January 11, 2025

புத்தகம் - 1865 இரட்சணிய சேனை உருவான ஆண்டு


தந்தையை இளவயதில் இழந்து, பசி பட்டினியில் உழன்று, அடகுக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் வறுமையில், மது போதைகளில், களிப்பாட்டங்களில், விபச்சாரத்தில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டுருவாக்கம் செய்ய என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்; அதனால் என்னென்ன இழி சொற்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளானார் என்பது தான் இப்புத்தகத்தின் சுருக்கம் என்றாலும், கேத்தரின் பூத் எனும் பெண் இல்லாமல் போயிருந்தால் அவரால் இவ்வளவு செய்திருக்க முடியுமா என்கிற கேள்வியையும் நமக்குள் எழுப்புகிறது. 

இன்னும் சொல்லப் போனால், Salvation Army என்னும் உலகளாவிய அமைப்பு தோன்றுவதற்கு வில்லியம் பூத்தை விட கேத்தரின் பூத் தான் அதிக சிரமங்களை மேற்கொண்டிருக்கிறார் என்பது விளங்குகிறது. 



அப்படியான இணையரை மார்பகப் புற்று நோய்க்கு பலி கொடுத்த பின்னர், தனது வயோதிபத்தில் கண் பார்வையை இழந்த பின்னரும் மக்களுக்காக தொடர்ந்து பிரசிங்கித்து வந்த மனிதரின் இறுதிச் சொல் ஒன்று போதும் அவரது அர்ப்பணிப்பை நமக்கு உணர்த்த அல்லது நமக்கும் கடத்த. 

Albert Orsborn இடம் வில்லியம் பூத் இப்படியாகச் சொல்கிறார் ‘கடவுளை ஏற்றுக்கொண்டு ஒரு முறைமைகளில் வாழும் மக்களை என் கூட்டங்களுக்கு தயவு செய்து கூட்டாதே! இந்நகரத்தின் கொடும் துயரத்தில் உழலும், பாவச்செயல்களில் மூழ்கிக் கிடக்கும் மக்களை கூட்டுவாயானால் அதுவே சாலச்சிறந்தது’ 

கெடுபேறாக, இன்று அப்படித்தான் பெரும்பான்மையான கிறிஸ்தவச் சமூகம் சபை கூடுதலோடு நின்று விடுகிறது. ஏழ்மையில், வறுமையில், தேவைகளில் இருக்கும் மக்களைத் தேடிச் செல்வோர் வெகு அரிது! 

புத்தகம் - 1865 The Year that made The Salvation Army

எழுதியவர் - Peter Farthing 

வெளியீடு - Carpenter Media, Sydney, Australia 

பக்கங்கள் - 134

December 30, 2024

கிறிஸ்துமஸ் மரமும் புரிதலும்

ஏன் கிறிஸ்துமஸ் மரம் என பச்சையான ஒரு மரத்தை வீடுகளில் வைத்து அலங்கரிக்கிறார்கள் என சிறுவயது முதலே எழுந்த சந்தேகம் ஓரளவு தற்போது தான் தெளிந்திருக்கிறது. 

இலையுதிர் காலத்திலும் கூட பசுமையாய் இருக்கும் மரங்கள் (Evergreen trees) நித்திய வாழ்க்கையை உணர்த்துவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. 


அதே நேரத்தில் இலையுதிர் காலத்தில் இலைகளை இழந்து வெறுமையாய் இருக்கும் மரங்கள் குளிர்காலத்தின் சீற்றத்தையும் தாங்கி இளவேனிற்காலம் வரும் போது தனது வாழ்க்கையை / பசுமையை மீண்டும் அடைகிற ஒரு நம்பிக்கையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.



அதே போன்று பச்சை நிறம் (பசுமை) தீய சக்திகளிடமிருந்து மக்களை விலக்கி செழிப்பாக வைக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதாலும் இப்படியாக மரங்களை வெட்டி அலங்காரம் செய்கிறார்கள் என்பது விளங்குகிறது. 



