Showing posts with label டிராவிட். Show all posts
Showing posts with label டிராவிட். Show all posts

January 28, 2012

ஆஸ்திரேலியா: கவிழ்த்த கிரிக்கெட்டும்; கவர்ந்த லியாண்டர் பயசும்


பதிவுலகம் பக்கம் வந்தே பல நாட்கள்/ மாதங்கள் ஆகி விட்டது. குடும்பப் பொறுப்புகள் சிந்தனைகளை சுருக்கியிருப்பதை மறுப்பதிற்கில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த ஆறு மாத கால செயல்பாடும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசும் இந்த பதிவை எழுத தூண்டியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குள் வைக்கப்பட்ட அதே நாள் தான்... மற்றொரு இந்தியர் லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்று இந்தியர்களை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

சச்சின் சதம் அடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.  கடைசியாக அவர் களம் இறங்கிய பதினாறு முறையும் சதமடிக்க தவறியிருக்கிறார். லக்ஷ்மணும் அதே நிலைமையில் தான் இருக்கிறார்.

திராவிட், இங்கிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டங்களில் மூன்று சதங்கள் எடுத்து தான் ஒரு தூண் என்று நிரூபித்தாலும் தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 8 இன்னிங்க்ஸ்களிலும் ஒரே ஒரு அரை சதத்தோடு திருப்திப்பட்டுக் கொண்டார். 

தங்களது ஆட்டம் உச்சத்தில் இருக்கும் போதே யாரும் விடைபெற வேண்டுமென்று கருதுவதில்லை போலும். சச்சின் உலகக் கோப்பையை வென்றதுமே விடை பெற்றிருக்கலாம். திராவிட் இங்கிலாந்தில் மூன்று சதங்கள் எடுத்ததும் விடை பெற்றிருக்கலாம். இவர்கள் இருவரும் செய்யாத சாதனைகள் இல்லை. இனிமேலும் என்ன சாதிக்கவிருக்கிறார்கள் என தெரியவில்லை.

ஆஸ்திரேலியர்கள் ஹெய்டன்,கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பலர் அவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் தான் விடை பெற்றார்கள். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்டன் உலகக்கோப்பையை வென்ற கையோடு பதவியை துறந்தார். இந்த மனநிலைமை ஏன் இவர்களுக்கு இல்லை என தான் தெரியவில்லை.

இரண்டு ஆட்டங்கள் தோற்றதுமே ரோகித் ஷர்மாவிற்கு வாய்ப்பளித்திருக்கலாம்; அல்லது ஆடுபவர்கள் வரிசையையாவது மாற்றியிருந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. எதையுமே பரிசோதனை செய்யாமல் தோல்வி! தோல்வி!! என்றால் என்னவென சொல்வதற்கு?!

கிரிக்கெட் அணி காலையில் கவிந்திருக்க; மாலையில் இந்தியாவின் பெயரை லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தின் மூலம் உயர்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இதோடு பயஸ் டென்னிஸின் நான்கு பெரிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் (ஆஸ்திரேலிய ஓபன், ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) வென்று சாதனை படைத்திருக்கிறார். 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பயஸ் பெற்ற ஒற்றையர் வெண்கலப் பதக்கத்தையும் மறந்து விட முடியாது.

கிரிக்கெட்டிற்கும் ஐ.பி.எல் ற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு ரசிகர்களும், இந்திய அரசாங்கமும் டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமும், ஊக்கமும் அளித்தால் இந்தியா விளையாட்டு அரங்கில் புகழ் பெற்று விளங்கும்.


August 23, 2011

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி!!



இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் நான்கிலும் தோல்வியடைந்து முகம் குப்புற கவிழ்ந்து கிடக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சியின் ஆரம்பமாகத்தான் இதனை கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணங்களாக ஆட்டக்காரர்களின் ஏனோ தானோ போக்கினையும் சரியான திட்டமில்லாமையையும் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறோம் என்ற பாங்கு பெரும்பாலான ஆட்டக்காரர்களிடம் இல்லை. குறிப்பாக மட்டை வீச்சாளர்கள் ஒரு தின போட்டிகள் அல்லது இருபது ஓவர் ஆட்டங்கள் ஆடுகின்ற பாணியிலேயே ஆடியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

சரியான பயிற்சிகள் இல்லாததும், பயிற்சி ஆட்டங்கள் இல்லாததும் இங்கிலாந்தின் காலநிலையோடு ஒன்றிப் போகாமலும் இருந்த ஆட்டக்காரர்களும், போராடும் குணம் இல்லாமையும், அனைத்து ஆட்டங்களிலும் மட்டை வீச்சாளர்களின் சரியான துவக்கமில்லாமையும் இந்தியாவின் , தோல்விகளுக்கான காரணங்கள் தான்.

உலகக்கோப்பை ஆட்டங்களுக்கு பின்னர் சரியான ஓய்வில்லாமல் ஐ.பி.எல் ஆட்டங்களில் ஆடியதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஐ.பி.எல் ஆட்டங்களினால் ஏற்பட்ட காயங்கள் சேவாக், காம்பீர்,  ஷகீர் கான் ஆகியவர்களை சரிவர பங்களிக்க விடாமல் செய்து விட்டது.

அணியினை முன்னிறுத்தாமல் தனி ஒருவரின் சாதனைகளை மட்டுமே குறிப்பாக சச்சினின் 100 ஆவது சதத்தை முன்னிறுத்திய ஊடகங்களையும், விமர்சகர்களையும், ரசிகர்களையும் இங்கு கண்டிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. இனியாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணிக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஐ.பி.எல் போன்ற பணம் கொழிக்கும் வியாபாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை கைவிட முன்வர வேண்டும்.

இங்கிலாந்து அணியினைப் போல சரியான திட்டம் வகுக்காமல் ஆடிய இந்திய அணி தோல்வியடைந்தது அதன் அகங்காரத்திற்கு கிடைத்த வெகுமதியாக கொள்ளலாம். சரியான அறிவுரைகளும் பயிற்சியாளர்களிடமிருந்து இந்திய அணிக்கு கிடைக்கப்பெறவில்லை; இல்லையென்றால் இத்தனை கேவலமான தோல்வி இந்தியா அடைந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் பெருமை காத்த ஒரே ஆட்டக்காரர் ராகுல் திராவிட் தான். மூன்று சதங்களை கண்ட திராவிட்டிற்கு தொடர் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.


பந்து வீச்சில் பிரவீன் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா நன்றாக வீசினாலும் பிறர் இவர்களுக்கு பக்கபலமாக சரியாக வீசுவதில்லை. சுழற்பந்து வீச்சிற்கு பெயர் போன இந்திய அணியில் தற்போது சொல்லிக் கொள்ளும்படி எவரும் இல்லாதது மேலும் வருத்தம் தான்.

இந்திய அணியில் லக்ஷ்மண், ரெய்னா, தோனி இவர்களின் மட்டை வீச்சில் குறிப்பாக Away Swinging மற்றும் Inswinging பந்து வீச்சுகளை எதிர்கொள்ளுகையில் அவர்கள் சரியான மாற்றம் கொண்டு வரவில்லையென்றால்... இந்திய அணி தரவரிசையில் மேலும் கீழிறங்கும் நாட்கள் வெகு தொலைவிலில்லை.

இந்திய அணி சமீப காலங்களில் மிக மிக மோசமாக ஆடிய தொடர் இதுவாகத்தானிருக்கும். தோனி தலைமையில் இந்திய அணி அடைந்த முதல் தொடர் தோல்வியும் இதுவே. இந்திய அணியின் குறைகளை விமர்சிக்கையில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தைக் கண்டிப்பாக பாரட்டியாக வேண்டும். 

October 04, 2009

கிரிக்கெட் - புகைப்பட நையாண்டிகள்





"If I had to last 20 years, I would probably be batting in a wheelchair"

இது இருபது ஆண்டு காலமாக நல்ல உடல் திறனோடு கிரிக்கெட் ஆடி வரும் சச்சினைக் குறித்து அண்மையில் ஒருநாள் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியர் ரிக்கி பாண்டிங் சொன்னது.

August 18, 2009

திராவிட்,பேட்மிண்டன்,சீன வீரர்கள்

இலங்கை முத்தரப்பு தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் ட்ராஃபி ஆட்டங்களுக்கு ராகுல் திராவிட்டை தெரிந்தெடுத்திருப்பது என்ன காரணத்திற்கென புரியவில்லை. இரண்டு தொடர்களில் சரிவர ஆடாத காரணத்தால் நீக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கலாம்.

2011-உலகக் கோப்பை போட்டிகளுக்கென இளம் அணியை உருவாக்கப் போகிறோம் என்று காரணம் காட்டி 2007 ல் மூத்த வீரர்களை நீக்கியது என்னத்திற்கோ தெரியவில்லை. கேட்டால்... அது போன தேர்வுக்குழு என வடிவேல் பாணியில் ஏதும் காரணம் வைத்திருப்பார்களோ என்னமோ!

