July 30, 2026

நேகா போரா எனும் போராளி

போராளிகள் எல்லா காலத்தும் வியப்படையச் செய்கிறார்கள். அதிலும் பெண் போராளிகள் சற்று அதிகமாகவே வியப்பில் ஆழ்த்துகிறார்கள். இப்படியான மனத்திண்மை கொண்ட பெண்களை இதுவரை சந்திக்காததும், எம் நிலப்பரப்பில் இப்படியான பெண் ஆளுமைகள் இல்லாததும் ஒரு வகையில் என் வியப்பிற்கு காரணம் எனலாம். 

நேகா போரா (Neha Bora) வயது 29.
அகில இந்திய  மாணவர் சங்கத்தின் தலைவர்,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்,
நாடகக்கலைஞர்
என்கிற முகங்களுக்கு சொந்தக்காரர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சார்ந்த நேகா அவர்கள் அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறார்.

ஒரு போராளிக்குத் தேவையான முதல் சிறப்புப் பண்பு துணிவு தான். அதனை எல்லோராலும் சாத்தியப்படுத்தி விட முடியாது. நேகா எப்போதும் பெரும் துணிச்சலுடன் களத்தில் நிற்கிறார். கூடவே, அவரது செறிவு மிக்க பேச்சின் வழியாக அவரது ஆழ்ந்த வாசிப்பும், தெளிவும், உறுதியும் நமக்கு புலப்படுகிறது. நேற்று கரன் தாப்பர் அவர்களுக்கு அளித்த பட்டாசான பேட்டி அதை வெகுவாக உறுதிப்படுத்துகிறது. ( https://youtu.be/ZY2mmqFWT4k?is=qSI0OM0Rhs9m0eRI )

மாணவர் நலன்களுக்காக, விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக, நலிவடைந்த சமூகத்தில் உள்ளவர்களுக்காக 23 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாதது. நேகாவுடன் அவரது மாணவர் சங்க சகாக்களான மனிஷ் குமார் மற்றும் அமீன் அமிட்டோஜ் ஆகியோர்  உண்ணாவிரதம் இருந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

நமக்கு சாவித்திரிபாய் பூலே அவர்களையோ, பாத்திமா ஷேக் அவர்களையோ நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை; அவர்களது காத்திரமான பேச்சுகளையும் கேட்கும் வாய்ப்பு அமையவில்லை; ஆனால், அவர்களை நேகாவின் உருவில் பார்க்கும் பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என நேகா அவர்களது தொடர்ச்சியான கள செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஒருவர் எழுதியிருந்தார். 

அதனுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். 

நேகா போரா போன்றோர் எக்காலத்தும் தங்கள் நலனை விட இந்த சமூகத்தின் நலனை, எதிர்கால சந்ததியினரின் நலனை தொடர்ந்து முன் வைக்கிறார்கள்; அவர்கள் பெரும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியவர்கள். 

இதனால் தான் திருவள்ளுவர்…

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

என்று எழுதி வைத்தார் போலும்! 

Long live Neha
Long live the resistance 


✊🏼ஜெய் பீம்!

June 19, 2026

சிங்காரச் சென்னை எனும் தோற்றப்பிழை

 சிங்காரச் சென்னை என்பதெல்லாம் பெயரளவிற்குத்தான் என்பதை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஒற்றைக் காணொளி சொல்லி விடுகிறது

இத்தனைக்கும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஜார்ஜ் டவுன், பிராட்வே ஆகிய முக்கிய இடங்களை உள்ளடக்கிய சென்னையின் மையப்பகுதி தான் துறைமுகம் தொகுதி.

சுகாதாரமின்மை, வீடுகள் இல்லாமல் பொதுமக்கள் வீதிகளிலும், நடைமேடைகளிலும் தங்கும் நிலைமை. பெண்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு கூட போதிய வசதி இல்லாத நிலை என அத்தனை பிரச்சனைகளைத் தாங்கி நிற்கிறது இந்த பகுதி. ஈக்கள் மொய்க்கும் அந்த இடத்தைப் பார்க்கையில் தலையில் அடித்துக் கொண்டேன்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட - அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதங்கள் சார்ந்த தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் என்ன செய்கிறார்கள் என்று கேள்விகள் எழுந்தாலும் இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டியது அரசு தான். 

இந்த பகுதியை இத்தனை காலம் யார் ஆட்சி செய்தார்கள் இப்போது தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் யார், சென்னையின் தற்போதைய மேயர் யார் என்பதெல்லாம் சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. 

இப்படியானச் சூழலில் வாழும் மக்களுக்காக பரிதாபப்படும் அதே நேரம், சென்னையில் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் சபைகளை, பிரார்த்தனைக் கூடங்களை உருவாக்கி பணம் ஈட்டும் கிறிஸ்தவ நிறுவனங்கள் எத்தனை இப்படியான மக்களை சென்று சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. 

இதனாலேயே தான் ‘நான் ஓர் கிறிஸ்தவனாக சா*க மாட்டேன்’ எனத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது. மக்களோடு மக்களாக நின்ற இயேசுவுக்கும் இன்றைய பணம் விழுங்கி போலி கிறிஸ்தவத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. 

காலம் எல்லாவற்றையும் நம் முன் தெளிவாக நிறுத்தி வைத்திருக்கிறது. 

இதைப் பார்த்துவிட்டு மீண்டால் சிங்காரச் சென்னை 3.0 திட்டத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் என செய்தி. வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஆட்சி எப்படியான சக்தி என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளில் தெரிந்து விடும் 🚶🏽‍♂️

காணொளி - நீலம் சமூக அமைப்பு 

https://youtu.be/fcD3erwGTNg?is=lgZr1LYnmCvHgPGU 

April 30, 2026

தலித் கிறிஸ்தவர் - அரசியல் - எலைட் மனோநிலை

கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் அதிலும் தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோர் தங்களுக்குள் ஒரு எலைட் மனோபாவத்தை கொண்டு நடப்பது விவாதத்திற்கு உரியது.

ஆண்ட பரம்பரை என தங்களைக் குறிப்பிடும் வகையினருக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. 

தங்களது எலைட் மனோபாவம் ஆபத்தானது; அது சமூக நீதி அரசியலுக்கு எதிரானது என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பது பெரும் கேள்விக்குறி!

“கிரேக்கனென்றும் இல்லை யூதனென்றும் இல்லை” எல்லாரும் கடவுள் முன்னால ஒண்ணு தான் அப்படின்னு பவுல் எழுதியிருந்தாலும், நீர் சொல்றத சொல்லும் நாங்க பின்னொட்டு வச்சி கிறிஸ்தவ ப*#ர், கிறிஸ்தவ சா#*, கிறிஸ்தவ வ*#%@ அப்படின்னு சாதியால் தான் அறியப்படுவோம் என பிரிவினை செய்பவர்கள் தான் So Called கிறிஸ்தவர்கள். 

(இதனாலேயே தான் தலித் கிறிஸ்தவர்கள் என்றும் குறிப்பிட்டு எழுத வேண்டி இருக்கிறது.)

தலித் கிறிஸ்தவர்களை மற்ற கிறிஸ்தவ சபையினர் புறந்தள்ளுவது காலங்காலமாக நடந்து வருகிற ஒன்று. (இந்த தலைமுறையினர்  ஓரளவு மாறியிருக்கின்றனர்)

இதில் இன்னும் முரண் நகை என்னவென்றால் ‘தலித் கிறிஸ்தவர்கள் இடையே கூட ஒற்றுமை கிடையாது.’

அது கூட பரவாயில்லை… NEET தேர்வு உள்ளிட்ட எந்த பொது நலன் சார்ந்த விசயத்திலும் தமிழர்களுக்குள்ளேயே அரசியல் கட்சிகள் துவங்கி , அரசியல் சாரா அமைப்புகள் வரை நமக்குள்ளேயே ஒருமித்த கருத்து கிடையாது.  

இஸ்ரேலியர்கள் - இஸ்ரேல் அல்லாதோர் ( புற ஜாதியினர்) என்கிற விவரணைக்கு இணையானது தான் தலித் - தலித் அல்லாதோர் என்கிற விவரணையும். 

இது கிறிஸ்தவத்தின் அடிப்படையிலேயே பிரிவினை இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அதே போன்ற பிரிவினை தமிழர்கள் இடையேயும் சாதி வடிவில் தொடர்கிறது.

சாதிய வேறுபாடு பார்க்காமல் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் செய்து விட்டுப் போன  நற்செயல்கள் தொடராமல் போனதிலும்; ஒடுக்கப்பட்டோர் நலனிற்காக அவர்கள் செய்த சேவைகளை மறந்துவிட்டு தங்கள் சுய லாபத்திற்காக கிறிஸ்தவ தத்துவத்தை வியாபாரமாக்கியதிலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. 

இப்படி உள்ளடி வேலைகள் செய்து தங்கள் மேட்டிமைத்தனத்தை நிறுவி அதன் வழியாக பொருளீட்டும் தலித் கிறிஸ்தவர்கள், பெருநகரங்களில், கேள்விகளுக்கு உள்ளாகும் போது தங்களின் தலித்  அடையாளத்தையும் துறந்து விட தயாராக இருக்கிறார்கள்.

தலித் என தங்களை அடையாளப்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை. 

தங்களை தலித் என்கிற அடையாளத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக…

“நாங்க அந்த ஆளுங்க இல்ல”

“சே… சே… நாங்க SC இல்ல! நாங்க BC தான்” என்பார்கள். 

அதாவது தங்களை பிற சாதியினருக்கு ஒப்பாக காண்பிக்க இவர்கள் முன்வைக்கும் பொய்கள் இவை. 

‘தலித் என்றால் இழிவு’ என காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விவரணைக்கு, தங்கள் நிஜ அடையாளங்களில் இருந்து தப்பிக்க முயலும் தலித்களின் இது போன்றதான சொல்லாடல்கள் மேலும் வலு சேர்க்கின்றன. 

இவற்றை கண்டும் காணாமல் இருந்து விட்டு, இடைநிலைச் சாதியினரை தூக்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவை அளிப்பதும், அவர்களது சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிக்காமலும் இருப்பது சமூக நீதி அரசியலில் நம்பிக்கையுடையவர்களுக்கு அழகல்ல. 

#தேர்தல்2026

#DalitChristians

April 24, 2026

திராவிட கட்சிகளின் அதிகார மமதை

 தேர்தல் - சமூக வலைதளம் - யதார்த்த வாழ்க்கை இவை இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. அதை நம்மால் புரிந்து கொள்ள் முடியும் ஆனால் ஏற்றுக்கொள்வதில்லை. 

பணத்தினால் எதுவும் செய்து விடலாம் என கருதும் கட்சிகளும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை விவாதிக்காத சமூக வலைதள பதிவர்களும் / எழுத்தாளர்களும்/ ஊடகங்களும் அதன் போக்கிலேயே தொடர்கின்றன. 

இவை பெரும்பாலும் Like/ TRP / Votes இவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. 

கன்னியாகுமரியின் இயற்கை வள அழிப்பு; கேரளாவில் இருந்து கன்னியாகுமரியில் கொண்டு கொட்டப்படும் கழிவுகள்; சிவகாசி, விருதுநகர் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்; மாஞ்சோலை மக்களின் வாக்கு பறிப்பு… இவை முதலான இன்னும் பல நூறு பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் / தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இந்த தேர்தலை ஒட்டி நிகழவில்லை. 

ஆனால் வாக்கை மட்டும் இன்னாருக்கு போடுங்கள், அன்னாருக்கு போடுங்கள் என உழப்பல் தொடர்ந்தது. 

கல்வியை அளித்து விட்டு கூடவே வாக்குக்கு காசையும், பொன்னையும், பொருளையும்  கொடுக்கிற கட்சிகள் சமூகத்தில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வரும். 

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்த பிறகும் சாதியினால் பிரிந்து கிடக்கிறோம், இளைஞர்களை அரசியல் படுத்தாமல் திரை மோகத்தில் வைத்திருக்கிறோம்; அவர்களை தற்குறிகள் என்றும் அழைக்கிறோம்,  நகரங்களை மேம்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவழித்து விட்டு நம் முதுகெலும்பான கிராமங்களை தேய விட்டிருக்கிறோம். 

பொத்தாம் பொதுவாக சனாதனத்தின் மீது குற்றம் சுமத்தி விட்டு, இடைநிலை சாதியினர் தலித் மக்களின் மீது தொடர்ந்து நிகழ்த்தும் வன்முறைகளை ஒடுக்க தவறிய திராவிட கட்சிகள் இருந்தென்ன பயன். இவர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் தலித் தலைவர்களும் வாயை மூடிக்கொண்டு இருப்பது தான் பேரபத்தம். 

முதல்வரும், துணை முதல்வரும்  இன்று வரை வேங்கைவயலில் கால் வைக்கவில்லை. மக்கள் அங்கு தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறார்கள். 
இவர்கள் இப்படியாக மக்களை பிளவுபடுத்தி வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவது வெறும் வாக்குகளுக்காகவும் அதன் வழியாக பெறும் அதிகாரத்திற்கும் தான் என்பது தான் உண்மை. 

அதனை திராவிட கட்சிகளுக்கு கொடி பிடிப்போர் அறிந்திருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் பெரும்பான்மையின் பக்கம் நின்று ஒத்து ஊதுவதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். 
#தேர்தல்2026

March 25, 2026

தேர்தலும் நம் கீழ்மைகளும்!


தேர்தலும், அரசியலும் மக்கள் நலனிற்கானவை என்பது தானே உண்மை! சாதிய அடிப்படையில் / மதப் பின்னணியில் இயங்குகிற எந்த கட்சியும் எங்கள் சாதியினர் மட்டும் வாக்களியுங்கள் அல்லது எங்கள் மதத்தினர் மட்டும் வாக்களியுங்கள் என்று கேட்பதில்லை தானே! 


அரசியல் அமைப்பு சட்டப்படி எல்லாரும் சமம் என்பதும் உண்மை தானே! அப்படித்தானே அனைவரும் இயங்க வேண்டும்!! 


ஆனால் களம் அப்படியா இருக்கிறது!! 2026 ல் கூட எவரையும் சமமாக நடத்த மறுக்கிற, சாதி / மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிற, கூட்டணி ஆட்சியை அமைக்க மறுக்கிற கட்சிகளாகத் தான் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான  திமுக, அதிமுக இரண்டும் இருக்கின்றன. 


சாமானியர்களுக்கு ஒன்று என்றால் உடனடியாக களத்தில் வந்து நிற்பது கம்யூனிஸ்ட் தோழர்களும், இடதுசாரி கொள்கையையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கிற திருமாவளவன் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே தான். 


ஆனால் அவர்களும் கூட, தொகுதிப் பங்கீடு வரை சாதியத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற திராவிட கட்சிகள் உடன் சேர்ந்தே நிற்கிறார்கள். காலங்காலமாக தொடரும் இது போன்ற கொடுமை வேறில்லை. 


இப்படியாக இவர்கள் சில சட்டமன்ற தொகுதிகளுக்காக, பாராளுமன்ற தொகுதிகளுக்காக  தங்கள் கொள்கைகளை அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் அதிகாரம், பணம், பதவி மேல் இருக்கும் ஆசைகளின்றி வேறில்லை. 


கம்யூனிஸ்ட் / விசிக திமுக கூட்டணியில் இருந்ததால் இவற்றை சாதித்தோம் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன இருக்கிறது! 


சாதிய பாகுபாடு / வன்முறை குறைந்திருக்கிறதா!!

நீட் தேர்வு இல்லை என்று ஆகி விட்டதா!!

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதா!!

செவிலியர்கள் / துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டதா!!


இன்னும் சொல்லப்போனால், சனாதனம் / பாஜக உள்ளே வந்து விடக்கூடாது, அதனால் தான் திமுக உடன் இருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் சனாதனத்தை, சாதியத்தை மறைமுகமாக ஆதரிப்பதே திமுக தான். பாஜக தமிழகத்தில் வளர காரணமும் திமுக தான் என்பது வரலாற்று உண்மை. 


கட்சியினர் துவங்கி பொதுமக்கள் வரை அனைவரையும் பணப்பேய் பிடித்து ஆட்டுவிக்கிறது; சுயநலன்கள், சாதியப் பெருமைகள், மத மேட்டிமைகள் அகலாமல் நிம்மதியான தமிழகம் எக்காலத்தும் சாத்தியமில்லை. 


இந்த தேர்தல்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல! அவை சாமானியனுக்கு எவ்விதத்திலும் நன்மை தருவதில்லை. 


நாம் நம் கீழ்மைகளால் தான் மடிகிறோம்!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!!! 


June 11, 2025

கல்லறைகள் தரும் அமைதி - Brookwood - Tremenheere

கல்லறைகளுக்கு எப்போது சென்றாலும் அது தரும் அமைதி அலாதியானது. 

மரங்களும், மலர்களும், பறவைகளின் ரீங்காரமும் மயான அமைதி என்கிற சொல்லுக்கு பொருத்தமான அமைதியும் இன்னும் சற்று நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என தூண்டுவதில் வியப்பில்லை. 

அதிலும் நமக்கு பிரியமானவர்களது நினைவிடங்கள் இன்னும் பல நூறு நினைவுகளை மீள் பார்வைக்கு உள்ளாக்கி நமை இன்னும் ஆற்றுப்படுத்தும் என்பது அனுபவத்தால் நான் உணர்ந்த பேருண்மை. 

அப்படியாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக களத்தில் நின்று போராடி பல ஆயிரம் பக்கங்களை பதிவு செய்து 1912 இல் காலமாகிய டிரமென்ஹீர் என்கிற James Henry Apperley Tremenheere (30 October 1853 – 28 October 1912) அவர்களது எழுத்துகள் அவரது கல்லறையை பார்க்கத்  தூண்டியது. 

Brookwood எனும் இடத்தில் அவரது கல்லறை இருக்கிறது என்பது இணையவெளித் தேடலிலும், கல்லறை நிர்வாகத்தினருடனான உரையாடலின் வழியேயும் புலப்பட்டாலும், பல நூறு கல்லறைகளுக்கு இடையே ஒரு நூற்றாண்டு முன்னர் எழுப்பப்பட்ட அவரது கல்லறையை அடையாளம் காண செலவிட்ட மூன்று மணி நேர தேடல்கள் வெற்றி பெறாத வகையில் புதர் மண்டியும் கல்லறைகளில் கல்வெட்டுகளின் எழுத்துகள் உருக்குலைந்தும் காணப்பட்டது சற்றே நெருடல். 

கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கிறவர்களால் கூட தற்போது அடையாளம் காண இயலவில்லை என்றாலும் வருங்காலங்களில் அடையாளம் காண வழிவகை செய்வார்கள் என்கிற உறுதியுடன் கல்லறைத் தோடடத்திலிருந்து விடை பெற்றேன். 





அங்கிருந்தவாறே தொரசாமி அம்பேத்கரிய நாவலின் திறனாய்வு கூட்டத்தில் பங்கு பெற்றதும் நெகிழ்வான நிகழ்வு. 


கலெக்டர் / கிரிக்கெட்டர் / சமூக செயற்பாட்டாளர் / என்கிற பன்முகம் கொண்ட திரமென்ஹீர் அவர்களது பயணம் பூனா - Middlesex - Gloucestershire - செங்கல்பட்டு - நீலகிரி - Scotland - Surrey - Brookwood என்பதாக நிறைவுற்றாலும்  காலங்கள் கடந்தும் பேசப்படுவார் என்பதில் ஐயமில்லை.

பஞ்சமி நிலம் - பறையர் - அருட்தொண்டு சகோதரர்கள் - Wesleyan Concepts

‘நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே நமையும் தேடுகிறது’ என்கிற கூற்று ஒன்று உண்டு; அப்படியாக மார்ச் மாதத்தில் சென்னை எழும்பூர் ICSA புத்தக நிலையத்திற்கு அறம் வெளியீடான அம்பேத்கரிய தலித் நாவல் தொரசாமி குறித்து விசாரிக்கச் சென்ற போது தான் பஞ்சமி நில உரிமை என்கிற இந்த புத்தகத்தைப் பார்த்ததும், தேடி வந்த புத்தகம் தான் கிடைக்கவில்லை, சரி இதனை வாங்குவோம் என வாங்கி வைத்திருந்தேன்.

இப்போது அதனை வாசித்து முடித்ததும், அடடா, இது நம் வாழ்வியலையும் வரலாற்றையும் அல்லவா அச்சு அசலாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. நாம் இதனை எப்படி இத்தனை ஆண்டு காலம் அறிய முற்படமால் இருந்து விட்டோம் என கருத வைத்து விட்டது. 

1892 இல் James Henry Apperley Tremenheere (திரமென்ஹீர்) அவர்களால் எழுதப்பட்டு அரசாணையாக வெளிவந்த ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ தான் இந்த புத்தகம். இவற்றைத் தொகுத்து புத்தகமாக கொணர்ந்திருக்கும் வே. அலெக்ஸ் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர். 

மிகைப்படுத்தல் இல்லாத, புனைவுகள் அற்ற புள்ளி விவரங்களின் தொகுப்பு இந்த ஆவணம். தாழ்த்தப்பட்டோரின் சமூக-பொருளாதார அவலங்களை, நிலங்களின் அரசியலை, அடிமைகளாக நடத்தப்பட்ட முறைமைகளை, மிராசுகளின் அப்பட்டமான அடக்குமுறைகளைக் குறித்து அறிந்துகொள்ள இந்த புத்தகம் எவர்க்கும் பெரும் உதவியாக இருக்கும்.. 

தாழ்த்தப்பட்டோரை சோற்றிற்காக மதம் மாறிய கும்பல் என்றும், தாழ்த்தப்பட்டோர் நலனிற்காக தொடர்ந்து போராடி அருட்தொண்டு புரிந்தவர்களை பாவாடை என்றும் பகடிக்கு உள்ளாக்கும் அறமற்றோர் இன்றும் தொடரத்தான் செய்கிறார்கள். 

நிலங்களை அபகரித்தும், ஆக்கிரமித்தும், பிறருக்கு கல்வியையும் மறுக்கும் இவர்களுக்கு, எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் நிலங்களை வழங்கி, கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் துவங்கி கிறிஸ்தவ அருட்தொண்டு புரிந்தவர்களை ஏற்றுக்கொள்வதென்பது சிரமமானது தான். 

அன்றைய மதராஸ் - திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஸ்காடலந்தைச் சார்ந்த ஆடம் ஆண்ட்ரூ, வில்லியம் கெளடி என்கிற இரு இறைப்பணியாளர்கள் செய்த அருட்பணிகள் கணக்கிலற்றவை. கூடவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரமென்ஹீர் அவர்களின் இந்த குறிப்புகள் பறையர் இன மக்களுக்கு நிலங்களை அளிக்கும் விதமாக சட்ட மாற்றங்களைக் கொண்டு வரவும், கல்வி வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அவ்விரு இறைப்பணியாளர்களும் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர். 

அவர்கள் இருவரும் வெஸ்லியன் திருச்சபையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Salvation Army என்று அறியப்படும் கிறிஸ்தவ நற்பணி அமைப்பை ஆரம்பித்த வில்லியம் பூத் அவர்களும் தனது ஆரம்ப காலங்களில் வெஸ்லியன் (ஜான் வெஸ்லி) கோட்பாடுகளுடன் உடன்பட்டவர் என்பதும் வரலாறு. தென் தமிழகத்தில் குறிப்பாக நாகர்கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக சல்வேசன் ஆர்மி பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. 

அன்றைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக ‘பறையர்’ இருந்திருக்கிறது. பறையர்கள் காலங்காலமாக நிலங்களோடு இருந்தவர்கள் என்றும், இம்மண்ணின் மைந்தர்கள் எனவும், அடிமைகளாக, தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள் எனவும் திரமென்ஹீர் பதிவு செய்கிறார். 

மேலும் பறையர்கள் பலம் பொருந்தியவர்கள், கடின உழைப்பாளிகள், அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் மனைவிகள் முதல் பிள்ளைகள் வரை களப்பணி ஆற்றக்கூடிய திறன் மிக்கவர்கள், தமது நிலை உயர்ந்தால் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் உயர்த்தும் நல்லெண்ணம் உடையவர்கள் என்பதாகவும், மாறாக மிராசுகள் நில ஆக்கிரமிப்பு செய்து கொண்டு எவ்வித உடல் உழைப்பையும் தராமல், நிலங்களை தரிசுகளாகச் செய்கின்றனர் என்கிறது இப்புத்தகம். 

1876 இல் வட ஆற்காடு மாவட்டத்தில் பணியைத் துவக்கிய திரமென்ஹீர் அவர்கள் 1878 இல் சிறிது காலம் செங்கல்பட்டில் பணியிலிருந்தாலும்  பறையரின மக்களைப் பற்றியதான இக் குறிப்புகளை முன்வைப்பது 1892 இல் தான். கிட்டத்தட்ட 16 ஆண்டு கால கள அனுபவங்களும், பறையர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும் தான் அவரை இந்த ஆய்வறிக்கையைக் காத்திராமகப் பதிவு செய்ய உந்தியிருக்கின்றன. 

பூனாவில் பிறந்து ஸ்காட்லாந்தில் மறைந்த அவர் பணி செய்த இடங்கள் பின்வருமாறு 

வட ஆற்காடு | கோயம்புத்தூர் | பெல்லாரி | விசாகப்பட்டினம் | நீலகிரி | பெங்களூர் | செங்கல்பட்டு | கர்னூல் | திருநெல்வேலி | மதராஸ் | சேலம் | மலபார் | தஞ்சாவூர் | 

தாழ்த்தப்பட்டோர், தலித் வரலாறு குறித்து அறிந்து கொள்ள முற்படுவோர், தாழ்த்தப்பட்டவர்களின் நலன் பேசுவோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

| புத்தகம் - பஞ்சமி நில உரிமை -  ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ | தொகுப்பாசிரியர் - வே. அலெக்ஸ் | பதிப்பகம் - நீலம் | பக்கங்கள் - 192 |



Related Posts with Thumbnails