கூடவே வட்ட வடிவிலான கிறிஸ்துமஸ் சரம் / Wreath என்பது Evergreen இலைகளான Holly மற்றும் Ivy இவைகளால் உருவாக்கப்படுகின்றது. அவை இயேசுவின் தலையில் வைக்கப்பட்ட முட்கிரீடத்தையும், சிவப்பு Berries அவர் சொரிந்த இரத்தத்தையும் அடையாளப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. 




ஆங்கில தேசத்திற்கு வந்து நான்கு பருவங்களையும் (Fall / Autumn - Winter - Spring - Summer)  ஒரு முழு சுற்று கண்ட பின்னர் தான் இவை விளங்கியிருக்கிறது. அப்படியான சில படங்களை இணைத்திருக்கிறேன். 



பால்யத்தில், வெட்டப்பட்ட Fir மரங்களின் ஒரு பகுதியை எங்கிருந்தாவது வாங்கி வந்து வாளியில் மணலைப் பரப்பி அதில் நட்டு பின்னர் அலங்காரங்களை தகப்பனார் செய்வது உண்டு. காலப்போக்கில் அவை கிடைக்காமல் போகவே செயற்கை மரங்களை வாங்கி அலங்கரிப்பு செய்வார். எனினும் இவைகளில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை என்பது வேறு விடயம் 🤭


August 25, 2024

Capernaum - Capharnaüm - கப்பர் நகூம்

 



Capernaum - Capharnaüm - கப்பர் நகூம்

திரைப்படம் குறித்து பிரபாகரன் சேரவஞ்சி அவர்கள் பதிவைப் பார்த்ததும், அட! இது பைபிள்ள வர்ர ஊராச்சே; அது சம்பந்தமான எதும் படமா இருக்குமோன்னு ஆரம்பிச்ச தேடல் கிட்டத்தட்ட மூன்று மணி நேர வாசிப்பில் கொண்டு விட்டதோடு பல தகவல்களை அள்ளித்தந்தது.

வாழை திரைப்படம் எப்படியாக அந்த மண்ணையும், அது சார் வாழ்வியலையும் பிரதிபலிக்கிறதோ அதற்கு  நிகராக, லெபனானின் பெய்ரூட் நகரில் அகதியாக வாழும் சிரியா தேசத்தைச் சார்ந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையையும் அம்மண் சார்ந்த வாழ்வியலையும் கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் Capernaum. 

இதனை இயக்கியவர் ஒரு பெண் என்பது இன்னும் சுவாரஸ்யம்; அவர் (Nadine Labaki) லெபனான் நாட்டைச் சார்ந்தவர். மத்திய கிழக்கு நாடுகளின் போர் அவலத்தில் அவரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர். 

ஒரு நேர்காணலில் ‘ பெரியவர்களான நமது தவறுகளுக்காக குழந்தைகள் பெரும் விலை கொடுக்கிறார்கள் ’ ; ‘ மெக்சிகோவின் எல்லைப் பிரச்சனைகளால் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைககள், இந்தியாவில் தங்கள் குடும்பங்களின் உணவுத் தேவைக்காக வேலை செய்யும் சிறார்கள், இரசாயன ஆயுதங்களால் மடியும் பாலஸ்தீன், துருக்கி மற்றும் சிரியாவைச் சார்ந்த குழந்தைகள் என இவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய கல்வியும் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என்கிறார்.

அடக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, குழந்தைகளின் மீதான வன்முறைகளை லெபனான் நாட்டைச் சார்ந்த ஒருவரால் விளங்கிக் கொள்ள முடிகிறது; கூடவே தனது மண்ணை மட்டும் பாராமல் உலகின் பாலும் தனது பார்வையைத் திருப்பி அனைவருக்குமான ஒரு அரசியலை, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்! ஆனால் இங்கு வாழை மாதிரியான படத்தை முன்வைத்தால் அதனை பகடி செய்யும் சற்றும் அறமற்றவர்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பது எவ்வளவு இழிவு. 

