February 02, 2010

2.2.2000 தர்மபுரி கருப்பு தினம்

தர்மபுரி கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரமது.அன்று நடந்த அந்த துயர சம்பவத்தை இன்றளவும் மறக்க இயலவில்லை.அரசியல்வாதிகளின் சீர்கெட்ட அரசியலுக்கும்,அம்மா விசுவாசிகளின் முட்டாள்தனத்திற்கும் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று இளம் கல்லூரி மாணவிகள் மடிந்ததை என்னவென்று சொல்வது.

தமிழகம் பழிவாங்கல் அரசியலுக்கு பெயர் போனது என்றால் அது மிகையல்ல. ஒருவர் ஆட்சியில் இருந்தால் அதற்கு முன் ஆட்சியில் இருந்தவரை பழிவாங்குவதும் மீண்டும் இவர்கள் வந்தால் மற்றவரை பழிவாங்குவதும் வாடிக்கையாகி போன விஷயமே.

எனினும் இத்தகைய அரசியல் காழ்ப்புணர்ச்சியை அப்பாவி பொது மக்கள் மீது காண்பித்தல் சற்றும் சரி அல்லவே.

கோவை வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி கல்விச் சுற்றுலா வந்துவிட்டு கோவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த நேரமது. அன்று வழக்கு ஒன்றில் அம்மாவிற்கு எதிராக தீர்ப்பு எழுதப்படவே, தமிழகம் முழுவதும் பரபரப்பாகிக் கொண்டிருந்தது அப்போது.

விஷமிகள் சிலரின் சில்லறைத் தனமான புத்தியும் அம்மாவின் மீதான தீராத பற்றும்?!? வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் சென்று கொண்டிருந்த பேருந்திற்கு அன்று தீ வைக்க தூண்டியது.

அச்சம்பவத்தில் மூன்று மாணவிகள் மடிந்தனர். அவர்களை அம்மாவின் பெயரினால் பலியிட்டவர்களுக்கு 2008 வரை தண்டனை கிடைக்கவில்லை.

பேருந்து எரிப்பினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடன் (செவிலியர் கல்லூரி) நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்ததும், மற்ற மாணவர்களுக்கு இரவு நாங்கள் உண்ணும் உணவகத்திலிருந்து உணவு தயார் செய்து அளித்ததும், அதன் பிறகு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நீதி கேட்டு முறையிட்டதும் இன்னமும் என் கண் முன்னில் நிற்கிறது.

அதே கறை படிந்த அரசியல்வாதிகள், அதே அரசியல் வெறி பிடித்த தொண்டர்கள் என பத்து வருடத்திற்கு பின்னரும் தமிழகம் அப்படியே தான் உள்ளது.

பன்மொழி கலைஞன் பிரகாஷ் ராஜ் அவரது சொல்லாததும் உண்மை புத்தகத்தில் கூறியது போல... அரசியல்வாதிகளுக்காக தீக்குளிப்பதும்,கூக்குரலிடுவதும்;தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்வதும்...அறியாமை அல்ல முட்டாள்த்தனம் என்பது நூறு சதவீதம் உண்மையே.

என்று மனிதனாய் வாழப்போகிறோம் என்பது தான் தற்போதைய கேள்வி.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails