August 30, 2020

சுந்தரபாய் ஐயப்பன் @ அருளப்பன்

பாட்டி காலமாகி இன்றோடு ஒரு ஆண்டு ஆகிறது. தந்தையாரின் பணியினிமித்தமும் எனது படிப்பினிமித்தமும் சொந்த ஊரில் அதிக நாட்களைக் கழிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.


ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைகளில் மட்டும் சென்று வருவதுண்டு. செல்கின்ற போதெல்லாம் தாத்தாவும் பாட்டியும் தங்களது பிரியத்தால் திக்குமுக்காடச் செய்வார்கள்.

பாட்டிக்காக வீட்டில் காத்திருக்கையில் வயல்வெளிகளில் வேலையை முடித்து விட்டு தலை மேல் ஒரு பாரம் விறகுக் கட்டையும் வைத்து வீடு வந்து சேர்ந்ததும் சேராததுமாக கேட்கின்ற முதல் கேள்வி 'காப்பி தண்ணி எதும் குடிச்சியா எட்டினு' என்பதாகத் தானிருக்கும்.

தொண்ணூறுகளில் இட்லி தோசை எல்லாம் கனவு உணவுகள் தான். ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இருமுறை அதுவும் உறவினர்கள் வந்தால் தான் சாத்தியம்.

தெரு வழியே இட்லி விற்பனை செய்யும் பெண்மணியின் ' இட்லீ...ஈ...ஈ...ஈ ' குரல் கேட்டுவிட்டால் போதும் பாட்டிக்கு; உடனே ஒரு தட்டையும், சிறு சில்வர் டம்ப்ளரையும் எடுத்துக் கொண்டு சேலைத் தலைப்பில் முடித்து வைத்திருக்கும் சேமிப்புககளைத் துழாவத் தொடங்கி விடுவார்.

அவ்வளவு வறுமையிலும் எட்டு பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் ஐயப்பன் என்கிற அருளப்பனும்; சுந்தரபாயும் அவர்களால் இயன்ற மட்டும் குறைவின்றியே வளர்த்தனர்.

பாட்டி குறித்து பொது வெளியில் இதுவரை எழுதியதில்லை. இதனைப் பதிவு செய்கையில் நாளை நமைக் குறித்து நம் சந்ததி எவ்விதம் வரலாற்றைப் பதிவு செய்யும் என்கிற பதட்டம் மேலிடுகிறது!

வாழ்நாள் முழுவதும் நம் முன்னோர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறோம்! 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails