May 30, 2020

இளையராஜா – Father. Severios Thomas – மாப்பிளபாட்டு

கலைக்கு முன்னர் மதம் ஒன்றுமில்லை என்பதை கேரள மண் மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.

மார்ச் மாதத்திற்குப் பிறகு குஜராத் மாடலை கழுவி ஊற்றலும், கேரள மாடலை சிலாகித்துப் பேசுவதும் பரவலாகி நிற்கிறது.

இது போதாதென்று சமூக வலைதளங்களில் கேரளத்தைக் குறித்த தொடர்ச்சியான நேர்மறையான தகவல்களைக் கேட்டும், பார்த்தும் நானும் ஓரளவு கடுப்பில் தான் இருந்தேன்.

இதன் பின்னே, திட்டமிட்ட செயல்நோக்கம் ஏதும் இருக்குமோ என்கிற அளவிற்கு கேரள மண் சிலாகிப்பு தொடரத்தான் செய்கிறது, ஆனால், அதில் பெருமளவு உண்மையிருப்பதாலாயே தொடர்ந்து மக்களால் பாராட்டப்படுகிறது என்பது யதார்த்தம்.

Fr Severios Thomas என்பவர் பாடிய சில பாடல்களை கேரள நண்பர் ஒருவர் Facebook ல் பகிர்ந்திருந்ததை இன்று கேட்க நேரிட்டது.

Father பாடியவைகளில் ஒரு பாடல், இளையராஜா அவர்கள் இசையில் 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்நேகத்தின் பூஞ்சோல’ என்கிற மலையாளப் பாடல். அப்பாடலை அவர் பாடிய நேர்த்தியும், அவரது குரலும் மனதை கட்டிப் போடக்கூடியவை. (இளவலின் மெட்டும் கூட)


அவர் குறித்த மேலதிகத் தேடலில் கிடைத்த தகவல்கள் அலாதியானவை. Jacobite Syrian Orthodox Church ஐ சார்ந்தவர் Fr Severios.

கேரளத்தில், மாப்பிள பாட்டுகள் எனப்படுகிற மண்ணின் மணம், வாழ்வியல், மென் மனித உணர்வுகளை வெளிப்படுத்துகிற இஸ்லாமியப் பாடல்களை அதிகம் ரசித்துப் பாடுவதில் சிறந்தவர். மாப்பிள பாட்டுகள் அரேபிய, பெர்சிய, உருது, தமிழ், இந்துஸ்தானி சொற்களை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

போதகர்களுக்குரிய அங்கியை அணிந்தே இப்படியான பாடல்களைப் பாடுகிறார் Fr Severios; இவரது பாடல்களைக் கேட்கிற இஸ்லாமியச் சமூகம் இவரை “ஞங்களுடே அச்சன்” என்று பெருமைப் படுகிறார்கள்; அதைக் கேட்டு இவர் பேரானந்தப்படுகிறார். கூடவே, பிற சமூகத்தினரும் இவரைச் சிலாகிப்பதில் வெளிப்படுகிறது மத நல்லிணக்கம்!

உங்களது சபையில் இதற்கு என்ன சொல்கிறார்கள் என்கிற கேள்விக்கு, அச்சன் அவர்களின் பதில் ‘என்னுடைய மூத்த போதகர் இதற்கு தடை போடாமல், என்னுடைய திறமையை மேலும் ஊக்குவிக்கிறார்; மனிதர்கள் ஒருவரிலொருவர் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்கிற கொள்கையோடு இருப்பவர் அவர்; சிலர் இதற்கு எதிராக இருந்தாலும் மனிதம் போற்றுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் இதை நான் கருதுகிறேன் என்கிறார் Fr Severios Thomas.

மனம் நெகிழ்கிறது, மதங்கள் கடந்து அன்பு செய்வோம், கலைகளைப் போற்றுவோம்.

என்றும் அன்புடன்,
எட்வின்
30/5/2020
சென்னை

May 08, 2020

ஏன் வீழ்ந்து கிடக்கின்றோம்!

'மன்னன் எவ்வழியோ
மக்களும் அவ்வழி' என்றார்கள் மன்னராட்சிக் காலத்தில். அது தற்போது ஓரளவுப் பொருந்திப் போனாலும், தற்போதைய நம் வாழ்வியலுக்கு அரசை மட்டுமே குறை சொல்லி விட முடியாது.

சிந்திக்காத மக்கள் கூட்டம், எல்லாவற்றிற்கும் தலையாட்டினர் அன்று!

இன்றோ, தகவல்களைப் பெறுவதற்கும், கற்பதற்கும், அதிலிருந்து சுயமாக சிந்திப்பதற்குமான சூழல் நமக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? என்பது ஒருபுறம்!

மறுபுறம்...

எந்த தலைமுறையும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான எவ்வித செயலையும் சுயமாக கற்றுக் கொள்வதில்லை. அது நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

நம் வீட்டார், நண்பர்கள், அலுவல் சார்ந்தோர், ஊர்ப்பெரியோர் இப்படியானவர்களிடமிருந்து கற்பவையே பெரும்பாலும் நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது.

நமது குணங்களைத் தீர்மானிப்பதில் மேற்குறிப்பிட்டோருக்குப் பெரும்பங்கு உண்டு.

இப்போது சொல்லுங்கள், நம் வீட்டார், நண்பர்கள், அலுவல் சார்ந்தோர், ஊர்ப்பெரியோர் நமக்கு எவ்விதக் கருத்துகளை நமக்குக் கடத்தினர்? கடத்திக் கொண்டிருக்கின்றனர்? எவ்விதமான வாழும் சூழலை நமக்கு முன் வைத்தனர்? வைத்துக் கொண்டிருக்கின்றனர்?

இக்கேள்விகளுக்கான பதில்களில் அடங்கியிருக்கிறது நமது டாஸ்மாக் வேதனைகள் 😥

May 03, 2020

அரிதாரம் பூசிய நியோ வாழ்வியல்

(பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சிறுகதை)

.... என்னங்க! நல்லாச் சொல்லுங்க இந்த பையனுக்கு, 'எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேன்றான்! எப்பப்பாரு விளையாட்டுன்னு இருக்கான்' எப்ப தான் நல்ல புத்தி வருமோ தெரில!

'நீதிக் கதைகள், வேதாகமக் கதைகள், நீதிமொழிகள எடுத்துப் படிடா' அப்ப தான் நல்ல புத்தி வரும், கூடவே நல்லது செய்யத் தோணும் ஒனக்கு, அதிகாரம் அதிகம் பூசிய அக்கறையில் அப்பா!

...தொண்டைக்கு வலிக்காத அளவில் சரிப்பா என்றான் பையன்.

சரி... சரி... நான் இங்க வச்சிருந்த அந்த கவர் எங்கடி! கொஞ்ச நேரமா தேடுறேன், காணவே இல்ல!

அதுல, அப்டி என்னங்க இருக்கு? இப்டி பதட்டப்படுறீங்க!

என்ன இருக்காவா! அதுல தாண்டி நாளைக்கு நாம கட்டப் போற புது பில்டிங்கோட அப்ரூவ்ட் ப்ளான் இருக்கு.

என்னங்க சொல்றீங்க! அப்ரூவல் கிடைக்கலன்னீங்க!

அதெல்லாம் வாங்கியாச்சி, காச இறைச்சா இங்க என்ன வேணா நடக்கும்னு ஒனக்கு தெரியாதா! சரி, கவர் எங்க அதச் சொல்லு.

நான் தான் பீரோல எடுத்து வச்சிருக்கேங்க, இந்தாங்க.

அ..ப்..பா..டா... இப்ப தான் நிம்மதி! சரி சரி, நான் இந்த ப்ளானோட ரெண்டு காப்பி எடுத்துட்டு இப்ப வந்துர்ரேன்.

'... என்ன இவ போன் எடுக்க இவ்ளோ நேரம்'

...ம்ம்ம்... ஹலோ, எடி ஜெனிபரு, நேத்தைக்கு, ஒன்னயும் காணோம் ஒன் குடத்தயும் காணோம்!

... ஊர்ல தான இருக்கீங்க!!

ஆமாக்கா, ஊர்ல தான் இருக்கோம், அது ஒண்ணுமில்லக்கா, நீங்க போட்ட மாதிரியே நாங்களும் மண்ணுக்கடில பைப்ப போட்டு மெயின் லைன்ல மாட்டிட்டோம், இப்ப தண்ணிக்கு வெளிய வர வேணாம்ல.

... ஓ, அப்டியா கத, பரவாயில்லயே!! உங்களுக்கும் நல்ல யோசனை லாம் வந்திருக்கே!!

... சரி சரி, அவர் வர நேரமாச்சி, சர்ச்சுக்கு கிளம்பணும்... அப்புறம் பேசுறேன், பா...ய்!

... அப்பா சொன்ன நீதிமொழிகளை படித்துக் கொண்டிருக்கிற மகன்,

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்: பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன் (நீதிமொழிகள் 8:13)

என்பதில் நிறுத்துகிறான்.




Related Posts with Thumbnails