February 10, 2009

உயிர் காக்கும் CPR

சுல்தான் அவர்களின் பதிவைப் பார்த்ததும் CPR குறித்து பதிவிட வேண்டுமென்று நினைத்தேன்.

CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்

>இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது

>இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது

>உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது

>விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது

>தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது

>அதிர்ச்சியின் போது ( in a state of shock)

>வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது

>மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)

>இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )

CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.

>ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)

>இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)

>நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்

>சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்

>உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.

சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.
இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை

>அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)

>ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.

இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.

CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation

முதலில்-Airway

சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.

நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.
பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)

இரண்டாவதாக-Breathing

சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக-Circulation

ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.
நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது

விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.
இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.


மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில் வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்.
pdf format ல் தரவிறக்கம் இங்கே செய்யவும்
மேலதிக விவரங்களுக்கு. resus.aus, resus.uk & search engine

8 comments:

வடுவூர் குமார் said...

நல்ல விபரம்.
பலரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.

Unknown said...

அவசியமான அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள். நன்றி

ஆதி said...

அனைவரும் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் சிறப்பாக இருந்தது. படங்கள் அருமை . நன்றி, வாழ்த்துகள் . தொடரட்டும் உங்கள் பணி.

RAMASUBRAMANIA SHARMA said...

"மிகவும் அற்புதமான தகவல்கள்"...மிக்க நன்றீ திரு எட்வின்....நான் ஒரு பாரமெடிக்கல் துறையில் பணியாற்றுவதால்...தயவு செய்து இந்த பதிவை என் மெயில் விலாசத்திற்கு அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும்... இந்த விபரங்களை எங்க‌ள் மருத்துவமனையில் அனைவரின் பார்வைக்கும் வைத்தால் பல மாந்தர்கள் பயனடைவர்...எனது மெயில் விலாசம்...rsssharma.sharma242@gmail.com.....நன்றி...

எட்வின் said...

எனது எழுத்தை ஊக்குவித்த நண்பர்கள் குமார், சுல்தான் மற்றும் ஆதி ஆகியோருக்கு நன்றி. ஷர்மா அவர்களே உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்; கிடைக்கவில்லையென்றால் சொல்லுங்கள். நானும் ஒரு Medic என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

சிறப்பான இடுகை ...!

கண்டிப்பா சி பி ஆர் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்...வெற்றி பெற வாழ்த்துக்கள்

எட்வின் said...

நன்றி வசந்த் அவர்களே.

Anonymous said...

உயிர் ஊசலாடி கொண்டியிருக்கும்....மானிடர்களூக்கு உயிர் கொடுக்க எங்களூக்கு பயீற்றூவீத்ததிற்க்கு நன்றீ.......நண்பா

Post a Comment

Related Posts with Thumbnails