Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

May 19, 2016

தேர்தல் முடிவுகளும், புரிதலும்

இந்த முறை மக்களை மொத்தமாக குறை சொல்லி விடவும் முடியாது. சற்று தெளிவாகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். வாக்கு சதவீதம் குறைந்தாலும் சென்ற ஆட்சிக்கெதிரான அதிருப்தியை சென்னையிலும், குமரியிலும் காண்பித்திருக்கிறார்கள். வளர்மதி, கோகுல இந்திரா, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் போன்றோரை தோற்கடித்திருக்கின்றனர். சரத்குமார் எனும் கருவேப்பிலையை தாளித்திருக்கிறார்கள். தெளிவற்ற விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக வினர் தோற்கடிப்பட்டு அவர்களின் வாக்கு சதவீதம் சரிக்கப்பட்டு இருக்கிறது. 

இனவாத அரசியல் செய்த சீமான் விரட்டப்பட்டிருக்கிறார். சாதி அரசியல் செய்கின்ற அன்புமணி அவரது சொந்த மண்ணிலேயே வீழ்ந்திருக்கிறார். 

திருமாவளவனை வெற்றி பெற வைக்கவே போராடியிருக்கிறார்கள், ஆனால் அவர்,சூழ்ச்சியால் வெறும் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 
கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடாநட்பில் சேர்ந்து வாங்கிக் கொண்டார்கள். 

கோவை. தெற்கில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வானதி தோற்றது போன்ற ஒரு சில தொகுதி வேட்பாளர்களே ஏமாற்றம் தந்தாலும் திமுக, அதிமுக வின் பிற வேட்பாளர்களை மக்கள் ஆதரித்திருப்பதில் அதிகம் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. 

காரணம் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வேட்பாளர்களும் அந்த அளவிலேயே இருந்தனர். 

சிலர் பணத்திற்கு வாக்கு செலுத்தியிருந்தாலும், பணம் மட்டுமே இந்த முடிவுகளை தீர்மானித்திருக்கின்ற்ன என்று எளிதில் சொல்லி விடவும் முடியாது. 

தேர்தல் நேரங்களில் மக்கள் பணத்தை இயல்பாகவே எதிர்பார்க்கிறார்கள். வாங்கக்கூடாது என்று பலமுனை தாக்குதல் தொடுத்தாலும்... அவர்களாக தருகிறார்கள் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என தேர்தல் அலுவலர்களிடமே மல்லுக்கு நிற்கிறார்கள். 'அரசு அலுவலகத்திற்கு சென்றால் எங்களிடம் பிடுங்குகிறார்கள் தானே' 'இப்போது நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம்' என்று தெளிவாக இருக்கிறார்கள். 

பணம் எவரிடமிருந்து கிடைக்கப்பெற்றாலும் அவர்கள் எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றிருக்கிறார்களோ அதையே செய்வார்கள். 

ஆக இங்கு முன்மாதிரியான தலைவர்கள் இல்லாதவரை மக்களில் ஒரு சாரார் தொடர்ந்து வாக்குகளை வியாபாரப் பொருளாக பாவிப்பதையே தொடர்ந்து செய்வர். 

எப்படியாயினும் தமிழகத்தில் இதுவரையில்லாத அளவிற்கு ஒரு வலுவான எதிர்கட்சி பலம் சட்டமன்றத்திற்குள் நுழைவதே இந்த தேர்தலின் வெற்றி தான். ஒரே குறை கம்யூனிஸ்ட்கள் அந்த பட்டியலில் இல்லையென்பதே!


February 14, 2015

தில்லியின் காதல் நாயகன் - அரவிந்த் கெஜ்ரிவால்

பிப்ரவரி 14 - உலகம் இன்று, வேலன்டைன் தினம் - காதல் என உணர்வுப்பூர்வமாக அணுகிக்கொண்டிருக்க. தில்லியில் பாமரன் மீதான தன் காதலை ஆம் ஆத்மி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

46 வயதான அரவிந்த் கெஜ்ரிவால் எட்டாவது முதல்வராக தில்லியில் அமர்ந்திருக்கிறார் இன்று; அமர்ந்திருக்கிறார் என்று சொல்வதை விட பாமரனுக்காக தன் முதுகில் பாரத்தை ஏற்றியிருக்கிறார் என்று சொல்லலாம். 

வெகு விரைவாக ஒரு உயர்ந்த பதவியில் அவர் அமர்ந்து விட்டதாக தோன்றினாலும், இந்த உயரத்தை அடைய 14 வருடம் ஆகியிருக்கிறது என்றால் அது சற்று ஆச்சர்யமே! அவரது வெற்றிக்குப் பின் 14 ஆண்டு கால கனவும், கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், விடாத முயற்சிகளும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத மன தைரியமும் இருந்திருக்கின்றன எனலாம்.

கூடவே, அனைத்து தருணங்களிலும் உறுதுணையாக இருந்த துணைவியும், மக்கள் நலனுக்காக களத்தில் நின்று தொடர்ந்து போராடி வரும் சக நண்பர்களும் அவரது பெரிய பலம். 

பதவியேற்பு விழாவின் போது அவர் பல விஷயங்களைக் குறித்து பேசியிருந்தாலும், என்னை அதிகம் கவர்ந்தது 'lal battis' குறித்த கருத்தே! அமைச்சர்களின் வாகனங்களில் உபயோகப்படுத்தும் சிவப்பு விளக்கை அதிகம் பயன்படுத்த மாட்டோம் என்பதே அது.

அதோடு ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில் தற்பெருமை கொள்வதோ, அமைச்சர் செல்கிறார் என்பதற்காக போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பதோ, பாமரனுக்கு இடையூறாக இருப்பதோ கூடாது எனவும் தெளிவாக பேசியிருக்கிறார். இது போன்ற அவர்களது எளிமையும், சாதாரண மனிதர்களையும் மதித்து நடக்கும் போக்கும் தான் அவர்களுக்கு வெற்றி பெற்று தந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

முன்னாள் கேரள முதல்வரான அச்சுதானந்தன் இது போன்றதொரு எளிமையான வாழ்க்கை முறையைத்தான் கடைபிடித்து வந்தார்; சாமானியர்களோடு கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார், காய்கறி சந்தைக்கு கூட அவரே சென்று வருவார். ஆனால் அங்கிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரால் ஊழலை சமாளிக்க முடியவில்லை. 

அதே போன்றதொரு எளிமையை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பார்க்க முடிகிறது. ஊழலுக்கு எதிரான அவரது முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பதே பாமரனின் எதிர்பார்ப்பு. 

தில்லியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பட்டதாரிகளும், இளைஞர்களுமே. இந்த படையினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சாமானியர்களுக்காக தற்போது நிர்ப்பந்தத்தால் அரசியலில் பிரவேசித்திருக்கும் கெஜ்ரிவால் அவர்கள் கல்கத்தாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருந்த சமயம் அங்கிருக்கும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்திலும், ராமகிருஷ்ணா மிஷனிலும் சிறிது காலம் ஆர்வலராக இருந்திருக்கிறார். 

பாமரனின் கஷ்டம் புரிந்த ஒருவரால் தான் இத்தனை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட முடியும் என்பதற்கு இவைகளே சான்று.

பெரிய அரசு அலுவலகங்களிலிருந்து, சிறு அரசு பணிகள் நடக்கும் இடங்கள் வரை ஊழல் வியாபித்திருந்ததை சான்றிதழ்களில் அரசின் அங்கீகார முத்திரை வேண்டி தில்லி சென்றிருந்த போது கண்கூடாக காண நேர்ந்தது. இதற்கு முழுமுதற் காரணமே இடைத்தரகர்கள் தான். 

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதுமே இது போன்ற இடைத்தரகர்கள் பலர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வருகின்றன; இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் தில்லி விரைவில் ஊழலற்ற மாநிலமாகும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

ஆம் ஆத்மியின் பாமரனனுடனான இந்த புதிய காதல் அத்தியாயம் சுபமாக முடிவுரை எழுதப்பட்டால் இன்னும் பல மாநில ஆட்சிமுறைகளுக்கு இது ஒரு முன்னுரையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பிரபல கருத்துச்சித்திர கலைஞர் ஆர். கே. லக்ஷ்மன் அவர்கள் இன்று இருந்திருந்து கெஜ்ரிவாலின் வெற்றியை பார்த்திருப்பாரானால் பெருமகிழ்ச்சியடைந்திருப்பார்.


October 02, 2014

தலைகுனிய வைக்கும் அரசியல், கிரிக்கெட், சினிமாத் துறையினர்

பணத்திற்காகவும், புகழிற்காகவும் மானத்தையும்  கூட பொருட்படுத்தாத ஒரு சமுதாயத்துடன் வாழ்ந்துவருகிறோம் என்பதற்கு கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே சாட்சி. 

முன்னாள் முதல்வரின் கைதும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் இதுவா நம் தமிழகம் என்ற கேள்வியை என்னில் ஏற்படுத்தியிருந்தன. பேருந்துகளில் கல் வீசியும், தீயிட்டும்; அப்பாவிகளின் சாலையோர கடைகளை சேதமாக்கியும்; பேருந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தும் தங்களின் விசுவாசத்தை தலைமைக்கும், ஊடகங்களுக்கும் காண்பித்துக் கொண்டிருந்தனர்  (இவை அனைத்தையும் நிகழ்ந்த சம்பவங்கள் என்பதை விட நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் என குறிப்பிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும்) 

இத்தகைய செயல்கள் கோபத்தில் நிகழ்த்தப்பட்டவை என்பது ஒருபுறமிருந்தாலும் பிறர் கவன ஈர்ப்புக்காக குறிப்பாக ஊடக கேமராக்களின் கவனத்தை ஈர்க்க நிகழ்த்தப்பட்ட நாடகங்களாகவே பார்க்க முடிகிறது. இதனை உளவியலில் ASB – Attention Seeking Behaviour என்கிறார்கள்.  

இதைத்தான் பன்னீர் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்பின் போது வேறுவடிவத்தில் (அழுகை மூலம்) அரங்கேற்றினார்கள்.  

பதவிகளை தொடர்ந்து காப்பாற்றவும், பணங்களில் திளைக்கவும், சுயமரியாதையையும், மானத்தையும் இழக்க சற்றும் யோசிக்காத இவர்களிடமிருந்து நீதி, நியாயம், நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.  

இவர்கள் தான் இப்படியென்றால் திரைத்துறையை சார்ந்தவர்கள் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஊழலையும், கொள்ளையடித்தலையும், மக்களை ஏய்த்துப் பிழைத்தலையும் நியாயப்படுத்துகிறார்கள். திரைப்படங்களில் ஊழலுக்கெதிராக குரல் கொடுத்தவர்களை, கேவலம், நாம் தான் நம்பி ஏமார்ந்திருக்கிறோம்.  

தங்களின் உண்மையான முகம் இது தான் என தமிழக மக்களுக்கு தாங்களாகவே காட்டியிருப்பதற்கு திரைத்துறையினரைக் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்!! 

இத்தனை காலமும் பிழைப்பிற்காகத்தான் ஊழலை ஒழிப்பது போன்றும், தீயவை  ஒழிப்பது போன்றும் திரைப்படங்கள் எடுத்து கூவி கூவி விற்றிருக்கிறார்கள். நாங்கள் பிழைப்பதற்காக எத்தகைய ஈனச்செயலும் செய்ய தயாராக இருக்கிறோம் என சொல்லாமல் சொல்லி விட்டார்கள். 

பாமரனோ இன்னும் சில வாரங்களில் இதையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் இவர்கள் எடுக்கப்போகும் திரைப்படங்களை வாய்பிளந்து பார்க்கத்தான் போகிறான்.  

அரசியலும், திரைப்படத்துறையும் இப்படியென்றால், கிரிக்கெட் இவைகளுக்கெள்ளாம் ஒரு படி மேலே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவிற்கு தான் இந்தியா என்பதை கொண்டிருக்கிறது, மற்றபடி இந்தியாவாவது, தேசப்பற்றாவது என்பது தான் இவர்களின் செயல்பாடு. 

பண ஆசை யாரைத்தான் விட்டது, கிரிக்கெட் வாரியங்களையும், அதன் தலைவர்களையும், ஆட்டக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரியாவில் தற்போது நடந்து கொண்டிருக்க, அதில் பங்கேற்க கிரிக்கெட் அணியை அனுப்பாமல், சாம்பியன்ஸ் லீக்கில் ஆட விட்டு ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நாட்டிற்காக விளையாடுவதை தவிர்த்து பணத்துக்காக விளையாடுகிறார்கள் என்பதற்கு இதை விட சான்று என்ன வேண்டும். இதைக் குறித்து இதுவரை எந்த மூத்த கிரிக்கெட் ஆட்டகாரர்களும் கருத்து தெரிவித்ததாக இல்லை. மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடியும் வாயை திறந்ததாக இல்லை. இத்தனைக்கும் அரசியல் தலைவர்கள் தான் பல கிரிக்கெட் வாரியங்களுக்கு தலைவர்களாக இருக்கின்றனர். குஜாராத் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது பா.ஜ.க வின் தலைவர் அமித் ஷா அந்த பொறுப்பை கவனித்துக் கொள்கிறார். 

இப்படியாக இந்தியா ஊழலில் திளைக்க அரசியலும், திரைப்படத்துறையும், கிரிக்கெட் வாரியமும் மிகப்பெரிய காரணிகளாக தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றினோடு கார்ப்பரேட் ஆசாமிகள் சிலரையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நான்கும் நாற்புறமும் இருந்து கொண்டு இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றன. 

இந்தியா வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த காலம் மாறி இன்று கருப்பனுக்கு அதாவது கருப்புப்பணத்திற்கு அடிமையாகிக் கிடக்கிறது. 

இந்தியாவில் பாமரன் மடிகின்றான்; விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான்; மீனவன் பிடிக்கப்படுகின்றான்; தரமான கல்வியைப் பெற ஏழை பாடுபடுகிறான்;  சாமானியன் சரியான மருத்துவ வசதியின்றி மரிக்கின்றான்.  

இவர்களை கவனிப்பாரில்லை, ஊழல் செய்தாருக்கு சொம்பு தூக்கவும், கொள்ளையடித்தவர்களை ஆதரிக்கவுமே இங்கு நேரமில்லாத நிலையில் சாமானியனை ஏறெடுத்துப் பார்ப்பவன் யார்!

December 05, 2011

திரைப்படம் அரசியல் ஆக்கப்படுவது அழகல்லவே

குத்தாட்டங்களும், அரைகுறை ஆடைகளும் பெரும்பாலான திரைப்படங்களில் முன்னிறுத்தப்பட்டாலும் சில திரைப்படங்கள் கடந்த காலங்களிலும் சரி இன்றைய காலகட்டத்திலும் சரி சமூக நலன் கருதிய கருத்துக்களை பறைசாற்றி வந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

எனினும் திரைப்படங்கள் சமூக நலனை பாதிக்கும் வண்ணம் எடுக்கப்படுவதாக ஒரு சாரார் குறை கூறாமலும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் DAM 999.

திரைப்பட இயக்குனர் சோகன் ராய், தமிழகத்தை சார்ந்தவர் அல்ல என்பதும், தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுக்க மற்றொரு காரணமாக அமைந்து விட்டது.

DAM 999 திரைப்படம் வெளியானால், தமிழக கேரள மக்களிடையே நிலவும் இணக்கமான நிலைமை மாறி கோபமும், மனக்கசப்பும், கைகலப்பும் ஏற்பட்டு விடும் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்.


ஆனால் இன்றைக்கு, தமிழக - கேரள எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது என்றால் அதற்கு முழு காரணம் இரு மாநில அரசியல்வாதிகளும்,அவர்களின் தவறான பிரச்சாரமும் தானேயன்றி வேறொன்றுமில்லை.


சிகரெட் பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற காட்சிகள் அமைக்கடுவதால் ஏற்படாத பாதிப்பு ஒரு அணை உடைவது போன்ற காட்சி அமைப்பதால் ஏற்பட்டு விடப் போகிறதா என்ன!?

மற்றொரு கேள்வியும் இங்கு முன் வைக்க வேண்டியது கட்டாயமாகிறது. DAM 999 திரைப்படம் வெளியாவதற்கு இத்தனை எதிர்ப்பு காட்டுபவர்கள். முல்லைபெரியார் அணையைக் குறித்த Dams - The Lethal Water Bombs என்ற குறும்படம் வெளியான போது எங்கிருந்தார்களோ?

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு விஷயத்தில் இத்தனை அறிக்கைகள் விடுவதும், போராட்டம் நடத்துவதும் கேரள அரசியல்வாதிகளுக்கு அழகோ என்னவோ?

திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்தல் சிறந்தது, அரசியலையும் திரைப்படத்தையும் ஒப்பிடுவது அழகல்லவே.

April 12, 2011

பயமுறுத்துகின்றன தமிழக தேர்தல் நிகழ்வுகள்

தேர்தலுக்கு சில மணி நேரங்கள் கூட இல்லாத இந்த நேரத்தில் எத்தனை எத்தனை நூறுகள், ஆயிரங்கள், லட்சங்கள், கோடிகள் கை மாறிக்கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. எத்தனை பெட்டிகள் கை மாறினால் என்ன; வெற்றியும், நாற்காலியும் மட்டுமே நமது நோக்கம் என வரிந்து கட்டிக்கொண்டு திரிகின்றன ஒவ்வொரு கட்சிகளும்.

கட்சிகள் நடத்தும் காட்சிகளே அதற்கு சாட்சி. கட்சிகள் தனியாக இல்லாமல் குழு சேர்ந்து கொண்டு கூட்டணி என்ற பெயரில் கும்பலாக கொள்ளை அடிக்கிறார்கள் தற்பொழுது. தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளும் கொள்ளையடிப்பதில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்லர். தமிழக மக்களும் இலவசங்களைப் பெற்றுக் கொண்டு இவர்கள் அடிக்கிற கொள்ளைகளை மறந்து விடுகிறார்கள் போலும்.

வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ போன்ற அமைப்புகள் எல்லாம் ஏன் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எவருக்குமே புரியாத ஒன்று. எத்தகைய தவறு செய்தாலும் சட்டமும், காவல்துறையும் அரசியல்வாதிகள் என்றறியப்படும் அரசியல் வியாதிகள் என்றால் வேடிக்கை மட்டுமே பார்க்கும் போல.

திராவிட கட்சிகளின் தலைவர்களான அம்மா ஆகட்டும் அய்யா ஆகட்டும், இருவர் மேலும் நிலுவையில் இருக்கிற வழக்குகள் தான் எத்தனை. அவற்றில் ஒன்றிலாவது இதுவரை தண்டனை அனுபவித்திருப்பார்களா?! இலவசங்களை வாங்கிக்கொண்டு இன்பமாக இருப்பதை விட மக்களுக்கு இவை பற்றி பேசுவதற்கா நேரம்.

சன், கலைஞர் இவ்விரு தொலைக்காட்சிகளும் ஜெயா தொலைக்காட்சிக்கு எதிராகவும் அம்மா கட்சிக்கு எதிராகவும் கட்டம் கட்டினால் ஜெயா தொலைக்காட்சி அய்யா கட்சிக்கு எதிராக கட்டம் கட்டுகிறார்கள். இவற்றையன்றி வேறு என்ன செய்திருக்கின்றன இந்த இரு ஊடகங்களும். மிஞ்சிப்போனால் சினிமா செய்திகளையும், ஆட்டம் பாட்டங்களையும், காண்பிப்பார்கள். வெளிநாடு வாழ் தமிழர் குறித்தோ, பிற மாநில முக்கிய நிகழ்வுகளையோ, பிற நாட்டு நிகழ்வுகளையோ குறித்து முனங்கவும் மாட்டார்கள்.

தமிழகம் இன்னமும் திரைத்துறையில் இருப்பவர்களை நம்பியே காலம் கடத்துவது தான் மேலும் வேதனை தரும் விஷயம். இவற்றிற்கிடையில் பிரச்சாரம் என்ற பெயரில் நடத்தப்படும் தனி மனித தாக்குதல்கள் மறுபுறம். தனிப்பட்ட முறையில் விரோதங்களை வளர்த்து கொண்ட மதுரை மைந்தர்களான வைகைப்புயலும், கேப்டனும் இன்று ஊர் சிரிக்கும் படி ஒருவர் மாறி ஒருவர் திட்டிக்கொள்வதும், அவதூறு பேசுவதுமாக அவர்களை அவர்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள்.

கொள்கை என்றால் என்ன? என கேள்வி எழுப்பும் விதம் தான் இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. எவருடனுமே கூட்டணி சேர மாட்டோம் என கூறி வந்த கேப்டன் இப்போது அம்மாவுடன் தொற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் குறை மட்டுமே சொல்லும் ராமதாஸ் அய்யா தேர்தல் சமயத்தில் மட்டும் எவருடனாவது ஒட்டிக்கொள்வார். நடிகர்களுக்கெல்லாம் என்னத்திற்கு கட்சி என்று தான் புரியவில்லை. அண்டை மாநிலங்களில் கூட இந்த நிலைமை இல்லை. அரசியலில் நடிகர்களுக்கு என்ன வேலை என்பது தான் இன்னும் புரியவில்லை.

எதுவாயினும் தமிழகம் மீண்டும் இலவசங்களில் மயங்கிக் கிடக்கப் போவதும்; கொள்ளையடிக்கப்படப் போவதும் உறுதியாகி விட்டது.

November 26, 2010

ஆசிய-அரசியல் விளையாட்டுகளும் விடை தெரியாத சில கேள்விகளும்

Asian Games அப்படின்னுட்டு கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து என Sports எல்லாம் வைக்கலாமா? இல்லைன்னனா Asian Games and Sports அப்படின்னு வைச்சிருக்கலாமோ? "All sports are Games but not all Games are sports" அப்படின்னு யாஹூல பதில் சொல்றாங்க. அதனால தான் கேம்ஸ்ன்னு வச்சிட்டாங்களோ!?

நியூசிலாந்து கூட விளையாடுறதால Asian Games க்கு கிரிக்கெட் அணியை அனுப்ப மாட்டோம்னு சொல்லிட்டு இந்தியா கம்முன்னு இருந்திட்டாங்க. ஆனா பாகிஸ்தான் அணி துபாய்ல தென்னாப்பிரிக்கா கூடவும், இலங்கை அணி இலங்கையில மேற்கு இந்தியத் தீவு அணி கூடவும் டெஸ்ட் ஆட்டம் ஆடிக்கிட்டு Asian Games க்கும் (இரண்டாம் தர) அணியை அனுப்பியிருக்காங்க. இதெல்லாம் என்ன கொடுமங்க. 

அரசியல்ல இதெல்லாம் சஜமப்பா என்பது மாதிரி இதையெல்லாம் அனுமதிக்கலாமா இல்ல அனுமதிக்கக்கூடாதா!!


பங்களாதேஷ் ஆசிய கிரிக்கெட் சாம்பியனாம்ல

ஒவ்வொரு தடவையும் யாராவது ஊழல் செய்யும் போது வாங்குற சம்பளத்தயும் வாங்கிப்புட்டு பாராளுமன்றத்தில சும்மா கூப்பாடு போட்டுட்டு வராங்க இந்த அரசியல்வியாதிகளான M.P(ee)க்கள். மக்கள் பிரச்சினைய சரியான ரீதியில் பேசவோ, வாக்குவாதம் செய்யவோ இங்க யாருக்கும் நேரமில்ல போல இருக்கு.  இப்போ ராசாவ குத்தம் சொல்றவங்க எல்லாம் ரொம்ப யோக்கியமான்னு கேக்க தோணுது.

இன்னைக்கு வரைக்கும் ஊழல் செஞ்ச எந்த அரசியல்வியாதியாவது முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை அனுபவிச்சிருக்காங்களா! ராசாவா இருந்தாலும் அது ராணியா இருந்தாலும் முறையா விசாரிச்சு தண்டனை குடுக்கிறதுக்கு இன்னும் ஐம்பது வருசமானாலும் ஆகும் போல. 
5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற African - Bahraini "Mimi Belete Gebregeiorges" உடன் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் ப்ரீஜா மற்றும் வெண்கலம் வென்ற கவிதா

Asian Games ல இன்னொரு வில்லங்கம் என்னன்னா சில நாடுகள்ல இருந்து (குறிப்பாக அரபு தேசங்களில் இருந்து) கலந்து கொண்டவர்கள பாத்தா ஆப்பிரிக்க தேசங்களான கென்யா, எத்தியோப்பியா மற்றும் நைஜீரியாவைச் சார்ந்தவர்கள் மாதிரி தெரியுது. பொழக்க வந்தவங்களுக்கு குடியுரிமையைக் கொடுத்து நல்லா லவுட்டுறாங்க மெடலுகள. நல்லா இருக்குதடா உங்க பொழப்பு.  People Daily என்ற இந்த இணையதளத்தில் இன்னும் விவரமாக இத பத்தி படிக்கலாம்.

லவுட்ட பாக்கிறான் என்பது Loot என்ற ஆங்கில வாக்கியத்தின் வழி வந்த ஆங்கிலத் தமிழா? இல்ல அதுவே தமிழ் தானா!

June 23, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு அவசியம் தான்


உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நிச்சயம் அவசியம் தான் தமிழகத்துக்கு.

வறுமைக் கோட்டிற்கு கீழ்(அது என்ன கோடுன்னு எல்லாம் கேக்கப்பிடாது; ஒருநாளைக்கு ஐம்பது ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் என்கிறது விக்கி) இன்னும் தமிழக மக்கள் இருக்கின்ற நிலையில் இந்த மாநாடு நிச்சயம் தேவை தான்.

ஒரு வேளை சோற்றுக்கு சிரமப்படும் தமிழன் இன்னும் தமிழகத்தில் இருக்கையில் 350-380 கோடிக்கு ஒரு மாநாடு மிக அவசியமான ஒன்றே.

அரசு தமிழ் பள்ளிகள் பலவற்றில் நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கின்ற நிலை இன்னும் தொடர்கையில் தமிழ் மாநாடு கண்டிப்பாக தேவை தான்.

ஒருபுறம் இலவசங்களை வாரியிறைத்து உழைப்பவர்களையும் சோம்பேறி ஆக்கியதை மறைக்க "உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்" என பாடல் எழுதி ஊரை ஏமாற்ற நிச்சயம் மாநாடு தேவை தான்.

ஈழத்தில் இனப்படுகொலையின் போது 39+1 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா நாடகம் நடத்தியதற்கு மாற்றாக இனியவை 40 என நாடகம் ஆட அவசியம் இந்த மாநா(டு)டகம் தேவை தான்.

கிராமங்கள் பலவற்றில் அரசுப் பள்ளிகள் இல்லாத நிலையில், அப்படியே இருந்தாலும் சரியான வசதிகள் இல்லாத நிலையில் இத்தனை கோடிக்கு தமிழ் மாநாடு தேவை தான்.

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும், சூரியன் பண்பலையும் சொல்லாத தமிழின் சிறப்பை இந்த மாநாடு சொல்லும் என்பதால் கூட இந்த மாநாடு நிச்சயம் தேவையான ஒன்று தான்.

பள்ளிக்கு சென்று களைப்பாக இருக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க காரணம் வேண்டுமென்பதால் நிச்சயம் மாநாடு தேவை தான்.

மாநாட்டு சுவாரஸ்யங்கள் சில

மாநாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்தவர் ஒருவர், ஹலோ மைக் டெஸ்ட் ஒன்,டூ, த்ரீ டெஸ்ட் என்றார். இதில் எங்காவது தமிழ் இருக்கிறதா!! முதல்ல மைக்குக்கு என்ன தமிழ்னு சொல்லுங்க.

மாநாட்டின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தினை இருட்டடிப்பு செய்து தேசிய கீதத்தை பாடவிட்டு இந்திய இறையாண்மையையும் காட்டிவிட்டார்கள் இந்திய தமிழ் விசுவாசிகள். பிரதீபா பாட்டில் அம்மா கோவிச்சிக்கும்னு தமிழ்த்தாய் வாழ்த்தை பாட விடலயோ என்னமோ!! அடச்சீ...

மாநாடு அவசியம் தான். நான் கேட்பதெல்லாம் அதற்கு எதற்கு பள்ளிகளுக்கு விடுமுறை? ஏன் இத்தனை கோடி பண விரயம்?

இன்னொரு டவுட்டு... திரைப்படங்களுக்கும், கடைகளுக்கும் தமிழ்ப் பெயரைத் தான் வைக்க வேண்டும் என்பவர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா?!!

May 04, 2010

தலித்-அமைச்சர் ராசா-கலைஞர்

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவும் அவரது அமைச்சரவையும், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டும் தான் தமிழகத்தின் எதிர்கட்சிகளுக்கு தற்போது கிடைத்திருக்கும் விவாதப்பொருள் .

அது ஒருபுறமிருக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிப்பவரும், தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மந்திரி ஆ.ராசா ஒரு தலித் என்பதால் தான் அவரது பதவிக்கு குறிவைக்கப்படுகிறது என்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இன்னும் எத்தனை காலம் தான் இது போன்ற ஜாதி ரீதியான கருத்து அரசியல் செய்வார்களோ தெரியவில்லை. அவர் ஊழல் செய்தாரா இல்லையா என்பதை அறிய முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை அறிவதை விட்டுவிட்டு இது போன்ற கருத்து அரசியல் தேவை தானா என கருதத் தோன்றுகிறது. 

அவர் தலித் என்பது ஒருபுறமிருந்தாலும் அவர் மூலம் கட்சிக்கும், கழகத்திற்கும் கிடைக்கும் லாபம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஐயம் தானோ என்னமோ இவர்களை இப்படியெல்லாம் பேசச் செய்கின்றது!!

இதனைக் குறித்து சிந்திக்கையில் 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது

'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்

சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
நம் நாட்டிலே

April 18, 2010

மானங்கெட்ட தமிழகத் தலைமை

சென்னை விமான நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மையார் பார்வதி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தமிழனத்தலைவர் என பெருமைப்பட்டுக் கொள்ளும் திராவிட முதியவர் ழகத் தலைவர் என்ன பதிலளித்தாலும் அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது.

இவரையெல்லாம் பதவியில் வைத்த தமிழக மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழன் என்று சொல்வதற்கு நானும் இன்று வெட்கப்படுகிறேன்.

இனிமேல் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பதை "தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா" எனவும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதை "வந்தாரை வீழவைக்கும் தமிழகம்" எனவும் கூறினாலும் தகும்.

மனசாட்சி இல்லாத, இத்தாலி அம்மணிக்கு செவிமடுக்கும் தமிழகத்தலைமை இத்தகைய கடின மனமுடையது தான் என்பது முன்னரே தெரிந்திருந்தாலும் இத்தனை கேவலமாக இருக்கும் என்பது எதிர்பாராதது.

மருத்துவ சிகிச்சைக்காக வந்தவரைக் கூடவா மனசாட்சி இல்லாமல் திருப்பி அனுப்புவார்கள். அதோடு விமானநிலையத்தில் வை.கோ விடமும், பழ.நெடுமாறனிடமும் காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது.


என்ன கொடும இதெல்லாம்.

February 02, 2010

2.2.2000 தர்மபுரி கருப்பு தினம்

தர்மபுரி கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரமது.அன்று நடந்த அந்த துயர சம்பவத்தை இன்றளவும் மறக்க இயலவில்லை.அரசியல்வாதிகளின் சீர்கெட்ட அரசியலுக்கும்,அம்மா விசுவாசிகளின் முட்டாள்தனத்திற்கும் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று இளம் கல்லூரி மாணவிகள் மடிந்ததை என்னவென்று சொல்வது.

தமிழகம் பழிவாங்கல் அரசியலுக்கு பெயர் போனது என்றால் அது மிகையல்ல. ஒருவர் ஆட்சியில் இருந்தால் அதற்கு முன் ஆட்சியில் இருந்தவரை பழிவாங்குவதும் மீண்டும் இவர்கள் வந்தால் மற்றவரை பழிவாங்குவதும் வாடிக்கையாகி போன விஷயமே.

எனினும் இத்தகைய அரசியல் காழ்ப்புணர்ச்சியை அப்பாவி பொது மக்கள் மீது காண்பித்தல் சற்றும் சரி அல்லவே.

கோவை வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி கல்விச் சுற்றுலா வந்துவிட்டு கோவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த நேரமது. அன்று வழக்கு ஒன்றில் அம்மாவிற்கு எதிராக தீர்ப்பு எழுதப்படவே, தமிழகம் முழுவதும் பரபரப்பாகிக் கொண்டிருந்தது அப்போது.

விஷமிகள் சிலரின் சில்லறைத் தனமான புத்தியும் அம்மாவின் மீதான தீராத பற்றும்?!? வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் சென்று கொண்டிருந்த பேருந்திற்கு அன்று தீ வைக்க தூண்டியது.

அச்சம்பவத்தில் மூன்று மாணவிகள் மடிந்தனர். அவர்களை அம்மாவின் பெயரினால் பலியிட்டவர்களுக்கு 2008 வரை தண்டனை கிடைக்கவில்லை.

பேருந்து எரிப்பினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடன் (செவிலியர் கல்லூரி) நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்ததும், மற்ற மாணவர்களுக்கு இரவு நாங்கள் உண்ணும் உணவகத்திலிருந்து உணவு தயார் செய்து அளித்ததும், அதன் பிறகு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நீதி கேட்டு முறையிட்டதும் இன்னமும் என் கண் முன்னில் நிற்கிறது.

அதே கறை படிந்த அரசியல்வாதிகள், அதே அரசியல் வெறி பிடித்த தொண்டர்கள் என பத்து வருடத்திற்கு பின்னரும் தமிழகம் அப்படியே தான் உள்ளது.

பன்மொழி கலைஞன் பிரகாஷ் ராஜ் அவரது சொல்லாததும் உண்மை புத்தகத்தில் கூறியது போல... அரசியல்வாதிகளுக்காக தீக்குளிப்பதும்,கூக்குரலிடுவதும்;தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்வதும்...அறியாமை அல்ல முட்டாள்த்தனம் என்பது நூறு சதவீதம் உண்மையே.

என்று மனிதனாய் வாழப்போகிறோம் என்பது தான் தற்போதைய கேள்வி.

November 04, 2009

நோயாளியின் மேலோகப் பயணத்தில் முடிந்த மன்மோகனின் பயணம்


நேற்று 03.11.2009 அன்று சண்டிகரில் உள்ள PGMIER (Postgraduate Institute of Medical Education & Research) மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் சிங் சென்றிருக்கிறார்.

அவரின் வருகையால் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உயிரைப் பாதுகாக்க முடியாமல் செய்திருக்கிறது. கடுமையான பாதுகாப்பு காரணத்தால் சுமித் வர்மா என்ற சிறுநீரக நோயாளி தக்க நேரத்தில் சிகிச்சை பெறவியலாமல் காலமாகியிருக்கிறார். பாதுகாவலர்கள் அவரை இரண்டு மணி நேரம் மருத்துவமனைக்குள் நுழையவிடாமல் செய்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காலமான நோயாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இன்று பிரதமர் அறிக்கையும்; நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டிருக்கிறாராம்.

வழக்கமாக அமைச்சர் பெரு(சிறு)மக்களோ! சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்களோ வருகிறார்கள் என்றாலே போக்குவரத்தில் பல மாற்றங்களைச் செய்தும், சி(ப)ல சாலைகளை தற்காலிகமாக அடைத்தும் விடுவர். இவர்களுக்கே இத்தகைய ஏற்பாடென்றால் பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பைக் குறித்து சொல்ல வேண்டியதில்லை.

நேற்று சண்டிகரில் நடந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்பது ஒருபுறமிருந்தாலும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புகளும், பாதுகாப்பு வளையங்களும்; அவர்கள் பயணம் செய்யும் சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்ய மறுக்கப்படுவதும் வாடிக்கையாகி போய்விட்டதாகவே படுகிறது. அவை மீண்டும் பல கேள்விகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன.

இத்தனை கெடுபிடியான பாதுகாப்புகள் என்னத்திற்கு என்பது எவர்க்கும் இன்னும் புலப்பட்டதாகத் தெரியவில்லை. யாருக்கு பயப்படுகிறார்கள்? ஓட்டளித்த பொதுமக்களுக்கா? இல்லை எதிர்க்கட்சிகளின் சதிகளுக்கா? இல்லை தீவிரவாத தாக்குதலுக்கா?

அப்படியே தீவிரவாத தாக்குதலுக்கு பயந்து தான் இத்தகைய பாதுகாப்பு முறைகள் என்றால், தங்களது சொந்த உயிருக்கே உத்தரவாதம் அளிக்கவியலாத ஒரு தலைவர் எப்படி சாதாரண குடிமகனின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவியலும். இத்தகைய நிலைமைக்கு காரணமென்ன?

பயம் இல்லையென்றால் அதிகாரத்தை தவறான வழியில் உபயோகிக்கிறார்களா? பல நூறு வாகனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால் தான் அவர்களுக்கு பெருமையா? பல நூறு காவலர்கள் இருந்தால் தான் அவர்களால் பாதுகாப்பாக இருக்கவியலுமா?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதனால் போன உயிர் வந்துவிடுமா என்ன!

September 16, 2009

கிரிக்கெட்வாதிகள் ஆகும் அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்களோ இல்லையோ ஆனால் அரசியல் அல்லாத பணிகளில் சற்று அதிகமாகவே ஈடுபாடு காண்பிக்கின்றனர். அதற்கு கிரிக்கெட்டும் விதிவிலக்கல்ல. இன்று மற்றுமொரு அரசியல்வாதி, கிரிக்கெட் சங்கத் தலைவராகியிருக்கிறார்.

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அம்மாநில முதல்வரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான நரேந்திர மோடி இன்று தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்னர், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவராக பாரதீய ஜனதாவின் மற்றுமொரு மூத்த தலைவர் அருண் ஜெட்லி அவர்களும், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவராக தேசியவாத காங்கிரஸின் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் அவர்களும் இருந்து வருகிறார்கள்.

ஏற்கெனவே பல உயர் பதவிகளில் இருக்கும் இவர்கள் போன்ற அரசியல்வாதிகள், அரசியலுக்கு சற்றும் சம்மந்தமே இல்லாத!? கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் எத்தகைய ஈடுபாட்டுடன் தங்கள் பங்களிப்பை அளிக்கக் கூடும் என்பது புரியவில்லை.

கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக் குழுவிற்கு இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளின் மூலம் எந்த இடையூறும் இல்லை என்றும் குறிப்பிட்ட வீரரைத் தான் சேர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவதில்லை என்றும் கூறப்பட்டாலும், வீரர்கள் தேர்வில் மறைமுகமாக அவர்கள் பங்கு கடந்த காலங்களில் இருந்ததாகவே படுகிறது.

ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதவரை இவர்கள் போன்ற அரசியல்வாதிகள், கிரிக்கெட்டில் மட்டுமல்லாது வேறு துறைகளிலும் பல பதவிகளைப் பெறுவது தவிர்க்க முடியாததே.

அரசியல்வாதிகளால் கிரிக்கெட்டிற்கு லாபமோ இல்லையோ கிரிக்கெட்டினால் அரசியல்வாதிகள் லாபமே.

May 16, 2009

சந்தர்ப்பவாத அரசியலுக்கு சம்மட்டி அடி


பதினைந்தாவது பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் வர ஆரம்பித்ததிலிருந்தே எளிதில் வெற்றி பெறலாம் என எண்ணிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல்கட்சிகளுக்கும் "அரசி"யல்வாதிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

குறிப்பாக தமிழகத்தில் அய்யா அவர்களின் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி,விருதுநகரில் அண்ணன் அவர்களின் தோல்வி, தேர்தலுக்கு நாற்பது நாட்களிருக்கையில் ஈழம் ஏற்படுத்துவோம் என்றதோடு நாற்பதும் நமக்கே என நாடகமாடிய அம்மாவின் பின்னடைவு,காங்கிரஸ் பெருந்தலைகளுக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வி, என வரிசையாக நோக்கினால் மக்கள் தெளிவாக வாக்களித்து சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள் எனலாம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அனைத்து மத்திய அமைச்சரவைகளிலும் பதவி வகித்து வந்திருக்கும் 'அய்யா' வின் பதவி மோகத்திற்கு மக்கள் சரியான சம்மட்டி அடி அடித்திருக்கிறார்கள்.ஆவேச பேச்சாளர் அண்ணனின் சந்தர்ப்பவாதத்தைக் குறித்து சொல்லவே தேவையில்லை.சொந்த தொகுதி மக்களின் பிரச்சினைகளை அலசாத 'எம்.பி'க்களுக்கும் அமைச்சர்களுக்கும் தக்க அடி கிடைத்திருக்கிறது.

விலைவாசி உயர்வு,மின்தடை,இலங்கைப் பிரச்சினையில் தடுமாற்றம் இவைகளுக்கு அப்பாலும் முதியவரின் உண்ணாவிரதமும் கள்ள ஓட்டும், சொல்லும்படியான வாக்குகளை அளித்திருக்கிறது என ஒருசாரார் நம்பினாலும் பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கிய இலவசங்களும்,கேப்டன் சிதறச் செய்த வாக்குகளும் முதியவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

இதே பாணியிலேயே இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் நல்லாட்சி செய்த ஆளுங்கட்சியினருக்கே மக்கள் மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள்,ஆந்திராவில் காங்கிரஸின் ரெட்டி,டெல்லியில் காங்கிரஸின் ஷீலாதீட்சித்,ஒரிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்,பீகாரில் ஜனதா தளத்தின் நிதிஷ் குமார்,ஜம்முகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா,குஜராத்தில் பா.ஜ.க வின் நரேந்திர மோடி என இந்த முதல்வர்கள் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் மக்களுக்கு அவர்கள் செய்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு பெரும்பான்மை இடங்களை அளித்திருக்கிறது.

நல்லாட்சி செய்யாத கேரளா,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு சரியான அடியும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டுகளின் பழமைவாத கொள்கைகளையும் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்கு முன்னணியில் ஒருகாலும், மூன்றாவது அணியில் ஒருகாலுமாக நாடகமாடிய லாலு சரண்,பாடலிபுத்திரா என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.இரு தொகுதிகளிலும் தோற்க வேண்டிய நிலையிலிருந்தவர் இறுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சரண் தொகுதியிலிருந்து மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரதமர் கனவு கண்ட சந்தர்ப்பவாதிகள் மாயாவதி, சந்திரபாபுநாயுடு, பாஸ்வான் ஆகியோருக்கு பெரும் தோல்வியை தந்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.இத்தனைக்கும் பாஸ்வான் தனது சொந்த தொகுதியிலேயே தெரிந்தெடுக்கப்படவில்லை.இதே பீகார்,ஹஜிபூர் தொகுதியில் 4,24,000 வாக்குகள் வித்தியாசத்தில் 1977 ல் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை செய்தவரும், 1977 முதல் 2004 வரை ஏழு முறை இந்த தொகுதியில் இருந்து தெரிந்தெடுக்கபட்டவரும் இவரே.

சரிவர செயல்படாத மத்திய சமூகநலைத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரியும் ஆந்திராவில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படியாக நல்லாட்சி செய்தவர்களுக்கும்,ஓரளவு நியாயமாக இருந்தவர்களுக்கும் மக்கள் மீண்டும் தங்கள் ஆதரவை அளித்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அகங்காரிகளுக்கு தக்க பதிலும் கொடுத்திருக்கின்றனர்.

பொருளாதர வீழ்ச்சியிலிருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் எவருக்குமே பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டிருக்குமானால் அது மேலும் இந்திய பொருளாதாரத்தை சீரழித்திருக்கும்.அந்த நோக்கத்தில் நிலையான ஆட்சி வேண்டியும் மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்.

ஆனாலும் காங்கிரசுக்கு 200 ற்கும் மேல் தொகுதிகள் கிடைத்தது சற்றே ஆச்சரியம் தான்!

May 13, 2009

ஆட்சியை பிடிக்கும் அணி என்ற புதிய அணி உருவாக்கம்?

கார்ட்டூன் நன்றி sulekha.com
---------------

இந்தியா முழுதும் ஒரு வழியாக ஐந்து கட்ட தேர்தலும் நடந்து முடிந்தாகி விட்டது.முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எந்த கூட்டணி ஆட்சியமைக்கும்,எவர் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு சற்றே அதிகமாகத் தான் உள்ளது.

1991 ற்கு பிறகு எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்ற கேள்வி மாறி எந்த கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற நிலைமை உருவெடுத்துள்ளது எவரும் மறுக்கமுடியாத ஒன்று.இந்தியா முழுதும் தனக்கு ஆதரவைக் கொண்டிருந்த காங்கிரஸ் தனது ஆட்சி முறைகளினாலும் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லாமையாலும் தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்தது.

குறிப்பாக தமிழகத்தில், காங்கிரசின் அழிவிற்கு காங்கிரசாரே காரணம் என்றாலும் மிகையல்ல.உட்கட்சி விவகாரங்களினாலும்,பதவி மோகத்தினாலும் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த ஓரளவு மரியாதையையும் குறைத்துக் கொண்டனர்.அவர்களின் கோஷ்டி பூசல்கள் இன்று வரை தீர்ந்த பாடில்லை.பிற மாநிலங்களும் (சில கட்சிகளும்) இதற்கு விதிவிலக்கல்ல. பதவி மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலைமையினால் மாநில கட்சிகள் தேசிய அரசியலில் மெதுவாக காலூன்ற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.மெல்ல காலூன்றிய மாநில கட்சிகள் தேசிய ஆட்சியில் பதவிகளைப் பிடிக்கவும் செய்து தற்போது டெல்லியில் தங்களுக்கென ஒரு அடையாளத்தையும் உறுதியான இடத்தையும் பிடித்துள்ளன.

15 ஆவது மக்களவையைத் தெரிந்தெடுக்கும் தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்காக தங்கள் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பிற கட்சிகளின் வாலைப்பிடித்துக் கெஞ்சத் தொடங்கியிருந்தன.இழுபறியின் இறுதியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி;பாரதீய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி;கம்யூனிஸ்டுகள்,பகுஜன் சமாஜ்,அ.தி.மு.க,தெலுங்கு தேசம் உட்பட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி என மூன்று கூட்டணிகள் உருவாகின.

ஒவ்வொரு கட்ட தேர்தலும் முடிந்து வர வர இந்த மூன்று கூட்டணிகளினுள் உள்ள கட்சிகள் எந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை கணித்து அந்த கூட்டணிக்கு தாவுவதற்கு தங்களைத் தயாராக்கிக் கொண்டிருந்தன.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்த லாலு,பாஸ்வான் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆப்பு வைத்தனர்.பா.ஜ.க வுடன் இருந்த சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணிக்கு தாவினார்,அது போன்று ஒரிசா முதல்வர் பிஜூ பட்நாயக் பா.ஜ.க வுடனான உறவை முடித்துக் கொண்டார்.மூன்றாவது அணியிலிருந்த ஆந்திராவின் டி.ஆர்.எஸ் கட்சி அதிலிருந்து விலகியது.தற்பொழுது அம்மாவும்,சரத்பவாரும்,சந்திரபாபு நாயுடுவும் எந்த கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு சாடுவதற்கு மதில் மேல் பூனையாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

இறுதியில் மூன்றாவது அணி உருவாக காரணமான,தங்கள் கொள்கைகளை எளிதில் விட்டுக்கொடுக்காத இடது மற்றும் வலதுசாரி தோழர்கள் தோற்கடிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாகவே தோன்றுகிறது. தோழர்கள் ஏமாற்றப்பட போகிறார்கள் என்பது கர்நாடகாவின் குமாரசாமி-சோனியாகாந்தியின் நேற்றைய சந்திப்பிலேயே துளிர் விட்ட நிலையில் எவருக்கும் ஆதரவு என்ற ஜெ'ன் இன்றைய நிலையும்,சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க வின் வெங்கையா நாயுடு சந்திப்பும் அதனை உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது.

எனவே அடுத்து வரும் சில நாட்களில் இந்த மூன்று அணிகளும் மாறி "ஆட்சியைப் பிடிக்கும் அணி" என்ற ஒரு அணி தான் உருவாகும் வாய்ப்புள்ளது.அவர்கள் அதற்கு என்ன விதமான பெயரினை வைத்தாலும் அது ஆட்சியை பிடிக்கும் அணியாகவே இருக்கும்.அதற்கு என்ன விலையும்,என்ன பதவியும் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்... தங்கள் கொள்கைகளையும் காற்றில் பறக்க விட்டு பதவி மோகம் பிடித்துத் திரியும் சில அரசியல் ஆதாய ஆசாமிக் கூட்டங்கள்.

இந்த கொடுமைகளை எல்லாம் நாம் கண்டு சகிக்க வேண்டியிருக்கிறது... என்ன செய்வது இந்தியனாகி விட்டோமே!

May 11, 2009

இந்தியால தான் இப்படின்னா இங்கிலாந்திலுமா!

நவம்பர் 2008 மும்பை தாக்குதலில் ஊடகங்களும் சரி அரசும் சரி ஹோட்டல் தாஜில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தியதாக இன்றளவும் குற்றச்சாட்டு உண்டு.விக்டோரியா ரயில் நிலையத்தில் பயணிகளும் பொதுமக்களுமாக பலர் மரித்துக் கிடந்ததை ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. பெரும்பாலானோரின் கவனமும் உயர் மட்ட மக்கள் இருந்த ஹோட்டல் தாஜின் மேலேயே இருந்தது.

இன்று வரை தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் சென்று சேர வேண்டிய நிவாரணம் முழுமையாக சென்றடைந்ததா என்பதும் கேள்விக்குறியே.

இந்தியாவில் தான் இந்த நிலை என்றால் இங்கிலாந்திலும் இதே நிலை தான் போல.

இங்கிலாந்தைச் சார்ந்த வில் பைக்(will pike) என்பவர் மும்பைத் தாக்குதலின் போது ஹோட்டல் தாஜினுள் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்.தப்பிப்பதற்காக ஹோட்டல் தாஜின் போர்வைகளை கயிறாக பாவித்து மூன்றாவது தள ஜன்னல் வழி கீழே குதித்திருக்கிறார்; பாதியிலேயே போர்வைகள் கிழிந்து விட, அவரின் கைஎலும்புகள்,காலெலும்புகள், முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவை முறிந்திருக்கின்றன.

இருபதிற்கும் மேல் அறுவை சிகிச்சை பெற்று தற்பொழுது குணமடைந்திருக்கிறார்.இப்போது நிம்மதியாக இருப்பார் என நாம் நினைத்தால்... அது தான் இல்லை! முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் நரம்புகளையும் பாதிக்கவே இனி மேல் அவரால் நடக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.தற்பொழுது சக்கர நாற்காலியில் காலத்தை ஓட்டுகிறார்.



இத்தகைய நிலையில் இங்கிலாந்து அரசு எந்த விதமான உதவியும் இதுவரை செய்ததில்லை என கவலை தோய்ந்த முகத்துடன் வில்லியமும் அவரது துணைவியாரும் கண்ணீர் மல்குகின்றனர்.உதவி கிடைக்கும் வரை போராடுவது என முடிவெடுத்து இணையதளம் ஒன்றின் மூலம் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார் வில் பைக்.அந்த இணையதளம் இங்கே

ஏற்கெனவே 2005ல் எகிப்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது இறந்த இங்கிலாந்து பிரஜைகளுக்கும் இங்கிலாந்து அரசு சரியான நிவாரணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க...

இங்கிலாந்தில் அமைச்சர்கள் அரசு பணத்தில் ராஜபோகமாக வாழ்கிறார்கள் எனவும்,அளவுக்கு மீறி செலவு செய்து வருகிறார்கள் எனவும் தற்பொழுது பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

நம் அரசாங்கங்கள் தான் சரிவர நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்குவதில்லை, வெளிநாடுகளில் என்றால் நிவாரணங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிறது என நினைத்தோமென்றால் அது தவறு.

ஊழலும்,அரசாங்கங்களின் ஊதாரித்தனமும் உலகமெங்கும் ஒன்று தான் போல.

May 07, 2009

பாலியல் சித்திரவதை,பன்றிக்காய்ச்சல்,கால்பந்து களேபரம்

ஸ்காட்லாந்தில் குழந்தைகளை சில வருடமாகவே பாலியல் சித்திரவதை செய்ததாக '8'நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மாத குழந்தையையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள் இந்த கயவர்கள். இவர்களில் அனைவரும் படித்து உயர் வேலைகளில் இருப்பவர்கள்,அதிலும் ஒருவன் கிறிஸ்தவ பணி செய்து வருகிறவனாம்... என்ன கொடுமை!! Paedophilia என ஆங்கிலத்தில் அறியப்படும் குழந்தைகள் மீதான இவ்வகை பாலியல் ஈர்ப்பு மிகக் கொடியது.உலகம் முழுவதும் பல குழந்தைகள் இது போன்ற கொடூரங்களுக்கு ஆளாகின்றனர்.

Paedophile என அறியப்படும் இந்த கொடியவர்களிடமிருந்து குழந்தைகள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீபா அவர்கள் "குட் டச் பேட் டச்" என்ற ஒரு இடுகையை எழுதியிருந்ததார்கள்.அதனை இங்கே படிக்கலாம்.

---------------

swine flu அதாவது பன்றிக் காய்ச்சல் என அழைக்கப்படுவதற்கு பன்றி பண்ணை வைத்திருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் H1N1 flu என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என ஆரம்பத்தில் அறியப்பட்டாலும் பன்றிகளிலிருந்து மனிதனுக்கு பரவியதாக இது வரை நிரூபிக்கப்படாததும் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம்.H1N1 காய்ச்சல் குறித்த மேலும் தகவல்கள் இங்கே.


பெங்களூருவில் இந்தியாவின் முதல் H1N1 காய்ச்சல் உறுதிப்படுத்தப்படலாம் என தெரிகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய இருவர் தனி அறைகளில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். இரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் இது உறுதி செய்யப்படலாம்.

------------------

சாம்பியன்ஸ் லீக் என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து 'கிளப்'புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது.இதன் இரண்டாவது அரை இறுதி போட்டியின் இரண்டாம் நிலை (second leg) ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து கிளப்பான செல்சீ (chelsea) ம் ஸ்பெயினின் பார்சிலோனாவும் நேற்று லண்டனில் மோதின.

ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே அடித்த கோல் மூலம் முன்னணியில் இருந்த செல்சீ அணியே வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது.ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் மீதமிருக்கையில் பார்சிலோனா அணி கோல் அடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது.

ஆட்டத்தில் நடுவர், இருமுறை வழங்கப்பட வேண்டிய பெனால்டிகளை வழங்காதமையால் கோபம் கொண்ட செல்சீ அணியினர் ஆட்ட முடிவின் போது நடுவரை சூழ்ந்து கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.குறிப்பாக டிடியர் ட்ரோக்பா எனப்படும் வீரர் நடுவரை அடிக்க பாய்ந்து விட்டார்.தற்பொழுது நடுவருக்கு கொலைமிரட்டல்களும் வந்த வண்ணம் உள்ளன.


செல்சீ அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அவர்களால் மேலும் கோல்களை இட முடியாததே தோல்விக்கு காரணம்.மாறாக பார்சிலோனா அணியினர் ஆரம்பம் முதலே அருமையாக ஆடினர்.அவர்களின் போராட்ட குணமும் நம்பிக்கையும் அவர்களுக்கு வெற்றி ஈட்டித் தந்தது.

முதல் அரையிறுதிப் போட்டியில் அர்சினல் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இங்கிலாந்தின் சிறந்த 'கிளப்'பான மேன்செஸ்டர் யுனைட்டட் அணியை ஸ்பெயினின் சிறந்த 'கிளப்'பான பார்சிலோனா இறுதிப் போட்டியில் சந்திக்கவிருக்கிறது.

வீரர்களின் எதிர்ப்பும் skysports ன் விவாதமும் காணொளியாக கீழே

May 03, 2009

சீக்கியருக்கு சிங்கியடிக்கும் அரசே! நீ தமிழினத்திற்கு என்ன செய்தாய்


அண்டை நாடான பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவதாக ஊடகங்கள் மூலம் செய்தியை கேட்க நேரிடுகிறது.(வரி கட்ட சொல்லிட்டாங்களாம் ஸ்வாத் பகுதியில்!)இந்தியாவின் பஞ்சாப் மாநில சீக்கியர்கள் இன்று அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கு ஜால்ரா அடிக்கும் வகையில் இந்திய பிரதமர் 'சிங்'கும் பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை விட்டு சிங்குகளுடன் சேர்ந்து சிங்கி அடித்திருக்கிறார் இன்று.அதோடு எதிர்கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.

இலங்கையில் நம்மின உயிர்கள் அடையும் சித்திரவதைக் குறித்து எள்ளளவும் கவலைப்படாத,கண்டனம் தெரிவிக்காத இந்த கேடுகெட்ட மத்திய அரசுக்கும் பிரதமருக்கும், இன்று மட்டும் எங்கிருந்து பொத்துக் கொண்டு வருகிறதோ இந்த பாசமும் தொப்புள் கொடி உறவும்.

பாகிஸ்தானில் சீக்கியர்கள் உபத்திரவப்படுத்தப் படுகிறார்கள் என்று செய்தி வெளியாகி சில மணிநேரங்களில் கண்டனம் தெரிவிக்கவும்,(இத்தனைக்கும் உயிர் இழப்பு இல்லை)பாகிஸ்தானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் காலைப்பிடித்து கெஞ்சவும்,உணர்ச்சிகளை கொப்பளிக்கவும் தெரிந்த இவர்களுக்கு...

எம்மின உயிர்கள் இலங்கையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவிக்கும் வதைகளுக்கும், பச்சிளம் குழந்தைகளின் கதறல்களுக்கும்,பாவமறியா பெண்கள் அடைந்து வரும் கொடுமைகளுக்கும் குரல் கொடுக்கத் தெரியாதா? இந்த அரசாங்கமும்,பதவியிலிருப்பவர்களும் மனிதப் பிறவிகளா இல்லை ஈனப் பிறவிகளா?

உங்கள் இனத்தின் உயிரெல்லாம் உங்களுக்கு உயிர்... மற்ற இனத்தின் உயிரெல்லாம் பின்ன என்ன ___ கிள்ளுக்கீரையா?

நீங்கள் இலங்கைக்கு சமாதானம் செய்ய செல்ல வேண்டாம்,தினம் தினம் மடியும் உயிர்களுக்காக கண்டனம் தெரிவிக்க வேண்டாம்,அனுப்பும் போர் தளவாடங்களையாவது அனுப்பாமல் இருக்கலாமே!

உங்களின் இரட்டை வேடத்திற்காக இன்றல்லது என்றாவது ஒரு நாள் வருந்துவீர்கள்.அன்று உங்கள் மனசாட்சியும் உங்களைக் கொல்லும்.

April 27, 2009

ஈழத் தமிழர் நலனுக்கேனும் ஒன்றுபடுங்கள்

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறார் என ஊடகங்கள் வழி கேள்விப்பட்டதும் சற்றே ஆச்சரியமாகத் தானிருந்தது.இழக்கப் போகும் வாக்குகளை மீட்பதற்காக அவர் எடுக்கும் அரசியல் ஆதாய முயற்சியா என்ற கோணத்தில் பார்க்கவும் செய்தது உண்ணாவிரத செய்தி.

ஆனாலும் நெடுங்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் என்ற கோணத்தில் பார்ப்பதானால் முதல்வரின் நிலைப்பாடு சரியெனவேப் படுகிறது.அதோடு உடல்நிலை ஒத்துழைக்காத 86 வயதிலும் அவர் எடுத்த இந்த முடிவு உறுதியானதே.

கருணாநிதி நடத்தும் அரசியல் நாடகம் என பலர் குறிப்பாக எதிர்க்கட்சிகள் கருதக்கூடும்.ஜெயலலிதா அம்மையார் உண்ணாவிரதம் இருந்த போதும் இது அவரது அரசியல் நாடகம்,வாக்குகளை பெற அவர் முன் வைக்கும் உக்தி என்றும் பிற கட்சிகள் அவரை சாடின.

இலங்கை தமிழர் நலனிற்காக இரு பெரும் திராவிட கட்சிகளோ இல்லை பிற கட்சிகளோ எடுக்கும் எந்த முயற்சிகளும் பாராட்டப்பட வேண்டியவையும்,வரவேற்கப் பட வேண்டியவைகளுமாகும்.ஓட்டிற்கான நாடகமாகவே தோன்றியாலும் இலங்கை தமிழரின் நலனுக்காக தானே குரல் கொடுக்கிறார்கள் என்ற முறையில் அதனை பிற கட்சிகளும் ஆதரித்திருக்க(ஆதரிக்க) வேண்டும்.

தமிழர் நலனுக்காக தமிழர் பிரிவுபட்டு நிற்பதும் இனியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதும் இலங்கை தமிழர் விஷயத்தில் எந்த வகையிலும் நன்மையை கொண்டு வரப்போவதில்லை.

April 14, 2009

சுயேட்சை வேட்பாளர்கள் மீது ஏன் இந்த சாடல்?


"சுயேட்சை வேட்பாளர்கள் என்பவர்கள் சீரழிப்பவர்கள்"

இப்படி ஒரு வாக்கை இந்திய நாட்டின் உயர் பதவியிலிருப்பவர் ஒருவரிடமிருந்து அதுவும் பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

சில நாட்களாகவே பிரதமர் சிங் அவர்கள் முன் வைக்கும் கருத்துகள் முன்னுக்கு பின் முரணானவையாகவும். ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிற கட்சியினரை சாடுவதும், குறை சொல்வதும்,தனி மனித தாக்குதல் செய்வதுமாக இறங்கியிருக்கிறார் பெரியவர்.

முந்தைய பதிவிலேயே இவரை போன்றவர்களின் பிரச்சார பிதற்றல்களை குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அவற்றிக்கு எல்லாம் ஒரு படி மேலே போய்...'சுயேட்சை வேட்பாளர்கள் சீரழிப்பவர்கள்; அவர்களால் வெற்றி பெற முடியாது;அவர்களை ஊக்குவிக்க கூடாது' என்ற தரம் தாழ்ந்த கருத்தை கூறியிருக்கிறார் பிரதமர்.

சுயேட்சை வேட்பாளர்களின் மேல் ஏன் இந்த திடீர் சாடல் என்று தான் புரியவில்லை. மக்கள் அல்லவா அவர்கள் முடிவை சொல்ல வேண்டும்... சுயேட்சைகள் சீரழிப்பவர்களா இல்லை சீர்ப்படுததுபவர்களா என்று.

அதோடு "மாநில கட்சிகள் எவ்வளவு காலம் தேசிய அரசியலில் தாக்கு பிடிப்பார்கள் என சொல்ல முடியாது" ஆதலால் தேசிய கட்சியான எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறார். நீங்கள் தேசிய கட்சி என்றால்... நாணமில்லாமல் என்னத்திற்கு மாநில கட்சிகளுடன் கூட்டணி கூடுகிறீர்கள்?

சுயேட்சைகள் போட்டியிடுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல வந்து விட்டது. அவர்கள் தொகுதி மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிச்சயம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தான் போகிறார்கள்.

அப்படி சீரழிப்பவர்கள் என்றால் உங்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டியது தானே... சுயேட்சை வேட்பாளர்களுக்கு போட்டியிட தடை என்று.

மைக் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா? இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?

April 12, 2009

ஆவேச பிரச்சாரங்களின் மத்தியில் ஒரு அமைதியான பிரச்சாரம்

15 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் எந்த கட்சியைச் சார்ந்த தலைவராகட்டும்,போட்டியிடும் வேட்பாளராகட்டும் பிற கட்சியினரை அல்லது அவர்களது கொள்கைகளை குறை சொல்லாத மேடைகளே இல்லை.

அதோடு பெரும்பாலானோர் தனி மனித தாக்குதல் தான் செய்கிறார்கள் இது குறித்து எனது முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.மக்களுக்கு நன்மை பயக்கும் நலத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் வெகு சிலரே.

இவர்கள் அனைவரிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பிரச்சாரம் செய்யும் ஒருவரும் இருக்கத்தான் செய்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானிருக்கிறது.

பிரியங்கா தான் அவர்.மிக மிக எளிமையாக வருகிறார்.எவரையும் சாடுவதில்லை.தொகுதியின் மக்களிடம் அன்போடு அளவலாடுகிறார்.மக்களோடு மக்களாக ஒன்று சேர்ந்து கருத்துக்கள் பரிமாறுகிறார்.

இவரது அன்னை சோனியா கூட இத்தனை சாதுவாக பேசியதில்லை என்றே நினைக்கிறேன்.

அமேதியிலும்,ரேபரேலியிலும் 11.4.09 அன்று அவர் பேசியது இங்கே காணொளியாக.



அவரது பேச்சின் சாராம்சங்கள் சில

1.உங்களுக்கு நன்மை செய்பவர் எவர் என்பதை அறிந்து அவர் மேல் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள்

2.இந்த தேசம் எந்த அரசியல்வாதிகளுடையதும் அல்ல இது உங்கள் தேசம்

3.உங்கள் தொகுதியை முன்னேற்ற பாதையில் இட்டு செல்பவர் யார் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.

அரசியல்வாதியாக இல்லாதிருப்பதும் அமேதியில் அவரின் அமைதியான பேச்சிற்கு காரணமாகி இருக்கலாம்.இவரைப் போன்றவர்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்.வாழ்த்துக்கள் பிரியங்கா மேடம்.

Related Posts with Thumbnails