August 23, 2014

நீயா நானா - கோபி - BP - ஜூஜூபி

ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒளிபரப்பான (மருத்துவர்கள் Vs நோயாளிகள்) நீயா நானா விவாதத்தில் கோபிநாத் அவர்களும், நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குனருமான ஆண்டனி அவர்களும் வியாதிகளைப் பற்றிய சரியான தகவல்கள் பெறாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


பேச்சுக்கு பேச்சு BP சுகர தான சார் சொல்லப் போறீங்கன்னு மருத்துவர்களை எதுவுமறியாத பச்சப் பிள்ளைங்கள ஏதாவது காரணம் சொல்லி வாயை அடைப்பது போல் அடைத்து விட்டிருக்கிறார் கோபிநாத்.
மருத்துவர்கள் கூறிய பல முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களையும், உண்மைகளையும், மருத்துவம் சம்பந்தமான தகவல்களையும் கத்தரித்து விஜய் தொலைக்காட்சிக்கு சாதகமாக நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள், என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.
கல்வியும், மருத்துவமும் வியாபாரமாக்கப்பட்டு இருபதிற்கும் மேலான ஆண்டுகள் ஆன நிலையில் இன்று சாமானியன் சரியான கல்வியைப் பெறுவதும், தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவதும் குதிரைக்கொம்பாகி  விட்டதை  மறுப்பதிற்கில்லை.
பணம் இருந்தால் தான் இன்று மரியாதை என்ற நிலைமை இன்று கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மட்டுமல்ல; சமுதாயத்திலும், சொந்த பந்தங்களிடையேயும் பரவலாக காணப்படுகிறது.
மருத்துவர்கள் வரம்பு மீறி கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதிலும், பணத்திற்காக தேவையற்ற பரிசோதனைகள் செய்கிறார்கள் என்பதிலும் உண்மைகள் இல்லாமலில்லை.
ஆனால் இன்றைக்கு போலிகளும், மனசாட்சி இல்லாதவர்களும், கள்ளத்தனம் செய்பவர்களும் இல்லாத துறைகள் இல்லை.  எல்லா துறைகளிலும் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள், நேர்மையற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
இந்த போலிகளை கண்டறிந்து களையெடுக்க வேண்டிய செயல் அரசினுடையது; அதே நேரத்தில் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதும் இங்கு பொருந்தும்.
இவை ஒருபுறமிருக்க கோபிநாத் அவர்கள் விஷயமறியாமல் எந்த டாக்டர் கிட்ட போனாலும் சுகர், BP தான் பெரிய வியாதி என்கிறார்கள் எனவும் சர்க்கரை அளவையும், இரத்த அழுத்த அளவையும் அறிந்து கொள்ளவே தேவையில்லை; அவற்றை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்பது போன்ற தொனியில் விறைப்பாக வார்த்தைகளை விதைத்திருக்கிறார்.
மருத்துவத்துறையில் ஒரு நோயாளி அல்லது பரிசோதனை செய்ய வேண்டி வரும் எந்த ஒரு நபரிடமும் முதலாவதாக நோக்கப்பட வேண்டிய முக்கிய அறிகுறிகள் @ Vital Signs ல் உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, ஒரு நிமிடத்தில் நாம் எடுக்கும் சுவாச எண்ணிக்கை, இரத்த அழுத்தம் போன்றவை அடங்கும்.
இவை வழக்கமாக செய்யப்படும் சோதனைகள். இது ஒரு பதினைந்து வருடம் முந்தைய நிலைமை. இன்று இவற்றினுடன்;  இரத்தத்தில் சர்க்கரை அளவு, Oxygen Saturation என்றறியப்படும் ஆக்சிஜன் அளவு போன்றவை அடிப்படையாக செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள். இவை இல்லாமல் எந்த மருத்துவரும் ஒரு வியாதியை அறுதியிட்டு கூற முடியாது; எந்த ஒரு நோயாளிக்கும் மேற்கொண்டு மருத்துவம் செய்யவும் முடியாது.
இப்படியாகப்பட்ட BP, சுகரை கோபிநாத் அவர்கள் இதெல்லாம் ஒரு வியாதியா!! BP, சுகர் நோக்குவதெல்லாம் வியாபார உக்தி என்று விஷயமறியாமல் கத்தியிருக்கிறார். 
இன்னும் சொல்லப்போனால் இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அதிகமாக இருத்தலையும் மருத்துவத்துறை வியாதியாக பாவிப்பது ஒரு பக்கமிருப்பினும் எண்ணற்ற பிற வியாதிகளுக்கு அடிப்படை காரணமே இந்த BP ம் Sugar  ம் தான் என்பது மிக முக்கியமான விஷயம்; பலர் அறிந்திராத உண்மையும் கூட.
இந்த ஒரு அடிப்படை காரணம் கூட தெரியாமல் கோபிநாத் உளறியிருக்கிறார். அவரது உளறலை அவரே தவறென ஒத்துக்கொள்ளும் காலம் வெகு தொலைவிலில்லை.
மூளை, கண்கள், இரத்த நாளங்கள், இருதயம், சிறுநீரகம் போன்றவை பழுதாக அடிப்படையே BP ம் SUGAR ம் தான். மேலும் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு அடிப்படையும் இவை தான்.
ஆனா இதெல்லாம் அண்ணன் கோபிநாத்திற்கு ஜூஜூப்பியாம். மேட்டரே இல்லாம சும்மா அடிச்சி விடுற கோட் கோபிநாத் அவர்கள் இனிமேலேனும் அவையடக்கம் கொண்டு அடக்கி வாசித்தால் நல்லது.

August 15, 2014

மதம் - மனிதம் - மனிதன்


நான் நீ, அவன் இவன், அது இது என்பதில் துவங்கி உண்பது, உடுப்பது, கும்பிடுவது, உறங்குவது, அணிவது என அனைத்திலும் பாகுபாடுகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது சிந்திக்கவியாலாத ஓன்று. இத்தகைய பாகுபாடுகள் காலங்காலமாக தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகள் சக மனிதனுடைய வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்குமெனில் அங்கு மனிதன், மனிதம் எனும் தனது சாதாரண நிலையிலிருந்து முரண்பட்டு வாழ முற்படுவதாகத்தான் பார்க்கத்தோன்றுகிறது.

குடிசை-மாளிகை; ஏழை-பணக்காரன்; மேல்சாதி-கீழ்சாதி; கிறிஸ்தவன்-இந்து; இந்து-முஸ்லிம் போன்ற இந்த பிரிவினைகளும், வகுப்புவாத பாகுபாடுகளும் தான் இத்தனை காலமும் அமைதியான ஒரு சமுதாயத்தை தொடர்ந்து சீர்குலைத்து வந்திருக்கின்றன.

இவற்றில் மதச்சாயம் பூசப்பட்ட பிரிவினைகளை தாண்டி மற்றவை ஓரளவு மறக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் மதங்கள் இன்றும் மனித சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தான் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கு கூட வெட்கக்கேடு.

மதங்களையும் பாகுபாடுகளையும் உருவாக்கியது மனிதர்கள் என்பது தான் இதில் விசித்திரம். சக மனிதர்களை மனிதம் போற்றி மனிதர்களாக மதிக்க தெரியாத மதங்கள் இருந்து என்னத்திற்கு?!

என் மதம் தான் உயர்ந்தது, என் மதத்தை பின்பற்றுவோர் உயிரோடிருக்கட்டும், மற்றவர் அழிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைமை கொண்டு கொல்லவும் தயங்காத மதம் பிடித்த மனித மிருகங்கள் தான் இன்றைய மனித சமுதாயத்தின் எதிரி.

மனித சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எந்த மதமும், அம்மதத்தின் பெயரால் அச்சுறுத்தும் மதவெறியர்களும் தான் தற்கால அமைதிக்கு எதிரிகள். இவர்களையும் இவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளையும் எப்படி சமாளிக்க போகிறோம் என்பது தான் கேள்விக்குறி!

பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும், கிறிஸ்தவன் என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் நல்ல மனிதன் என்றழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.
 
கிறிஸ்தவத்தில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் தெய்வ நூலாக கருதுகிற விவிலியத்தில் எழுதியிருப்பதற்கு எதிரான கொள்கைகளை கடைபிடிப்பதும், அதில் இல்லாத கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு பாகுபாடு காண்பிப்பதும் தான்.
சொரூபங்கள் அல்லது விக்கிரகங்களை கும்பிடவோ, நமஸ்கரிக்கவோ கூடாது என விவிலியத்தில் தெளிவாக எழுதி இருக்கையில் இவர்கள் சிலுவையையும், இயேசு, மேரி மாதா என படங்களையும், சிலைகளையும் உருவாக்கிக்கொண்டு வழிபடுவது வேடிக்கை.
கிறிஸ்தவத்தில் பல்வேறு உட்பிரிவுகள் வேறு!! இதே போன்ற உட்பிரிவுகள் பிற மதங்களிலும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மனிதனே மனிதனுக்கு எதிரி என்பதும்; மனிதன் உருவாக்கிய மதமே மனிதத்திற்கு எதிரி என்பதும் தான் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம். ஒரு மதம் ஒரு மனிதனை நற்பண்புடையவானாக்கி சக மனிதர்களையும் மதித்து நடக்க கற்றுக் கொடுக்கவில்லையெனில் அதை விட சாபம் வேறொன்றுமில்லை.
எவரையும் கீழ்த்தரமாக நடத்தவோ, கொலை செய்யவோ எந்த மத நூலும் சொல்லுவதாக கேள்விப்பட்டதில்லை.
விவிலியத்தையும். குரானையும், பிற மதம் சம்பந்தப்பட்ட நூல்களையும் சரிவர படித்தறியாத அரைவேக்காடுகளே இன்று மத போதையேறி மனித குல அமைதிக்கு எதிரான குரல் கொடுத்தும்; சக மனிதர்களை கொன்றும் வருகின்றன.
மதங்கள் அழிக்கப்பட வேண்டும்! ஆனால் அது சாத்தியமா என்றால், இல்லை என்பது தான் பதில். மதங்கள் அழிப்படவில்லை எனினும் மனிதம் போற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. 

August 07, 2014

ஆன்டர்ர்ர்ர்சனும், ஜடேஜாவும், ஐசீசீயும்!!!

கிரிக்கெட் ஜென்டில்மேன்களுடைய விளையாட்டு என்பதெல்லாம் இன்றைக்கு பெயரளவில் தான் என்பதற்கு அண்மை காலங்களில் மைதானங்களில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே சாட்சி.

இதில் சமீபத்திய நிகழ்வு இங்கிலாந்தில் ஜேம்ஸ் என்ற ஜிம்மி ஆன்டர்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே ஏற்பட்ட தகராறு. 

இந்த தொடரின் ஆரம்ப டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்காம், ட்ரென்ட்பிரிட்ஜில் நடைபெற்றது. ஆரம்ப ஆட்டத்திலேயே ஆன்டர்சன் தான் வலிய வம்புக்கு போனார் ஜடேஜாவிடம். 

ஆன்டர்சன் வீசிய பந்து ஒன்று ஜடேஜாவின் மட்டையை கடந்து செல்லவே அதனை அவுட் என கருதிய ஆன்டர்சன் நடுவரிடம் முறையீடு செய்தார்; நடுவர் அவுட் கொடுக்காமல் போகவே ஜடேஜாவிடம்  Sledging என்ற பெயரில் திட்டினார். இதை அப்போதே நடுவர்கள் கண்டித்திருந்தால் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்திருக்க வாய்ப்பில்லை.

மைதானத்தில் திட்டியது போதாதென்று மதிய உணவு இடைவேளைக்கென்று மைதானத்தில் இருந்து பெவிலியன் நோக்கி அணித்தலைவர் தோனியும் ஜடேஜாவும் சென்று கொண்டிருக்கையில் அவர்களுடன் நடந்து சென்ற ஆன்டர்சன் தொடர்ந்து பிதற்றிக் கொண்டே வந்திருக்கிறார்.


ஒரு சமயத்தில் சகிக்க முடியாத ஜடேஜா ஆன்டர்சனை நோக்கி கோபமாக திரும்பிருக்கிறார் (கையில் மட்டையும் இருந்திருக்கிறது) உடனே ஆன்டர்சன் ஜடேஜாவை கையால் தள்ளியிருக்கிறார்.  

எல்லாம் பதிவாகியிருக்கையில் தள்ளல் சம்பவம் மட்டும் கேமராவில் பதிவாகவில்லை என்கிறது ஐசிசி. அன்று பெவிலியன் அருகில் இருந்த CCTV பழுதாகி விட்டது. அதனால் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்ற பெயரில் ஆன்டர்சனுக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லை இந்த ஐசிசி. இத்தனைக்கும் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் தான் ஐசிசிக்கும் தலைவர்.

முன்னாள் ஆட்டக்காரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆலன் வில்கின்ஸ் ஆன்டர்சனின் நடவடிக்கைகளைக் குறித்து விஸ்டன் பத்திரிக்கைக்கு எழுதுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

If Jimmy Anderson had been a tennis player, he would never have finished a match”

கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவாற்கு எதிரான ஆஷஸ் தொடரின் போது நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்ட ஆன்டர்சன் இப்போது அதை இந்திய அணியின் மீது காண்பிப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.



2008 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிட்னி டெஸ்ட் வாக்குவாதத்தில் சைமண்ட்ஸ் க்கு எதிராரக ஹர்பஜன் தண்டனை பெற்றார். 2013 நவம்பரில் க்ளார்க் ஆன்டர்சனுக்கெதிராக தண்டனை பெற்றார். சமீபத்தில் ஐபில் 7 ல் ஸ்டார்க்-பொல்லார்ட் இடையேயான ஆக்ரோஷம் எந்த தண்டனையையும்  எவருக்கும் பெற்றுத்தரவில்லை.

 இப்படியாக Gentlemen’s Game என அறியப்பட்டிருந்த கிரிக்கெட்டில் இன்று வரம்பு மீறுதல் என்பதும்,ஒருவர் மற்றொருவரை மிகவும் கீழ்த்தரமாக திட்டுவது என்பதும் சகஜமாகிப் போனது.

கால்பந்து ஆட்டங்களில் இருக்கும் மஞ்சள், சிவப்பு அட்டைகளைப் போன்ற  நடைமுறைகள் கிரிக்கெட்டிற்கு தேவையில்லை எனினும், இருக்கின்ற சட்டங்களை சரிவர பின்பற்றுவதும்; மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் ஆட்டக்காரர்களை சரிவர கண்டித்தலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவை சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் ஐசிசி என்பது ஐசீசீ ஆகிப்போகும் என்பதில் ஆச்சரியமில்லை.

May 17, 2014

2014 தேர்தல் ஒரு பார்வை - மோடி-லேடி-டாடி

பத்து வருட கால காங்கிரசின் ஆட்சிக்கு முடிவு கட்டியிருக்கிறது 2014 மக்களவை தேர்தல். காங்கிரசின் முதல் ஐந்து ஆண்டு கால ஆட்சி சொல்லும்படி இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி கண்ட  விலைவாசி ஏற்றம், எரிவாயுக்களின் விலையேற்றம், பணவீக்கம், பெரும் ஊழல் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்து தந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இத்தனை வெறுப்புகளும் அதோடு வருங்கால இந்தியாவை வழிநடத்தி செல்ல, சொல்லும் படியான ஒரு தலைமை இல்லாமையும் காங்கிரசுக்கு பெருத்த அடியை இந்த தேர்தல் வழங்கியிருக்கிறது.

சில மாதங்கள் முன்னர் டெல்லியில் எவருமே எதிர்பாராமல் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சியினர் தங்களுக்கு கிடைத்த நற்பெயரை தாங்களே கெடுத்துக்கொண்டாற் போல் இந்த தேர்தலில் அதிகம் பேசப்படாமல் போய்விட்டனர்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் மேலும் மேலும் பிற கட்சியினரை குறை சொல்லியே டெபாசிட் இழந்து நிற்கிறார்கள் இன்று. ஒருவேளை டெல்லியில் ஆட்சியை தொடர்ந்து நடத்தியிருந்தார்களானால் அங்கிருந்து அவர்கள் கட்சியை விஸ்தாரப்படுத்தியிருக்கலாம். இதனாலேயே, சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றியை கொடுத்த டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு ஒரு இடம் கூட அளிக்காமல் மண்ணை கவ்வ வைத்திருக்கின்றனர்.

பாரதிய ஜனதாவை பொறுத்த வரை, அவர்களின்  மிகத்தெளிவான திட்டமிடலும், ஊடக வழி பிரச்சாரமும், மோடியை முன்னிறுத்தியதும் அவர்களே எதிரபாராத வெற்றியை தந்தது என்றால் காங்கிரசின் ஊறிப்போன ஊழலும், மக்கள் மத்தியில் இருந்த வெறுப்பும் பாரதிய ஜனதாவிற்கு மேலும் சாதகமாகிப் போனது.

மோடி அலை என்று ஊடகங்கள் பறைசாற்றினாலும் தமிழகம், கேரளா, ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க இன்னும் தங்கள் காலை ஊன்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியிருப்பது எவருமே கணிக்காத ஒரு முடிவு என்பதாகத்தான் படுகிறது. காங்கிரசும் திமுகவும் வரலாறு காணாத தோல்வியை சந்தித்திருக்கின்றன. ஈழத்தமிழர் விஷயத்தில் இரட்டை வேடம் அணிந்த இவ்விரு கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டதில் அதிக ஆச்சரியமில்லை. எனினும் ஒரு இடம் கூட கிடைக்காமல் போகும் என எவரும் எதிர்பார்க்கவில்லை தான். திமுகவிற்கு பாரம்பரிய ஓட்டுகள் விழுந்தாலும் அவர்களின் ஊழலும், சந்தர்ப்பவாத அரசியலும், அழகிரியின் வெளியேற்றமும், NOTA வும் திமுகவினர் முகத்தில் கரியை அள்ளிப் பூசியிருக்கின்றன.

கிறிஸ்தவர்களும், இந்துக்களும் சம எண்ணிக்கையுடைய கன்னியாகுமரியில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும் பா.ஜ.க. வின்  பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றிமுகம் கண்டிருக்கிறார். ஆம் ஆத்மியின் சுப.உதயகுமார் அவர்கள் எதிர்பார்த்த அளவு ஓட்டுகள் பெறாமல் போனது எப்படி என்பதும் புரியவில்லை.

வைகோ அவர்கள் அவரது சந்தர்ப்பவாத அரசியல் காரணங்களால் தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கிறேன். எந்தவொரு கொள்கையுமில்லா விஜயகாந்த் உடன் கூட்டணி என்பது அவருக்கே அழகாயிருக்கிறதா என தெரியவில்லை. பிரச்சாரத்தின் போது மக்கள் முன்னர் விஜயகாந்த் இவரை அறிமுகப்படுத்தி பேசுகிறார் என்றால் இதை விட கொடுமை என்ன வேண்டும்!!

தருமபுரி ஜனங்கள் தங்கள் சாதி சனத்தை அத்தனை எளிதில் விட்டுக்கொடுத்து விட மாட்டார்கள்  என்பதற்கு அன்புமணி அவர்களின் வெற்றி சாட்சி. இன்னும் எத்தனை இளவரசன்களை இழக்க வேண்டுமென தெரியவில்லை.


பாஜக முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்வது நல்ல விஷயம் தான். புதிய அரசாங்கம் அனைத்து பிரிவினரையும் அரவணைத்து புதிய கொள்கைகளுடன் இந்தியாவை முன்னேற்ற எத்தனிக்குமானால் ஏவருக்கும் மகிழ்ச்சியே. 

February 28, 2014

கன்னியாகுமரியின் வனப்பு - 2

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளைப் பட்டியலிடும் வகையில் கன்னியாகுமரியின் வனப்பு என்ற தலையங்கத்தில் 2008 ஆம் ஆண்டு புகைப்படப் பதிவொன்றை வலையேற்றியிருந்தேன். அதில் சில புகைப்படங்கள் சுயமாக எடுத்தவையும் கூட. பல ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் சில வாரங்கள் செலவிடும் வாய்ப்பு சமீபத்தில் தான் வாய்த்தது. அப்போது சுட்ட சில புகைப்படங்களைத் தொகுத்திருக்கிறேன்.

புகைப்படங்கள் நாவல்காடு, புத்தேரி, இறச்சகுளம், திட்டுவிளை, ஆலடி பகுதிகளில் எடுக்கப்பட்டவை. 

ஆலடி

 ஆலடி
 ஆலடி
 ஆலடி
 ஆலடி
 ஆலடி

திட்டுவிளை
 நாவல்காடு
 இறச்சகுளம்
 புத்தேரி
 புத்தேரி
இறச்சகுளம்

February 01, 2014

நாகர்கோவில்-அறிந்ததும்-புரிந்ததும்

பதினைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் சொந்த மண்ணான நாகர்கோவிலில் இரு வாரங்கள் செலவிடும்படியான வாய்ப்பு இந்த வருடம் தான் வாய்த்தது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா என்ற கங்கைஅமரன் அவர்கள் எழுதிய பாடல் தான் நினைவிற்கு வருகிறது இதை எழுதத் துவங்குகையில்.

நாகர்கோவிலின் வனப்பைக் குறிந்து அறிந்தவர்களுக்கு தெரியும் அதன் சிறப்பு. பச்சைப்பசேல் என எங்கும் நிறைந்திருக்கும் வயல்வெளிகளும் அதன் எழிலும், ஓங்கி உயர்ந்து நிற்கும் தென்னைகளின் நளினமும், பசுமை நிறைந்து அரணாக நிற்கும் மலை முகடுகளும், வெள்ளக் குளிர்மையால் பரந்து விரிந்திருக்கும் குளமும் குளத்தாங்கரைகளும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கே உரித்தான அழகு. நாகர்கோவிலில் எடுத்த சில புகைப்படங்கள் அடுத்த பதிவில்.

இத்தனை அழகை ரசிக்கும் வாய்ப்பு பதினைந்தாண்டு காலத்திற்கு பின்னர் இந்த வருடம் ஜனவரியில் வாய்த்தது. அதோடு நாகர்கோவிலையும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் சிலவற்றையும் அவற்றின் நிகழ்வுகளையும் அவதானிக்கும் வாய்ப்பும் அமைந்தது.

