Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

November 20, 2022

கிரிக்கெட்டிலிருந்து கால்பந்து வரை

ன்று உலகக்கோப்பை கால்பந்து கத்தாரில் துவங்கவிருக்கிறது.  அந்த களிப்பில் மனம் திளைத்திருக்கையில், கிரிக்கெட் பைத்தியமான எனை கால்பந்து ஆட்டங்கள் அதன் பக்கம் ஈர்த்தது குறித்து அசை போடாமல் இருக்கவியலவில்லை.


இன்றைய தேதியில், எனக்கு  பரிச்சயமானவர்களில் பெரும்பாலோனோர் கிரிக்கெட் பிரியர்கள் தான்.

என் நினைவில், ஆறு வயது முதல் கிரிக்கெட் என்கிற விளையாட்டு மட்டுமே பதிவாகியிருந்திருக்கிறது.

கிரிக்கெட் ஒரு கட்டத்தில் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டிருந்தது. கவாஸ்கரின் தடுப்பாட்டமும், ஶ்ரீகாந்தின் சில நிமிட அதிரடிகளும், கபில்தேவின் ஆக்ரோஷமான  பந்துவீச்சும் பால்யத்தின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வழி நினைவலைகள்.

1987 - 1990 வரையிலான கால கட்டத்தில் கிரிக்கெட் பேட்டில் காம்பஸ் கொண்டு துளையிட்டு அதில் எண்ணெயை தேய்த்துக் கொண்டிருக்கும் ' மனோ ' அண்ணன் இன்றும் பசுமரத்தாணி போன்று மனதில் பதிந்திருக்கிறார்.

நெல்லை ஹைகிரவுண்ட் (இன்றைய மேட்டுத்திடல்) ஜான்ஸ் பள்ளி / கல்லூரி மைதானங்களில் கால் கடுக்க லெதர் பால் ஆட்டங்களைக் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

ஐந்தாவது படிக்கும் போது மார்த்தாண்டத்தில் பள்ளி முடிந்து நான் நேரத்திற்கு வீடு திரும்பவில்லையென்றால் ' ஸ்டார் லாட்ஜ் வெளிய நின்னு கிரிக்கெட் பாத்திட்டிருப்பான் ' என்கிற புரிதல் வீட்டிற்கு இருந்தது;  கூடவே, 'வந்ததும் இருக்கு அவனுக்கு '  என்கிற வசைகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது தான் (1991) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிமுகாகியிருந்தது.

இப்படியான கிரிக்கெட் பிரியம், 2008-2015 ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிரிக்கெட் குறித்ததான 80 பதிவுகளை எழுதவும் வகை செய்திருந்தது.

எனினும், கிரிக்கெட் மீதான ஆர்வம் 1999 ல் அசாருதீன் உள்ளிட்டோர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியைக் கண்டதில் இருந்து குறையத் தொடங்கியிருந்தது.

அதற்கேற்றார் போல, 1996-1998 களில், வண்ண வண்ண உடைகளை அணிந்து பந்தை அங்கும் இங்கும் உதைக்கும் அணிகளை தொலைக்காட்சி நேரலையில் பார்க்கும் நண்பன் ஆனந்த் @ ஜோஷியைப் பார்த்து ' என்ன இவன் சனி ஞாயிறு ஆனா இதையே பாத்திட்டு இருக்கான் ' என்பதாக இருந்தது! கூடவே கால்பந்து மீதான ஆர்வமும் துளிர்த்தது

Live என்பதை லிவ் எனவும்; Chelsea என்பதை செல்சியா எனவும் உச்சரித்து அவனிடம் பல்ப் வாங்கியதும் உண்டு 😂

அப்படி எனக்கு அறிமுகமானது தான் EPL எனப்படும் English Premier League Club Football.

இதனைப் பின்பற்றித்தான் லலித் மோடி IPL Cricket துவங்கினார் என்பது வரலாறு.

2000 த்திற்கு பின்னர் பல நாடுகளின் கால்பந்து லீக் களையும், பிற கால்பந்து தொடர்களையும் பின் தொடர்வது வழக்கமாகிப் போனது.

மெஸ்ஸி இருந்தவரை பார்சிலோனா வையும். தற்போது மேன்செஸ்டர் யுனைட்டட் அணியையும் பிடித்த அணிகளாகக் கொள்ளலாம்.

கிரிக்கெட் சில நாடுகளால் மட்டுமே விளையாடப்படும் ஒரு ஆட்டம்.

கால்பந்து என்பது அப்படியல்ல!

" உலகக் கோப்பை " என்கிற பதம் " கால்பந்து உலகக் கோப்பை " ஆட்டங்களுக்கு மட்டுமே நியாயம் செய்யும்.

அடுத்த 29 நாட்களும் பெருவாரியான உலகின் பார்வை கத்தாரின் மீதே குவிந்திருக்கும்.

கூடவே, உலகக் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், கத்தார் பேச விரும்பாத LGBTQ, ஐரோப்பா பேச விரும்பாத நிறவெறி மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நலன் குறித்து பேசி உலகின் பார்வையை கத்தார் நோக்கி திருப்பியிருக்கிறார்!

அடுத்த ஒரு மாதம் கால்பந்து ரசிகர்களின் உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது ⚽



September 25, 2022

நன்றிகள் பெடரர் 🎾❤️

ஐந்து வயது முதலே கிரிக்கெட்டை மட்டுமே கண்டும், விளையாடியும்; கிரிக்கெட் குறித்த தகவல்களை மட்டுமே கேட்டும், விவாதித்தும் இருந்ததால் பிற விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு பதின்ம வயது வரை பெரிதாக இல்லை. 

பதின்ம வயதின் மத்தியில் தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆட்டங்கள் நண்பர்கள் வழியே அறிமுகம் ஆயின.

அன்று பார்க்க ஆரம்பித்த EPL இன்றளவும் Manchester United விசிறியாக வைத்திருக்கிறது. 

தொண்ணூறுகளில் பீட் சாம்ப்ராஸ், அகாசி, போரிஸ் பெக்கர் போன்றோர் டென்னிசில் கோலோச்சிய காலம் அது. 

அப்போது Hard Court ல் மரப்பலைகைகள் / பிளைவுட் பலகைகள் கொண்டு டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தோம். 

அதன் பின்னர் படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்றாகிய பின்னர் இன்று வரை விளையாட்டுகளை கண்டு ரசிக்கும் வாய்ப்புகள் தான் அமைந்திருக்கிறதே தவிர விளையாடும் வாய்ப்புகள் இல்லை. 

அத்தனைப் பெரிய டென்னிஸ் Court ல் வலை இல்லாமல் ஒரு செட் (6 Games) விளையாடவே தாவு தீர்ந்து போகும். 

அப்படியென்றால் ஒரு உலகளாவிய ஆட்டத்தில் ஐந்து செட் ஆட வேண்டுமெனில் எப்படியான உடற்திறனும், திறமையும், பொறுமையும் வேண்டியிருக்கும்!

ஐந்து செட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக குறைந்த பட்சம் மூன்று மணிநேரமும் அதிகமாக ஐந்து மணி நேரம் வரையிலும் ஆட வேண்டி வரும். 

இப்படியான உடற்திறன் தேவைப்படுகிற ஆட்டத்தில், தான் ஆடிய 23 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தர வரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் தொடர முடிந்திருக்கிறது என்கிற ஒன்று போதும் பெடரரின் திறமையைக் குறிப்பிட்டுச் சொல்ல. 

2019 பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆண்டி முர்ரே உடைந்து அழுததற்கும், இரு தினங்கள் முன்னர் பெடரர் அழுததற்குமான முதற் காரணம், தாங்கள் மிகவும் நேசிக்கும் டென்னிசை தங்கள் காயங்கள் காரணமாக இனி தொடர முடியாதே என்பது தான். 

தனக்கு எதிராக ஆடியவர்களுடன் மிகுந்த நட்புணர்வும், மரியாதையும் கொண்டிருந்தார் பெடரர். தனது கடைசி ஆட்டத்தில் தனது போட்டியாளரும், தான் வியந்து போற்றுகிற நடால் உடன் இணைந்து இரட்டையர் ஆட்டம் ஆடினார். 

அவர் நினைத்திருந்தால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அல்லது ஏதேனும் ATP போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்திருக்கலாம். " நான் தனிமையாக உணர விரும்பவில்லை, அதனாலேயே Laver Cup ல் தன் சக  ஆட்டக்காரர்கள் உடனிருக்கையில் கடைசி ஆட்டத்துடன் ஓய்வு பெற விரும்பினேன் " என்றார் அவர். 

சமகாலத்தின் ஒப்பற்ற டென்னிஸ் நட்சத்திரம் பெடரருக்கு நன்றிகள். #Federer 

January 15, 2022

1983



இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் மீது எனக்கு இருந்த அதீத பற்று இன்று இல்லை என்பது தான் நிதர்சனம். 


அசாருதீன், அஜய் ஜடேஜா காலகட்டங்களில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் Match Fixing க்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்த ஈடுபாடு குறைந்து போனது. எனினும், கால்பந்து, டென்னிஸ் போன்று கிரிக்கெட்டையும் ஒரு விளையாட்டாக  பின்தொடர்வது இன்றளவும் தொடர்கிறது. 


அணித் தேர்வுகளில் நடக்கும் பாரபட்சமும், அதீத காவிச்சாய பூசலும், கிரிக்கெட் குறித்து எவ்வித புரிதலும் இல்லாத அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் வாரியங்களின் பதவிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருப்பதும் கிரிக்கெட் மீதான வெறுப்பை இன்னும் இறுகச் செய்கின்றன. 


எனினும் அண்மையில் பார்த்த '1983' திரைப்படம், பால்ய காலத்து நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் விதம்  அமைந்திருந்தது. அந்த உந்துதலில் தான் இதனைப் பதிவு செய்கிறேன். 


கடின உழைப்பும், தொடர் முயற்சிகளும், தன்னம்பிக்கையும் என்றேனும் வெற்றியை  ஈட்டித்தரும்  என்பது தான் 83 தரும் பாடம். 


அதைத்தான் கபில்தேவ் சாதித்துக் காட்டினார். அன்றைய நாட்களின் அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கு இந்தியத் தீவை அவர்கள் மண்ணிலேயே 1983 மார்ச் ல் வீழ்த்திய கபில்தேவ், தொடர்ந்து ஜூன் மாதத்தில் அவர்களுடன் ஆடிய மூன்று ஆட்டங்களில் (இறுதிப் போட்டி உட்பட) இரண்டில் வெற்றி பெற்று உலகக் கோப்பையையும் நமதாக்கினார். 


ஒருவேளை, இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின்னர். 'சஹிவால்' என தற்போது அறியப்படும் ' மோண்ட்கோமெரி ' மாவட்டத்தில் கபிலின் பெற்றோர் தொடர்ந்திருந்தால், கபிலின் சாதனைகள், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியின் பக்கங்களில் இன்று எழுதப்பட்டிருக்கக் கூடும். 


வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்களை கடந்து வர நாம் எடுக்கும் பெருமுயற்சிகள் கண்டுகொள்ளப்படாமலும், பதிவு செய்யப்படாமலும் போவது தான் எக்காலத்தும் டிசைன் போல!! 


அப்படியாகத் தான் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் சதமும், உலகச் சாதனையும், 17/5 என்கிற நிலைமையில் அணி இருந்த போது தனியொருவராக செய்த அதகளமுமான 175 ஓட்டங்கள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படவில்லை; வீடியோ பதிவும் செய்யப்படவில்லை. (அதற்குக் காரணமாக BBC ன் பணி நிறுத்தம் கூறப்பட்டாலும், இந்தியா பெரிதாக என்ன சாதித்து விடப் போகிறது என கருதிய BBC ன் மேட்டிமைத்தனம் தான் உண்மையாக இருக்க முடியும்) 


1983, ஜூன் 18 அன்று சிம்பாப்வே அணிக்கெதிரான அந்த ஆட்டத்தில்  அச்சாதனை நிகழாமல் இருந்திருந்தால், இந்தியா அரை இறுதிக்குக் கூட தகுதி பெற்றிருக்காது. 


உயர்த்தப்பட்ட சமூகத்தினர் மட்டுமே கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்கிற கட்டுக்கதைகளை உடைத்தெறிந்த கபில்கள், தோனிகளின் சாதனைகள் காலத்துக்கும் பேசு பொருளாக வேண்டும். 


கபிலைக் குறித்து Cricinfo இப்படியாக பதிவு செய்கிறது //The inspirational captain of the World Cup-winning team, Kapil Dev, was neither college-educated nor Brahmin.// 


//Post Independence International players emerged from Najafgarh, Rae Bareilly, Bharuch, Palarivattom, Aligarh, Jalandhar and Ranchi.// 


1983 கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, இந்திய விளையாட்டு உலகிற்கும் புத்தொளி பாய்ச்சியது என்பது தான் வரலாற்று உண்மை. 

August 11, 2021

மெஸ்ஸி எனும் கால்பந்து வைரம்

கால்பந்து உலகில் கடந்த ஒருவாரமாக அதிகம் பேசப்பட்டு வருவது பார்சிலோனா வில் இருந்து பாரிஸ் ற்கு இடம் பெயர்ந்திருக்கும் மெஸ்ஸி குறித்து தான். 


இடம் பெயர்ந்து வாழ்தல் எல்லோருக்கும் எளிமையாக அமைந்து விடுதல் இல்லை. 2000 ஆவது ஆண்டில் பதிமன்றே வயது இருக்கையில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டு சிகிச்சைக்கான வசதிக்காக பார்சிலோனா கால்பந்து அணியின் வாயிலாக அர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினில் தனது தந்தையுடன் குடி பெயர்கிறார் "லியோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி" 


அன்று துவங்கி அடுத்த 20 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தவர் தற்போதைய கோவிட் காலத்து புதிய பொருளாதாரத் தடைகளால் பார்சிலோனாவில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது!


தனது வருமானத்தை பாதியாகக் குறைத்துக் கொள்கிறேன் என அறிவித்த பின்னரும் கூட தொடர்ந்து பார்சிலோனாவிற்காக விளையாடுவது மறுக்கப்பட்ட ஒன்றாகிப் போய்விட்டது. 