Capernaum என்பது விவிலியத்தின்படி இஸ்ரவேலில் இருந்த ஒரு மீன்பிடி கிராமம். அது இரண்டாவது நூற்றாண்டில் ‘ஆறுதலின் கிராமம்’ என்று அழைக்கப்பட்டிருந்து பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு சிதிலம் அடைந்தும் போயிருக்கிறது. 

பிரெஞ்சில் Capharnaüm என்பதற்கு Ruin (அழிவு) என பொருள். இவைகளின் அடிப்படையில் தான் இந்த திரைப்படத்திற்கு Capernaum என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் Nadine Labaki.

அடக்குமுறைகளும், ஆதிக்கவாதமும் எந்த தேசத்தில் எந்த வடிவில் இருந்தாலும் அவற்றிற்கு எதிராக குரல் எழுப்புவது தான் மனிதம் என்கிற புரிதல் இருந்தால் போதும் நாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள. 

2018 ல் வெளியான Capernaum திரைப்படத்தில் நடித்தவர்களில், (அகதியான) சிறுவன் Zain உட்பட பெரும்பாலானோர் திரைத்துறையை சாராதவர்கள் என்பதும் அவர்கள் அந்த பகுதியில் நிகழ்ந்த போர்க்கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இப்படம் வெளிவந்த பின்னர் நார்வே அரசு சிறுவன் Zain ஐயும் குடும்பத்தினரையும் நார்வேயில் குடியமர்த்தி சிறப்பு செய்தது. கூடவே, போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் இருக்கும் சிறார் பலருக்கும் கல்விக்கான வாசலும் UNHCR வழியாக திறந்தது. 

ஒரு திரைப்படம் அப்படி என்ன பெரிதாக செய்து விட முடியும் என்பதற்கான பல பதில்கள் Capernaum ல் அடங்கியிருக்கிறது. 

அதன் இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான Nadine Labaki போற்றுதலுக்குரியவர் 🥰👏

Capernaum திரைப்படம் Netflix ல் இருக்கிறது.

August 14, 2024

தொரசாமி - அம்பேத்கரிய நாவல்

 “ இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ” என்கிற பொத்தாம் பொதுவான சொலவடை, மேம்போக்காக பார்க்கையில், ‘ அட ஆமால்ல ’ அதான், பலரும் நல்ல நிலைமைக்கு வந்தாச்சே என கருதத் தோன்றும். 

ஆனால், இன்றளவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் தொடர்ந்து தங்களை பலி கொடுத்து வருவது தாழ்த்தப்பட்ட சமூகம் தான். 

இதற்காகத் தான் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தொடர்ந்து வலியறுத்தி வந்தார். 

சுய சாதிப் பெருமை பேசுவது எந்த அளவு ஏற்புடையது இல்லையோ, அதே போன்றதே உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல் இருப்பதும். 

இன்றைய தேதியில் சாம்பவர் சமுதாயத்தில் இருந்து ஒரு எம். எல். ஏ வோ எம். பி யோ கிடையாது. அதன் பாதிப்பை எம் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். 

தலித் அரசியல் பேசுபவர்களும், அரசியல் ஆளுமைகளும் தலித்துகளை முன் வைத்து அரசியல் செய்கிறார்களே ஒழிய நமக்கான உரிமைகளை அவர்களால் கூட பெற இயலாத நிலை தான் சுதந்திரம் அடந்து 77 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. 

சாம்பவர் சமூகத்தில் இருந்து படித்து உயர்ந்தவர்களோ பிற ஊர்களுக்கு / நாடுகளுக்குப் போனோமா சம்பாதித்தோமோ என இருக்கிறார்கள். உள்ளூரில் இருப்பவர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என குரலெழுப்ப மறுக்கிறார்கள். 

எனினும் அண்ணன் அன்பு நமது குரல்களும், எழுத்துகளும் பதிவு செய்யப்பட வேண்டும். உரிமைகளுக்காக தொடர்ந்து நாமும் பேச வேண்டும் என்கிற அடிப்படையில் ' தொரசாமி ' நாவலை (அறம் வெளியீடு) முன் வைத்திருக்கிறார். தொடர்ந்து பல்வேறு தளங்களில் அவர் களமாடியும் வருகிறார். 

கல்வியே நம்மை விடுதலையாக்கும் என தொடர்ந்து களமாடும் அண்ணன், தோழர் மற்றும் ஆசானாகிய ஜெ. அன்பு Jai Anbu அவர்களின் எழுத்துகளும், கனவுகளும் மெய்ப்பட வாழ்த்துகள். 

அன்புகளுடன்,

எட்வின்

May 19, 2024

Xabi Alonso ❤️⚽️ Bayer Leverkusen

பார்சிலோனா அணிக்காக La Liga / Spain அணிகளையும் அதிகம் கவனிக்க தொடங்கிய காலம் அது. பார்சிலோனாவின் Xavi யையும் ரியல் மாட்ரிட் அணியின் Xabi யையும் எப்போதும் குழப்பிக் கொள்வேன். 

Xabi அதற்கு முன்னரே EPL ல் லிவர்பூல் அணிக்காக ஸ்டீவன் ஜெரார்ட் உடன் பல வெற்றிகளுக்கான பங்களிப்பை செய்திருந்தார். 

2010 உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் Xabi - Xavi இருவரும் Midfielders ஆக இருந்தனர் என்பது கூடுதல் சிறப்பு. 

கால்பந்து உலகில் பெரும் அணிகளுக்காக, சிறந்த பயிற்சியாளர்கள் உடன் ஆடிய அத்தனை அனுபவங்களும் இவர்கள் இருவரையும் இன்று சிறப்பான பயிற்சியாளர்களாக உருவாக்கியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. 

Xabi பயிற்சியாளரான பிறகு Bayer Leverkusen இன்று தொட்டிருக்கும் உயரம் அளப்பரியது. அவர்கள் இதுவரை 51 ஆட்டங்களில் (கிட்டத்தட்ட ஒரு ஆண்டு - 351 நாட்கள்) தோல்வியே சந்திக்கவில்லை.

இத்தனைக்கும் பல ஆட்டங்களில் ஆட்டம் முடியும் தருவாயில் 90 நிமிடத்திற்கு மேலாக தோல்வியுறும் நிலையில் இருந்தாலும் விடாமுயற்சிகளினால் தங்களை வரலாற்றின் பக்கங்களில் பதித்திருக்கிறார்கள். Xabi Alonso வின் பங்களிப்பும் அணி வீரர்களின் முனைப்பும் அதனை சாத்தியமாக்கியிருக்கிறது. 

விளையாடும் போதும் சரி, பயிற்சியாளராகவும் சரி எவ்வித அலட்டல் இல்லாமலும், எப்போதும் அர்ப்பணிப்புடன் தனது வேலையை சிறப்பாக செய்து விட்டுப் போவது தான் Xabi இப்படியான வெற்றிகளை அடைவதற்கு காரணமாகியிருக்கிறது. 

வாழ்வியல் தத்துவமும் அதுவே! 

தோல்விகள் என்றேனும் வரும் தான்; ஆனால் நமது வேலைகளில் தொடர்ச்சியாக முனைப்பு காட்டும் போது அது வெற்றிகளைத் தருவதோடு தோல்விகளை எதிர்கொள்ளவும் நமக்குக் கற்றுத்தரும். 







November 20, 2022

கிரிக்கெட்டிலிருந்து கால்பந்து வரை

ன்று உலகக்கோப்பை கால்பந்து கத்தாரில் துவங்கவிருக்கிறது.  அந்த களிப்பில் மனம் திளைத்திருக்கையில், கிரிக்கெட் பைத்தியமான எனை கால்பந்து ஆட்டங்கள் அதன் பக்கம் ஈர்த்தது குறித்து அசை போடாமல் இருக்கவியலவில்லை.


இன்றைய தேதியில், எனக்கு  பரிச்சயமானவர்களில் பெரும்பாலோனோர் கிரிக்கெட் பிரியர்கள் தான்.

என் நினைவில், ஆறு வயது முதல் கிரிக்கெட் என்கிற விளையாட்டு மட்டுமே பதிவாகியிருந்திருக்கிறது.

