August 23, 2017

கவலை தரும் கல்வியின் தரம்!

அனைத்துமே வியாபாரமயமாக்கப்பட்ட  இன்றைய  காலகட்டத்தில் கல்வி மட்டும் விதி விலக்கல்ல. தனியார்மயமாக்கப்பட்டதில் ஒரு வகையில் நன்மைகள் இருந்தாலும், கல்வியின் தரம், இன்று பெரும் கேள்விக் குறியே! அதோடு, நேர்முகத்தேர்வைக் கூட நம்பிக்கையுடன்  சந்திக்கும் திறமை இன்றி, வெறும் வெத்து பட்டங்களோடே வெளிவரும் மாணவர்கள்தான் அதிகம்.

வாழ்க்கையைக் குறித்ததான புரிதலையோ; உலகின் மீதான தெளிவான, அகன்ற பார்வையையோ இன்றைய கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறுகின்றன.

வெறும் புத்தகத்தை மட்டுமே நம்பி, புத்தகப்புழுக்களாக மாறிப் போகும் மாணவர்களின் நிலைமை மிக வருத்தத்திற்குரியது. வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த கல்விமுறை மிக ஆபத்தானது; மன அழுத்தத்தைத் தரக் கூடியது என்றும் தாராளமாக சொல்லக் கூடிய அளவிற்கு தான் அதன் தரம் உள்ளது.

தோல்விகளை எதிர்கொள்ளவும்; தோல்விகளில் தரும் பாடங்களில் இருந்து புதிய பாதைகளை அமைத்துக் கொள்தலையும் பயிற்றுவிப்பதற்கு இங்கு ஆசிரியர்களோ, இந்த சமூக கட்டமைப்போ இடம் தராதது பரிதாபத்திற்குரியது/ உயிரை மாய்த்து விட வழிவகை செய்வது,

என்ன தான் ஆங்கில வழியில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பித்தல் இருந்தாலும், தெளிவான, சரியான ஆங்கில உச்சரிப்புகளைக் கூட அறியாத ஆசிரியர்களாலேயே மாணவர்கள் கற்பிக்கப்படுவது பெரும் ஏமாற்று வேலை.

நேற்று பள்ளியில் இருந்து வந்த மகன், க்றிஸ்ட் என்று சொல்லிப் படித்துக் கொண்டிருந்தான். என்னடா அதன் Spelling என்று கேட்டேன், ‘C-h-r-i-s-t என்றான்; அது க்றிஸ்ட் இல்லடா, க்றைஸ்ட் என்றேன்; இல்லை, இல்லை! எங்க மிஸ் இப்பிடித்தான் சொல்லிக்குடுத்தாங்க அப்டின்னான்!

வேறொரு கல்லூரியில் மாணவச் சேர்க்கைக்காக Prospectus வாங்குவதற்காக சென்றிருந்தேன், அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் PROS-PECTAAAS இப்ப குடுக்கிறதில்ல அப்படின்னாங்க; என்னங்கன்னு திரும்ப கேட்டேன்; Prospectus என்பதில் டாவை இன்னும் ஆ போட்டு ப்ரோஸ்பெக்ட்ஆஆஸ் என்றார்கள். பிறகு தான் விளங்கியது, Prospectus என்று.

ஆங்கிலத்தையும் முறையாக கற்பிக்காமல் தமிழிலும் சரிவர புரிய வைக்கத்தெரியாத ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கு கிடைத்த சாபம்.
Related Posts with Thumbnails