April 30, 2026

தலித் கிறிஸ்தவர் - அரசியல் - எலைட் மனோநிலை

கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் அதிலும் தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோர் தங்களுக்குள் ஒரு எலைட் மனோபாவத்தை கொண்டு நடப்பது விவாதத்திற்கு உரியது.

ஆண்ட பரம்பரை என தங்களைக் குறிப்பிடும் வகையினருக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. 

தங்களது எலைட் மனோபாவம் ஆபத்தானது; அது சமூக நீதி அரசியலுக்கு எதிரானது என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பது பெரும் கேள்விக்குறி!

“கிரேக்கனென்றும் இல்லை யூதனென்றும் இல்லை” எல்லாரும் கடவுள் முன்னால ஒண்ணு தான் அப்படின்னு பவுல் எழுதியிருந்தாலும், நீர் சொல்றத சொல்லும் நாங்க பின்னொட்டு வச்சி கிறிஸ்தவ ப*#ர், கிறிஸ்தவ சா#*, கிறிஸ்தவ வ*#%@ அப்படின்னு சாதியால் தான் அறியப்படுவோம் என பிரிவினை செய்பவர்கள் தான் So Called கிறிஸ்தவர்கள். 

(இதனாலேயே தான் தலித் கிறிஸ்தவர்கள் என்றும் குறிப்பிட்டு எழுத வேண்டி இருக்கிறது.)

தலித் கிறிஸ்தவர்களை மற்ற கிறிஸ்தவ சபையினர் புறந்தள்ளுவது காலங்காலமாக நடந்து வருகிற ஒன்று. (இந்த தலைமுறையினர்  ஓரளவு மாறியிருக்கின்றனர்)

இதில் இன்னும் முரண் நகை என்னவென்றால் ‘தலித் கிறிஸ்தவர்கள் இடையே கூட ஒற்றுமை கிடையாது.’

அது கூட பரவாயில்லை… NEET தேர்வு உள்ளிட்ட எந்த பொது நலன் சார்ந்த விசயத்திலும் தமிழர்களுக்குள்ளேயே அரசியல் கட்சிகள் துவங்கி , அரசியல் சாரா அமைப்புகள் வரை நமக்குள்ளேயே ஒருமித்த கருத்து கிடையாது.  

இஸ்ரேலியர்கள் - இஸ்ரேல் அல்லாதோர் ( புற ஜாதியினர்) என்கிற விவரணைக்கு இணையானது தான் தலித் - தலித் அல்லாதோர் என்கிற விவரணையும். 

இது கிறிஸ்தவத்தின் அடிப்படையிலேயே பிரிவினை இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அதே போன்ற பிரிவினை தமிழர்கள் இடையேயும் சாதி வடிவில் தொடர்கிறது.

சாதிய வேறுபாடு பார்க்காமல் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் செய்து விட்டுப் போன  நற்செயல்கள் தொடராமல் போனதிலும்; ஒடுக்கப்பட்டோர் நலனிற்காக அவர்கள் செய்த சேவைகளை மறந்துவிட்டு தங்கள் சுய லாபத்திற்காக கிறிஸ்தவ தத்துவத்தை வியாபாரமாக்கியதிலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. 

இப்படி உள்ளடி வேலைகள் செய்து தங்கள் மேட்டிமைத்தனத்தை நிறுவி அதன் வழியாக பொருளீட்டும் தலித் கிறிஸ்தவர்கள், பெருநகரங்களில், கேள்விகளுக்கு உள்ளாகும் போது தங்களின் தலித்  அடையாளத்தையும் துறந்து விட தயாராக இருக்கிறார்கள்.

தலித் என தங்களை அடையாளப்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை. 

தங்களை தலித் என்கிற அடையாளத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக…

“நாங்க அந்த ஆளுங்க இல்ல”

“சே… சே… நாங்க SC இல்ல! நாங்க BC தான்” என்பார்கள். 

அதாவது தங்களை பிற சாதியினருக்கு ஒப்பாக காண்பிக்க இவர்கள் முன்வைக்கும் பொய்கள் இவை. 

‘தலித் என்றால் இழிவு’ என காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விவரணைக்கு, தங்கள் நிஜ அடையாளங்களில் இருந்து தப்பிக்க முயலும் தலித்களின் இது போன்றதான சொல்லாடல்கள் மேலும் வலு சேர்க்கின்றன. 

இவற்றை கண்டும் காணாமல் இருந்து விட்டு, இடைநிலைச் சாதியினரை தூக்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவை அளிப்பதும், அவர்களது சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிக்காமலும் இருப்பது சமூக நீதி அரசியலில் நம்பிக்கையுடையவர்களுக்கு அழகல்ல. 

#தேர்தல்2026

#DalitChristians

April 24, 2026

திராவிட கட்சிகளின் அதிகார மமதை

 தேர்தல் - சமூக வலைதளம் - யதார்த்த வாழ்க்கை இவை இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. அதை நம்மால் புரிந்து கொள்ள் முடியும் ஆனால் ஏற்றுக்கொள்வதில்லை. 

பணத்தினால் எதுவும் செய்து விடலாம் என கருதும் கட்சிகளும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை விவாதிக்காத சமூக வலைதள பதிவர்களும் / எழுத்தாளர்களும்/ ஊடகங்களும் அதன் போக்கிலேயே தொடர்கின்றன. 

இவை பெரும்பாலும் Like/ TRP / Votes இவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. 

கன்னியாகுமரியின் இயற்கை வள அழிப்பு; கேரளாவில் இருந்து கன்னியாகுமரியில் கொண்டு கொட்டப்படும் கழிவுகள்; சிவகாசி, விருதுநகர் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்; மாஞ்சோலை மக்களின் வாக்கு பறிப்பு… இவை முதலான இன்னும் பல நூறு பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் / தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இந்த தேர்தலை ஒட்டி நிகழவில்லை. 

ஆனால் வாக்கை மட்டும் இன்னாருக்கு போடுங்கள், அன்னாருக்கு போடுங்கள் என உழப்பல் தொடர்ந்தது. 

கல்வியை அளித்து விட்டு கூடவே வாக்குக்கு காசையும், பொன்னையும், பொருளையும்  கொடுக்கிற கட்சிகள் சமூகத்தில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வரும். 

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்த பிறகும் சாதியினால் பிரிந்து கிடக்கிறோம், இளைஞர்களை அரசியல் படுத்தாமல் திரை மோகத்தில் வைத்திருக்கிறோம்; அவர்களை தற்குறிகள் என்றும் அழைக்கிறோம்,  நகரங்களை மேம்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவழித்து விட்டு நம் முதுகெலும்பான கிராமங்களை தேய விட்டிருக்கிறோம். 

பொத்தாம் பொதுவாக சனாதனத்தின் மீது குற்றம் சுமத்தி விட்டு, இடைநிலை சாதியினர் தலித் மக்களின் மீது தொடர்ந்து நிகழ்த்தும் வன்முறைகளை ஒடுக்க தவறிய திராவிட கட்சிகள் இருந்தென்ன பயன். இவர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் தலித் தலைவர்களும் வாயை மூடிக்கொண்டு இருப்பது தான் பேரபத்தம். 

முதல்வரும், துணை முதல்வரும்  இன்று வரை வேங்கைவயலில் கால் வைக்கவில்லை. மக்கள் அங்கு தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறார்கள். 
இவர்கள் இப்படியாக மக்களை பிளவுபடுத்தி வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவது வெறும் வாக்குகளுக்காகவும் அதன் வழியாக பெறும் அதிகாரத்திற்கும் தான் என்பது தான் உண்மை. 

அதனை திராவிட கட்சிகளுக்கு கொடி பிடிப்போர் அறிந்திருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் பெரும்பான்மையின் பக்கம் நின்று ஒத்து ஊதுவதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். 
#தேர்தல்2026

March 25, 2026

தேர்தலும் நம் கீழ்மைகளும்!


தேர்தலும், அரசியலும் மக்கள் நலனிற்கானவை என்பது தானே உண்மை! சாதிய அடிப்படையில் / மதப் பின்னணியில் இயங்குகிற எந்த கட்சியும் எங்கள் சாதியினர் மட்டும் வாக்களியுங்கள் அல்லது எங்கள் மதத்தினர் மட்டும் வாக்களியுங்கள் என்று கேட்பதில்லை தானே! 


அரசியல் அமைப்பு சட்டப்படி எல்லாரும் சமம் என்பதும் உண்மை தானே! அப்படித்தானே அனைவரும் இயங்க வேண்டும்!! 


ஆனால் களம் அப்படியா இருக்கிறது!! 2026 ல் கூட எவரையும் சமமாக நடத்த மறுக்கிற, சாதி / மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிற, கூட்டணி ஆட்சியை அமைக்க மறுக்கிற கட்சிகளாகத் தான் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான  திமுக, அதிமுக இரண்டும் இருக்கின்றன. 


சாமானியர்களுக்கு ஒன்று என்றால் உடனடியாக களத்தில் வந்து நிற்பது கம்யூனிஸ்ட் தோழர்களும், இடதுசாரி கொள்கையையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கிற திருமாவளவன் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே தான். 


ஆனால் அவர்களும் கூட, தொகுதிப் பங்கீடு வரை சாதியத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற திராவிட கட்சிகள் உடன் சேர்ந்தே நிற்கிறார்கள். காலங்காலமாக தொடரும் இது போன்ற கொடுமை வேறில்லை. 


இப்படியாக இவர்கள் சில சட்டமன்ற தொகுதிகளுக்காக, பாராளுமன்ற தொகுதிகளுக்காக  தங்கள் கொள்கைகளை அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் அதிகாரம், பணம், பதவி மேல் இருக்கும் ஆசைகளின்றி வேறில்லை. 


கம்யூனிஸ்ட் / விசிக திமுக கூட்டணியில் இருந்ததால் இவற்றை சாதித்தோம் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன இருக்கிறது! 


சாதிய பாகுபாடு / வன்முறை குறைந்திருக்கிறதா!!

நீட் தேர்வு இல்லை என்று ஆகி விட்டதா!!

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதா!!

செவிலியர்கள் / துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டதா!!


இன்னும் சொல்லப்போனால், சனாதனம் / பாஜக உள்ளே வந்து விடக்கூடாது, அதனால் தான் திமுக உடன் இருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் சனாதனத்தை, சாதியத்தை மறைமுகமாக ஆதரிப்பதே திமுக தான். பாஜக தமிழகத்தில் வளர காரணமும் திமுக தான் என்பது வரலாற்று உண்மை. 


கட்சியினர் துவங்கி பொதுமக்கள் வரை அனைவரையும் பணப்பேய் பிடித்து ஆட்டுவிக்கிறது; சுயநலன்கள், சாதியப் பெருமைகள், மத மேட்டிமைகள் அகலாமல் நிம்மதியான தமிழகம் எக்காலத்தும் சாத்தியமில்லை. 


இந்த தேர்தல்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல! அவை சாமானியனுக்கு எவ்விதத்திலும் நன்மை தருவதில்லை. 


நாம் நம் கீழ்மைகளால் தான் மடிகிறோம்!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!!! 


June 11, 2025

கல்லறைகள் தரும் அமைதி - Brookwood - Tremenheere

கல்லறைகளுக்கு எப்போது சென்றாலும் அது தரும் அமைதி அலாதியானது. 

மரங்களும், மலர்களும், பறவைகளின் ரீங்காரமும் மயான அமைதி என்கிற சொல்லுக்கு பொருத்தமான அமைதியும் இன்னும் சற்று நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என தூண்டுவதில் வியப்பில்லை. 

அதிலும் நமக்கு பிரியமானவர்களது நினைவிடங்கள் இன்னும் பல நூறு நினைவுகளை மீள் பார்வைக்கு உள்ளாக்கி நமை இன்னும் ஆற்றுப்படுத்தும் என்பது அனுபவத்தால் நான் உணர்ந்த பேருண்மை. 

அப்படியாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக களத்தில் நின்று போராடி பல ஆயிரம் பக்கங்களை பதிவு செய்து 1912 இல் காலமாகிய டிரமென்ஹீர் என்கிற James Henry Apperley Tremenheere (30 October 1853 – 28 October 1912) அவர்களது எழுத்துகள் அவரது கல்லறையை பார்க்கத்  தூண்டியது. 

Brookwood எனும் இடத்தில் அவரது கல்லறை இருக்கிறது என்பது இணையவெளித் தேடலிலும், கல்லறை நிர்வாகத்தினருடனான உரையாடலின் வழியேயும் புலப்பட்டாலும், பல நூறு கல்லறைகளுக்கு இடையே ஒரு நூற்றாண்டு முன்னர் எழுப்பப்பட்ட அவரது கல்லறையை அடையாளம் காண செலவிட்ட மூன்று மணி நேர தேடல்கள் வெற்றி பெறாத வகையில் புதர் மண்டியும் கல்லறைகளில் கல்வெட்டுகளின் எழுத்துகள் உருக்குலைந்தும் காணப்பட்டது சற்றே நெருடல். 

கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கிறவர்களால் கூட தற்போது அடையாளம் காண இயலவில்லை என்றாலும் வருங்காலங்களில் அடையாளம் காண வழிவகை செய்வார்கள் என்கிற உறுதியுடன் கல்லறைத் தோடடத்திலிருந்து விடை பெற்றேன். 





அங்கிருந்தவாறே தொரசாமி அம்பேத்கரிய நாவலின் திறனாய்வு கூட்டத்தில் பங்கு பெற்றதும் நெகிழ்வான நிகழ்வு. 


கலெக்டர் / கிரிக்கெட்டர் / சமூக செயற்பாட்டாளர் / என்கிற பன்முகம் கொண்ட திரமென்ஹீர் அவர்களது பயணம் பூனா - Middlesex - Gloucestershire - செங்கல்பட்டு - நீலகிரி - Scotland - Surrey - Brookwood என்பதாக நிறைவுற்றாலும்  காலங்கள் கடந்தும் பேசப்படுவார் என்பதில் ஐயமில்லை.

பஞ்சமி நிலம் - பறையர் - அருட்தொண்டு சகோதரர்கள் - Wesleyan Concepts

‘நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே நமையும் தேடுகிறது’ என்கிற கூற்று ஒன்று உண்டு; அப்படியாக மார்ச் மாதத்தில் சென்னை எழும்பூர் ICSA புத்தக நிலையத்திற்கு அறம் வெளியீடான அம்பேத்கரிய தலித் நாவல் தொரசாமி குறித்து விசாரிக்கச் சென்ற போது தான் பஞ்சமி நில உரிமை என்கிற இந்த புத்தகத்தைப் பார்த்ததும், தேடி வந்த புத்தகம் தான் கிடைக்கவில்லை, சரி இதனை வாங்குவோம் என வாங்கி வைத்திருந்தேன்.

இப்போது அதனை வாசித்து முடித்ததும், அடடா, இது நம் வாழ்வியலையும் வரலாற்றையும் அல்லவா அச்சு அசலாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. நாம் இதனை எப்படி இத்தனை ஆண்டு காலம் அறிய முற்படமால் இருந்து விட்டோம் என கருத வைத்து விட்டது. 

1892 இல் James Henry Apperley Tremenheere (திரமென்ஹீர்) அவர்களால் எழுதப்பட்டு அரசாணையாக வெளிவந்த ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ தான் இந்த புத்தகம். இவற்றைத் தொகுத்து புத்தகமாக கொணர்ந்திருக்கும் வே. அலெக்ஸ் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர். 

மிகைப்படுத்தல் இல்லாத, புனைவுகள் அற்ற புள்ளி விவரங்களின் தொகுப்பு இந்த ஆவணம். தாழ்த்தப்பட்டோரின் சமூக-பொருளாதார அவலங்களை, நிலங்களின் அரசியலை, அடிமைகளாக நடத்தப்பட்ட முறைமைகளை, மிராசுகளின் அப்பட்டமான அடக்குமுறைகளைக் குறித்து அறிந்துகொள்ள இந்த புத்தகம் எவர்க்கும் பெரும் உதவியாக இருக்கும்.. 

தாழ்த்தப்பட்டோரை சோற்றிற்காக மதம் மாறிய கும்பல் என்றும், தாழ்த்தப்பட்டோர் நலனிற்காக தொடர்ந்து போராடி அருட்தொண்டு புரிந்தவர்களை பாவாடை என்றும் பகடிக்கு உள்ளாக்கும் அறமற்றோர் இன்றும் தொடரத்தான் செய்கிறார்கள். 

நிலங்களை அபகரித்தும், ஆக்கிரமித்தும், பிறருக்கு கல்வியையும் மறுக்கும் இவர்களுக்கு, எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் நிலங்களை வழங்கி, கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் துவங்கி கிறிஸ்தவ அருட்தொண்டு புரிந்தவர்களை ஏற்றுக்கொள்வதென்பது சிரமமானது தான். 

அன்றைய மதராஸ் - திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஸ்காடலந்தைச் சார்ந்த ஆடம் ஆண்ட்ரூ, வில்லியம் கெளடி என்கிற இரு இறைப்பணியாளர்கள் செய்த அருட்பணிகள் கணக்கிலற்றவை. கூடவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரமென்ஹீர் அவர்களின் இந்த குறிப்புகள் பறையர் இன மக்களுக்கு நிலங்களை அளிக்கும் விதமாக சட்ட மாற்றங்களைக் கொண்டு வரவும், கல்வி வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அவ்விரு இறைப்பணியாளர்களும் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர். 

அவர்கள் இருவரும் வெஸ்லியன் திருச்சபையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Salvation Army என்று அறியப்படும் கிறிஸ்தவ நற்பணி அமைப்பை ஆரம்பித்த வில்லியம் பூத் அவர்களும் தனது ஆரம்ப காலங்களில் வெஸ்லியன் (ஜான் வெஸ்லி) கோட்பாடுகளுடன் உடன்பட்டவர் என்பதும் வரலாறு. தென் தமிழகத்தில் குறிப்பாக நாகர்கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக சல்வேசன் ஆர்மி பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. 

அன்றைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக ‘பறையர்’ இருந்திருக்கிறது. பறையர்கள் காலங்காலமாக நிலங்களோடு இருந்தவர்கள் என்றும், இம்மண்ணின் மைந்தர்கள் எனவும், அடிமைகளாக, தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள் எனவும் திரமென்ஹீர் பதிவு செய்கிறார். 

மேலும் பறையர்கள் பலம் பொருந்தியவர்கள், கடின உழைப்பாளிகள், அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் மனைவிகள் முதல் பிள்ளைகள் வரை களப்பணி ஆற்றக்கூடிய திறன் மிக்கவர்கள், தமது நிலை உயர்ந்தால் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் உயர்த்தும் நல்லெண்ணம் உடையவர்கள் என்பதாகவும், மாறாக மிராசுகள் நில ஆக்கிரமிப்பு செய்து கொண்டு எவ்வித உடல் உழைப்பையும் தராமல், நிலங்களை தரிசுகளாகச் செய்கின்றனர் என்கிறது இப்புத்தகம். 

1876 இல் வட ஆற்காடு மாவட்டத்தில் பணியைத் துவக்கிய திரமென்ஹீர் அவர்கள் 1878 இல் சிறிது காலம் செங்கல்பட்டில் பணியிலிருந்தாலும்  பறையரின மக்களைப் பற்றியதான இக் குறிப்புகளை முன்வைப்பது 1892 இல் தான். கிட்டத்தட்ட 16 ஆண்டு கால கள அனுபவங்களும், பறையர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும் தான் அவரை இந்த ஆய்வறிக்கையைக் காத்திராமகப் பதிவு செய்ய உந்தியிருக்கின்றன. 

பூனாவில் பிறந்து ஸ்காட்லாந்தில் மறைந்த அவர் பணி செய்த இடங்கள் பின்வருமாறு 

வட ஆற்காடு | கோயம்புத்தூர் | பெல்லாரி | விசாகப்பட்டினம் | நீலகிரி | பெங்களூர் | செங்கல்பட்டு | கர்னூல் | திருநெல்வேலி | மதராஸ் | சேலம் | மலபார் | தஞ்சாவூர் | 

தாழ்த்தப்பட்டோர், தலித் வரலாறு குறித்து அறிந்து கொள்ள முற்படுவோர், தாழ்த்தப்பட்டவர்களின் நலன் பேசுவோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

| புத்தகம் - பஞ்சமி நில உரிமை -  ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ | தொகுப்பாசிரியர் - வே. அலெக்ஸ் | பதிப்பகம் - நீலம் | பக்கங்கள் - 192 |



May 25, 2025

இன்று இப்படியே சற்று ஆசுவாசமாய் - Lag Jaa Gale

பெருந்துயர்களில் இருந்து மீள எழுத்தையும், கலையையும், இசையையும் விட சிறந்த துணை வேறு என்ன இருந்து விடப் போகிறது 

எதையும், எவரையும் எப்போது வேண்டுமானாலும் இழப்போம் என்பது நம் ஆழ்மனங்கள் அறிந்தவை தான். ஒருவேளை அப்படியான எண்ணங்கள் நம் ஆழ்மனங்களில் இருப்பதாலேயோ என்னமோ அதன் தாக்கம் இல்லாமல் நமது புறம் சார்ந்த விசயங்களிலும், கேளிக்கைகளிலும், அன்றாட நடவடிக்கைகளிலும் இயல்பாக நாம் தொடர்ந்து இயங்குகிறோம். 


வலி, துயரம், ஆற்றாமை என்றிவை நம் ஆழ்மனங்களில் தேங்கிக் கிடந்தாலும் இவற்றை மிஞ்சி நிற்கின்ற பசி, வளர்சிதை மாற்றங்கள், இயற்கை உபாதைகள், சார்ந்திருப்போரின் நலம் பேணல் என ஏதாவது ஒன்றினால் நாம் இன்னமும் பிழைத்துக் கிடக்கிறோம் அல்லது நம் முந்தைய அனுபவங்கள் நமை பக்குவப்படுத்தியிருப்பதால் மனச் சமநிலை பிறழாமல் தொடர்கிறோம். 


இப்படியாக மனச் சமநிலை பிறழாமல் தொடர்வது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. குறிப்பாக வலி, துயர், ஆற்றாமை என்றிவைகள் சூழ் வட்டத்தினின்று வெளிவர இயலாதோர் இன்னமும் சோர்வுற்று அவைகளிலேயே உழன்று தமை வருத்திக் கொள்வதும் நிகழும் என்பது தான் இப்பிரபஞ்சத்தின் இன்னொரு பக்கம்.


அதிலும் சிறு வயதில் ஏற்படுகின்ற மனச்சிதைவுகள் ஒரு வகையில் வருங்காலங்களின் துயர்களை எதிர்கொள்ள பெரும்பாடங்களாக அமையும் என்றாலும், மறுவகையில் இவ்வாழ்க்கையின் மீதும், உறவுகளின்  மீதுமான நம்பிக்கையின்மையையும், எவ்வித செயற்பாடுகள் மீதுமான பிடிமானமற்றத் தன்மையையும் ஏற்படுத்தும் என்பது தான் பெருஞ்சோகம். 


‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்கிற ஜெயகாந்தன் கூற்று ஒன்று உண்டு, அது தான் நிதர்சனமும் கூட. இங்கு நமை, நம் செயல்களைப் பிடிக்காத பலர் உண்டு, நமக்குப் பிடிக்காதவர்களும் ஏராளம் உண்டு. எவரும் எவரையும், எல்லோராலும் எல்லா நேரமும் எல்லோரையும் திருப்திப் படுத்தி விடமுடியாது. அது  தான் இப்பிரபஞ்சத்தின் சூட்சுமம்.    


உலகம் எதிர்மறை சிந்தனைகளுடன் இருந்தாலும் நாம் நேர்மறையாகச் சிந்தித்தலையும், நன்மையானவைகளைப் பாராட்டாமல் விட்டுவிடுதலும் நன்றன்று. நன்றி மறத்தலும், நம் தோளோடு தோள் நின்று நமை உயர்த்துகிற எவரையும் மறத்தலும் அத்தனை எளிதல்ல, அப்படி இருந்து விடுதலும் முறையல்ல. 


நாளை இருப்போமா என்பதறியாத உலகில், நாளை சந்திப்போமோ என்பது உறுதியில்லாத நிலையில் இன்றைய தினத்தை முழுமையாக வாழ்ந்து விட்டுப் போதல் சிறந்தது. 

அப்படியான கருத்தாழத்தில் Raja Mehdi Ali Khan அவர்களால் எழுதப்பட்டு மதன் மோகன் அவர்கள் இசையில் லதா மங்கேஷ்கர் பாடிய Lag Ja Gale பாடலை ஒர் தந்தையும் மகளும் நேற்று பாடக் கேட்டேன். இந்த நேரத்தின் ஆகச் சிறந்த ஆறுதல் அந்த இசையும் அப்படியான வரிகளும் தான். 


இதில் குறிப்பிடும்படியான இன்னொரு விசயம், ராஜா மெஹ்தி அலி கான் Wazirabad (அன்றைய பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இன்றைய பாகிஸ்தான்) பகுதியில் பிறந்தவர்.


கலையும் இசையும் மதங்களுக்கும், பிரிவினைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை விட நிம்மதி என்ன வேண்டும் நமக்கு. வாழ்வோம், வாழ விடுவோம். 


பாடலின் இணைப்புகள்


Lata Mangeshkar Version with English Translation https://www.youtube.com/watch?v=YJHs3Sa73NQ


Sanam Acoustic Version

https://www.youtube.com/watch?v=HnLtNrvfZTU 


Papon Version 

https://www.youtube.com/watch?v=R1A8AbYPCaM


March 16, 2025

வாசிப்பு - The Grapes of Wrath

இத்தனை ஆண்டு கால வாழ்க்கையின் ஊடே நிகழ்ந்தவைகளில் ஆகச்சிறந்ததாக நான் கருதுவது வாசிப்பைத்தான்; இசையிலும், விளையாட்டிலும் அதீத ஆர்வம் இருந்து வந்தாலும் அவைகள் தராத உணர்வையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வாசிப்பு தந்திருக்கிறது என்பேன். 

உலகைச் சரியாக அறிவதற்கும், முலாம் பூசிய போலியான வாழ்க்கை முறைகளை முன்னிறுத்தும் எவைகளின் (எவர்களின்) தாக்கமும் நமது யதார்த்தங்களைச் சிதைக்காமல் தொடர்வதற்கும் வாசிப்பு மிக மிக அவசியம். 

அப்படியான தொடர் வாசிப்பில் (கற்றலில்) John Steinbeck எழுதிய The Grapes of Wrath என்கிற ஆங்கில நாவலை சமீபத்தில் வாசித்து முடித்தேன்.

1939 ல் வெளியான இந்நாவலின் பக்கங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்தும் அன்றைய அமெரிக்காவின் முகத்தை நம் கண் முன்னர் அப்படியே காட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அது தான் புத்தகங்களின் வல்லமை. 

முப்பதுகளில் அமெரிக்காவில் சம்பவித்த புழுதிப்புயல், புலம்பெயர்தல், வேலைவாய்ப்பின்மை, அதிகார வர்க்கத்தின் மூர்க்கம், மாநிலங்களுக்கு (மக்களுக்கு) இடையேயான சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, பஞ்சம், பட்டினி, கிறிஸ்தவ மதத்தை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கைகள், இடது - வலது அரசியல், கம்யூனிசம், புரட்சி என இந்நாவல் தொடாத இடங்கள் இல்லை. 

குறிப்பாக ஜிம் கேசி (Jim Casey) என்கிற ஒரு கதாபாத்திரம் வருகிறது. கிறிஸ்தவப் போதகராக இருந்த அவர் வறட்சி, வறுமை, பட்டினியால் மக்கள் படுகிற அல்லல்களைப் பார்த்து அதனின்று வெளியேறி, வெறும் மதப்பிரச்சாரம் மக்களுக்கு விடுதலை தராது; பாவ - புண்ணியத்தைக் கடந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், சக மனிதனின் பசியைப் போக்குவதுமே உயர்ந்தது என இயங்குகிறார். அந்த பாத்திரம் அப்படியே Jesus Christ (JC = Jim Casey) பாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது என இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள். நாவலை தீவிரமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது அந்த கண்ணோட்டம் நமக்கு வராத அளவிற்கு நாவல் எழுதப்பட்டிருக்கிறது.  

ஆங்கிலத்தில் கதைகள், கட்டுரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்திருந்தாலும் மனதிற்கு மிக மிக நெருக்கமாகிப் போகும் அளவிற்கு இப்படியான ஒரு நாவலை இப்போது தான் வாசித்திருக்கிறேன். 

அதற்குக் காரணம் என்னவாக இருக்குமென்றால் ஒடுக்குபவர்கள் Vs ஒடுக்கப்படுபவர்கள் தான்; கூடவே விவசாய வெளி, பயணம், புலம்பெயர்தல், வறுமை, கம்யூனிசம், Guitar, சாரோனின் ரோஜா எனப்படுகிற 'Rosasharn' கதாபாத்திரம் என நான் தொடர்பு படுத்திக் கொள்கிற பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

Grapes of Wrath குறித்து எழுத இன்னும் பல உண்டு. 

ஆங்கில இலக்கியப் படைப்புகளில் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் இது என பரிந்துரைத்த அண்ணன் அன்பு அவர்களுக்கு நன்றி. 

புத்தகம் - The Grapes of Wrath | எழுதியவர் - John Steinbeck | பக்கங்கள் - 528 | வெளியீடு - Penguin Books

Related Posts with Thumbnails