சென்னை கிரீன்வேஸ் சாலை,இயேசு அழைக்கிறார் நிறுவனர் திரு.தினகரன் அவர்களின் பெயரில் மாற்றப்படும் என கடந்த மாதத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மீதான நல்லெண்ணம் காரணமாக என கருதவியலவில்லை.
இரு மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியாகவே தெரிகிறது.
கிரீன்வேஸ் சாலையின் பெயர் மாற்றப்படுதலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகையில், சாலைக்கு பெயர்மாற்றுதல் மேலும் பிரச்சினைகளையும்,பிற சமயத்தவரிடையே வெறுப்பையுமே ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சில வருடங்களுக்கு முன்னதாக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களினால் அரசுப் பேருந்துகள் பிரிவினைப்படுத்தப் பட்ட போது ஏற்பட்ட மனக்கசப்பு தற்போதும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதன் பின்னர் "தமிழ்நாடு அரசுப் பேருந்து" என மட்டுமே பேருந்துகள் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு தேர்தலை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானமாகவே தெரிகிறது.
சமயங்களினால் பிற மாநிலங்கள் கண்டு வரும் கலவரங்களை தமிழகமும் காண வேண்டும் என யாரும் எழுதி வைத்திருக்கிறார்களோ என்னமோ!
ஏற்கெனவே ஈழப்பிரச்சினைகளினாலும்,வழக்கறிஞர்கள்-போலீசார் மோதல்களினாலும் கலவரமாகி இருக்கும் தமிழகத்தில் மேலும் பிரச்சினைகள் அவசியம் தானா? அதுவும் தேர்தல் நெருங்கி வரும் காலகட்டத்தில்!
