Showing posts with label மெஸி. Show all posts
Showing posts with label மெஸி. Show all posts

August 11, 2021

மெஸ்ஸி எனும் கால்பந்து வைரம்

கால்பந்து உலகில் கடந்த ஒருவாரமாக அதிகம் பேசப்பட்டு வருவது பார்சிலோனா வில் இருந்து பாரிஸ் ற்கு இடம் பெயர்ந்திருக்கும் மெஸ்ஸி குறித்து தான். 


இடம் பெயர்ந்து வாழ்தல் எல்லோருக்கும் எளிமையாக அமைந்து விடுதல் இல்லை. 2000 ஆவது ஆண்டில் பதிமன்றே வயது இருக்கையில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டு சிகிச்சைக்கான வசதிக்காக பார்சிலோனா கால்பந்து அணியின் வாயிலாக அர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினில் தனது தந்தையுடன் குடி பெயர்கிறார் "லியோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி" 


அன்று துவங்கி அடுத்த 20 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தவர் தற்போதைய கோவிட் காலத்து புதிய பொருளாதாரத் தடைகளால் பார்சிலோனாவில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது!


தனது வருமானத்தை பாதியாகக் குறைத்துக் கொள்கிறேன் என அறிவித்த பின்னரும் கூட தொடர்ந்து பார்சிலோனாவிற்காக விளையாடுவது மறுக்கப்பட்ட ஒன்றாகிப் போய்விட்டது. 


அதனை அவர் அறிவிக்கையில் உடைந்து அழுத போது மெஸ்ஸியைத் தொடர்கிற ஒவ்வொருவரும் அவரது வலியை உணர்ந்திருக்கக் கூடும். 



தற்போது மெஸ்ஸி, PSG - பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்கிற பிரான்ஸ் நாட்டின் அணிக்காக இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 


அது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் விட்டது. அதே அணியில் அவரது சக அர்ஜென்டினா வீரர் டி மரியா, அவருடன் பார்சிலோனாவில் முன்னர் ஆடிய நெய்மர், கூடவே பிரான்சின் சிறந்த இளம் வீரர் ம்பாப்பே என பன்முகத் திறமைகளும் அடங்கியிருக்கிறது. 


பார்சிலோனாவில் மெஸ்ஸி விளையாட ஆரம்பித்த காலங்களில் அளிக்கப்பட்ட 30 ஆம் எண் பாரிஸ் அணியிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அணியிலிருக்கும் நெய்மர் எண் 10 உடன் ஆடுவதால் மெஸ்ஸிக்கு எண் 30 வழங்கப்பட்டிருக்கிறது. 


இதுவரை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (UCL) பட்டத்தைப் பெற்றிராத PSG யை அதை நோக்கி பயணிக்க வைப்பதே முதல் நோக்கம் என்றிருக்கிறார் மெஸ்ஸி. 


இதுவரை PSG அணி குறித்து பேசாதவர்களும் இனி பேசக்கூடும்; அந்த அணிக்கு வியாபார ரீதியான நன்மைகளும் நடந்தேறும்; இங்கிலாந்தில் அதிகம் கவனிக்கப்படாத பிரான்சின் Ligue1 இனி கவனம் பெறக் கூடும்; இவை எல்லாவற்றிற்கும் பின்புலம் "லியோனல் ஆன்ட்ரஸ் மெஸ்ஸி" எனும் ஒற்றைப் பெயரும் அவரது திறமையும் தான்! 


மெஸ்ஸி காலத்தால் அழியாத கால்பந்து வைரம் என்றால் அது மிகையல்ல. 




April 29, 2011

கால்பந்து - கிரிக்கெட் - பயிற்சியாளர்கள் - சாம்பியன்ஸ் லீக் - மெஸி

கடந்த இரு தினங்களாக விளையாட்டு உலகில் பயிற்சியாளர்களைக் குறித்துத் தான் அதிக சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து வருகிறது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்களின் முதல் சுற்று (First Leg) 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்திருக்கின்றன.

முதல் ஆட்டத்தில் 2009 சாம்பியன் இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட், ஜெர்மனியின் ஷால்க் அணியை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

பயிற்சியாளரும், மேலாளருமான சர். அலெக்ஸ் ஃபெர்குசன் தலைமையில் இதுவரை ஜெர்மனி அணி ஒன்றினை மேன்செஸ்டர் யுனைட்டட் தோற்கடித்ததே இல்லை என்ற வரலாறுடன் தான் களமிறங்கியிருந்தது மேன்செஸ்டர் யுனைட்டட். ஷால்க் அணி தங்களுக்கு நெருக்கடியை கொடுக்கக்கூடும் என்று சற்று நிதானத்துடனேயே போட்டியின் முன்னர் சர்.அலெக்ஸ் பேட்டியளித்திருந்தார்.

இதற்கு எதிர்மாறாக பார்சிலோனா-ரியல் மேட்ரிட் அணிகளுக்கிடையேயான இரண்டாவது அரையிறுதியின் முன்னரே ரியல் மேட்ரிடின் பயிற்சியாளர் ‘ஜோஸே மரினியோ’ பார்சிலோனாவைத் தோற்கடிப்போம் என்று வீராப்பாக பேசியிருந்தார். இது போதாதென்று தோல்விக்கு பின்னரும். குளறுபடி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என சப்பை கட்டு கட்டுகிறார்.

பார்சிலோனாவின் லியோனல் மெஸி இரண்டு கோல்களை அடித்து ரியல் மேட்ரிடுக்கு சவால் கொடுத்தார். அதோடு 2008-2009, 2009-2010,வருடங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

இந்த season ல் மட்டும் 52 கோல்களை(50 போட்டிகளில் இருந்து) அடித்து அதிலும் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் மெஸி. அரையிறுதியில் இரு கோல்களை அடித்ததும் மெஸி தான்.

விஷயம் இவ்வாறிருக்க ரியல் மேட்ரிட் பயிற்சியாள்ர் மரினியோவோ, குளறுபடி செய்தும்; நடுவருக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற்று விட்டார்கள் என சிறுபிள்ளைத் தனமாக பேசுகிறார்.

ரியல் மேட்ரிடின் பெப்பே (pepe) விற்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து போட்டியிலிருந்து வெளியேற்றவே அதனை எதிர்க்கும் வகையில் சீறிக்கொண்டிருந்த பயிற்சியாளர் மரினியோவிற்கும் நடுவர் சிவப்பு அட்டைக் காண்பித்து களத்திலிருந்து வெளியேற்றி பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைத்தார். 

இந்திய கிரிக்கெட்டிற்கு இங்கிலாந்தின் முன்னாள் பயிற்சியாளரும், சிம்பாப்வேயைச் சார்ந்தவருமான, 62 வயது மட்டுமே!!! ஆன   டங்கன் ஃப்ளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனை வயதானவரை பயிற்சியாளராக நியமித்திருக்கத் தேவையில்லை என்பதே இந்திய கிரிக்கெட்டிற்கு ஆலோசகராக இருக்கும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரது கருத்தும். 2008 ல் கேரி கிர்ஸ்டனை பயிற்சியாளராக தேர்ந்தெடுத்த போது கவாஸ்கரிடம் ஆலோசனை கேட்டவர்கள் இந்த முறை கேட்கவில்லையாம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸின் பயிற்சியாளர் ஃப்ளெமிங் அல்லது இங்கிலாந்தின் தற்போதைய பயிற்சியாளர் ஆன்டி ஃப்ளவர் போன்ற கிர்ஸ்டனின் வயதுக்கொத்தவர்களை பயிற்சியாளர்களாக நியமித்திருக்கலாம். இல்லையென்றால் கவாஸ்கர் சொல்வது (அமர்நாத்) போல் இந்தியர் ஒருவரை நியமித்திருக்கலாம்.

அரசியல்வியாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் வாரியத்திடம் கிரிக்கெட் குறித்து கற்றுத் தேர்ந்தவர்களுக்கு என்ன மரியாதை இருக்கப் போகிறது. கபில்தேவை புறக்கணித்தவர்கள் இப்போது கவாஸ்கரைப் புறக்கணிக்கிறார்கள் அவ்வளவே. சச்சினையும் புறக்கணிக்கிற நாட்கள் வெகு தொலைவில் இல்லை. 

May 09, 2009

இளமையில் சாதித்தவர்கள் தரும் நம்பிக்கை

தங்களது கடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரும்புகழ் அடைந்து பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் சிலரைக் குறித்த பதிவு.
லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) கால்பந்து ரசிகர்களுக்கு இவரைக் குறித்த அறிமுகமே தேவையில்லை.அர்ஜென்டினாவை சேர்ந்த 22 வயதே நிரம்பிய கால்பந்து வீரர் இவர்,16ஆவது வயதிலேயே சர்வதேச கால்பந்து களத்தில் இறங்கியவர்.தற்சமயம் ஸ்பெயினின் பார்சிலோனா 'கிளப்'பிற்காக ஆடி வருகிறார்.கால்பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்துவதும்,வேகமாக பந்தை முன் நகர்த்துவதும் இவரது பிரத்தியேக திறமை.