அதனை அவர் அறிவிக்கையில் உடைந்து அழுத போது மெஸ்ஸியைத் தொடர்கிற ஒவ்வொருவரும் அவரது வலியை உணர்ந்திருக்கக் கூடும். 



தற்போது மெஸ்ஸி, PSG - பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்கிற பிரான்ஸ் நாட்டின் அணிக்காக இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 


அது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் விட்டது. அதே அணியில் அவரது சக அர்ஜென்டினா வீரர் டி மரியா, அவருடன் பார்சிலோனாவில் முன்னர் ஆடிய நெய்மர், கூடவே பிரான்சின் சிறந்த இளம் வீரர் ம்பாப்பே என பன்முகத் திறமைகளும் அடங்கியிருக்கிறது. 


பார்சிலோனாவில் மெஸ்ஸி விளையாட ஆரம்பித்த காலங்களில் அளிக்கப்பட்ட 30 ஆம் எண் பாரிஸ் அணியிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அணியிலிருக்கும் நெய்மர் எண் 10 உடன் ஆடுவதால் மெஸ்ஸிக்கு எண் 30 வழங்கப்பட்டிருக்கிறது. 


இதுவரை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (UCL) பட்டத்தைப் பெற்றிராத PSG யை அதை நோக்கி பயணிக்க வைப்பதே முதல் நோக்கம் என்றிருக்கிறார் மெஸ்ஸி. 


இதுவரை PSG அணி குறித்து பேசாதவர்களும் இனி பேசக்கூடும்; அந்த அணிக்கு வியாபார ரீதியான நன்மைகளும் நடந்தேறும்; இங்கிலாந்தில் அதிகம் கவனிக்கப்படாத பிரான்சின் Ligue1 இனி கவனம் பெறக் கூடும்; இவை எல்லாவற்றிற்கும் பின்புலம் "லியோனல் ஆன்ட்ரஸ் மெஸ்ஸி" எனும் ஒற்றைப் பெயரும் அவரது திறமையும் தான்! 


மெஸ்ஸி காலத்தால் அழியாத கால்பந்து வைரம் என்றால் அது மிகையல்ல. 




October 02, 2014

தலைகுனிய வைக்கும் அரசியல், கிரிக்கெட், சினிமாத் துறையினர்

பணத்திற்காகவும், புகழிற்காகவும் மானத்தையும்  கூட பொருட்படுத்தாத ஒரு சமுதாயத்துடன் வாழ்ந்துவருகிறோம் என்பதற்கு கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே சாட்சி. 

முன்னாள் முதல்வரின் கைதும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் இதுவா நம் தமிழகம் என்ற கேள்வியை என்னில் ஏற்படுத்தியிருந்தன. பேருந்துகளில் கல் வீசியும், தீயிட்டும்; அப்பாவிகளின் சாலையோர கடைகளை சேதமாக்கியும்; பேருந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தும் தங்களின் விசுவாசத்தை தலைமைக்கும், ஊடகங்களுக்கும் காண்பித்துக் கொண்டிருந்தனர்  (இவை அனைத்தையும் நிகழ்ந்த சம்பவங்கள் என்பதை விட நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் என குறிப்பிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும்) 

இத்தகைய செயல்கள் கோபத்தில் நிகழ்த்தப்பட்டவை என்பது ஒருபுறமிருந்தாலும் பிறர் கவன ஈர்ப்புக்காக குறிப்பாக ஊடக கேமராக்களின் கவனத்தை ஈர்க்க நிகழ்த்தப்பட்ட நாடகங்களாகவே பார்க்க முடிகிறது. இதனை உளவியலில் ASB – Attention Seeking Behaviour என்கிறார்கள்.  

இதைத்தான் பன்னீர் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்பின் போது வேறுவடிவத்தில் (அழுகை மூலம்) அரங்கேற்றினார்கள்.  

பதவிகளை தொடர்ந்து காப்பாற்றவும், பணங்களில் திளைக்கவும், சுயமரியாதையையும், மானத்தையும் இழக்க சற்றும் யோசிக்காத இவர்களிடமிருந்து நீதி, நியாயம், நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.  

இவர்கள் தான் இப்படியென்றால் திரைத்துறையை சார்ந்தவர்கள் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஊழலையும், கொள்ளையடித்தலையும், மக்களை ஏய்த்துப் பிழைத்தலையும் நியாயப்படுத்துகிறார்கள். திரைப்படங்களில் ஊழலுக்கெதிராக குரல் கொடுத்தவர்களை, கேவலம், நாம் தான் நம்பி ஏமார்ந்திருக்கிறோம்.  

தங்களின் உண்மையான முகம் இது தான் என தமிழக மக்களுக்கு தாங்களாகவே காட்டியிருப்பதற்கு திரைத்துறையினரைக் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்!! 

இத்தனை காலமும் பிழைப்பிற்காகத்தான் ஊழலை ஒழிப்பது போன்றும், தீயவை  ஒழிப்பது போன்றும் திரைப்படங்கள் எடுத்து கூவி கூவி விற்றிருக்கிறார்கள். நாங்கள் பிழைப்பதற்காக எத்தகைய ஈனச்செயலும் செய்ய தயாராக இருக்கிறோம் என சொல்லாமல் சொல்லி விட்டார்கள். 

பாமரனோ இன்னும் சில வாரங்களில் இதையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் இவர்கள் எடுக்கப்போகும் திரைப்படங்களை வாய்பிளந்து பார்க்கத்தான் போகிறான்.  

அரசியலும், திரைப்படத்துறையும் இப்படியென்றால், கிரிக்கெட் இவைகளுக்கெள்ளாம் ஒரு படி மேலே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவிற்கு தான் இந்தியா என்பதை கொண்டிருக்கிறது, மற்றபடி இந்தியாவாவது, தேசப்பற்றாவது என்பது தான் இவர்களின் செயல்பாடு. 

பண ஆசை யாரைத்தான் விட்டது, கிரிக்கெட் வாரியங்களையும், அதன் தலைவர்களையும், ஆட்டக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரியாவில் தற்போது நடந்து கொண்டிருக்க, அதில் பங்கேற்க கிரிக்கெட் அணியை அனுப்பாமல், சாம்பியன்ஸ் லீக்கில் ஆட விட்டு ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நாட்டிற்காக விளையாடுவதை தவிர்த்து பணத்துக்காக விளையாடுகிறார்கள் என்பதற்கு இதை விட சான்று என்ன வேண்டும். இதைக் குறித்து இதுவரை எந்த மூத்த கிரிக்கெட் ஆட்டகாரர்களும் கருத்து தெரிவித்ததாக இல்லை. மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடியும் வாயை திறந்ததாக இல்லை. இத்தனைக்கும் அரசியல் தலைவர்கள் தான் பல கிரிக்கெட் வாரியங்களுக்கு தலைவர்களாக இருக்கின்றனர். குஜாராத் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது பா.ஜ.க வின் தலைவர் அமித் ஷா அந்த பொறுப்பை கவனித்துக் கொள்கிறார். 

இப்படியாக இந்தியா ஊழலில் திளைக்க அரசியலும், திரைப்படத்துறையும், கிரிக்கெட் வாரியமும் மிகப்பெரிய காரணிகளாக தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றினோடு கார்ப்பரேட் ஆசாமிகள் சிலரையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நான்கும் நாற்புறமும் இருந்து கொண்டு இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றன. 

இந்தியா வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த காலம் மாறி இன்று கருப்பனுக்கு அதாவது கருப்புப்பணத்திற்கு அடிமையாகிக் கிடக்கிறது. 

இந்தியாவில் பாமரன் மடிகின்றான்; விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான்; மீனவன் பிடிக்கப்படுகின்றான்; தரமான கல்வியைப் பெற ஏழை பாடுபடுகிறான்;  சாமானியன் சரியான மருத்துவ வசதியின்றி மரிக்கின்றான்.  

இவர்களை கவனிப்பாரில்லை, ஊழல் செய்தாருக்கு சொம்பு தூக்கவும், கொள்ளையடித்தவர்களை ஆதரிக்கவுமே இங்கு நேரமில்லாத நிலையில் சாமானியனை ஏறெடுத்துப் பார்ப்பவன் யார்!

November 21, 2013

பதிவுலகம் - விக்கிபீடியா - தினகரன் - நான் - Plagiarism

பலரும் கருதுவது போன்று எழுதுவது அத்தனை எளிதல்ல. எழுதுவதற்கேற்ற சூழ்நிலையும், மனோநிலையும் எளிதாக அமைந்து விடுவதில்லை. எனினும் ஒருவர் எழுதுவதை அதற்குரிய அங்கீகாரமில்லாமல் மற்றொருவர் அப்படியே நகலெடுத்து அவர்களே எழுதியதைப் போன்ற ஒரு ,மாயபிம்பத்தை ஏற்படுத்துவதில் என்ன தான் சிறப்பிருக்கிறதோ தெரியவில்லை. இதனை ஆங்கிலத்தில் Plagiarism என்கிறார்கள்.

சில தினங்கள் முன்பு எதேச்சையாக தினகரன் இணையதளத்தில் சச்சினைக் குறித்த கட்டுரை ஒன்றை "சச்சின் பற்றி சில சுவாரசிய தகவல்" என்ற தலைப்பில் வாசிக்க நேரிட்டது, ஆரம்பத்திலேயே அந்த எழுத்தின் நடை, ஐந்து வருடங்கள் முன்னர் இந்த வலைப்பூவில் நான்  எழுதியது தான் எனப் புரிந்தது. கடைசி முற்றுப்புள்ளி வரை படித்து விட்டு உறுதியும் செய்து கொண்டேன்.

இத்தனைக்கும் அது நான் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ஒரு கட்டுரை. இதே கட்டுரையை தமிழ் விக்கிபீடியாவும் வெளியிட்டிருக்கிறார்கள் எனது மொழிபெயர்ப்புக்கு அளிக்க வேண்டிய தக்க மரியாதையை அளித்து. ஆனால் தினகரனோ எனது வலைப்பூவின் சுட்டியையோ அல்லது தமிழ் விக்கிப்பீடியாவின் சுட்டியையோ குறிப்பிடாமல் அவர்கள் எழுதியது போன்றொரு கானல்நீரை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

எழுத்திற்குரிய ஊக்குவிப்பும், அங்கீகாரமும் இருந்தால் அது எழுதுபவரை இன்னும் மெருகேறச் செய்யும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அது இல்லாமல் போகும் போது எழுதுபவர் மனமுடைந்து போவது சகஜமே.

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எழுதுவதில் சிக்கல்கள் இருந்ததை மறுப்பதிற்கில்லை. எழுத்தாளன் என்று சொல்வதற்கில்லை. இத்தனை காலமும் முடிந்ததை எழுதி வந்திருக்கிறேன், மனதில் பட்ட விஷயங்களை எழுதியிருக்கிறேன், சில மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறேன், பிற இணையதள தகவல்களை பகிர்ந்திருக்கிறேன்..

இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் ஆவல். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எழுத்துக்களுக்கும் எழுத்துகளுக்கும் என்றும் மதிப்பிருக்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகளினூடே உணரமுடிகிறது.

எழுத்துக்கள் மும்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எழுத்துகளை முகர்வோர் மத்தியில். ஒரே எழுத்தை சிலர் சாதகமாகப் பார்க்கின்றனர், சிலர் பாதகமாக பார்க்கின்றனர் சிலர் நடுநிலையாகப் பார்க்கின்றனர்.

இம்மூன்று விதமான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது மனோபாவம் தான் ஒரு எழுத்தாளனுக்கு அழகு. எழுதுகிற அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

January 28, 2012

ஆஸ்திரேலியா: கவிழ்த்த கிரிக்கெட்டும்; கவர்ந்த லியாண்டர் பயசும்


பதிவுலகம் பக்கம் வந்தே பல நாட்கள்/ மாதங்கள் ஆகி விட்டது. குடும்பப் பொறுப்புகள் சிந்தனைகளை சுருக்கியிருப்பதை மறுப்பதிற்கில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த ஆறு மாத கால செயல்பாடும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசும் இந்த பதிவை எழுத தூண்டியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குள் வைக்கப்பட்ட அதே நாள் தான்... மற்றொரு இந்தியர் லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்று இந்தியர்களை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

சச்சின் சதம் அடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.  கடைசியாக அவர் களம் இறங்கிய பதினாறு முறையும் சதமடிக்க தவறியிருக்கிறார். லக்ஷ்மணும் அதே நிலைமையில் தான் இருக்கிறார்.

திராவிட், இங்கிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டங்களில் மூன்று சதங்கள் எடுத்து தான் ஒரு தூண் என்று நிரூபித்தாலும் தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 8 இன்னிங்க்ஸ்களிலும் ஒரே ஒரு அரை சதத்தோடு திருப்திப்பட்டுக் கொண்டார். 

தங்களது ஆட்டம் உச்சத்தில் இருக்கும் போதே யாரும் விடைபெற வேண்டுமென்று கருதுவதில்லை போலும். சச்சின் உலகக் கோப்பையை வென்றதுமே விடை பெற்றிருக்கலாம். திராவிட் இங்கிலாந்தில் மூன்று சதங்கள் எடுத்ததும் விடை பெற்றிருக்கலாம். இவர்கள் இருவரும் செய்யாத சாதனைகள் இல்லை. இனிமேலும் என்ன சாதிக்கவிருக்கிறார்கள் என தெரியவில்லை.

ஆஸ்திரேலியர்கள் ஹெய்டன்,கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பலர் அவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் தான் விடை பெற்றார்கள். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்டன் உலகக்கோப்பையை வென்ற கையோடு பதவியை துறந்தார். இந்த மனநிலைமை ஏன் இவர்களுக்கு இல்லை என தான் தெரியவில்லை.

இரண்டு ஆட்டங்கள் தோற்றதுமே ரோகித் ஷர்மாவிற்கு வாய்ப்பளித்திருக்கலாம்; அல்லது ஆடுபவர்கள் வரிசையையாவது மாற்றியிருந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. எதையுமே பரிசோதனை செய்யாமல் தோல்வி! தோல்வி!! என்றால் என்னவென சொல்வதற்கு?!

கிரிக்கெட் அணி காலையில் கவிந்திருக்க; மாலையில் இந்தியாவின் பெயரை லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தின் மூலம் உயர்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இதோடு பயஸ் டென்னிஸின் நான்கு பெரிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் (ஆஸ்திரேலிய ஓபன், ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) வென்று சாதனை படைத்திருக்கிறார். 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பயஸ் பெற்ற ஒற்றையர் வெண்கலப் பதக்கத்தையும் மறந்து விட முடியாது.

கிரிக்கெட்டிற்கும் ஐ.பி.எல் ற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு ரசிகர்களும், இந்திய அரசாங்கமும் டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமும், ஊக்கமும் அளித்தால் இந்தியா விளையாட்டு அரங்கில் புகழ் பெற்று விளங்கும்.


May 29, 2011

ஐ.பி.எல் கிரிக்கெட் ஒரு பார்வை


"Cricket Overdose" ஆகி விட்டதாகத் தான் கிரிக்கெட் விமர்சகர்கள் கடந்த ஒரு மாத காலமாக கருத்துரைத்து வருகிறார்கள். ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெற்ற நேற்றும் கூட ரவிசாஸ்திரி அவர்கள் அதைத் தான் குறிப்பிட்டிருந்தார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மிக அதிகமாவே விளையாடப்பட்டு வருகின்றன. ஆட்டக்காரர்களுக்கு சரியான ஓய்வும் கிடைப்பதில்லை. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஆடவிருக்கும் ஆட்டங்களில் மூத்த ஆட்டக்காரர்கள் பலரும் காயத்தின் காரணமாக சேர்க்கப்படவில்லை என்பது இந்த cricket overdose ஆல் தான்.

உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு வாரத்திற்குள்ளாக ஐ.பி.எல் போட்டிகள் துவங்கியது; அன்பரும், பதிவருமான லோஷன் அவர்கள் முன்னொரு பதிவில் எழுதியிருந்தது போல இந்திய அணி உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடுவதற்கு கூட நேரமில்லாமல் போனது ஒரு வகையில் துரதிருஷ்டம் தான்.

ஐ.பி.எல் இருபது ஓவர் ஆட்டங்கள் எந்த அளவுக்கு திறமையை வெளிக்கொணரும் என்ற கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் பஞ்சாப்பின் பால் வால்தட்டி, கொல்கத்தாவின் அப்துல்லா, கேரளாவின் பரமேஸ்வரன் ன புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சியே.

இந்த நான்காம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் எனக்கு சுவாரஸ்யமாக தோன்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவிடுகிறேன்.

1. சச்சினின் பெருந்தன்மை

மும்பை இன்டியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சச்சின் பெங்களூருக்கு எதிரான போட்டி ஒன்றின் முடிவில் தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதினையும் ஒரு இலட்ச ரூபாயையும் அம்பத்தி ராயுடுவுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவரது கையில் காசோலையையும் அளித்தது தான் என்னை அதிகம் நெகிழ வைத்த நிகழ்வு. (நியாயப்படி ராயுடுவிற்கு தான் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வெற்றியில் சச்சின் 55 ஓட்டங்களும் ராயுடு 63 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்)

2. கங்குலியின் பிரவேசம்

இந்த ஐ.பி.எல் தொடரின் நகைச்சுவைகளில் ஒன்றாக கங்குலியின் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். கொல்கத்தா அணியினர் வங்காளத்தின் புலி, தாதா கங்குலிக்காக இந்த முறை கோப்பையைக் கைப்பற்றுவோம் என கொக்கரிக்க அவரோ 'போங்கடா நொன்னைகளா' என்கின்ற மாதிரி புனே அணியிடம் சென்று சரணடைந்தார். அவரது காலில் விழுந்து நமஸ்கரித்த ரசிகர் ஒருவரைப் பார்த்தால் அ.தி.மு.க தலைமை பெருமைபட்டுக்கொள்ளலாம். 


3. இஷாந்த் ஷர்மா 3-0-12-5

கேரள அணிக்கு எதிராக ஐதராபாத்தின் இஷாந்த் ஷர்மா வீசிய மூன்று ஓவர்கள் தான் இந்த ஐ.பி.எல் லின் சிறந்த பந்து வீச்சாக நான் கருதுகிறேன். 3-0-12-5 என்பது அவரது பந்து வீச்சின் சுருக்கம். மூன்று ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார் இஷாந்த். கேரளா 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஆட்டத்தையும் இழந்தது.

4. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - Super தான்

இறுதிப் போட்டியின் இடைவேளையின் போது சென்னையின் ஆட்டத்தைக் குறித்து ரவிசாஸ்திரி அவர்கள் கூறும் போது... முரளி விஜய் மற்றும் ஹசியின் ஆட்டம் கிரிக்கெட்டிற்கான அனைத்து அம்சங்களும் உடையதாயிருந்தது என புகழ்ந்திருந்தார். சிக்ஸர்களையும், பவுண்டரிகளை மட்டுமே நம்பியிராமல் அவர்கள் இருவரும் ஓடி சேர்த்த ஓட்டங்கள் தான் ரவியை இவ்வாறு புகழச் செய்தது. அது தான் சென்னையின் பலமும் கூட. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 158 ஓட்டங்கள் குவித்தனர்.

பலரின் வாதத்திற்கு வாய்ப்பூட்டும் போட வைத்தார் Captain Cool தோனி. கெய்லின் விக்கெட்டிற்கு அத்தனை சந்தோஷப்பட்ட மனிதர் வெற்றி பெற்ற போது அத்தனை அமைதி காத்தார். அது தான் ஒரு தலைவனுக்கு அழகும் கூட.

மற்ற அணிகளைப் போலல்லாமல் திரைத்துறையினர் அதிகம் திரண்டு வராத ஒரே அணி சென்னை மட்டும் தான். அவர்களின் ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த கோப்பை. வாழ்த்துக்கள் சென்னை சிங்கங்களே.

நன்றி: கிரிகின்போ 

April 29, 2011

கால்பந்து - கிரிக்கெட் - பயிற்சியாளர்கள் - சாம்பியன்ஸ் லீக் - மெஸி

கடந்த இரு தினங்களாக விளையாட்டு உலகில் பயிற்சியாளர்களைக் குறித்துத் தான் அதிக சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து வருகிறது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்களின் முதல் சுற்று (First Leg) 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்திருக்கின்றன.

முதல் ஆட்டத்தில் 2009 சாம்பியன் இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட், ஜெர்மனியின் ஷால்க் அணியை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

பயிற்சியாளரும், மேலாளருமான சர். அலெக்ஸ் ஃபெர்குசன் தலைமையில் இதுவரை ஜெர்மனி அணி ஒன்றினை மேன்செஸ்டர் யுனைட்டட் தோற்கடித்ததே இல்லை என்ற வரலாறுடன் தான் களமிறங்கியிருந்தது மேன்செஸ்டர் யுனைட்டட். ஷால்க் அணி தங்களுக்கு நெருக்கடியை கொடுக்கக்கூடும் என்று சற்று நிதானத்துடனேயே போட்டியின் முன்னர் சர்.அலெக்ஸ் பேட்டியளித்திருந்தார்.

