பெருந்துயர்களில் இருந்து மீள எழுத்தையும், கலையையும், இசையையும் விட சிறந்த துணை வேறு என்ன இருந்து விடப் போகிறது
எதையும், எவரையும் எப்போது வேண்டுமானாலும் இழப்போம் என்பது நம் ஆழ்மனங்கள் அறிந்தவை தான். ஒருவேளை அப்படியான எண்ணங்கள் நம் ஆழ்மனங்களில் இருப்பதாலேயோ என்னமோ அதன் தாக்கம் இல்லாமல் நமது புறம் சார்ந்த விசயங்களிலும், கேளிக்கைகளிலும், அன்றாட நடவடிக்கைகளிலும் இயல்பாக நாம் தொடர்ந்து இயங்குகிறோம்.
வலி, துயரம், ஆற்றாமை என்றிவை நம் ஆழ்மனங்களில் தேங்கிக் கிடந்தாலும் இவற்றை மிஞ்சி நிற்கின்ற பசி, வளர்சிதை மாற்றங்கள், இயற்கை உபாதைகள், சார்ந்திருப்போரின் நலம் பேணல் என ஏதாவது ஒன்றினால் நாம் இன்னமும் பிழைத்துக் கிடக்கிறோம் அல்லது நம் முந்தைய அனுபவங்கள் நமை பக்குவப்படுத்தியிருப்பதால் மனச் சமநிலை பிறழாமல் தொடர்கிறோம்.
இப்படியாக மனச் சமநிலை பிறழாமல் தொடர்வது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. குறிப்பாக வலி, துயர், ஆற்றாமை என்றிவைகள் சூழ் வட்டத்தினின்று வெளிவர இயலாதோர் இன்னமும் சோர்வுற்று அவைகளிலேயே உழன்று தமை வருத்திக் கொள்வதும் நிகழும் என்பது தான் இப்பிரபஞ்சத்தின் இன்னொரு பக்கம்.
அதிலும் சிறு வயதில் ஏற்படுகின்ற மனச்சிதைவுகள் ஒரு வகையில் வருங்காலங்களின் துயர்களை எதிர்கொள்ள பெரும்பாடங்களாக அமையும் என்றாலும், மறுவகையில் இவ்வாழ்க்கையின் மீதும், உறவுகளின் மீதுமான நம்பிக்கையின்மையையும், எவ்வித செயற்பாடுகள் மீதுமான பிடிமானமற்றத் தன்மையையும் ஏற்படுத்தும் என்பது தான் பெருஞ்சோகம்.
‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்கிற ஜெயகாந்தன் கூற்று ஒன்று உண்டு, அது தான் நிதர்சனமும் கூட. இங்கு நமை, நம் செயல்களைப் பிடிக்காத பலர் உண்டு, நமக்குப் பிடிக்காதவர்களும் ஏராளம் உண்டு. எவரும் எவரையும், எல்லோராலும் எல்லா நேரமும் எல்லோரையும் திருப்திப் படுத்தி விடமுடியாது. அது தான் இப்பிரபஞ்சத்தின் சூட்சுமம்.
உலகம் எதிர்மறை சிந்தனைகளுடன் இருந்தாலும் நாம் நேர்மறையாகச் சிந்தித்தலையும், நன்மையானவைகளைப் பாராட்டாமல் விட்டுவிடுதலும் நன்றன்று. நன்றி மறத்தலும், நம் தோளோடு தோள் நின்று நமை உயர்த்துகிற எவரையும் மறத்தலும் அத்தனை எளிதல்ல, அப்படி இருந்து விடுதலும் முறையல்ல.
நாளை இருப்போமா என்பதறியாத உலகில், நாளை சந்திப்போமோ என்பது உறுதியில்லாத நிலையில் இன்றைய தினத்தை முழுமையாக வாழ்ந்து விட்டுப் போதல் சிறந்தது.
.
அப்படியான கருத்தாழத்தில் Raja Mehdi Ali Khan அவர்களால் எழுதப்பட்டு மதன் மோகன் அவர்கள் இசையில் லதா மங்கேஷ்கர் பாடிய Lag Ja Gale பாடலை ஒர் தந்தையும் மகளும் நேற்று பாடக் கேட்டேன். இந்த நேரத்தின் ஆகச் சிறந்த ஆறுதல் அந்த இசையும் அப்படியான வரிகளும் தான்.
இதில் குறிப்பிடும்படியான இன்னொரு விசயம், ராஜா மெஹ்தி அலி கான் Wazirabad (அன்றைய பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இன்றைய பாகிஸ்தான்) பகுதியில் பிறந்தவர்.
கலையும் இசையும் மதங்களுக்கும், பிரிவினைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை விட நிம்மதி என்ன வேண்டும் நமக்கு. வாழ்வோம், வாழ விடுவோம்.
பாடலின் இணைப்புகள்
Lata Mangeshkar Version with English Translation https://www.youtube.com/watch?v=YJHs3Sa73NQ
Sanam Acoustic Version
https://www.youtube.com/watch?v=HnLtNrvfZTU
Papon Version
https://www.youtube.com/watch?v=R1A8AbYPCaM