உயிரை வாங்கும் சாலைகள்/ கிலியை ஏற்படுத்தும் வாகனங்கள்

முன்னெப்போதுமில்லாத போக்குவரத்து நெரிசலும், வாகனங்களின் ஆக்கிரமிப்பும் சலிப்பைத் தந்ததை மறுப்பதற்கில்லை. வழக்கமாகவே நாகர்கோவிலின் சாலைகள் குறுகலானவை, எதிரெதிரே பேருந்துகள் செல்வது கூட சிரமப்பட்டு தான் செல்ல வேண்டும். சாலைகளுக்கும், கடைகளுக்குமிடையேயான இடைவெளி வெகுகுறைவு. நடைபாதைகள் பெயருக்கு தான் இருக்கின்றன. இருசக்கர வாகனங்கள் தான் நடைபாதைகளையும் ஆக்கிரமித்துள்ளன.

வாகனங்கள் இவ்வளவாக பெருகியிருப்பினும் சாலை விரிவாக்கமோ, சாலை சீரமைப்போ நடப்பதாகத் தெரியவில்லை. அத்தனை குண்டு குழிகள் சாலைகளில். இதில் சாலை பாதுகாப்பு வாரம் வேறு அனுசரிக்கிறார்கள். இது ஒருபுறமென்றால் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் இதற்கு மேலிருக்கிறார்கள். பெரும்பாலானோரிடம் பொறுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்தனை வேகமாக செல்வதில் என்ன அலாதி இன்பமோ! சிவப்பு விளக்கு இருந்தால் அதையும் மதிக்காமல் வாகனத்தைச் செலுத்துபவர்களை என்னவென சொல்வது. அப்படித்தான் ஒருமுறை வேப்பமூடு சந்திப்பில் மினிபஸ் ஒன்றினால் விபத்துள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பினேன்.

உயிரை எடுக்கும் டாஸ்மாக் கடைகள்

எந்த கடைகளில் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடைகளில் கூட்டத்திற்கு குறைவேயில்லை. சரக்கை அடித்து விட்டு சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிர்சேதத்தைக் குறித்து எவருக்கும் கவலையில்லை. சற்று நேர அற்ப போதைக்காக உயிரையும் பணயம் வைப்பவர்களை என்னவென சொல்வது.

புத்தேரி குளத்தை ஒட்டியவாறு டாஸ்மாக் கடை ஒன்றிருக்கிறது. அதனருகே ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி (சிலவருடங்களாகவே) மேம்பாலப்பணியும் நடைபெற்று வருகிறது. மேம்பாலப்பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. டாஸ்மாக்கில் குடித்து விட்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததால் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த பலரையும் காண நேர்ந்தது.

இன்னும் தொடர்ந்து ஏமா(ற்)றும் கிறிஸ்தவ கூட்டங்கள்

முன்னெப்போதுமில்லாத அளவு பிரார்த்தனை திருவிழாக்களும், சுகமளிக்கும் பெருவிழாக்களும், தெய்வீக சமாதானமளிக்கும் கூட்டங்களும் நடந்தேறுவதையும் கவனிக்க நேரிட்டது. மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுவரும் சில கும்பல்களுக்கு மக்களே பொருளாதார உதவிகள் அளித்து வருவது தான் இன்னும் ஆச்சரியம் தருகிறது. ஊழியம்  என்பது மக்களை சென்று சேர்ந்த காலம் மாறி இன்று மக்களை கவர்கிற; இங்கு வாருங்கள் சமாதானம் கிடைக்கும், இங்க வாங்க சுகம் கிடைக்கும் என்று கிறிஸ்துவின் பெயரில் கொள்ளையடித்து; உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதித்து ஊரை ஏமாற்றுபவர்கள் பெருகியிருப்பது சமூக அவலம்.

ஊழியர்கள் என சொல்லப்படுபவர்கள் வறுமையிலிருப்பவர்களுக்கு, ஏழைகளுக்கு உதவிகள் செய்த காலம் மாறி இன்று அவர்களிடமிருந்தும் பணத்தை உறிஞ்சும் வக்கிரத்தை என்னவென சொல்வது. ஏமாறுகிற மக்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்களும் தொடர்வதில் ஆச்சரியமில்லை.

வரதட்சணை-பகட்டு-திருமணங்கள்

தமிழ்நாட்டிலேயே கல்விகற்றவர்கள் அதிகம் இருப்பவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் என்பது பலரும் அறிந்ததே; ஆனால் இதே கற்றவர்களால் நடந்தேறும் குற்றங்களும் அதே அளவு வியாபித்திருப்பது தான் மகா கேவலமான விஷயம். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவு வரதட்சணைக் கொடுமை இங்கு தான் காணப்படுகிறது. பண்பை மறந்து பகட்டையும்; அன்பை மறந்து அணிகலன்களையும் நாடி செல்லுகின்ற எம்மினத்தை  என்னவென சொல்வது.

திருமணங்களில் மங்கையரைப் பார்க்க வேண்டுமே... அப்பப்பா! அவர்கள் கழுத்தே இறங்குகிற அளவு நகைகளை அணிந்து தங்களை அலங்கோலப்படுத்திக் கொள்கிறார்கள். இதை ஒரு விதமான சமூக அந்தஸ்தாகக் கருதுகிறார்கள். அவர்கள் வீட்டில் அப்படி செய்திருக்கிறார்கள்; அவர்கள் பெண்ணிற்கு அத்தனை நகைகள் போட்டிருந்தார்கள்; நம் பெண்ணிற்கும் போட வேண்டும் என்ற ஒரு நினைப்பே பெரும்பாலானோரிடம் மேலோங்கியிருக்கிறது. இத்தனை நகைகள் வைத்திருப்பவர்களிடம் பணத் தேவையிருக்கும் ஒருவர் போய் நின்றால் கைவிரிப்பது தான் நடந்தேறும்.

இது
நான் வாழும்
நாஞ்சில் நகரம்

இங்கு
மதச்சாயத்திற்கு விலையுண்டு
ஆனால்
மனிதத்திற்கு விலையில்லை
மனிதாபிமானத்திற்கும் விலையில்லை

டாஸ்மாக் வாங்கித்தருபவன் நண்பேண்டா
பாசமாக இருப்பவன் எவர்க்கும் வேண்டா

மானம் போனால் என்ன
பானமே பெரிது எமக்கு

இங்கு
வரதட்சணை வாங்கியவர்
வாழவைக்கும் மாப்பிள்ளை
வரதட்சணை வாங்காதவர்
குறையுள்ள மாப்பிள்ளை

இது தான்
நான் வாழும்
நாஞ்சில் நகரம்

December 31, 2013

2013 - முகநூல் - சுயநலம் - 2014

2012 ன் இறுதி நாளிலும் பணியிலிருந்ததாலோ என்னமோ இந்த வருட இறுதியில் சற்றே இளைப்பாற முடிந்தது மகிழ்ச்சியே. அதற்கு வழிவகை செய்த மேலிடத்திற்கு முதல் நன்றி. 2013 ல் கடந்து வந்த பாதைகள் ஏமாற்றத்தையும், சில நேரங்களில் வாழ்க்கையின் மீதான ஒரு வெறுப்பையும், பல நேரங்களில் வருத்தத்தையும் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

எனினும் வெகு நாளைய கனவான ஒரு இசைத்தொகுப்பை நண்பன் மோகனுடன் இணைந்து உன்னிகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், ஜாலி ஆபிரகாம், ஹேமாஜான் போன்றோரின் குரலில் வெளியிடும் வாய்ப்பு இந்த வருடம் தான் அமைந்தது.

இது ஒருபுறமிருந்தாலும் முகநூல் நிமித்தம் பட்ட அவஸ்தைகள் ஏராளம். நாம் பொதுவாக ஒன்று எழுதினால் தனக்கே எழுதியதைப் போன்ற ஃபீலிங்க்ஸ் கொட்டிவிட்டு பீலா விட்டவர்கள் பலர். இது போதாதென்று நண்பர்களுக்குள் பகிர வேண்டிய விஷயங்களை சந்தியில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தவர்களை ஏனென்று கேட்டுவிட்டதால் ஏற்பட்ட குழப்பங்களும் பல.

ஆர்குட், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்த ஆரம்ப நாட்களில் அமைதியாக எந்த அபத்தமும் இல்லாமல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த காலங்கள் மாறிப்போனது இன்று. சம்பந்தமேயில்லாமல் சம்பந்தமற்ற தகவல்களை முகநூலில் பகிர்வதும் (Share), கண்மூடித்தனமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர்வதும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கின்றன.

சம்பவங்களை அதன் உண்மைநிலையை ஆராய்ந்து அறியாமல், அறியவும் முற்படாமல் அப்படியே பகிரும் செயல் முகநூல் பயன்படுத்துபவர்கள் பலரையும் தொற்றியிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

சிலர் தூக்கம் வரவில்லை, தலைவலிக்கிறது என்பதைக் கூட முகநூல் வழியாக Status என்ற பெயரில் உலகம் அறியவேண்டுமென்று ஆசைப்படுவதை என்னவென சொல்வது. எதையாவது கிறுக்கி மற்றவரையும் கிறுக்கு பிடிக்கச் செய்யும் உக்திகள் எங்கிருந்து தான் உதிக்கின்றனவோ தெரியவில்லை.

"ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்தவுடனேயே ஷுட்டிங்கையும் ஆரம்பித்து விடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது" இது சமீபத்தில் twitter ல் அதிகம் ரசித்த ட்வீட். இந்த புகழ் முகநூல் பயன்படுத்துபவர்கள் பலரையும் சாரும். நின்றால், நடந்தால், குனிந்தால் என என்ன செய்தாலும் படம் பிடித்து போடுபவர்களை பார்த்து சிரிப்பதா! அழுவதா!!

பலர் தாங்கள் உணவருந்தினாலும் படமெடுத்து வலையேற்றுகிறார்கள். குறிப்பாக விலையுயர்ந்த உணவகங்களில் சென்று படமெடுத்து ஏற்றுவதைக் குறிப்பிட்டாக வேண்டும். அதோடு விடுகிறார்களா இல்லை... கார் வாங்கினால், பைக் வாங்கினால், வீடு கட்டினால் என தங்களை, தாங்கள் அடைந்திருக்கும் நிலையை உலகம் பார்க்க வேண்டுமென்று புகைப்படங்கள் எடுத்து முகநூலில் ஏற்றுகிறார்கள். இதே வேலையாக இருப்பவர்களை உளவியலில் ASB - Attention Seeking Behaviour குணம் உடையவர்கள் என்று கூறுகிறார்கள். தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் என்றும் பொருள்படலாம்.

எவரெவர் என்னென்ன செய்கிறார்கள், எங்கிருக்கிறார்கள் என எளிதாக முகநூலின் Status Update களின் மூலம் அறிந்து கொள்ளமுடிவது நண்பர்களுக்குள் சரியெனப் பட்டாலும். பலரும் காணுமாறு பகிரும் போது அதற்கேதுவான பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்தில் வெளிநாடு ஒன்றில் பணிபுரியும் வேலூரை சார்ந்த ஒருவர் முகநூலில் ஊருக்கு செல்கிறேன் என எழுதிவிட்டு போனார். மறுநாள் சென்னை விமானநிலையத்திலிருந்து வேலூருக்கு போகிற வழியில் அவரது நண்பனின் நண்பன் அனைத்துப்பொருட்களையும், அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துவிட்டு தப்பியோடி விட்டார். இதையெல்லாம் சொல்லி உஷாரா இருங்கப்பான்னு சொன்னா போடா உன் வேலயப்பார் என்கின்றனர் பெரும்பாலானோர்.

இன்றைக்கு இணையமும், முகநூலும், பிற சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்புக்கு முக்கியமான ஊடகங்களாகி விட்டன. அப்படியே மொத்தமாக வேண்டாமென்று ஒதுக்கி விடமுடியாது. அவற்றை எப்படி முறையாக, கவனமாக, உபயோகிக்கிறோம் என்பதே கேள்வி!

பெரும்பாலானோரின் கைபேசிகளில் முகநூல் பார்க்கும் படியான வசதியும் இன்று இருக்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் இன்று முகநூல் உபயோகிக்கின்றனர்.  இதனால் பிறரிடம் இல்லாத ஒரு விஷயத்தை நாம் பகிரும் போது மற்றவரின் மனம் புண்படாதவாறு பகிர்தல் மிக அவசியம். என்னிடம் இது இருக்கிறது, நாங்கள் இத்தனை பெரிய வீடு கட்டி விட்டோம், நான் அங்கு செல்கிறேன், நான் அமெரிக்காவில் இருக்கிறேன், நான் KFC, McDonald போன்ற உணவகங்களில் சாப்பிடுகிறேன் என தம்பட்டம் அடித்து Status Update செய்வதால் இவை இல்லாதவன் மனது சங்கடப்படாதா!? வருத்தப்பட மாட்டானா!?


ஆனால் இன்று முகநூலில் இப்படியான சுயம் போற்றுவோரின் ராஜ்யமே கொடிகட்டி பறக்கிறது. பிறரைக் குறித்த கவலையும், பொதுநலன் கருதுவோரும் வெகு சிலரே. இணையத்தால் உலகம் சுருங்கியிருப்பது உண்மைதான்... கூடவே மனிதனின் மனமும் சுயநலம் என்ற வட்டத்திற்குள் சுருங்கிப் போனது தான் ஆச்சர்யம். 
Related Posts with Thumbnails