இதற்கு எதிர்மாறாக பார்சிலோனா-ரியல் மேட்ரிட் அணிகளுக்கிடையேயான இரண்டாவது அரையிறுதியின் முன்னரே ரியல் மேட்ரிடின் பயிற்சியாளர் ‘ஜோஸே மரினியோ’ பார்சிலோனாவைத் தோற்கடிப்போம் என்று வீராப்பாக பேசியிருந்தார். இது போதாதென்று தோல்விக்கு பின்னரும். குளறுபடி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என சப்பை கட்டு கட்டுகிறார்.

பார்சிலோனாவின் லியோனல் மெஸி இரண்டு கோல்களை அடித்து ரியல் மேட்ரிடுக்கு சவால் கொடுத்தார். அதோடு 2008-2009, 2009-2010,வருடங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

இந்த season ல் மட்டும் 52 கோல்களை(50 போட்டிகளில் இருந்து) அடித்து அதிலும் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் மெஸி. அரையிறுதியில் இரு கோல்களை அடித்ததும் மெஸி தான்.

விஷயம் இவ்வாறிருக்க ரியல் மேட்ரிட் பயிற்சியாள்ர் மரினியோவோ, குளறுபடி செய்தும்; நடுவருக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற்று விட்டார்கள் என சிறுபிள்ளைத் தனமாக பேசுகிறார்.

ரியல் மேட்ரிடின் பெப்பே (pepe) விற்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து போட்டியிலிருந்து வெளியேற்றவே அதனை எதிர்க்கும் வகையில் சீறிக்கொண்டிருந்த பயிற்சியாளர் மரினியோவிற்கும் நடுவர் சிவப்பு அட்டைக் காண்பித்து களத்திலிருந்து வெளியேற்றி பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைத்தார். 

இந்திய கிரிக்கெட்டிற்கு இங்கிலாந்தின் முன்னாள் பயிற்சியாளரும், சிம்பாப்வேயைச் சார்ந்தவருமான, 62 வயது மட்டுமே!!! ஆன   டங்கன் ஃப்ளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனை வயதானவரை பயிற்சியாளராக நியமித்திருக்கத் தேவையில்லை என்பதே இந்திய கிரிக்கெட்டிற்கு ஆலோசகராக இருக்கும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரது கருத்தும். 2008 ல் கேரி கிர்ஸ்டனை பயிற்சியாளராக தேர்ந்தெடுத்த போது கவாஸ்கரிடம் ஆலோசனை கேட்டவர்கள் இந்த முறை கேட்கவில்லையாம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸின் பயிற்சியாளர் ஃப்ளெமிங் அல்லது இங்கிலாந்தின் தற்போதைய பயிற்சியாளர் ஆன்டி ஃப்ளவர் போன்ற கிர்ஸ்டனின் வயதுக்கொத்தவர்களை பயிற்சியாளர்களாக நியமித்திருக்கலாம். இல்லையென்றால் கவாஸ்கர் சொல்வது (அமர்நாத்) போல் இந்தியர் ஒருவரை நியமித்திருக்கலாம்.

அரசியல்வியாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் வாரியத்திடம் கிரிக்கெட் குறித்து கற்றுத் தேர்ந்தவர்களுக்கு என்ன மரியாதை இருக்கப் போகிறது. கபில்தேவை புறக்கணித்தவர்கள் இப்போது கவாஸ்கரைப் புறக்கணிக்கிறார்கள் அவ்வளவே. சச்சினையும் புறக்கணிக்கிற நாட்கள் வெகு தொலைவில் இல்லை. 

December 15, 2010

ஆப்பிரிக்காவில் சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவதே இந்தியாவின் உச்சக்கட்ட பரீட்சையாக இருக்கும் என உலகம் முழுவதும் கிரிக்கெட் ஊடகங்களும், விமர்சகர்களும் கிரிக்கெட் என்னும் பலூனை ஊதி பெரிதாக்கி விட்டிருக்கிறார்கள்.

கூட 'டென் கிரிக்கெட்' சானல் தெ.ஆ வீரர்களைக் கொண்டு தென்னாப்பிரிக்கா காத்திருக்கிறது என விளம்பரப் படத்தையும் எடுத்து ஒரு மாதத்திற்கு முன்னரே தயாராக இருக்கிறார்கள்.

இவற்றிற்கு எல்லாம் காரணம் இதுவரை இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றிகள் ஏதும் பெறாதது தான். கடைசியாக 2006-07 ல் சுற்றுப்பயணம் செய்திருந்த போது 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கோட்டை விட்டிருந்தது. 

அந்த தொடரில் ஜோகனஸ்பெர்க்கில் பெற்ற வெற்றி மட்டுமே இந்தியா இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களில் பெற்றுள்ள ஒரே ஒரு வெற்றி.உலகின் முதல் தர அணியாக இருக்கும் இந்திய அணிக்கு நடைபெறவிருக்கும் மூன்று டெஸ்ட் ஆட்டங்களுமே சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பசும்புல் நிறைந்த தென்னாப்பிரிக்கா மைதானங்கள் பவுன்சர்களுக்கு சாதகமாக இருக்கும். பவுன்சர்கள் என்றாலே பதுங்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக டெல்லி துவக்க ஆட்டக்காரர்களான சேவாக்கிற்கும், காம்பீருக்கும் ஆரம்ப சில ஓவர்கள் கடினமாகத் தானிருக்கும். ஆரம்ப இணை முதல் பத்து ஓவர்களைத் தாக்குப் பிடித்து நின்று விட்டால் பின்னர் வருகின்றவர்களுக்கு ஓரளவு சாதகமாகி விடும்.

டெஸ்ட் ஆட்டங்களில் 50 ற்கும் மேல் சராசரி வைத்திருக்கும் சச்சின்,திராவிட்,சேவாக்கின் சராசரி (தென்னாப்பிரிக்காவில்) முறையே 40, 34, 26 மட்டும் தான் என்கிறது cricinfo. லக்ஸ்மன் இதுவரை தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்ததில்லை

ரைனாவிற்கும், காம்பீருக்கும் தென்னாப்பிரிக்காவில் இது தான் முதல் வாய்ப்பு. தோனி இது போன்ற மைதானங்களில் எந்த அளவிற்கு பிரகாசிப்பார் என சொல்ல முடியாது. அவரது cross bat shots அவருக்கு நிச்சயம் துணையளிக்காது.

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சகீர் கான், இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த் இவர்களில் எவரேனும் ஆரம்பத்தில் விக்கெட் எடுக்க தவறும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு பின்னடைவு தான். இல்லையென்றால் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன், ஓஜா இருவரையும் நம்ப வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே சகீர் காயமடைந்திருப்பதும் இந்தியாவிற்கு பின்னடைவே. மட்டை வீச்சில் வலுவாக இருக்கும் இந்தியா நிச்சயம் 7 மட்டைவீச்சாளர்களைக் கொண்டு களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அந்த பட்சத்தில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் மறுக்கப்படும்.

தென்னாப்பிரிக்கா அவர்கள் மண்ணில் இறுதியாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக ஆடிய இரண்டு தொடர்களிலும் வெற்றி பெறாதது அவர்களுக்கு பின்னடைவு தான். எனினும் சொந்த மண்ணில் ஆடுவது அவர்களுக்கு கை கொடுக்கக் கூடும். அணித்தலைவர் ஸ்மித், ஆல்ரவுண்டர் காலிஸ், திராவிட்டைப் போன்றே மூன்றாவது களமிறங்கும் ஆம்லா, பவுச்சர் என தென்னாப்பிரிக்காவும் மட்டைவீச்சில் வலுவாக இருக்கிறது.

இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் பயிற்சாளராக இருப்பது ஒரு வரப்பிரசாதம். தென்னாப்பிரிக்கா மைதானங்களைக் குறித்து நன்கு அவர் அறிந்திருக்கக்கூடும் என்பதும், தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர்களின் மனநிலையை அறிந்தவர் என்பதும் இந்தியாவிற்கு சாதகம்.

எப்படியானாலும் நாளை துவங்கவிருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடருக்கு இணையாக கவனிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  

November 26, 2010

ஆசிய-அரசியல் விளையாட்டுகளும் விடை தெரியாத சில கேள்விகளும்

Asian Games அப்படின்னுட்டு கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து என Sports எல்லாம் வைக்கலாமா? இல்லைன்னனா Asian Games and Sports அப்படின்னு வைச்சிருக்கலாமோ? "All sports are Games but not all Games are sports" அப்படின்னு யாஹூல பதில் சொல்றாங்க. அதனால தான் கேம்ஸ்ன்னு வச்சிட்டாங்களோ!?

நியூசிலாந்து கூட விளையாடுறதால Asian Games க்கு கிரிக்கெட் அணியை அனுப்ப மாட்டோம்னு சொல்லிட்டு இந்தியா கம்முன்னு இருந்திட்டாங்க. ஆனா பாகிஸ்தான் அணி துபாய்ல தென்னாப்பிரிக்கா கூடவும், இலங்கை அணி இலங்கையில மேற்கு இந்தியத் தீவு அணி கூடவும் டெஸ்ட் ஆட்டம் ஆடிக்கிட்டு Asian Games க்கும் (இரண்டாம் தர) அணியை அனுப்பியிருக்காங்க. இதெல்லாம் என்ன கொடுமங்க. 

அரசியல்ல இதெல்லாம் சஜமப்பா என்பது மாதிரி இதையெல்லாம் அனுமதிக்கலாமா இல்ல அனுமதிக்கக்கூடாதா!!


பங்களாதேஷ் ஆசிய கிரிக்கெட் சாம்பியனாம்ல

ஒவ்வொரு தடவையும் யாராவது ஊழல் செய்யும் போது வாங்குற சம்பளத்தயும் வாங்கிப்புட்டு பாராளுமன்றத்தில சும்மா கூப்பாடு போட்டுட்டு வராங்க இந்த அரசியல்வியாதிகளான M.P(ee)க்கள். மக்கள் பிரச்சினைய சரியான ரீதியில் பேசவோ, வாக்குவாதம் செய்யவோ இங்க யாருக்கும் நேரமில்ல போல இருக்கு.  இப்போ ராசாவ குத்தம் சொல்றவங்க எல்லாம் ரொம்ப யோக்கியமான்னு கேக்க தோணுது.

இன்னைக்கு வரைக்கும் ஊழல் செஞ்ச எந்த அரசியல்வியாதியாவது முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை அனுபவிச்சிருக்காங்களா! ராசாவா இருந்தாலும் அது ராணியா இருந்தாலும் முறையா விசாரிச்சு தண்டனை குடுக்கிறதுக்கு இன்னும் ஐம்பது வருசமானாலும் ஆகும் போல. 
5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற African - Bahraini "Mimi Belete Gebregeiorges" உடன் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் ப்ரீஜா மற்றும் வெண்கலம் வென்ற கவிதா

Asian Games ல இன்னொரு வில்லங்கம் என்னன்னா சில நாடுகள்ல இருந்து (குறிப்பாக அரபு தேசங்களில் இருந்து) கலந்து கொண்டவர்கள பாத்தா ஆப்பிரிக்க தேசங்களான கென்யா, எத்தியோப்பியா மற்றும் நைஜீரியாவைச் சார்ந்தவர்கள் மாதிரி தெரியுது. பொழக்க வந்தவங்களுக்கு குடியுரிமையைக் கொடுத்து நல்லா லவுட்டுறாங்க மெடலுகள. நல்லா இருக்குதடா உங்க பொழப்பு.  People Daily என்ற இந்த இணையதளத்தில் இன்னும் விவரமாக இத பத்தி படிக்கலாம்.

லவுட்ட பாக்கிறான் என்பது Loot என்ற ஆங்கில வாக்கியத்தின் வழி வந்த ஆங்கிலத் தமிழா? இல்ல அதுவே தமிழ் தானா!

November 24, 2010

ஆசிய விளையாட்டும் இந்திய கிரிக்கெட்டும்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே இந்தியர்கள் பிரகாசிக்கிறார்கள். குறிப்பாக டென்னிஸ் ஆட்டங்களைப் பார்க்கையில் இந்தியாவின் வருங்கால டென்னிஸ், திறமையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடம் இருப்பதை காணமுடிகிறது.

25 வயதே ஆன சோம்தேவ் தேவ வர்மனும், 22 வயதே ஆன சனம் சிங்கும் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆடிய ஆட்டம் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணையின் ஆட்டத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல. விர்ஜினியா பல்கலைக்கழகத்திற்காக இருவரும் இணைந்து ஆடியதும் அவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆகிப் போனது.

இரட்டையர் போட்டியில் சனம் சிங்குடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்ற சோம்தேவ் ஒற்றையர் ஆட்டத்திலும் தங்கம் வென்றிருக்கிறார். கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அஸ்ஸாமில் பிறந்து சென்னையிலும் அமெரிக்காவிலும் வளர்ந்தவர் சோம்தேவ்.


இது வரை மொத்தம் 39 பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. பில்லியர்ட்ஸில் தங்கம் வென்ற பங்கஜ் அத்வானி, 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற கேரளத்தைச் சார்ந்த ப்ரீஜா, துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சோதி ரஞ்சன், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் டென்னிஸில் வெள்ளியும் வெண்கலமும் வென்ற சானியா மிர்சா ஆகியோர் பதக்கம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கிரிக்கெட்

இறுதியாக நியூசிலாந்தை தோற்கடித்து தொடரை வென்றிருக்கிறது இந்தியா. தர வரிசையில் முதலாவது இருக்கும் இந்திய அணியின் பந்து வீச்சு இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களையும் கூட வென்றிருக்கலாம்
அடுத்த சுற்றுப்பயணமாக டிசம்பரில் தென்னாபிரிக்கா செல்லவிருக்கும் இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள் பலருக்கு நியூசிலாந்திற்கு எதிரான ஒருதினப் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு அத்தனை முக்கியத்துவம் இந்தியா தருகிறார்கள் என்றால் தென்னாப்பிரிக்கா "டென் கிரிக்கெட்" சானலுடன் இணைந்து We are waiting என்று பிரத்தியேகமாக குறும்படம் ஒன்றையும் படமாக்கியிருக்கிறார்கள். (யூடியூபின் காணொளியை  கீழே இணைத்துள்ளேன்)

கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்ற அளவிற்கு இருக்கிறது இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா அவர்களது சொந்த மண்ணில் விளையாடவிருக்கும் டெஸ்ட் ஆட்டங்களுக்கான முன்னோட்டம்.



