June 11, 2020

செவ்வணக்கம் தோழர் சஜித்! போய் வாருங்கள்!


இரு தினங்கள் முன்னர் சென்னையில் வசித்து வந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான சஜித் என்பவர் திடீரென சுய நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தியை இடதுசாரிகள் பலர் பகிர்ந்திருந்ததோடு அவரை வெகுவாக சிலாகித்தும் எழுதவே அவரைக் குறித்து அறிந்து கொள்வதில் முனைப்பானேன்.

அவரைக் குறித்து பரிச்சயமில்லாதவர்கள் கூட அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்கிறார்கள். ஆங்கிலப் புலமையும், தேர்ந்த அரசியல் அறிவும், அதனை சாமானிய மக்களும் கூட புரிந்து கொள்ளும் வகையில் முன்னெடுத்து வைக்கின்ற சிறந்த பேச்சாளருமாக திகழ்ந்திருக்கிறார் சஜித்.

தோழர் சஜித் Watford Socialist Party (UK) மற்றும் பொதுவுடமை இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமாய் இருந்திருக்கிறார். அதுவும் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சார்ந்த ஒருவர், லண்டனில் மேற்படிப்பு படித்தவர் இள வயதில் தனது மருத்துவப் பணியையும் துறந்து மக்களோடு மக்களாக நின்று களப்பணி ஆற்றுவதெல்லாம் எளிதானதல்ல. 

இன்னும் சொல்லப் போனால், தோழர் சஜித், பரவலாக அறியப்படாமலே ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக, அதிகாரச் சுரண்டல்களுக்கு எதிராக களமாடியிருக்கிறார். கால்கள் கடுக்க துண்டுப் பிரசுரங்கள் வரை விநியோகித்திருக்கிறார். 

தன்னலம் மறந்து சக மக்களுக்காக களமாடியோர் மறைந்தாலும், காலமெல்லாம் மக்கள் மனதில் உயர்ந்து நிற்பர் என்பதற்கு தோழர் குறித்து வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மேன்மையான கருத்துகளே சாட்சி!

சமூகம் சார் பிரச்சனைகள் தொடர்ந்து விவாதிக்கப் பட வேண்டும்; மாற்றுக் கருத்துகளுக்கும் செவிகள் திறக்கப்படல் வேண்டும்; இளைய சமுதாயம் வாசிப்பில் ஈடுபாடு காட்ட வேண்டும்; அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல்கள் எழுப்புதல் வேண்டும்!

அதுவே தோழர் சஜித் போன்றோர் விதைத்துச் சென்றிருக்கும் விதைகள் துளிர்த்தெழ வழிவகை செய்யும்.

போய் வா தோழா! வீரன் மரணிப்பதில்லை

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails