June 16, 2020

வெளிநாடு வாழ் தமிழர்கள் - கொரோனா - துயரம்


அயல்நாடுகளில் பணிகளில் இருக்கும் தமிழர்கள் பலருக்கும் இருக்கின்ற ஆதங்கம் 'தமிழக அரசு பிற மாநில அரசுகளைப் போல், குறிப்பாக பக்கத்து மாநிலமான கேரளத்தைப் போல் தம் அயல்நாடு வாழ் மக்களை ஏன் கண்டுகொள்வதில்லை'? என்பது

அரசு மட்டுமல்ல, தமிழக ஊடகங்களும், அயல்நாடு வாழ் தமிழர்கள் நலன்களில் போதுமான அளவு அக்கறை காட்டுவதில்லை என்பது மிக மிக வருத்தம் தரும் விடயம். 

பல லட்சக்கணக்கான தமிழர்கள் வளைகுடா, ஐரோப்பா, ஆப்பிரிக்க, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் பணிபுரிந்து கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறார்கள், ஆனால் அவர்களது நலன் பெரும்பாலான நேரங்களில் கேள்விக்குறி மட்டுமே!

கேரள காட்சி ஊடகங்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது அயல்நாடுகளில் இருக்கும் அம்மாநில மக்களைக் குறித்த செய்திகள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ் ஊடகங்கள் கிஞ்சித்தும் அதைச் செய்வதில்லை. 

கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் கூட, அயல்நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியிலிருந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியிழந்தும், தங்குமிடத்திற்கும், உணவிற்கும், மருத்துவத் தேவைகளுக்கும் படுகின்ற அல்லல்களை அரசும், தமிழக ஊடகங்களும் கண்டுகொள்ளாதது பெருந்துயரம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தமிழரின் அவலங்கள் ஊடகங்களில் தலை காட்டுகிறதே ஒழிய, போதுமான அளவு பதிவு செய்யப்படுவதில்லை.

அரசும் ஊடகங்களும் மக்களைக் கண்டுகொள்ளாதது ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் தமிழர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் பல் இளிக்கிறது.

கேரளத்தினர் எங்கு சென்றாலும், அவர்கள் மண் சார்ந்த, மத நம்பிக்கைச் சார்ந்த, கலை சார்ந்த சிறு சிறு குழுக்களாக தொடர்ந்து இயங்குகின்றனர், புதிதாக வருகின்றோரையும் அரவணைத்து கொள்கிறார்கள். அப்படியான குழுக்கள் மூலம், இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்கிறார்கள். இந்தியத் தூதரகம் வரை செல்வாக்கு உடையோரிடம் தொடர்புகளையும் ஏற்படுத்தி ஆவனச் செய்கிறார்கள்.

கேரளத்தினரை மீட்க, கேரளத்தைச் சார்ந்த பெருமுதலாளிகள் தனி விமானங்களை அனுப்புகிறார்கள், மறுபுறம் கேரள அரசு மத்திய அரசிடம் பேசி போதுமான அரசு விமானங்களையும் ஏற்பாடு செய்கிறது.

மாறாகத் தமிழர்கள், அங்கங்கே குழுக்களாக இணைந்திருந்தாலும், ஒற்றுமையும், பொதுவான விடயங்களில் பரஸ்பர புரிந்து கொள்ளுதலும் இல்லாதிருப்பதாலும், எவர் உயர்ந்தவர் என்கிற போட்டியையும், பொறாமையையும் ஒருங்கே தமக்குள் கொண்டிருப்பதாலும் தொடர்ந்து தம்மைத்தாமே அழித்துக் கொண்டுள்ளனர்.

அண்மையில் அயல்நாட்டிலிருந்து திரும்பிய நண்பர்கள் சிலர் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் நெஞ்சை உலுக்கிப் போடுகின்றன!

வேலையின்மை, ஊதியமின்மை, கொரோனா அச்சம், வயிற்றிற்கேற்ற உணவின்மை, குடும்பத்தைக் குறித்த கவலை, சொந்த ஊர் போய்ச் சேருவோமா என்கிற பதட்டம் என பல விதங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு பெருந்துயரத்திலும் கூட தமிழக அரசு கண்டும் காணாமலும் இருப்பது விநோதம் தான். 

அமைப்பாய் திரள்வோம்னு குரல்கள் ஒலித்தாலும், பரஸ்பர அன்பும், ஒற்றுமையும் இல்லையேல் நாம் எதையும் சாதித்தல் என்பது நமக்கு சாத்தியமில்லை!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails