பத்து வருடங்கள் முன்னர் இணையம் என்பது நம்மில் பலருக்கும் நம்மைச் சார்ந்த பலருக்கும் அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. ஆனால் இன்று நீரின்றி அமைந்தாலும் இணையமின்றி உலகம் அமையாது போன்ற நிலைமை/பிரமை தான் உள்ளது.
அங்கிள்! நீங்க ஏன் 'ஆர்குட்'ல இல்ல அப்படின்னு ஆறு வயது சிறுவன் ஒருவன் நம்மைப் பார்த்து கேட்கிற அளவிற்கு இணைய உபயோகம் அதிகரித்திக்கிறது அல்லது பலரை முடக்கிப் போட்டிருக்கிறது எனலாம்.
1999 ல் ஒருமுறை உறவினர் வீட்டில் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில் எனது மைத்துனர் அவரது சகோதரரிடம் "ஏய் என்னோட இ-மெயில் ஓப்பன் பண்ணியா இல்லையா"? என கேட்டதும், நான் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
இ-மெயில்னா... இன்லண்ட் லெட்டர் மாதிரி இருக்குமோ; இல்ல கொரியர் மாதிரி எதும் பார்சலா இருக்குமோ? என மனதில் சிந்தனைகள் ஓடத் துவங்கின அன்று.
இன்று இ-மெயில் மின்னஞ்சலாகி நிற்கிறது. மின்னஞ்சலும் குறுகி ஆர்குட் Scrap லும், twitter ட்வீட்ஸ் களிலும், face book லுமாக தகவல் பரிமாற்றம் டிஜிட்டல் ரூபமெடுத்து உலகை InterNET எனும் வலைக்குள் பின்னிப் போட்டிருக்கிறது.
ஆனால் இந்த தளங்களை மொக்கையாக உபயோக்கிப்பவர்களே அதிகம் என நான் பார்த்தவரை புரிந்து கொள்ள முடிகிறது.
இன்று ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உறுப்பினராக இல்லாத ஒருவரை ஏளனமாக பார்க்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆர்குட் தளத்தை பார்க்கவில்லை என்றால் பலருக்கு தூக்கம் வரவும் மறுக்கிறதாம்!
ஆர்குட்டில் ஹாய் என்று Scrap அனுப்பினாலோ அல்லது பிறந்த நாளுக்கு வாழ்த்து அட்டை(ஆர்குட்டில்) அனுப்பினாலோ தான் பலர் சமாதானம் அடையவும் செய்கிறார்கள்.
தங்கள் ஆர்குட்டின் நண்பர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக முகமேயறியாத நண்பரின் நண்பருக்கும் பல நேரங்களில் நண்பரின் நண்பிக்கும் அழைப்பு விடுகின்ற வெட்டியர்களும் இருக்கிறார்கள்.
வேறு சிலர் அவர்கள் கண்களில் காண்கின்ற யூடியூப் காணொளிகளை எல்லாம் கோர்த்து விடுகிறார்கள். அதிகமாக காணொளிகள் இணைத்திருந்தால் பிறர் அவர்களையே கவனிப்பார்கள் என்ற ASB-Attention Seeking Behaviour ஐ கொண்டு நடக்கிறார்கள். இவுக பண்ற அலும்புக்கு ஒரு அளவே இல்ல.
இத்தனையும் செய்யும் இவர்கள் ஆரோக்கியமான ஒரு விவாதம் என்றால் எட்டடி பாய்வது தான் இன்னும் விசித்திரம். ஆர்குட்டில் கவர்ச்சியை நாடுபவர்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது வெகு குறைவே.
இந்த தொல்லைகளினாலும்; ஆர்குட் இல்லாமலும் நட்பு பாராட்ட முடியும் என்பதற்காகவும் ஆர்குட்டிலிருந்து ஜகா வாங்க வேண்டியதாகிப் போனது.
நண்பர்களுடன் முன்னைப் போலவே தொடர்ந்து உரையாடுகிறேன்; இன்னும் உரையாடுவேன்.
ஆர்குட்டும்,முகநூலும் மட்டுமே வாழ்க்கை என கதியாக கிடக்கின்றவர்களைப் பார்த்தால் "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல.



