந்த நிலைமையை சற்று திரும்பிப் பார்த்தால் இன்று, இந்த நொடி எவ்வளவோ வசதிகளைப் பெற்றிருக்கிறோம்; வளமை அடைந்திருக்கிறோம்... எனினும் மனதில் நிறைவில்லை நம்மில் பலருக்கு.

வருங்காலத்திற்காக நிகழ்காலத்து சந்தோஷங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம். முன்னொரு பதிவில் எழுதியிருந்த வண்ணம்... 

"பணங்களை சம்பாதிக்கும் அவசரத்தில் 
 மனங்களை சம்பாதிக்க மறக்கிறோம், 
 மறுக்கிறோம்" !!

நடந்து செல்பவருக்கு மிதிவண்டி வாங்க ஆசை, மிதிவண்டியில் செல்பவருக்கு இருசக்கர வாகனம் வாங்க ஆசை, இரு சக்கர வாகனத்தில் செல்பவருக்கு நான்கு சக்கர வாகனம் வாங்க ஆசை. இவ்விதமான ஆசைகள் நிறைவேறினாலும் பலரது மனங்களில் நிறைவில்லை.

ஆசைப்பட்டு வாங்கிய பின்னரும் வேறு நிறத்தில் வாங்கியிருக்கலாமோ; வேறு வடிவத்தில் வாங்கியிருக்கலாமோ என மனநிறைவடையா பல கேள்விகள்.

இதைத்தான் "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என அன்றே சொல்லிப் போனார்களோ என்னமோ!

பொருட்கள் மீதான மோகமும் ஈடுபாடும் தீர்ந்து போனால் கூட பரவாயில்லை. மனிதர்களிடம் குறிப்பாக நண்பர்களை; கட்டிய மனைவி, கணவன்மார்களையே மாற்ற நினைக்கும் மனித மனங்களை நினைத்தால் விசித்திரமாகத் தானிருக்கிறது.

என்றும் எதிலும் திருப்தியில்லாமல் இருப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் நிச்சயமாக நிம்மதி என்பது கேள்விக்குறி தான்.

குறைவிலும் நிறைவான மனம் கொள்வதும்; பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பதை வைத்து மனநிறைவடைவதும் தான் மகிழ்ச்சியான வாழ்வின் மந்திரம்.

"கனவு காணுங்கள்" என அப்துல் கலாம் கூறியது போன்ற கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை தான்; ஆனால் அந்த கனவுகள் நிஜங்களை தொலைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதோடு நமது சக்திக்கும் / வருமானத்திற்கும் மிஞ்சிய கனவுகளாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வருகின்ற மானம் (வருமானம்) காற்றோடு போகின்ற மானமாகிப் போய் விடும்.

January 06, 2011

மறந்தாலும் மறுக்கப்பட முடியாத உதவிகள்

இன்றைய காலகட்டத்தில் பெற்றவர்களையும், உறவுகளையுமே நினைவில் வைக்க பெரும்பாலானவர்களுக்கு சிரமமாக இருக்கையில் நலம் விரும்பிகளையும், நன்மை செய்தவர்களையும் நினைவு கூறுவது பலருக்கு வேடிக்கையானது சிலருக்கு வீணானது.

ஏறுகிற வரைக்கும் தேவைப்படுகிற ஏணி ஏறிய பின் தேவையற்றதாக கருதப்படுவதைப் போன்றே உதவிகளைப் பெற்று முன்னேறிய பலர் இன்று அவர்களை ஏற்றி விட்டவர்களை மறந்து விடுவது சகஜமாகி வருகிறது. நன்றி மறவாமல் இருப்பவர்கள் வெகு சிலரே.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எவரேனும் உதவி செய்திருப்பர். பண வடிவிலோ, பொருள் வடிவிலோ, அறிவுரை வடிவிலோ, பகிர்ந்து கொள்ளுதல் மூலமாகவோ உதவிகளைப் பெற்றிருப்பர். உதவிகள் பெறாதவர்கள் உலகில் எவரேனும் இருக்கின்றனரா என ஒரு கேள்வி எழும் பட்சத்தில், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக வந்து சேரும்.

சிறுவயதில் பெற்றவர்கள் மூலமாக பெறும் உதவிகள் பிற்காலத்தில் உறவுகள் மூலமாகவும் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் மூலமாகவும் நாம் கிடைக்கப் பெறுகிறோம்.  இப்படியாக வாழ்வின் பல நிலைகளில் நாம் அடைந்த உதவிகளை எத்தகைய சூழ்நிலையிலும் நாம் மறவாதிருப்பதே மனிதத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை.

உதவிகள் செய்தவர்களுக்கு கைமாறாக உதவிகள் செய்ய இயலவில்லை என்றாலும் கூட அவர்கள் செய்த உதவியை மறந்து போகாமல் குறைந்தபட்சம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தால் அதுவே பெரிய விஷயம் தான். (உயிருக்கு உயிராக பழகிய ஒருவரிடம் அப்படி ஒருமுறை உதவி கேட்கப்போய் அசிங்கப்பட்டும் இருக்கிறேன்.  உதவி கேட்ட போது செய்கிறேன் என வாக்களித்தவர்கள் மீண்டும் தொலைபேசியில் அழைக்கையில் தொலபேசியை எடுக்கவில்லை. மிகவும் நொந்து போனேன். முடியாது என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தால் இந்த வேதனை இருந்திருக்க வாய்ப்பில்லை)

உதவிகள் செய்தவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு, நன்றி தெரிவிப்பதோடு அந்த உதவியை மறக்காமலிருப்பதும் தான். அடைந்த உதவியை மறந்துவிடுதல் போன்ற நன்றி கெட்டச் செயல் வேறு எதும் இருக்க முடியாது. அதனை வள்ளுவன் "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என வெகு அருமையாக இரண்டே வரிகளில்  அழுத்தமாகச் சொல்லிச் சென்று விட்டார்.

நாம் உதவி செய்த ஒருவர் நம்மை நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கையில் எழுகின்ற உவகைக்கு அளவே இல்லை. அத்தகைய நன்றியை இந்த வருடம் நீங்கள் உதவி பெற்ற எவருடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர்கள் உள்ளத்தை மகிழ்வித்த நல்ல எண்ணத்துடன் இந்த வருடத்தை தொடர்ந்து தொடருங்கள்.
Related Posts with Thumbnails