கிரிக்கெட் ஒரு கட்டத்தில் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டிருந்தது. கவாஸ்கரின் தடுப்பாட்டமும், ஶ்ரீகாந்தின் சில நிமிட அதிரடிகளும், கபில்தேவின் ஆக்ரோஷமான  பந்துவீச்சும் பால்யத்தின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வழி நினைவலைகள்.

1987 - 1990 வரையிலான கால கட்டத்தில் கிரிக்கெட் பேட்டில் காம்பஸ் கொண்டு துளையிட்டு அதில் எண்ணெயை தேய்த்துக் கொண்டிருக்கும் ' மனோ ' அண்ணன் இன்றும் பசுமரத்தாணி போன்று மனதில் பதிந்திருக்கிறார்.

நெல்லை ஹைகிரவுண்ட் (இன்றைய மேட்டுத்திடல்) ஜான்ஸ் பள்ளி / கல்லூரி மைதானங்களில் கால் கடுக்க லெதர் பால் ஆட்டங்களைக் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

ஐந்தாவது படிக்கும் போது மார்த்தாண்டத்தில் பள்ளி முடிந்து நான் நேரத்திற்கு வீடு திரும்பவில்லையென்றால் ' ஸ்டார் லாட்ஜ் வெளிய நின்னு கிரிக்கெட் பாத்திட்டிருப்பான் ' என்கிற புரிதல் வீட்டிற்கு இருந்தது;  கூடவே, 'வந்ததும் இருக்கு அவனுக்கு '  என்கிற வசைகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது தான் (1991) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிமுகாகியிருந்தது.

இப்படியான கிரிக்கெட் பிரியம், 2008-2015 ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிரிக்கெட் குறித்ததான 80 பதிவுகளை எழுதவும் வகை செய்திருந்தது.

எனினும், கிரிக்கெட் மீதான ஆர்வம் 1999 ல் அசாருதீன் உள்ளிட்டோர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியைக் கண்டதில் இருந்து குறையத் தொடங்கியிருந்தது.

அதற்கேற்றார் போல, 1996-1998 களில், வண்ண வண்ண உடைகளை அணிந்து பந்தை அங்கும் இங்கும் உதைக்கும் அணிகளை தொலைக்காட்சி நேரலையில் பார்க்கும் நண்பன் ஆனந்த் @ ஜோஷியைப் பார்த்து ' என்ன இவன் சனி ஞாயிறு ஆனா இதையே பாத்திட்டு இருக்கான் ' என்பதாக இருந்தது! கூடவே கால்பந்து மீதான ஆர்வமும் துளிர்த்தது

Live என்பதை லிவ் எனவும்; Chelsea என்பதை செல்சியா எனவும் உச்சரித்து அவனிடம் பல்ப் வாங்கியதும் உண்டு 😂

அப்படி எனக்கு அறிமுகமானது தான் EPL எனப்படும் English Premier League Club Football.

இதனைப் பின்பற்றித்தான் லலித் மோடி IPL Cricket துவங்கினார் என்பது வரலாறு.

2000 த்திற்கு பின்னர் பல நாடுகளின் கால்பந்து லீக் களையும், பிற கால்பந்து தொடர்களையும் பின் தொடர்வது வழக்கமாகிப் போனது.

மெஸ்ஸி இருந்தவரை பார்சிலோனா வையும். தற்போது மேன்செஸ்டர் யுனைட்டட் அணியையும் பிடித்த அணிகளாகக் கொள்ளலாம்.

கிரிக்கெட் சில நாடுகளால் மட்டுமே விளையாடப்படும் ஒரு ஆட்டம்.

கால்பந்து என்பது அப்படியல்ல!

" உலகக் கோப்பை " என்கிற பதம் " கால்பந்து உலகக் கோப்பை " ஆட்டங்களுக்கு மட்டுமே நியாயம் செய்யும்.

அடுத்த 29 நாட்களும் பெருவாரியான உலகின் பார்வை கத்தாரின் மீதே குவிந்திருக்கும்.