ஒருவேளை ஷேவாக் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவாரெனில் திராவிட்டிற்கு அணியில் பங்கு என்னவாக இருக்கும்?

ஐ.பி.எல் போட்டிகளில் அருமையாக பந்து வீசிய 'ஓஜா'வையும் அணியிலிருந்து நீக்கியதற்கு என்ன காரணமோ?

--------------------------------------------



தடகள போட்டிகளானாலும்,பிற விளையாட்டுகளானாலும் சீன வீர வீராங்கனைகள் காட்டும் உற்சாகமும், அர்ப்பணிப்பும், விவேகமும், வேகமும் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த சர்வதேச இறகுப்பந்து(பேட்மிண்டன்) போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்றது சீன சிங்கங்களே.

2008 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 100 பதக்கங்கள் குவித்து தங்க பதக்கம் பெற்ற முறையில் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்ததும் சீனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெய்வால் காலிறுதி சுற்றிலேயே வெளியேறினாலும் சர்வதேச போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெயர் கிடைத்தது.

March 19, 2009

(டிராவிட்)ராகுல்,ரஃபேல்,ரேஸ்(F1)

ராகுல் டிராவிட்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ராகுல் டிராவிட், ஹாமில்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஆட்டத்தின் முதல் விக்கெட்டின் கேட்ச் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக கேட்ச் (181) எடுத்தவர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மார்க் வாவ் இந்த சாதனையை செய்திருக்கிறார்.

--------------------------------

ரஃபேல் நடால்

உலகின் முதல் தர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கலிஃபோர்னியா, இண்டியன் வெல்சில் நடைபெற்று வரும் ஏ.டி.பி மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆட்டங்களின் காலிறுதிக்கு முந்தைய போட்டி ஒன்றில் அர்ஜென்டினாவின் டேவிட் நல்பான்டியனை எதிர்த்து இன்று ஆடினார். தோல்வியின் விளிம்பில் இருந்த நடால் எவருமே எதிர்பாராத விதம் வெற்றி பெற்றார்.

6-3,5-3, 40-15 என்ற புள்ளியுடன் மேலும் ஒரு புள்ளி எடுத்தால் டேவிட்டிற்கு வெற்றி என்ற நிலை இருந்தது. இரண்டு Match points இருந்தது அவருக்கு. அவற்றில் ஒன்று எடுத்தாலே வெற்றி.

ஆனால்....அடிபட்ட புலியாக நடால் மீண்டு வந்து இரண்டு Match point யையும் முறியடித்து 5-4 என்று ஒன்பதாவது கேமை தனதாக்கினார்.

என்றாலும் டேவிட் 6-6 என்ற கேம் கணக்கில் இரண்டாவது செட்டை டை-பிரேக்கருக்கு கொண்டு சென்றார்.டை-பிரேக்கரில் வெற்றி பெற்றால் ஆட்டம் டேவிட்டுக்கு.

விட்டரா நடால்... இல்லை, வீறு கொண்டு டை பிரேக்கரில் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை தனக்கு சொந்தமாக்கி ஆட்டத்தை மூன்றாவது செட்டிற்கு இட்டுச் சென்றார்.


மூன்றாவது செட்டில் டேவிட் நல்பான்டியனை ஓட ஓட விரட்டினார் ரஃபேல் நடால். இறுதியில் 6-0 என்ற கேம்களில் மூன்றாவது செட்டை எடுத்து 2-1 என்ற செட் கணக்கில் டேவிட்டை வீழ்த்தி காலிறுதிக்கும் தகுதி பெற்று,தான் உலகின் முதல் தர வீரன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இது தான் "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்பதோ


-----------------------



ஃபார்முலா ஒன் ரேஸ்

மார்ச் 29 அன்று துவங்கவிருக்கும் 2009 ன் ஃபார்முலா ஒன் சீசனில் அதிக ரேஸ்களில் வெற்றி பெறுபவர் சாம்பியனாக அறிவிக்கப்படுவார் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் அதிக புள்ளிகள் எடுத்தவரே சாம்பியனாக அறிவிக்கப்பட்டு வந்தார்.2008 ல் அதிக ரேஸ்களில் வெற்றி பெற்றிருந்த போதும், புள்ளிகளின் குறைவால் பிரிட்டனின் லூயிஸ் ஹாமில்டனிடம்,பிரேசிலைச் சார்ந்த ஃபெராரியின் பிலிப்பே மாசா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts with Thumbnails