நன்றி: விக்கி

October 22, 2010

உலகம் சிரிக்கும் இந்திய விளையாட்டு


அரசியலும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொல்வார்கள் இன்று விளையாட்டும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொன்னாலும் தகும். 2020 ல் இந்தியா பணக்கார/வல்லரசு நாடாகிறதோ இல்லையோ 20-20 கிரிக்கெட் போட்டியால் பலர் பல கோடியை ஏய்த்து பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்.

மற்ற விளையாட்டுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் தான் அதிக ஊழல் நடைபெறுவதாக தெரிகிறது. அதற்கு காரணம் கிரிக்கெட்டில் புழங்கும் அதிக பணமும், விளம்பர நிறுவனங்கள் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதும் தான் என படுகிறது. 

விளையாட்டில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் ஊழலின் கை ஓங்கி இருப்பதற்கு "பேராசை" என்ற பெரிய வில்லனும் ஒருவகையில் காரணமாவதையும் மறுக்க முடியாது. அசாரூதீன், ஜடேஜா, ஹான்ஸி குரோனியே என கிரிக்கெட்டில் முதிர்ந்த வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு தோல்விக்கு காரணமானார்கள் என்றால் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஆசிப், அமீர், பட் இளம் வீரர்களும் துணிந்து விட்டார்கள்.

ஐ.பி.எல் போட்டிகளை ஒருங்கிணைத்ததில் லலித் மோடி ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் என்றால் அண்மையில் டெல்லியில் நடந்து முடிந்த காமென்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்ததில் 'சுரேஷ் கல்மாடி' ஊழல் செய்ததாக தெரிய வந்திருக்கிறது. இதன் முன்னர் தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் ஊழல் செய்ததாக கே.பி.எஸ் கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். 

இப்படியாக இன்று விளையாட்டும் பணமும் பிரிக்கமுடியாததாகி விட்டது. விளையாட்டு பிரபலங்கள் இத்தனை குற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் செய்த ஊழலுக்கு தக்கதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டனவா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பதில். குறைந்த பட்சம், பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர் அவ்வளவு தான்.

"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்ற கவுண்டமணியின் நகைச்சுவை போல் விளையாட்டில இதெல்லாம் சகஜமப்பா என்ற நிலைமை வந்து விட்டது என்பதாகவே படுகிறது.

'SPOTS' இல்லாத "SPORTS" எங்க இருக்கு என பலரும் இப்போதே கேள்வியும் எழுப்பத்தொடங்கி விட்டார்கள் 

September 14, 2010

யு.எஸ் ஓபனும் நடாலும்

ஞாயிற்றுக்கிழமையே முடிந்திருக்க வேண்டிய யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் மழையின் காரணமாக திங்களன்று முடிவுக்கு வரவிருக்கின்றன.

ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒற்றையருக்கான போட்டிகளில் இறுதிப்போட்டி வரை எந்த ஒரு செட்டையும் இழக்காமல் நேர் செட்களில் வெற்றி பெற்று டென்னிஸ் தரவரிசையில் தான் முதலிடத்தில் இருப்பதற்கான நியாயம் கற்பித்து விட்டார். 

மறுபுறம் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக் 2004-2008 வரை ஐந்து முறை தொடர்ந்து யு.எஸ் ஓபன் பட்டம் வென்றவரான உலகின் முன்னாள் முதல் நிலை வீரர் ரோஜர் ஃபெடரரை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு புதிய உத்வேகத்துடன் வந்திருக்கிறார். 

இவர்கள் இருவருமே யு.எஸ் ஓபன் பட்டத்தை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடால் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம்களில் இதுவரை 8 பட்டங்களைப் பெற்றிருந்தாலும் யு.எஸ் ஓபன் பட்டம் மற்றும் அவர் கரங்களுக்கு இன்னும் எட்டவில்லை.  

இதனை எழுதிக்கொண்டிருக்கையில் நடால் முதல் செட்டில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆடி வருகிறார். தனது முதல் யு.எஸ் ஓபன் பட்டத்தைப் பெறுவார் என்று நம்பலாம். 

மகளிர் ஆட்டங்களைப் பொறுத்த வரை அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளில் முதல் நிலை வீராங்கனை செரீனா இந்த முறை களமிறங்கவில்லை. வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதி வரை தாக்குப்பிடித்தார். அரையிறுதியில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸிடம் தோற்றுப் போனார்.கிம் இறுதிப் போட்டியில் எளிதாக வெற்றியும் பெற்று விட்டார். 

கிம் கிளைஸ்டர் பெறும் மூன்றாவது யு.எஸ் ஓபன் பட்டம் இது. கடந்த வருடத்திலும் கிம் தான் சாம்பியன். 2007 ல் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் அந்த இரண்டு வருட இடைவெளியில் ஒரு குழந்தையையும் பெற்று விட்டு மீண்டும் 2009 ல் களமிறங்கினார் அந்த வருடமே யு.எஸ் ஓபனில் வெற்றியும் பெற்ற பெருமைக்குரியவர். 

இந்திய வீரர்களைப் பொறுத்த வரையில், மகளிர் ஒற்றையர் போட்டிகளில் இரண்டாம் சுற்றோடு சானியா மிர்சா வெளியேறினார். ரோஹன் போபன்னா பாகிஸ்தான் வீரர் குரேஷியுடன் இணை சேர்ந்து இரட்டையர் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்று உலகின் முதல் நிலை இணையான பிரையன் சகோதரர்களிடம் தோற்றுப் போயினர். அதுவே மிகப்பெரிய சாதனை தான். 

எனினும் இந்தியா-பாகிஸ்தான் சமாதானத்திற்கு இவர்கள் இணைந்து குரல் கொடுத்திருப்பது பாராட்டவும் வரவேற்கவும் பட வேண்டிய விஷயம்.   

லியாண்டர் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும், கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் காலிறுதியிலும் தோற்றுப் போனார். மகேஷ் பூபதி இரட்டையர் ஆட்டத்தில் இரண்டாவது சுற்றிலும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறினார். 

கோப்பையைப் போன்று காட்சியளிக்கும் யு.எஸ் ஓபன் இறுதிப் போட்டிகள் நடக்கும் ஆர்தர் ஆஷ் மைதானம் தான் உலகிலேயே மிகப்பெரிய டென்னிஸ் மைதானம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

(மழையினால் ஆட்டம் இன்றும் தடைபடுமா என்பது தெரியவில்லை. இயற்கையை எவர் தான் கட்டுப்படுத்த முடியும்)

நன்றி: விக்கி & யு.எஸ் ஓபன் 
Related Posts with Thumbnails