கூடவே, உலகக் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், கத்தார் பேச விரும்பாத LGBTQ, ஐரோப்பா பேச விரும்பாத நிறவெறி மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நலன் குறித்து பேசி உலகின் பார்வையை கத்தார் நோக்கி திருப்பியிருக்கிறார்!

அடுத்த ஒரு மாதம் கால்பந்து ரசிகர்களின் உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது ⚽



September 25, 2022

நன்றிகள் பெடரர் 🎾❤️

ஐந்து வயது முதலே கிரிக்கெட்டை மட்டுமே கண்டும், விளையாடியும்; கிரிக்கெட் குறித்த தகவல்களை மட்டுமே கேட்டும், விவாதித்தும் இருந்ததால் பிற விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு பதின்ம வயது வரை பெரிதாக இல்லை. 

பதின்ம வயதின் மத்தியில் தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆட்டங்கள் நண்பர்கள் வழியே அறிமுகம் ஆயின.

அன்று பார்க்க ஆரம்பித்த EPL இன்றளவும் Manchester United விசிறியாக வைத்திருக்கிறது. 

தொண்ணூறுகளில் பீட் சாம்ப்ராஸ், அகாசி, போரிஸ் பெக்கர் போன்றோர் டென்னிசில் கோலோச்சிய காலம் அது. 

அப்போது Hard Court ல் மரப்பலைகைகள் / பிளைவுட் பலகைகள் கொண்டு டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தோம். 

அதன் பின்னர் படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்றாகிய பின்னர் இன்று வரை விளையாட்டுகளை கண்டு ரசிக்கும் வாய்ப்புகள் தான் அமைந்திருக்கிறதே தவிர விளையாடும் வாய்ப்புகள் இல்லை. 

அத்தனைப் பெரிய டென்னிஸ் Court ல் வலை இல்லாமல் ஒரு செட் (6 Games) விளையாடவே தாவு தீர்ந்து போகும். 

அப்படியென்றால் ஒரு உலகளாவிய ஆட்டத்தில் ஐந்து செட் ஆட வேண்டுமெனில் எப்படியான உடற்திறனும், திறமையும், பொறுமையும் வேண்டியிருக்கும்!

ஐந்து செட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக குறைந்த பட்சம் மூன்று மணிநேரமும் அதிகமாக ஐந்து மணி நேரம் வரையிலும் ஆட வேண்டி வரும். 

இப்படியான உடற்திறன் தேவைப்படுகிற ஆட்டத்தில், தான் ஆடிய 23 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தர வரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் தொடர முடிந்திருக்கிறது என்கிற ஒன்று போதும் பெடரரின் திறமையைக் குறிப்பிட்டுச் சொல்ல. 

2019 பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆண்டி முர்ரே உடைந்து அழுததற்கும், இரு தினங்கள் முன்னர் பெடரர் அழுததற்குமான முதற் காரணம், தாங்கள் மிகவும் நேசிக்கும் டென்னிசை தங்கள் காயங்கள் காரணமாக இனி தொடர முடியாதே என்பது தான். 

தனக்கு எதிராக ஆடியவர்களுடன் மிகுந்த நட்புணர்வும், மரியாதையும் கொண்டிருந்தார் பெடரர். தனது கடைசி ஆட்டத்தில் தனது போட்டியாளரும், தான் வியந்து போற்றுகிற நடால் உடன் இணைந்து இரட்டையர் ஆட்டம் ஆடினார். 

அவர் நினைத்திருந்தால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அல்லது ஏதேனும் ATP போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்திருக்கலாம். " நான் தனிமையாக உணர விரும்பவில்லை, அதனாலேயே Laver Cup ல் தன் சக  ஆட்டக்காரர்கள் உடனிருக்கையில் கடைசி ஆட்டத்துடன் ஓய்வு பெற விரும்பினேன் " என்றார் அவர். 

சமகாலத்தின் ஒப்பற்ற டென்னிஸ் நட்சத்திரம் பெடரருக்கு நன்றிகள். #Federer 

Related Posts with Thumbnails