இத்தனைக்கும் 11 வயதில் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட வசதியில்லாமலிருந்தவர்.புதிய மரடோனா என்றும்,மெஸ்ஸிடோனா என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.மெஸ்ஸி,மரடோனாவுக்கு நிகராக விளையாடுவதை மரடோனாவே ஒப்புக்கொண்டுள்ளார்.இருவரும் அர்ஜென்டினாவை சார்ந்தவர்கள் என்பது அர்ஜென்டினருக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சாதுவானவர்.

ரஃபேல் நடால்(Rafael Nadal) ராஃபா என டென்னிஸ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஸ்பெயினைச் சார்ந்த டென்னிஸ் வீரர்.23 வயதே ஆகியிருக்கும் இவர் தற்பொழுது உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர். நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை தோற்கடிக்க எவருமே இல்லை என்றிருந்ததை மாற்றி எழுதியதும் இவர் தான்.

இந்த வருடம் மட்டும் இதுவரை 4 ஏ.டி.பி மற்றும் ஒரு கிராண்ஸ்லாம் உட்பட 5 பட்டங்களை வென்றுள்ளார்.

களிமண் தரை மைதானங்களின் மன்னன் (king of clay court) என்று அறியப்படும் நடால் களிமண் தரை மைதானமுடைய ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டங்களை 2005 முதல் 2008 வரை தொடர்ந்து நான்கு முறை பெற்றுள்ளார்.இதில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இவரிடம் தோல்வியடைந்தது ஃபெடரர்.

புல் தரை மைதானங்களில் அதிகம் சோபிக்காத நடால் கடந்த ஆண்டின் விம்பிள்டன் போட்டியில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ரோஜர் ஃபெடரர்

14 வயதில் சுவிட்சர்லாந்தின் சாம்பியன் ஆனவர் ஃபெடரர்.தற்சமயம் உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்.நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்து சாதனை செய்தார்.

இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்.14 பட்டங்கள் பெற்ற அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடிக்க இனி ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமே எஞ்சியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் கிரிக்கெட்டைக் குறித்து அறியாதவர் கூட சச்சினை அறிவர் எனலாம்.தனது 16 ஆவது வயதிலேயே சர்வதேச ஆட்டங்களில் காலடி எடுத்து வைத்த சச்சின் 25 வயதிற்குள்ளாக 16 சதங்களை அடித்து முடித்திருந்தார்.

சச்சினின் சாதனைகளை பட்டியலிட இந்த பக்கங்கள் போதாது.அவரின் குறிப்பிடும் படியான சில சாதனைகள் இங்கே.

லியாண்டர் பயஸ்
16 ஆவது வயதிலேயே டென்னிஸ் மட்டையை பிடித்தவர்.ஒலிம்பிக்கில் டென்னிசிற்காக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர்.

தனது 17 ஆவது வயதிலேயே லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஜூனியர் பட்டம் வென்றவர் அதோடு 1990 ல் உலக ஜூனியர் டென்னிசின் தர வரிசையில் முதலிடமும் பிடித்தார்.

இதுவரை 8 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் பயஸ்.மகேஷ் பூபதியுடன் 1999 ல் சர்வதேச இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் 10 வயதில் தந்தையை இழந்த திலீப் குமார் குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம்,என்றாலும் இசை மீதான தனது வேட்கையையை அவர் விட்டுவிடவில்லை.இந்தியாவில் வேறு எந்த கலைஞரும் காணாத மேல்நாட்டு இசைக்கருவிகளையும்,தொழில்நுட்ப கருவிகளையும் அறுபதுகளிலேயே இறக்குமதி செய்து இசை மீட்டிய தந்தை சேகரின் வழி இளமையிலேயே பயணித்தவர்.

26 ஆவது வயதிலேயே திரைப்படத்திற்கு இசையமைத்தார் ஆஸ்கர் நாயகனான ரஹ்மான். அறிமுக படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும்,தேசிய விருதும் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.அவரின் பிற சாதனைகள் இங்கே.
இளம் வயதிலேயே இவர்கள் பெற்ற உயர்ந்த விருதுகளுக்கும்,பதக்கங்களுக்கும்,புகழுக்கும் காரணம் அவர்களின் முழுமையான ஈடுபாடும்,தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்,கடின உழைப்புமேயாகும்.

இவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என எண்ணுபவர்கள் எவரும் கடைபிடிப்பார்களெனில்,வெற்றி நிச்சயமே.
Related Posts with Thumbnails